Sunday, January 30, 2022

WHERE IS THE OTHER BANGLE

 ரை தாஸ்  -  நங்கநல்லூர் J K   SIVAN 


எங்கே இன்னொன்று?

ब्राह्मण मत पुजिये जो होवे गुणहीन !
पुजिये चरण चंडाल के जो होने गुण प्रवीण !!

 தனது  செய்கையால், குணத்தால்,  சொல்லால்,  மனதால், அனுப்பு செலுத்தி பொதுநலம் கருதி சேவை செய்பவன், சுயநலமில்லாமல் உழைப்பவன்  தான் உயர்ந்தவன்.  
ஜாதியால்,  குடும்பத்தால்   எவனும் சுலபத்தில்  கீர்த்தி பெற முடியாது. உயர்குலத்தில் பிறந்தவன் என்று சொல்லிக்கொண்டாலும் நல்லவனாக இல்லாதவன்  மதிக்கப் படமாட்டான்.  தாழ்ந்த, இழி குலத்தவன் என்று பிறர்  தூற்றியபோதும்  மேற்கண்ட நற் குணங்கள் உடையவனே  சிறந்தவன், உயர்ந்தவன்.  ஒளவையார்   சொன்ன ''சாதி இரண்டொழிய  வேறில்லை, .. இட்டாதார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர்''  சமாச்சாரத்தை தான் ரை தாஸ் ஹிந்தியில்  ஒளவையைத் தெரியா மலேயே, தமிழ் அறியாமலேயே  சொல்கிறார்.

कह रैदास तेरी भगति दूरि है , भाग बड़े सो पावे !
तजि अभिमान मेटी आपा पर , पिपिलक हवे चुनि खावै !!

தம்பி,  பகவானிடம் பக்தி என்பது எல்லோருக்கும் கிடைக்கும்  அருமையான  வாய்ப்பு இல்லை யப்பா.  அவனருளால் தான் அவன் தாள் வணங்க முடியும். அதிர்ஷ்டம் வேண்டும் அதற்கு. கொஞ்சம் கூட கர்வம் இல்லாதவன், அகம்பாவம் இல்லாதவன், எளிமையானவன் இந்த அதிர்ஷ்டம் பெற     வாய்ப்புண்டு.   ஒரு பெரிய பலம் மிகுந்த  யானையாக இருந்தாலும்  தரையில் சிந்தியிருக்கும்  சர்க்கரை தூள்களை முழுதுமாக அள்ளவோ , எடுக்கவோ முடியாது.  ஆனால் ஒரு குட்டியூண்டு  எறும்பு  லாகவமாக சர்க்கரை தூள்களை  மூக்கிலும்  முதுகிலுமாக   பொறுக்கி எடுத்து, சுமந்து தூக்கிக்கொண்டு போய்விடும்.

जा देखे घिन उपजे , नरक कुंड में बांस !
प्रेम भगति सो उधरे  , प्रगटत जन रैदास !!

''என்னை எடுத்துக்கொள்ளுங்கள், இந்த ரவி தாஸ் என்கிற ரை தாஸ்,  நான்  பக்தியற்றவனாக இருந்தபோது,  என் வீடு  நரகத்தைகாட்டிலும் மோசமானது என்று எவரும்  என்னை நெருங்குவ தில்லை,   என் வீட்டுப்பக்கம் கூட யாரும்   திரும்புவதில்லை,  கொஞ்சம் கொஞ்சமாக கிருஷ்ணன் மேல் பக்திகொண்டு ஒரு க்ரிஷ்ணப்ரியனாக   நான்  மாறியதும் அடேயப்பா நான்  புத்துயிர் பெற்றவனாக, புதுப்பிறவி எடுத்தவனாக மாறி விட்டேனோ?  எல்லோரும் என்னை அவனைத் தேடுகிறார்கள், அவன் வீட்டை மொய்க்கிறார்களே!  இதற்கு அவனா காரணம்?  கிருஷ்ணன் மேல் பக்தி அல்லவோ?

