Sunday, January 30, 2022

TULASIDAS


 துளசி தாசர் -   நங்கநல்லூர்  J K  SIVAN


ஸ்ரீ  ராம  தரிஸனம் .  

வடக்கே  கம்பரைப்பற்றி அவர் எழுதிய ராமாயணத்தை பற்றி சொன்னால் காதில் விழாதவர்களாக அலக்ஷியமாக  எங்கோ  எதிரே மேயும் பசு மாட்டின் மேல் கவனம் வைப்பார்கள்.  அதே சமயம்  வால்மீகி,  துளசி தாசர், எழுதிய  ராமாயணம் என்றால்  ஆர்வத்தோடு ஓடிவந்து, கை கட்டி அதை கேட்க  உட்காருவார்கள்.  அதே கதை  தான் இங்கேயும்.  வால்மீகி ராமாயணம் வடமொழி அறிந்த நம்மவர்களுக்கு கொஞ்சம்  தெரியலாம். துளசி தாசர் ராமாயணம் என்பதோ , துளசி தாஸர்  யார்  என்றோ துளியும் தெரியாது, தெரிந்து கொள்ள  விருப்பமும் இல்லை.  VG பன்னீர்தாஸ் கடை,   ஏதோ ஒரு கட்சி தலைவர்  தாஸ்  என்றால்  புரியும், ஜேசுதாஸ் பாட்டு கேட்பார்கள்..   வேறே எந்த தாஸும்  தெரியாது.

எனவே  துளசி தாசர் பற்றி கொஞ்சம் அறிமுகம் செய்கிறேன்.
யாருக்காவது  ''ஸ்ரீ ராம்'' என்று மூச்சு உள்ளேயும் வெளியேயும் சத்தத்தோடு   பிரயாணம் செய்தால்  அவரை  ''நீங்கள் தான் துளசிதாசரா?'' என்று கேட்டால் ''ஆமாம்''  என தலையாட்டுவார்.   அவர்  பல முறைகள் ராமனை  நேரில் கண்டவர் பேசியவர்.  ஒருமுறை அவர் ஹனுமனை சந்திக்கிறார். வணங்குகிறார்.
'' ஜெய் மாருதி வீரா, நமஸ்காரம் "
'' ஜெய்  ராம் சீதாராம்.  அட,  துளசிதாசரா?  எங்கே   இவ்வளவு தூரம்?''
'' ஆஞ்சநேயா, மஹா வீரா,  எனக்குள் ஒரு ஆசை.   உங்களுக்கு ராம – லட்சுமணரின் அனுக்ரஹம் கிட்டியது போல் எனக்கும் நேரவேண்டும் . அதற்கு நீங்கள் தான்  கருணை செய்து நிறை வேற்ற வேண்டும்.''
''துளசி தாசரே, நீங்களே  அழைத்தால் ஸ்ரீ ராமன் ஓடிவருவார்.  இதோ பாருங்கள் எதிரே தெரிகிறதே ஒரு ஊர், அது தான்  சித்ர கூடம். இந்த இடத்திற்கு ராமகிரி என்றும்  பெயர். ராமன் வனவாசம் செய்த இடம். அங்கே வெள்ளி உருகி ஓடுவதை போல்  தெரிகிறதே  அது தான்  புண்ய நதி மந்தாகினி. அங்கே சென்று அமர்ந்து  ராமஜபம் செய்யுங்கள். ராம தரிசனம் கிட்டும் ''

'ஆஹா. அப்படியே.   மாருதி  ராயா,  எனக்காக  நீங்களும் சற்று நேரம் என்னோடு  சேர்ந்து ராம ஜெபத்தில் ஈடுபடலாமே.   நீங்கள்  ஜபம் செய்வதைப் பார்த்து  நானும் அவ்வாறே  உங்களோடு சேர்ந்து  ஸ்ரீ ராம நாம ஜபம் செய்கிறேன் ''  என்கிறார் துளசிதாசர்.

