Friday, January 14, 2022

MOOKA PANCHASATHI 1

மூக பஞ்ச சதி   -   நங்கநல்லூர்  J K  SIVAN 

1.   மூக சங்கரரும்   கணேசய்யரும்.

எனது நண்பர்  ஸ்ரீ கல்யாணராமன் வெளிநாடு ஒன்றில்  சார்ட்டட் அக்கௌன்டன்ட்.  சமஸ்க்ரிதம் ஆங்கிலம்  நன்றாக  கற்றவர்.  ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பண சேவா ட்ரஸ்ட் புத்தகங்கள்  சில வெளிவர நிறைய உதவி செய்தவர்.  

சிவன் சார், எனக்கு திடீரென்று ஒரு  ஆர்வம். மூக்கை பஞ்சசதியை ஆங்கிலத்தில் எழுதவேண்டும் என்று. எனக்கு கணேசய்யர் என்றுஒருவர் பல வருஷங்களுக்கு முன்பு எழுதிய  புஸ்தகம் தெரியவந்து அதை பின்பற்றி எழுதுகிறேன். நீங்கள் தமிழில் அதை எழுதலாமே.  G V. கணேசய்யர் புத்தகம்  PDF  வாட்ஸாப்பில்  உடனே  அனுப்பிவிட்டார்.  இது மஹாபெரியவா அனுக்ரஹம்   என்று தான் அறிகிறேன். ரெண்டு மூன்று வருஷம் நாங்கள் தொடர்பு கொண்டு பேசவில்லை. திடீரென்று சில நாட்களுக்கு முன்பு  கல்யாணராமனின்  டெலிபோன். அதில் இந்த அன்பு வேண்டுகோள்.   ஆச்சர்யமான விஷயம்.  

மஹா  பெரியவாளுக்கு  மூக பஞ்ச சதி ஸ்லோகங்கள்  ரொம்ப  பிடிக்கும். அடிக்கடி அதிலிருந்து மேற்கோள் காட்டுவார்.  மூக  என்றால்  வாய்  பேசமுடியாத ஊமை நிலை.  பஞ்ச சதி என்றால் ஐந்து நூறு.   காஞ்சி காமாக்ஷி தேவியின் பேரில் 500 ஸ்லோகங்களை கொண்ட அழகான ஸ்தோத்திரம் மூக பஞ்ச சதீ.  இது 5 சதகங்களை கொண்டது. ஒவ்வொரு நூறு ஸ்லோகங்களும் ஒரு பெயர். முதல் நூறு  ஆர்யா சதகம், ரெண்டாவது நூறு  பாதாரவிந்த சதகம், மூன்றாவது நூறு  ஸ்துதி சதகம், நான்காவது நூறு  கடாக்ஷ சதகம், என்றும்  கடைசி ஐந்தாவது நூறு சதகம் மந்தஸ்மித சதகம்  என்றும் அழைக்கப்படுகிறது.   இதை இயற்றியவர் மூக கவி.  பேச முடியாத அவர்  எப்படி  பாடினார்? 
ஊமையாக இருந்த போது  காஞ்சீபுரத்தில் குடி கொண்டுள்ள ஜகன்மாதா காமாக்ஷியின் கிருபா கடாக்ஷத்தையும், அவளுடைய தாம்பூல உச்சிஷ்டத்தையும் பெற்று, உடனே அமிருத சாகரம் மாதிரி 500 சுலோகங்களைப் பொழிந்து தள்ளி விட்டார் என்று மஹா பெரியவா சொல்லி இருக்கிறார். அது போதும்.   இது தான்   மூக  பஞ்ச சதி. 

