Saturday, January 8, 2022

LIFE IS LIKE THAT

 ராவ்  சொன்ன தகவல்.     நங்கநல்லூர்  J K  SIVAN 

                                      
ராகவேந்திர  ராவ்  கொஞ்சம்  வித்தியாசமானவர்.  அதிக நேரம்  வெயிலில் குடை பிடித்துக் கொண்டு போனால்  குடை வெயிலில் கருகி விடும் என்று குடையை மடக்கி விட்டு எங்காவது மர  நிழலில் நிற்பவர்.  எல்லோரும் தினமும் பழையது, நீர் மோர்  சாப்பிட்டால்  இந்தியாவில்   டாக்டர்கள் பிறக்கவே  வாய்ப்பில்லை என்பவர். ரொம்ப தூரம் போவதாக இருந்தால் மட்டும் ட்ரெயினில் போகலாமே தவிர  கால்கள்  நடப்பதற்காகவே  படைக்கப் பட்டவை. எங்கு செல்லவேண்டுமானால்  கால்களைத்   தான் உபயோகிக்க வேண்டும் என்று சாதிப்பவர். ராகவேந்திர ராவ் எனக்கு சொன்ன  சில  அற்புத  செயதிகளை உங்களுக்கும்  அளிக்கிறேன். 

எல்லா கவலைகளையும் ஒன்று விடாமல் சேர்த்து வைத்துக்கொள். கவலையை கவிழ்த்து கொட்டுவதற்கென்று ஒரு குறிப்பிட்ட நேரம் வைத்துக்கொள். அப்போது அதை எல்லாம் வெளியே தள்ளிவிடு. ஏதோ வீட்டில் குப்பைகளை யெல்லாம் பெருக்கி ஒரு குப்பை தொட்டியில் போடுவது போல் அல்லவா இருக்கிறது இந்த யோசனை. 

கவலைப்  படும்போது தாராளமாக முகத்தை  கோணிக்கொள். புருவத்தை நெரித்துக்கொள் .தலையை தொங்கவிட்டு தாடையை பிடித்துக்கொள்.ஹும்  ஹும்  என்று  அடிக்கடி சலித்துக்கொள். வியர்வை வழியட்டும்.   கைகால்களை  கோணல்  மாணலாக அசைத்துக் கொள். இதெல்லாம் நான்  படுகிற கவலையென்று  நினைத்து அவற்றை தொலைப்பதால் மனோவியாதி நெருங்காது. எப்போதும் ஏதோ ஒரு பயம் வெறுமை இருக்காது. 

அது சரி, நீ எப்படி  படுக்கும் ஆசாமி? 
குப்புற வயிற்றில் மேல் சாய்ந்து இடது புறம் படுப்பவனா?  தம்பி,   நீ உன் இதயத்துக்கு உன் உடம்பு வெயிட்டை போட்டு அழுத்தம் கொடுக்கிறாய்.   ஜாக்கிரதை. பாவம்,  அது ஏற்கனவே நன்றாக  அழுந்தி, ரத்தத்தை  உடலின் பல பாகங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது.  ''லப் டப்'' .  நீ வேறு அதை துன்புறுத்துகிறாய். சீக்கிரம் கெட்டுவிடுமே .   வாழ்க்கையில் மூன்றில் ஒரு பங்கு நேரத்துக்கு மேல் நாம் தூங்குகிறோம் தெரியுமா? அப்படியென்றால் எந்த அளவுக்கு நாம்  இதயத்தை துன்பு றுத்துகிறோம் என்று யோசி. இதை படித்தபிறகு  இனிமேல் வலது பக்கம் படுக்கிறாயா?
இல்லாவிட்டால் பேசாமல்  அண்ணாந்து  மேலே   மின் விசிறியை, அல்லது மோட்டுவளையை பார்த்தபடி  மல்லாக்க படு. முதுகு கீழே படும்படியாக. அப்போது தான் நீ   ரொம்பநாள் இருப்பாய். இது என் ஆசீர்வாதம் இல்லை. நீயாக ஏற்படுத்திக்கொண்ட அருமையான வழி. 

நிறைய  காரட் ஜூஸ் குடித்தால் கேன்சர்  வராது. கேன்சர் இருந்தாலும்  குணமாகிவிடும். 
சர்க்கரை  கொஞ்சம்  பால் ஊற்றி குடிப்பது உன் சௌகர்யம்.

கண்ணைப்  பொறுத்தவரை அதை கெடுப்பது  டிவி,  கம்ப்யூட்டர், மொபைல் போன், வாட்ஸாப் , பளிச்சென்று வெளிச்சமாக ராத்திரி படுக்கையிலும் ஒளிரும் மொபைல்   மானிடர் என்று தெரிந்தாலும் நாம் எங்கே டீ வி யை விட்டு  ஐபாட், மொபைல்  டெலிபோனை விட்டு  நகருகிறோம்?.  கண்ணோடு மனதையும் எண்ணத்தையும் அல்லவா  இதுகள் கெடுக்கிறது. அது  நீ வந்த வழி.  யார்  என்ன செய்யமுடியும்? போகட்டும் போ. உன்னை திருத்த முடியாது. ஆனால்  ஒரு புத்திமதி மட்டும்  சொல்கிறேன். கேட்கிறாயா?  