''ஓ, சந்தோஷம். கரும்பு தின்ன கூலியா வேண்டும்.  இதோ ஆரம்பிப்போம் ''  
ஹநுமானோடு  துளசி தாசரும் ராம ஜபம் செய்தார்.   உள் மனதில்  ராமர்  எப்போது வருவார், எப்படி வருவார்?  தனியாகவா கூடவே  லட்சுமணனுடனுமா ?   அடேடே  ஒரு வேளை  சீதையை வாருங்கள் என்று நான் அழைக்காததால் வரமாட்டாளோ, அவர் அழைத்து வருவாரா  மாட்டாரா? ராமர்  எப்படி இருப்பார்? தலையில் ஜடாமுடியுடன் வருவாரா? (அ) வைரக்கிரீடம் அணிந்து வருவாரா? மரவுரி தரித்து வருவாரா? என்ற பல சிந்தனைகளோடு இடுப்பில் இருந்த துணியை வரிந்து கட்டிக் கொண்டார். கண்களை இமைக்காமல் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தார்.

வெகுநேரமாகியது.  சூரியன் மேலே ஏறி மெதுவாக மேற்கே இறங்கி விடுவான் போல் இருக்கிறதே.   மலைப்பாதை, ஒற்றையடிப்பாதை. இருபுறமும் புதர் அங்கிருந்த பாறாங்கல்லில் நின்றுகொண்டு ராம, ராம என்று ஜபித்து நர்த்தனமாடினார் துளசி தாசர்.

திடீரென்று  மலை உச்சியில் இருந்து வேகமாக இரண்டு குதிரைகள் வந்தன. அதன் மீது இரண்டு ராஜகுமாரர்கள்.
 துளசிதாசர் எத்தனையோ ராஜாக்களைப் பார்த்திருக்கிறார். ஆனால் குதிரையில் வந்த ராஜகுமாரர்களோ தலையில் தலைப்பாகை, அதைச் சுற்றி முத்துச் சரங்கள் கொண்டை மீது வெண்புறா இறகுகள் என்று வித்தியாசமாக இருந்தனர்.   அவர்களை  வழிப்போக்கர்கள் என  அலக்ஷியமாக  பார்த்துக்கொண்டே நின்றார். குதிரையில்  வந்த  வீரர்கள்  துளசி தாசரைப்பார்த்துச் சிரித்துக் கொண்டே போய்விட்டனர்.
யாரோ ராஜகுமாரர்கள் .  யாரா இருந்தால் என்ன? என் ராம, இலட்சுமணனுக்கு ஈடாவார்களா? தலையில் ரத்ன கிரீடமும் மார்பில் தங்கக் கவசமும், தங்க ஹாரமும் கையில் வில்லும் இடுப்பில் அம்புறாத் தூளியும் கையில் ஒரு அம்பைச் சுற்றிக் கொண்டே எத்தனை  அழகாக இருப்பார் என் ராமர்,  என்று தியானித்தவாறே ராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தார்.

நேரமாகி விடவே, ஹனுமான்   ஜபம் முடித்து எழுந்தார்.
''என்ன துளசி தாசரே, ஆனந்தமாக  ராம லட்சுமணர்களை  தரிசித்ததில் சந்தோஷம் தானே?''  என்க
''ராம லக்ஷ்மண  தரிசனமா  எங்கே.  நான் பார்க்கவில்லையே''
''என்ன சொல்கிறீர்கள் நீங்கள், உங்களை பார்த்து  புன்னகைத்து  கை அசைத்து, வெகு அருகில் மெதுவாக குதிரை மேல் இருந்தவாறே  காட்சி தந்தார்களே , நான் பார்த்தேனே''  என்கிறார்  ஹனுமான்.
''அடாடா,  நான் கண்ட  யாரோ  ரெண்டு  ராஜகுமாரர்கள் தான்   ராம லட்சுமணர்களா? ஏமாந்து  கோட்டை விட்டேனே. அப்படி வருவார்கள் என எதிர்பார்க்கவில்லையே '' என புலம்பினார் துளசிதாசர்.
''என்ன இது துளசி தாஸரே, ராமர் உமது இஷ்டப்படிதான் வரவேண்டுமா? அவர் இஷ்டப்படி வரக்கூடாதா?'' --  ஹனுமான்.
'ஸ்ரீ ராம தூதா,  என்னை மன்னிக்க வேண்டும். ஒன்றும் அறியாத பேதை நான். ஏதோ கற்பனை செய்து கொண்டு ராம லக்ஷ்மணர்களை அலக்ஷியம் செய்து விட்டேனே.  
வாயுகுமாரா. இன்னும் ஒருமுறை தயவு செய்யும். ஸ்ரீ ராமன் எந்த வடிவில் வந்தாலும் ஆனந்தமாய் தரிசிக்கிறேன்'' என்றார் துளசிதாசர்.
'' சரி,  நீங்கள் போய் மந்தாகினியில் இறங்கி நீராடி ஜபம் செய்யும். ராமாயணப் பாராயணம் செய்யும். ராமன் மறுபடியும்  வருவாரா பார்க்கலாம்'' என்றார்  ஹனுமான்.

