Thursday, January 27, 2022

PESUM DEIVAM

 பேசும் தெய்வம்   -  நங்கநல்லூர்  J  K  SIVAN 


மஹா பெரியவாளும் மஹரிஷியும் 

மஹா பெரியவளோடு நெருங்கிய  தொடர்பு கொண்டிருந்த ஒரு  புண்யவான்  பட்டாபி. எல்லோரும்  மரியாதையாக  அவரை  பட்டாபி  ஸார்  என்று தான் அழைப்பார்கள். அவர் கூறிய தாக  சில விஷயங்கள்  கட்டுரை மூலம்  அறிந்து மகிழ்ந்து  சுருக்கமாக  என் வழியில்  உங்களுக்கு வழங்குகிறேன். 

 ”பெரியவா   பதிமூணு வயசிலேயே   மடத்துக்கு வந்து  காஞ்சி காமகோடி 68வது  பீடாதிபதியாக பீடாரோஹணம் பண்ணிக்கொண்ட  காலத்துல,  மடத்துடைய  நிதி நிலைமை  ரொம்ப  கஷ்டமாக இருந்தது.   பாங்க்ல கடன் வாங்கித்தான் நித்தியப்படி செலவுகளையே செய்யவேண்டியிருந்தது. எங்க தாத்தா மகாலிங்கய்யர்   கிட்ட பெரியவா இதையெல்லாம் சொல்லியிருக்கார். அபர காரியத் துக்குதான் காய்கறி இல்லாம சமைப்பா. ஆனா இங்கே,  நிதி நிலைமையை  உத்தேசித்து  நித்தியப்படி சமையலுக்கே காய் கறி  வாங்க வழியில்லாததால, ஆரஞ்சுப் பழத் தோலை கூட எங்கேருந்தாவது தேடிக் கொண்டு வந்து, சாம்பார்ல போட்டுச் சமைக்கற நிலை இருந்துதாம்.

அப்பல்லாம் விவசாயிகள், வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூன்னு தங்களால் முடிஞ்சதைக் கொண்டு வந்து மடத்தில்  பெரியவா ளுக்கு சமர்ப்பிப்பா.   மத்தபடி காசா- பணமாக  அவர்களாலே  எதுவும்   கொடுக்க முடியாது.  ‘நாமளும் அதை எதிர்பார்க்கக்கூடாது ம்பார்'' பெரியவா.

கலவையில   மஹா பெரியவா  சிறுவனாக சேர்ந்தப்ப, அவருக்கு முன்னால பீடாதிபதியா இருந்த ஸ்ரீமகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகள் முக்தி அடைஞ்சுட்டார். அதனால, ஆச்சார்யாள்  கிட்டேருந்து படிக்கறதுக்கும் தெரிஞ்சுக்கறதுக்கும் வழியில்லாம போயிடுத்து. வைஷ்ணவ சம்பிரதாயத்துல ‘சுயம் ஆச்சார்ய புருஷன்’னு சொல்வாளே, அப்படித்தான் பெரியவாளும் வளர்ந்தார். முதல் நாள் காயத்ரி உபாசனை பண்ணிட்டு, மறுநாள் குருவுக்குப் பண்ணவேண்டிய காரியங்களைச் செஞ்சார் பெரியவா.

அந்தக் காலத்துல பிராமண  குடும்பங்கள்ல, ‘நாடு பாதி, அதிலே  நங்கவரம் பாதி’ன்னு ஒரு வசனம் உண்டு.   
நங்கவரம் ஜமீன்தார்  ராஜப்ப ஐயர்னு ஒருத்தர் இருந்தார்.  காவேரி கரையிலே  பதினஞ்சாயிரம் ஏக்கர் நிலம் கண்ணுக்கெட்டின  தூரம் வரைக்கும்  வளமையா  இருந்துது. அடுத்தடுத்து  வந்த  தலைமுறை  காலங்கள்ல அதெல்லாம் போயிட்டுது. ஜமீந்தார்  குடும்பத்தார், மகேந்திர மங்கலம்கிற இடத்துல பாடசாலை ஒண்ணை ஏற்படுத்தி, வித்வான்கள்  எல்லாம்    வர  ஏற்பாடு பண்ணி, எல்லா கிரந்தங்களையும் படிச்சுத் தெரிஞ்சுக்கறதுக்கு வசதி பண்ணிக் கொடுத்தா. மஹா பெரியவாளுக்கு  மஹேந்திர மங்கலத்திலே  கோச்,  ட்யூஷன்  கொடுக்க  சிறந்த வித்வான்கள் நியமிக்கப்பட்டா.  அவா கிட்டேயிருந்து  பெரியவா அதை யெல்லாம்   கரைச்சு குடிச்சுட்டார்.   நங்கவரம் ஜமீனும் உடையார்பாளையம் ஜமீனும்தான் மஹா பெரியவாளோட வித்யாப்பியாசத்துக்கு ஏற்பாடு பண்ணினதாக  சொல்வார்கள் . 