मन चंगा तो कठौती में गंगा !

ஒரு செருப்பு தைப்பவன்  கதை ஏற்கனவே எழுதி இருக்கிறேனே  ஞாபகம் இருக்கிறதா?  அந்த மனிதனின் பக்தியை பற்றி இந்த  ஒரு வரிப்பாடலில்  ரை  தாஸ் சொல்கிறார்:
''எவன் மனது பரிசுத்தமானதோ, அவன் அழைத்தால்  கங்காதேவி  ஓடோடி  அவனிடம் வந்துவிடுவாள்.  அவன் வைத்திருக்கும்  செருப்பு நனைக்கும்  பாத்திரத்திலும் நிரம்பியிருப்பாள்''
அந்த  செருப்பு தைப்பவர் கதை மீண்டும் இதோ சொல்கிறேன்:

''இன்னொன்றையும்  கொண்டு  வா  J K SIVAN''

கங்கைக் கரையில் செருப்பு ரிப்பேர் செய்யும் ஒரு நல்ல கிழவன்.  தினமும் கங்கா மாதாவை தூர இருந்து கண்ணால் பார்த்து வணங்குவதோடு சரி.   அவன் தண்ணீரைத்  தொட்டால் தீட்டு பட்டு  விடுமாம். அடித்தே கொன்று  விடுவார்கள் . அப்படி ஒரு காலம் அப்போது.   சர்வ பாபங்களையும் போக்கும் கங்கை அந்த தாழ்ந்த வகுப்பு மனிதன் தீண்டினால் புனிதம் கெடுமாம். இப்படியெல்லாம் இருந்திருக்கிறார்கள் அந்த காலத்தில்.

ஒரு பண்டிதர் தினமும் மந்திரங்கள் ஜபித்துக் கொண்டே வருவார். கங்கையில் இறங்கி நீராடுவர். அனுஷ்டானங்கள் முடிந்து வெளியே வருவார். ''எவ்வளவு பாக்கியசாலி அவர்'' என்று அவரை தூர இருந்தே இரு கரம் கூப்பி கிழவன்  கும்பிடுவான்.   அவனைப் பார்த்தாலே தூர நகர்வார் அவர். 

ஒருநாள்  பண்டிதருடைய  செருப்பு  காது அறுந்து விட்டது.   தூரத்திலிருந்து அதை அந்த கிழவன் அருகே  தூக்கிப்போட்டு  ரிப்பேர் செய்ய உரக்க கத்தினார்.  அவனும் அதை நன்றாக தைத்து  ரிப்பேர் செய்து கொடுத்தான். அவனருகே ஒரு அணா காசு விட்டெறிந் தார். அருகே வந்து தர  முடியாதே.  கிழவன் பண்டிதரை வணங்கி
''சுவாமி நான் உங்களிடம் காசு வாங்க மாட்டேன். நீங்கள் கங்கா மாதாவை அனுதினமும் வணங்கி மந்திரங்கள் ஜெபிப்பவர். உங்களுக்கு ஏதோ என்னாலான ஒரு சிறிய உதவி செய்தது என் பாக்யம்''.

''அப்படி இல்லை  யப்பா,  உன் காசு எனக்கு வேண்டாம்.  இலவசமாக  எனக்கு எதுவும் நீ செய்ய வேண்டாம்.   உனது  இலவச  சேவையை நான் ஏற்க முடியாது'' -  பண்டிதர்.

''ஐயா, இந்த ஏழைக்கு ஒரு  பதில் உதவியாக  ஒன்றை   நீங்கள் செய்வீர்களா? இதோ இந்த கங்கா  மாதாவை அனு தினமும்  தூர இருந்தே  வணங்குகிறேன்.   என்னால்  அருகே செல்லமுடியாது.   ஒன்றும் செய்ய இயலவில்லை. நான் அளித்த காணிக்கையாக நீங்களே அந்த ஓரணா காசை  என் சார்பாக  அவளிடம்  சேர்ப்பீர்களா,   என்  காணிக்கையாக  செலுத்துவீர்களா?''

