Sunday, January 16, 2022

VAINAVA VINNOLI

 வைணவ விண்ணொளி -   நங்கநல்லூர்  J K   சிவன் 


பன்னிரு ஆழ்வார்களில்  மார்கழி மாதத்தோடு, கடைசி பன்னிரண்டாவது, ஒரே பெண் ஆழ்வார் ஸ்ரீ ஆண்டாளைப்  பற்றி விவரங்கள் சேகரித்து அளித்து  ஆழ்வார்களைப்  பற்றிய  தொகுப்பை நிறைவு செய்தேன் .  இனி  ஆழ்வார்களைப்  போல் தொடர்ந்து ஸ்ரீ வைஷ்ணவத்தை வளர்த்து பாதுகாத்த,  பக்தியை பரவச்செய்த ஆச்சார்யர்கள், மஹான்கள், சிலரைப் பற்றி அறிவோம். 

''வைணவ விண்ணொளி'' என்று  தலைப்பு  எனக்கு  ஏன் கொடுக்க தோன்றியது?  இந்த பிரபஞ்சத்தை ஒரு வைணவ உலகமாக  கற்பனை செய்து கொள்வோம்.  அதற்கு ஒளி கொடுக்க  சில பல  தாரகைகள், சூரியன்கள்  இருப்பதாகவும்  கொள்வோம்.   அதையே  அப்படியே  ஒரு ஆன்மீக உலகமாக சங்கல்பித்து, அதில் முழுக்க முழுக்க வைணவம் எங்கும் வியாபித்து இருப்பதாக எடுத்துக் கொள்வோம்.   அந்த வைணவ எல்லையற்ற உலகுக்கு  ஒளி வேண்டுமல்லவா?  இரவு பகலாக  சூரியன்களும் நக்ஷத்ரங்களும் அந்த கைங்கர்யத்தை புரிந்தன.  சூரியன்களை  12 ஆழ்வார்களாக காட்டி அவர்கள் வாழ்க்கை குறிப்புகளை இதுவரை  கதையாக சொன்னேன்.  இனி  நக்ஷத்திரங்களாக, ஒளிவீசும் தாரகைகளாக  சில  ஆச்சார்யர்கள், மகான்களை பற்றி சொல்ல முற்படுகிறேன்.

பூர்வ  பீடிகையாக  சில விஷயங்களை முதலில் அறிவோம்.
இந்திய  சரித்திரத்தில்  ஹிந்து சனாதன தர்மத்தைப்  பற்றி  விவரிக்கும்போது  மூன்று  பெயர்கள்  இன்றியமையாதவை.  ஸ்ரீ சங்கரர், ஸ்ரீ  ராமானுஜர்,  ஸ்ரீ  மத்வர்,  இவர்கள்  வாழ்க்கை வரலாறே, மத  கோட்பாடுகளே,  இந்து மதத்தின் சாரமும்  சரித்திரமும் ஆகும்.

இதில்  ஸ்ரீ  ராமானுஜரைப் பற்றியது தான்  ஸ்ரீ வைஷ்ணவம்.   ஸ்ரீ  என்றால்  என்ன அர்த்தம்?   லக்ஷ்மிதேவி.   அவளே  ஸ்ரீ மஹா விஷ்ணுவின்  இதய கமலவாசி.   அதனால் தான்  விஷ்ணுவுக்கு  ஸ்ரீ நிவாசன்  என்று  ஒரு  நாமம்.  ஸ்ரீயின்  ஆசியோடு  உருவானது  ராமனுஜரின்  ஸ்ரீ வைஷ்ணவம்.  அவரது கோட்பாடு சித்தாந்தம் தான்  விசிஷ்டாத்வைதம்.

நமது உலகை ஐந்தாக பிரிப்போம்.  

1. வேத காலம் -  ரிக்வேத ஸ்தோத்ரங்கள்  அக்னி, வாயு, வருண தேவதைகளைப் பாடினாலும்  பரமாத்மனை  மட்டுமே ஒரே தெய்வமாகக்  கொண்டாடிய  காலம் .