போகப்போக  மஹா பெரியவாளோட தபஸ், யாத்திரை, பிரசங்கம், அவரோட புகழ்னு ஜனங்களுக்குத் தெரிய ஆரம்பிச்சதுக்கு அப்புறம் மடமும் செழித்து வளர ஆரம்பிச்சுது. அவரோட மகிமையைத் தெரிஞ்சுண்டு மடத்துக்கு உதவின  பக்தர்கள், பொதுமக்கள்  கணக்கில்லாதவர்கள்.  

பண விஷயத்துல  மஹா பெரியவா  எப்பவும்  ரொம்ப  கவனமா, ஜாக்கிரதையா இருப்பா. எத்தனையோ பெரிய மனுஷர்கள்  எல்லாம் பணத்தைக் கட்டி எடுத்துண்டு வந்து பெரியவா காலடியில கொட்டினாலும், எல்லாத்தையும் தொடமாட்டார்,  ஏத்துக்க மாட்டார். யார்  கிட்டே
ருந்து வாங்கிக் கலாம்,  யார்  கொடுத்தா வாங்கக் கூடாதுன்னு அவருக்கு  உள்ளூர  தெரிஞ்சுக்கற  சக்தி இருந்தது.  

அந்தக் காலத்துலேயே ஒரு பெரும் பணக்காரர் கோடி ரூபாயைக் கொடுக்க முன்வந்தப்போ   கூட, ''உன் பணம்  இங்கே  மடத்துக்கு வேண்டாம் எடுத்துண்டு போ '' ன்னு   மறுத்த மகான் அவர்!
பழங்கள், அரிசி- பருப்புன்னு கொடுத்தா, வாங்கிப்பார். பணமா கொடுத்தா, தொடக்கூட மாட்டார். கிராமம் கிராமமா நடந்து போயிருக்கார். பஸ் ஸ்டாண்ட், ஸ்கூல், மரத்தடி, ஆத்தங்கரையோரம்னு, வசதி வாய்ப்புகளையெல்லாம் பார்க்காம, எங்கே இடம் கிடைக்கறதோ அந்த இடத்துல தங்கிப்பார், படுத்துப்பார்.  அப்படிப்பட்ட  ஞானி, மஹான் பெரியவா.  
அவரோடயே நாங்களும் தங்குவோம்; சமைக்கிறதுக்கு அரிசி, பருப்பெல்லாம் கையோடு எடுத்துண்டு போயிடுவோம். 

ஒரு தடவை, சித்தூர் செக்போஸ்ட்ல இருந்த அதிகாரிகள் எங்ககிட்ட இருந்த ஒரே ஒரு  அரிசி மூட்டையையும் பறிமுதல் பண்ணிட்டா. ‘அரசாங்கம் கேக்கறது; கொடுத்துடு’ ன்னு சொல்லிட்டார் பெரியவா. ‘அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு என்ன பண்றது?’ன்னு எங்களுக்கெல்லாம் ஒரே கவலை.  இந்த விஷயம் தெரிஞ்சதும், அப்ப ஆந்திர மாநில சீப் மினிஸ்டரா இருந்த என்.டி. ராமராவ் பதறிப்   போயிட்டார். அரிசியைத் திருப்பிக் கொடுக்க உத்தரவு போட்டதோடு, ஓடி வந்து பெரியவாகிட்டே நேரில மன்னிப்பும் கேட்டுண்டார். பெரியவா மேல அவருக்கு அபரிமித மரியாதை!

உடனே பெரியவா, ‘இதுல மன்னிப்புக் கேக்க என்ன இருக்கு? அரசாங்க சிப்பந்திகள், அவாளோட கடமையைத் தானே செஞ்சா! அதுல குத்தம் சொல்லப்படாது. காஞ்சி மடத்துமேல நீங்க வைச்சிருக் கற அன்பும் மரியாதையும் என்னிக்கும் மாறாம இருக்கணும்’னு ஆசீர்வதிச்சார் கருணையுடன்!