''என்ன சொல்கிறாய் நீ.   இந்த ஓரணாவை கங்கையில் நீ அளித்ததாக சொல்லி   நான்  ஜலத்தில்  தூக்கி  எறிய வேண்டும் அவ்வளவு தானே? சரி''  

பண்டிதர் கங்கையில் இறங்கி வணங்கினார். மந்திரங்கள் ஜெபித்தார்.  ''அம்மா கங்கா தேவி, இந்த ஓரணா காசு  உன் கரையில் இருக்கும் செருப்பு தைக்கும் கிழவன் உன்னிடம் சமர்ப்பிக்கச் சொன்னது. ஏற்றுக்கொள்''  என்று சொல்லி அந்த  ஓரணா காசை வீசி கங்கையில்  எறிந்தார். 
 என்ன ஆச்சர்யம் நுங்கும் நுரையுமாக ப்ரவாஹமாக ஓடிக்கொண்டிருந்த கங்கையிலிருந்து கண்ணைப்பறிக்கும்  வைர வைடூர்ய  ஆபரணங்கள் அணிந்த  ஒரு பெண்ணின்  அழகிய கை வெளியே தோன்றி அவர் வீசிய ஓரணா காசை ஆர்வமாக அன்பாக பெற்றுக் கொண்டது. கங்கா மாதாவின்  முகம்  நீரின் மேல் தோன்றியது.  பேசியது.
''பண்டிதரே, எனக்கு மிக்க மகிழ்ச்சி, இதோ இந்த பரிசை நான் கொடுத்ததாக அந்த கிழவரிடம் கொடுங்கள்''  
கங்கா தேவி ஒரு அழகிய கண்ணைப் பறிக்கும் வைர, நவரத்னக் கற்கள் பதித்து ஒளிவீசிய தங்க வளையலைக்  கொடுத்தாள். பண்டிதன் அசந்து போனான். ஆச்சர்யத்தில் நடுங்கினான்.அதை தனது மேல் துண்டில் பத்திரமாக முடிந்து வைத்து கொண்டான்.   கரை ஏறியவன்  கிழவனிடம் ஒன்றுமே அது பற்றி சொல்லவில்லை. வீட்டிற்கு போய் மனைவியிடம்  

 ''கமலா, இதோ பார்த்தாயா, நான் எதற்குமே பிரயோஜனம் இல்லை, ஏட்டுச் சுரைக்காய், தேங்காய் மூடி பாகவதர் ''  என்று என்னை கரித்துக்  கொட்டுவாயே  இன்று என்ன நடந்தது தெரியுமா உனக்கு?''

''என்ன பெரிதாக சாதித்து விட்டீர்கள்? உங்களைப்  போல் உதவாக்கரைகளுடன் பேசிவிட்டு தேங்காய் மூடி  ஒன்றை  வாங்கி கொண்டு வந்திருப்பீர்கள். சீக்கிரம் கொடுங்கள்.  நமக்கு வழக்கமாக  தேங்காய் துவையகள், தேங்காய் பொடி , தேங்காய் துருவல் தானே  ஆகாரம் , இன்றைய பொழுது துவையலிலாவது கழியட்டும். ''