2. ஆகம  காலம் -   இது  வேதகாலத்திற்கும்  ஸ்ம்ரிதி  (மகா பாரதம் உட்பட)  காலத்துக்கும்  இடைப்பட்டது.  இது  இரு பிரிவாக உள்ளது.  வைகானசம்,  பஞ்சராத்ரம்  என்று.  விகானஸ மகரிஷியால் தோன்றியது  வைகானச  ஆகமம். வேதங்களில்  இருந்து தொகுக்கப்பட்டது.  பஞ்ச ராத்ரம் கொஞ்சம்  விரிவானது.  நிதானமாக சில விவரங்களை சொல்லவேண்டும்.   இது  சுக்ல யஜுர் வேதங்களில்  இருந்து  வந்தது. நூற்றுக்கணக்காக  உரைகள் உள்ளன என்றாலும்  பொதுவாக   சாத்வ, பௌஷ்கர, ஜயாக்ய  சம்ஹிதைகள்  இவற்றில் முக்யமானவை.  வைஷ்ணவ ஆகமங்கள்  விஷ்ணுவை  ஸர்வ   ஆதாரமாக,    சகல காரணனாக  கொண்டாடுபவை. விக்ரஹ ஆராதனை,   மூர்த்தி ஸ்தாபனம், ஆலய நிர்மாணம்,  ஒழுங்கு, நித்ய  கிருத்யங்கள், பண்டிகைகள்,  விழாக்களின்  நடைமுறை   பற்றி எல்லாம்  விவரிப்பது.

3. ஸ்ம்ரிதி காலம் --   ஸ்ம்ரிதிகள் என்றாலே நம்  கவனத்தை ஈர்ப்பவை  ராமாயணம்,  மகா பாரதம், ஸ்ரீமத் பாகவதம்,  புராணங்கள், வேதாந்த  சூத்ரங்கள், பகவத் கீதை  என்பவை தானே.  இதில்  ராமாயணமே  ஆதி காவ்யமாகவும் சரணாகதி  ஸாஸ்த்ரமாகவும்  கருதப்படுகிறது. இந்த  சரணாகதி சாஸ்திரம்  வைஷ்ணவத்தின்  அதி முக்ய  பிரபத்தி அம்சம்  ஆகும்.   பாகவத புராணமே விஷ்ணு புராணத்தைவிட  வைஷ்ணவத்தில்  முக்யத்வம்  பெறுகிறது.

4. ஆழ்வார்கள் காலம்  -   கி பி  200 முதல் கி.பி. 800 வரையிலுள்ள கால  கட்டத்தில்  தென்னிந்தியா வில்  பல ஆழ்வார்கள் தோன்றினர். சில  ஆழ்வார்கள்  கி.மு. 4000 - 3000 கால கட்டத்தில்  வாழ்ந்த தாகவும்  தகவல்  அறிகிறோம்.  ஆழ்வார்களின் வரவால்   தமிழும் புத்துயிர்  பெற்றது.  பக்தியும் மொழியும்  சேர்ந்து வளர்ந்தது.  பௌத்த, சமண மதங்களின்  ஊடுருவல்  தடுக்கப்பட்டது. இந்த  கைங்கர்யத்தில்  சைவத்தை சார்த்தன்  நாயன்மார்களின்  பங்கும் ஏராளம்.  அனைவரையும்  தாள் தொட்டு வணங்குவோம்.

ஸ்ரீ வைஷ்ணவம்  ஸம்ஸ்க்ரித மொழியை  மட்டுமே நம்பி  வளரவில்லை.  ஆழ்வார்களின்  அழகு தமிழில் மெருகேறி  மின்னியது.  ஆழ்வார்களின்  தத்துவம்  மொத்தத்தில்  நான்கு வகையாக அறியப்படுகிறது.  

ஸ்ரீ  விஷ்ணுவும்  ஸ்ரீ லக்ஷ்மிதேவியும்  அடிப்படையான,   அழிவற்ற,   ஜீவாதார  காரணமான
  உண்மை.  

முக்தி/மோக்ஷம்  அடைய  ஒரே வழி ஒவ்வொருவரும்  பக்தியில் ஆழ்ந்து  விஷ்ணுவே கதி என்று  சரணாகதி அடைவது.   (பிரபத்தி).  