மந்தாகினியில் மீண்டும் நீராடி  துளசிதாசர்  ராம நாம ஜபம் செய்தார். வால்மீகியின் ராமாயண பாராயணம்  செய்தார், இரண்டு நாட்கள் ஓடிவிட்டது. அன்றைய தினம்  ராமாயணத்தில் பரதன் சித்ர கூடத்திற்கு வரும் முன்பு ராம, லட்சுமணர்கள் சித்ர கூடத்தில் வசித்துக் கொண்டு காலையில் மந்தாகினியில் நீராடுகிறார்கள் என்று கட்டத்தைப் படித்துக் கொண்டிருந்தார். எதிரே மந்தாகினி யில் குளித்து விட்டு இரண்டு இளைஞர்கள்  நதியிலிருந்து கரை ஏறி துளசி தாசரிடம் வந்தனர்.
ஒருவன் நல்ல கருப்பு நிறம், மற்றவன் தங்க நிறம். முகத்தில் பத்துப் பதினைந்து நாள் வளர்ந்த தாடி,
கருப்பன்  துளசிதாசரிடம்  ''சுவாமி, உங்களிடம் கோபி சந்தனம் இருக்குமா?   என கேட்டான்.
ராம ஜபம் சொல்லிக்கொண்டே  ''ம்ம்.  இந்தா . இருக்கிறது''  என  தாசர் சந்தனம்  நீட்டினார்.
மற்றவன் '' சுவாமி, எங்களிடம் கண்ணாடி இல்லை. நீங்களே எங்கள் நெற்றியில் இட்டு விடுங்களேன்''என்றான்
''ஆஹா, இட்டு விடுகிறேனே''.   இடது கையில் நீர் விட்டுக் கொண்டே சந்தனத்தைக் குழைத்த போது கருப்பு இளைஞன் எதிரே உட்கார்ந்து முகத்தை நீட்டுகிறான். தாசர் அவன் மோவாயைப் பிடித்துக் கொண்டு முகத்தைப் பார்க்கிறார். அவனது கண்கள் குருகுருவென்று இவரைப் பார்க்கின்றன. பார்த்தவுடன் தன்னை மறந்துவிட்டார். அந்த இளைஞன் இவருடைய கையில் இருந்த கோபி சந்தனத்தைத் தன் கட்டைவிரலில் எடுத்து   தானே, தன் நெற்றியில்    தரித்துக்கொண்டு  துளசி தாசர்  நெற்றியிலும்   பூசினான்.   தன்னுடன் வந்தவனுக்கும்  நெற்றியில்  இட்டான். 

அவர்கள் உட்கார்ந்திருந்த படித்துறைக்கு அருகில் ஒரு மாமரம், மரத்தின் மீது இருந்த கிளி கூவியது. அது ஸ்லோகமாக துளசிதாசர் காதில் விழுகிறது. கிளி என்ன சொல்லியது:

சித்ர கூடகே காடபரே பகி ஸந்தக கீ பீர
துளசிதாஸமே சந்தந கிஸே  திலக தேத ரகுபீர.

''சித்ரக் கூடத்துக் கரையில்எப்போதும் சாதுக்கள் கூட்டம்.  ஒரு  ஓரமாக துளசிதாசர்  அமர்ந்து  சந்தனம் குழைக்கிறார்.ஆனால் எதிரே இருந்த  ராமர் அதை துளசிதாசருக்கு  திலகமிடுகிறார்;;

துளசிதாசர் திடுக்கிட்டு எதிரே உள்ள கருப்பனை பார்க்கிறார்: சிரித்துக்கொண்டே அவன் கேட்கிறான்:
''சுவாமி,   என்  நெற்றியில் நாமம் சரியாக இருக்கிறதா?
'' ராமா, உனக்கு இதைவிட பொருத்தமான நாமம் ஏது?''   துளசி தாசர் பக்தியில் திளைத்து கதறியவாறு அந்த இரண்டு இளைஞர்களையும் கட்டி அணைத்துக் கொண்டார் துளசிதாசர்.  இளைஞர்களுக்கு பதில்  அங்கே ராம லக்ஷ்மணர்கள் அவருக்கு  தரிசனம் தருகிறார்கள். 

தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...