''அசடே,   அவசர குடுக்கை,  இதைப் பார். என் வேதத்தை மதித்து கவுரவித்து அதால்   நான் பெற்ற பரிசு. உனக்காக நான் சம்பாதித்தது'' 
கங்காதேவி தந்த வளையலை  அவளிடம்  தந்தான் பண்டிதன். கமலாவுக்கு தன்னையோ, தன் கண்களையோ நம்ப முடியவில்லை. கையில் போட்டு அழகு பார்த்தாள். மின்னியது. கண் கூசியது.
''என்ன ஒருவளையல் தானா? இன்னொன்று எங்கே வழியில் தொலைத்து விட்டீர்களா?  அதை  ஜாக்கிரதையாகக் கொண்டு வர கூட  யோக்கியதை இல்லையா?
''அப்படி எல்லாம் இல்லை, ஒன்று தான் கிடைத்தது. அடுத்த முறை கங்கையை கேட்டு வாங்கி தருகிறேன்'' -  சமாளித்தான் பண்டிதன்.
''இந்த ஒன்று எதற்கும் உதவாதே . நாமோ ஏழைகள். திருடர்கள் கொள்ளையர்களுக்கு  இவ்வளவு விலை உயர்ந்த வஸ்து நிமிடம் இருப்பது தெரிந்தால்  நமது உயிர் போனாலும் போகலாம் . இதோ பாருங்கோ, இந்த ஒண்ணை வச்சிண்டு  என்ன பிரயோஜனம்? அடுத்த வேளை சாப்பாட் டுக்கு வழியில்லாமல் அழகான ஒத்தை   வைர வளையலை  கையில் போட்டுக் கொண்டு அலைந்தால் ஊரில்  எல்லாரும் சிரிப்பார்கள். பேசாமல் இதை  நம்மூர் ராஜாவிடம் கொடுத்து விட்டு ஏதாவது காசு கொடுத்தால் வாங்கி வாருங்கள். கொஞ்ச காலம் நிம்மதியாக சௌகர்யமாக  பசியில்லாமல்  வித காய்கறிகள் வாங்கி சமைத்து சாப்பிடலாம் தேங்காய்க்கு முழுக்கு போடுவோம்.''

பண்டிதன் ராஜாவிடம் சென்று  வளையலைக் கொடுத்த போது  ராஜா வாங்கி பார்த்து மகிழ்ந்தான். ஒரு பை நிறைய பொற்காசுகள் கொடுத்தான். ராணியிடம் ஆசையோடு அந்த வளையலைக்  கொடுத்தான்.  பரம சந்தோஷம் அந்த ராணிக்கு. அவள் கைக்கு அது பொருத்தமாக அமைந்தது. அப்போது தான் அவளுக்கு பொறி தட்டியது.  இன்னொரு வளையல் எங்கே?.   ராஜா விடம்  கேட்டாள் . ராஜா ஆட்களை அனுப்பி பண்டிதனை அழைத்து வரச் செய்தான்.
''ஹே, ப்ராமணா. இன்னொரு வளையல் எங்கே? ஏன் அதை தரவில்லை? வீட்டில் வைத்திருந்தால் கொண்டு வந்து உடனே கொடு. ராணி கேட்கிறாள்''
பிராமணன் தயங்குவதைப்  பார்த்த ராஜாவுக்கு கோபம் வந்தது.''என்ன விளையாடுகிறாயா என்னிடம். இன்னும் ரெண்டு மணி  நேரத்தில் இன்னொரு வளையலுடன் நீ வரவில்லை என்றால் உன் தலை  உனதல்ல .ஜாக்கிரதை ''  அதில்லாமல் நான் ராணியைப் பார்க்க முடியாது. போ சீக்ரம்''