ஒரு  வைஷ்ணவனின்  தலையாய கடமை  நாராயணனுக்கும்  அவன்  பக்தர்களுக்கும்  சேவை  செய்வது.

மறுபிறவி  என்பது  இல்லாத  மோக்ஷ  முக்தி சாம்ராஜ்யம் வைகுண்ட பதவி  அடைவதே ஒரு வைஷ்ணவனின்  வாழ்வின்  குறிக்கோள்,  லட்சியம்.    

காலப்போக்கில்  மாறுதல்களுக்கு உட்பட்டு, ஆட்பட்டு,  இதெல்லாம்  தலைகீழாக போய்விட்டது என்பது காலத்தின் கொடுமை. கட்டாயமும் கூட. 

ஆழ்வார்களின்  தமிழ்ப் பாசுரங்கள்  நாலாயிர திவ்ய பிரபந்தம் என  ஒன்று சேர்த்து அளிக்கப் பட்டு  இன்றளவிலும்  நித்ய வழிபாட்டில் உள்ளது.   இதில் நம்மாழ்வாரின்  1102 பாசுரங்கள்  பெருமை வாய்ந்தவை. தமிழ் வேதம்  என்று  போற்றப்படுபவை.  

5.ஆசார்யர்கள் காலம். (இதில்  ராமானுஜர்  உண்டு)
கடந்த  ஆயிரம்   ஆண்டுகள்  ஸ்ரீ வைஷ்ணவத்தின்  பொற்காலம்  எனலாம்.  முக்ய ஆசார்யர்கள் தோன்றி  ஸ்ரீ வைஷணவம்  பரவச் செய்ய  உதவிய   கால  கட்டம்  இது.    குறிப்பாகச்  சொன்னால்  நாதமுனிகள்,   யமுனாச்சார்யார்,   ராமானுஜர், வேதாந்த தேசிகர்  போன்றோர்  ஆற்றியிருக்கும்  தொண்டு அற்புதமானது.   வேற்று  மதங்களான  புத்தம்,  ஜைனம்,  சாக்கியம், போன்றவற்றின்  கை  ஓங்கி ஹிந்து  சமயம்  தாழ்வுற்ற  நிலையிலிருந்த காலத்தில்   ஆழ்வார்களின்  தோற்றம்  அதற்கு  புத்துயிர் கொடுத்தது மறக்க முடியாதது.  ராமனுஜரின்  பங்கு  ஹிந்து சமயத்தை பலப்படுத்தியதில்  பிரதானமானது.  இதற்காகவே  ஸ்ரீ  நாராயணன் அவருக்கு ரெட்டிப்பு வயது கொடுத்தான் என்று தோன்றுகிறது. 120 வயது வாழ்ந்த அந்த ஆசார்யன், கடைசி நிமிஷம் வரை ஸ்ரீ வைஷ்ணவத்தின் மேன்மைக்கு  மூச்சை இழுத்து பிடித்துக்கொண்டு உழைத்து வாழ்ந்தவர்.

முதலில் தோன்றிய  ஆசார்ய  மஹான்களில்  நாதமுனி முதல்வர்.  கி.பி.  824ல்  பிறந்தவர். அவரது படைப்புகள் விலாவரியாக  கிடைக்கவில்லை.  ராமானுஜர்  மற்றும்  வேதாந்த  தேசிகரின்  வாக்கில்   அவர் பெருமை  புலப்படுகிறது.  நாதமுனிகளின்   முக்கிய பணி  ஆழ்வார்களின்  பாசுரங்கள்   நாலாயிர திவ்யப் ப்ரபந்தம்   என்று  ஒன்று சேர்க்கப்பட்டு  அவரது முயற்சியால்  வெளிக் கொணரப் பட்டது  என்கிற   ஒன்றே போதும். அன்றாடம்  வைஷ்ணவ   ஆலயங்களில் பாடப்படுவது  அவரது  விடா முயற்சியால்  தான்  என்று  அறிந்து   ஆச்சர்யத்தோடு  அவரது  விடாமுயற்சிக்கும்   சிறந்த சேவைக்கும் தலை வணங்குவோம்.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...