என்.டி.ஆர், சென்னாரெட்டி, எம்.ஜி.ஆர்-னு எல்லாருமே பெரியவா மேல பெரிய பக்தியோடு இருந்த பெரிய மனிதர்கள்.  மஹா பெரியவா  அடிக்கடி  சொல்ற  வார்த்தை:

‘அவா நம்ம மடத்துமேல மரியாதை வெச்சிருக்கிறது பெரிசில்லே; அந்த மரியாதையை நாம காப்பாத்திக்கணும். அதான் பெரிசு’

”திருக்கோவிலூர் ஞானானந்தகிரி சுவாமிகள்னு பெரிய மகான்   350 வயசு வரை இருந்தவர்னு சொல்வா.  அவர் வாழ்ந்த இடத்தைத் ‘தபோவனம்’னு  ஆசிரமமா, கோவிலா, இன்றும்  கூட  போய்  தரிசிக்கிறோம்.  முக்காலமும் உணர்ந்த மகான் அவர்; உட்கார்ந்த இடத்துலேருந்தே எத்தனையோ பக்தர்களைக் காப்பாத்தி அருள்பாலிச்சிருக்கார்! எப்பவும் சிரிச்ச முகத்தோடு இருப்பார்; தெய்வாம்சம் உள்ள ஞானி. இன்னிக்குப் பிரபலமா இருக்கிற நாம  சங்கீர்த்தனத்துக்கு மூல காரணம், அவர்தான்!  அவர்  சிஷ்யர் தான் ஹரிதாஸ் கிரி ஸ்வாமிகள். 

ஒருமுறை, ஞானாந்த கிரி ஸ்வாமிகளை தரிசனம் பண்ண வந்த ஜனங்களும், அங்கேயே இருக்கிறவர்களும் கவலைப்படும்  படியாக   ஸ்வாமிகள் ஒரே இடத்துல உக்கார்ந்துண்டு, ஆடாம அசையாம அப்படியே ஸ்தம்பிச்சு இருந்தார்.   பார்த்தவர்கள்  அவருக்கு  என்னமோ, ஏதோன்னு பதறிப்  போயிட்டா.  சிலை மாதிரி அஞ்சாறு நாள் அசைவில்லாம  ஸ்வாமிகள்  இரவும்  பகலுமாக உட்கார்ந்திருந்தா, கவலையா இருக்காதா?  கிட்ட போய், என்னன்னு   யார்  கேக்க முடியும்? 
ஒண்ணும்  புரியாம எல்லோருக்கும்  மனசுலே   சங்கடம்.  

 யாரோ சிலர், ‘எல்லாரும் உடனே காஞ்சிபுரம் போய், பெரியவாகிட்ட விஷயத்தைச் சொல்லி, என்ன பண்றதுன்னு கேளுங்கோ’ன்னு யோசனை சொன்னதாலே ,   பக்தர்கள் சிலர் உடனே  கிளம்பி  மஹா  பெரியவாகிட்ட   வந்து,  விவரம்  சொன்னார்கள்.

மஹா  பெரியவா, ‘கவலைப்படாதீங்கோ! அவருக்கு ஒண்ணும் ஆகலை. அவர் சமாதி நிலைல இருக்கார்; சாம்பிராணிப் புகை போடுங்கோ. அது ஒருவித ஆராதனை; சமாதி நிலையிலேர்ந்து எழுந்துடுவார்’னு சொன்னார். பக்தர்களுக்கு எல்லையில்லாத சந்தோஷம்.

‘சுவாமிக்கு ஒண்ணும் ஆகலே’ங்கிற மகிழ்ச்சியோடு திருக்கோவிலூருக்கு ஓடினா. பெரியவா சொன்னபடி, சாம்பிராணி புகை காட்டி, ஆராதனை பண்ணினா. அதன் பிறகு, ஞானானந்தகிரி சுவாமிகள் சமாதி நிலைலேருந்து மீண்டு வந்தார்.

இன்னொரு  விஷயம்.    ஒருமுறை,  மஹா பெரியவா திருவண்ணாமலை போயிருந்தப்போ, கிரிப் பிரதட்சிணம் பண்ணினார். அவரோடு இன்னும் நாலஞ்சு பேர் போனா. கொஞ்ச நேரத்துல, பகவான் ரமணரோட சீடர்கள் சில பேர், கையில் பிக்ஷைப்  பாத்திரத்தோடு எதிரே வந்துண்டிருந்தா. பெரியவாளைப் பார்த்ததும் நமஸ்காரம் பண்ணிட்டு, ‘நாங்க பகவான் ரமணரோட சீடர்கள். பகவான் அங்கே ஆஸ்ரமத்துல இருக்கார்’னு சொன்னா. உடனே பெரியவா, ‘அப்படியா’ங்கிறாப்பல தலை அசைச்சுக் கேட்டுண்டுட்டு, புன்னகையோடு அவங்களை ஆசீர்வாதம் பண்ணிட்டு, மேலே நடக்க ஆரம்பிச்சார்.