அதிக  நேரம் இந்த  டிவி  மொபைல், கம்பியூட்டர்  எலாம்  உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்க கூடாது.  நடு நடுவே கம்ப்யூட்டரை விட்டு  விலகி  சமையல் அறை  வரை நடந்து  கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டுவா. அடிக்கடி. தலையை வலது இடது பக்கம், வட்டமாக சுற்றி, மேலும் கீழும் கண்ணால் எல்லா பக்கமும் பார்க்கும் வழக்கமும் கொஞ்சம் நடு நடுவே இருக்கட்டும். எதிரே பின்னால், பக்கத்தில்  யாரோ  உன்னைப் பற்றி திட்டி சுவற்றில் எழுதி இருப்பதாக நினைத்துக்கொண்டு அதெல்லாம் பார். கண்ணுக்கு  இது நல்லது. ஜன்னல் வாசல் இருந்தால் அங்கே எல்லாம் பார்.  மழை வருமா என்று அடிக்கடி வானத்தைப்  பார்க்கலாம்.  மழை வராவிட்டாலும்
கண்ணுக்கு ஆபத்து வராமல் இது பாதுகாக்கும். 

பாவம்  ஆஸ்த்மாக்காரர்கள். ஆஸ்த்மா எதனால்  வருகிறது என்று இன்னும் கண்டு பிடிக்க வில்லையாமே. ஒரு கிராம்  வைட்டமின் c தினமும் உள்ளே போனால் ஆஸ்த்மாவின் தொந்தரவு குறையுமாம்.(எலுமிச்சையில் நிறைய  இருக்கிறது)

அதேபோல் மக்னீஷியம் மாத்திரைகளும் ஆஸ்துமா வருவதையும், வந்தால் குறைக்கவும் செய்யும்  என்று  ஆராய்ச்சி செய்து  சொல்கிறார்கள்.  
            
ஆஸ்த்மா வந்தால் குப்புசாமி திணறுவான். மூச்சு விடவே கஷ்டப்படுவான்.  ரெண்டு மூன்று கப் காப்பி சூடாக சாப்பிட்டால் ரத்த ஓட்டம் அதிகரிக்குமாம். ஸ்வாசம் கட்டுப்படுமாம். 

நிற்கும்போது உன் தசைகளை பூனைபோல்  சுருக்கிக்கொள். ஒரு சில நிமிஷம் போதும். அப்புறம் நிதானமாக  அவற்றை விடுவி. பலூனிலிருந்து காற்றை சன்னமாக வெளிவிடுவது போல. அப்புறம் உடலை  பிழிந்த துணி மாதிரி துவண்டு  ரிலாக்ஸாக இருக்க வைத்துக் கொள்.தரையில் அப்படியே  படு. கண்ணை மூடு. முகத்தை சுருக்கமின்றி வைத்துக்கொள்.  கால்கள்,  பாதங்கள் விறைப்பின்றி இருக்கட்டும்.  தண்ணீரில் மிதப்பதாக நினைத்துக்  கொள்.   பூமியின் புவி ஈர்ப்பு சக்தி உன் தசைகள் மீது பட்டு ஈர்ப்பதாக எண்ணிக்கொள். அப்படியே மிதந்து மிதந்து எந்த லட்சியமும் இல்லாமல் பிரயாணம் செய்வது போல் தோன்றட்டும்.  மெதுவாக நிதானமாக ஸ்வாசி. தூக்கம் வரும் முன்பு ஸ்வாசிப்போமே அது போல்.  அப்புறம் கண்ணைத் திற.

இதெல்லாம்  ஆஸ்த்மா காரர்களுக்கு முக்கியமாக சொன்ன பயிற்சி என்றாலும்  கூட  நாமும் செய்யலாம். தப்பில்லை.  

பாகிஸ்தானில் பெண்கள் ஒல்லியாக இருக்க காரணம் அவர்கள் முன் கையில் ஒரு வளையம் மாதிரி ஒன்றை அணிவதால் என்று  டாக்டர்  த்ருபஸ் கண்டு பிடித்து சொல்கிறார். நரம்புகளுக்கு தொடர்ந்து ஒரு அழுத்தம் இந்த வளையத்தால் ஏற்படுவதால் சில சுரப்பிகள் ஊக்கம் அடைகிறதாம். முக்கியமாக எடை குறைக்கும் சுரப்பிகள். தைராய்டு, சுப்ரா ரீனல் சமாச்சாரங்கள்.  ரெண்டு கையிலும் ரப்பர் பேண்ட் band அணியலாம் என்று தோன்றுகிறது.  அப்படி செய்தால் நல்லது என்கிறார் த்ருபஸ்.  பேங்க் செல்லும்போது ரெண்டு கையிலும் ரப்பர் பேண்டுடன் திரும்புங்கள் அங்கே நிறைய ரப்பர் பேண்ட்  கிடைக்கும். அதோடேயே இரவில் தூங்கலாம். பெண்கள் வளையல் அணிவது  இதனால் தான் போல் இருக்கிறது.

இன்னும்   ராவ்  போல பலர்  சில விஷயங்கள் சொல்வார்கள்  அதையெல்லாம்  கேட்டு  சொல்கிறேன். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...