ராஜாவின் கட்டளை பண்டிதனுக்கு எம பயத்தை தந்தது.  தலை தப்ப ஓடினான். எங்கே? கங்கைக்கரைக்கு.
அந்த கிழவன் வழக்கம் போல் அதிகாலையில் கங்கைக் கரைக்கு தூர நின்று இரு கரம் கூப்பி கண்களை மூடி கங்கையை வணங்கிவிட்டு  அவன் அருகிலே தேங்கி நின்ற மழை  நீரில் கொஞ்சம் எடுத்து தலையில் ப்ரோக்ஷணம் பண்ணிக்கொண்டான். அது தான் அவனுக்கு கங்காஜலம். செருப்பு தைக்க தேவையான ஜலத்தை ஒரு   தோல்  குடுவையில் வைத்துக்கொண்டு அமர்ந்தான்.
திடீரென்று தன் முன்னே பண்டிதன் ஓடிவந்து நின்றதும் வணங்குவதும் அவனுக்கு ஏதோ ஒரு அதிர்ச்சியை தந்தது.
''சாமி,  நீங்க என்ன செய்றீங்க?  என் கிட்ட வந்து நிக்கறீங்க.  என்னை வணங்குறீங்க. என்ன ஆச்சு உங்களுக்கு? நான் தானே உங்களை எப்போவும் வணங்கறது?''

''என்னை மன்னிச்சுடுப்பா. நான் துரோகி. கங்கா மாதா உனக்கு கொடுத்த பரிசை திருடி வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போனவன் அதை வித்து ராஜாகிட்ட நிறைய பணம் வாங்கினேன். இப்போ என் உயிரே காற்றிலே ஊசல் ஆடுது'' . 
நடந்த   விஷயத்தை சொன்னான் பண்டிதன்.
''ஆஹா அப்படியா. நமக்கு யார் உதவி செய்வாங்க இப்போ? எப்படி இன்னொரு வளையல் கிடைக்கும்? கங்கா  மாதாவையே கெஞ்சி  கேட்போம்''

கிழவன் கண்ணை மூடினான். தனக்கு எதிரே இருந்த அழுக்கு   தோல் பாத்திரத்தில்  செருப்பு தோல் நனைத்து  தைக்க  வைத்திருந்த  அழுக்கு படிந்த  மழை நீரை வேண்டினான்.
''அம்மா,  கங்கா,  நீ எனக்கு பரிசாக ஒரு வளை கொடுத்ததற்கு நான் எத்தனையோ ஜென்மம் கடமைப் பட்டிருக்கிறேன் தாயே. பாவம் இந்த பண்டிதரின் உயிரைக் காப்பாத்து தாயே. இன்னொரு வளையலும் தா. அவர் பிழைக்கட்டும்'' என்று தனது கையை அந்த ஜலத்தில் விட்டான்.  மீண்டும் பிரகாசமான தங்க வைர கற்கள் பதித்த   அதே மாதிரி டிசைன் கொண்ட  இன்னொரு வளையல் அந்த கிழவனின் அழுக்கு பாத்திரத்திலிருந்து அவன் கையில் கிடைத்தது. 
அப்புறம் என்ன நடந்தது என்றா கேட்கிறீர்கள்?
பண்டிதன் ராஜாவிடம் அதை எடுத்துப்  போகவில்லை.  கமலாவைத் தேடி  வீட்டுக்கும் போகவில்லை. தனது தலை, உயிரைப் பற்றியும் கவலைப் படவில்லை. வீடு, கமலா ராஜா  வளையல்   எல்லாவற் றையும் மறந்தானா , துறந்தானா எதுவோ ஒன்று.   
தொடாமல் இத்தனை  காலம்  தூரவே  நின்று கொண்டிருந்த  அந்த  கிழவனின் கால்களை கெட்டியாகப்  பிடித்துக்கொண்டு கண்ணீரால் அவற்றை நனைத்து அபிஷேகம் செய்தான். சீடனாக அருகில் அமர்ந்தான். விஷயம் பரவியது. ராஜாவும் அவன் மனைவியும் ஓடி வந்தார்கள். கிழவனை வணங்கினார்கள். அரண்மனைக்கு கூப்பிட்டார்கள்.
''இங்கே  உட்கார்ந்து  என் கங்காமாதா தரிசனம்  செய்யறது ஒன்றே போதும் ''.   
எல்லோரையும்  வணங்கி  அனுப்பி விட்டு  மீண்டும் செருப்பு   தைப்பதில்  மும்முரமானான்  கிழவன்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...