ரமண பக்தர்களுக்கு  கொஞ்சம் தயக்கம், ஏமாற்றமும் கூட.  ஏன்  மஹரிஷி ரமணரைப் பத்தி, அவரோட சௌக்கியம் பத்தி,  மஹா பெரியவா ஒரு  வார்த்தை கூட   பேசலே, விசாரிக்கலை, தெரிஞ்ச மாதிரியே காட்டிக்கலையே? ன்னு!

அந்த பக்தர்கள் மலையேறிப் போய், ஸ்ரீரமண பகவான்கிட்ட  பிக்ஷையைக் கொடுத்துட்டு, வழியில காஞ்சிப் பெரியவாளைத் தரிசித்ததைச் சொல்லி, தங்களது வருத்தத்தையும் தெரிவிச்ச  போது  , மஹரிஷி  ''ஹாஹா''  ன்னு   வாய் விட்டுச் சிரிச்சாராம், 

‘அட அசடுகளா?! நாங்க ரெண்டு பேரும் பேசிண்டாச்சு;  எப்பவும் பேசிண்டிருக்கோம் ; இதுக்கா வருத்தமா இருக்கேள்?! ன்னாராம். திகைச்சுப் போய் நின்னாளாம், பக்தர்கள்!   இதையெல்லாம் அப்போ நேர்ல இருந்து பார்த்த 87, 88 வயசு தாண்டின சுமங்கலி மாமி, எங்கிட்ட இதைச் சொன்னப்போ, அப்படியே நெகிழ்ந்து போயிட்டேன்.

மஹா  பெரியவா    மஹரிஷி  ரமணர்  எல்லாம்  மஹா ஞானிகள்; தபஸ்விகள். அவங்களுக்குள்ளே எப்பவும்  மானசீகமாக சம்பாஷணை நடந்துண்டிருக்குன்னு தெரிஞ்ச போது ஏற்பட்ட நெகிழ்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை!''

ஏற்கனவே  எழுதிய  ஒரு விஷயம் ஞாபகப்படுத்துகிறேன்.  பால் பிரன்டன்  என்கிற வெள்ளைக் காரர்  ஆன்மிக விஷயமா பேசறதுக்கு   கேள்வி கேட்க  மஹா பெரியவா கிட்ட வந்தார். அப்போது    மஹா பெரியவா, ‘  மஹரிஷி  ரமணர்   ஞான மார்க்கத்துல போயிண்டிருக்கார். நான் கர்ம மார்க்கத்துலே போயிண்டிருக்கேன். உன்னோட கேள்விகளுக்கெல்லாம் பதில் தரக்கூடியவர், திருவண்ணாமலையில இருக்கார். உன் சந்தேகங்களையெல்லாம் அவரால  தீர்த்துவைக்க முடியும்’னு சொல்லி, பால் பிரன்ட்டனை ரமணர்கிட்டே அனுப்பி வைச்சார். பால் பிரன்டனும் அதன்படியே ரமணரை வந்து சந்திச்சு, தன்னோட சந்தேகங்கள் எல்லாம்  கேட்காமலேயே  தானாக   விலகி, அவரோட பக்தர் ஆகி, புஸ்தகமெல்லாம்  கூட  எழுதி இருக்கிறார்.  நயன  உபதேசம், 
 மஹா  பெரியவாளுக்கும் மஹரிஷி ரமணருக்கும் பரஸ்பரம் ஞான உறவு,  அன்பு இல்லேன்னா இது நடந்திருக்குமா? 

நாம் பாக்கியசாலிகள்  காஞ்சி மகானும் ஸ்ரீரமண பகவானும் நமது பாரத  தேசத்துக்குக் கிடைச்சது ரொம்ப பெரிய பாக்கியம்!  அவர்கள் காலத்திலேயே வாழ்ந்து  நேராக தரிசனம் பெற்றவர்கள், பேசியவர்கள்,  மறுபிறவி இல்லாத புண்யசாலிகள். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...