காமாக்ஷி அம்பாளின் நாம ரூபங்களின் மகிமையை ‘ஆர்யா’ சதகம் கூறுகிறது.  அம்பாளின்  பாதார விந்தங்களின் பெருமையைப் பற்றி  நூறு சுலோகங்கள்   பாதாரவிந்த சதகம் பாடுகிறது.  அவளை ஸ்தோத்ரம் பண்ண  பொருத்தமான அவளது உன்னத,   உயர்ந்த  குணங்களைப் பற்றி மூன்றாவது  நூறு ஸ்லோகங்கள் கொண்ட ஸ்துதி சதகம்.  அவளின்  கடைக்கண் பார்வை, காருண்ய நோக்கு, கடாக்ஷ வீக்ஷண்யத்தைப் பற்றி மாத்திரம் நூறு சுலோகங்கள் தான் கடாக்ஷ சதகம்.  கடைசியாக  காமாக்ஷி அம்பாளின்  புன்சிரிப்பின் ஸெளந்தர்யத்தைப் பற்றியே நூறு சுலோகங்கள் மந்தஸ்மித சதகம்  என்ற தலைப்பில் ப்ரவாஹமாக  அளித்திருக்கிறார் மூக  கவி.

 மஹா பெரியவா காமாக்ஷி தாஸர் மட்டுமல்ல, அவரே  காமாக்ஷி ஸ்வரூபம் என்பார்கள்.  அவருக்கு பிடித்த  இந்த ஐந்நூறு காமாக்ஷி ஸ்தோத்திரங்கள் தான் மூக பஞ்சசதி . அம்பாளைப்பற்றிய ஸ்லோகங்களில் சிறந்தது இது என்பார்.  அவர் காமகோடி மட சார்பாக  மூக பஞ்ச சதியை  புஸ்தகமாக வெளியிட்டு, பல பக்தர்களிடம், இஹ பர சௌபாக்யத்துக்காக தினமும் இதை படிக்கும்படி பரிந்துரை செய்திருக்கிறார். ஸ்தோத்திர வடிவமாக இருப்பதால், நேரம், இடம், தகுதி, பாராமல் எவரும் எவ்விடத்திலும் எந்நேரத்திலும் பக்தியோடு இதை பாராயணம் செய்யலாம். 

சிறு வயதில் திக்குவாய் இருந்த ஒருத்தர், மஹா பெரியவா சொல்லி மூக பஞ்ச சதீ படித்து சங்கர பாஷ்யத்துக்கு வாக்யார்த்தம் சொல்லுகிற அளவுக்குப் பெரிய பண்டிதர் ஆகி விட்டார்.

 ஒரு சமயம் ஒரு பண்டிதர் காமாக்ஷி அம்பாள் மீது புதிய சுப்ரபாதம் இயற்றி பேராசிரியர் வீழிநாதன் மூலமாக மஹா பெரியவாளிடம் சமர்ப்பித்தார். அன்றைய தினம் மஹா பெரியவா மௌன விரதம். அடுத்த முறை மஹா பெரியவாளை வீழிநாதன் சந்தித்து அந்த புதிய சுப்ரபாதம் பற்றி கேட்ட போது, பெரியவா “மூக பஞ்ச சதி இருக்கும் போது அம்பாள் மீது இன்னொரு ஸ்தோத்ரம் இயற்ற வேணுமா?” என்று கேட்டிருக்கிறார். பெரியவாளுக்கு மூக பஞ்ச சதியின் மேல் அத்தனை அபிமானம். அத்தனை பக்தி.

 மூக பஞ்ச சதி புஸ்தகத்தின் ஸ்ரீமுகத்திலும் மஹாபெரியவா, “அம்பாள் வாக்கிலிருந்து மூக கவி வாக்கிற்கும் மூக கவி வாக்கிலிருந்து நமக்கும் அனுக்ரஹம் செய்ய வந்திருக்கும் அற்புத ஸ்துதி இது” என்று சொல்லியிருக்கிறார். மேலும் “உலகத்திலே மிகச் சிறந்ததாக விளங்கும் இந்த ஸ்துதி நூலை படிப்பதால் மட்டுமே, அந்த க்ஷணத்திலேயே இந்த மஹாகவியோடும், இறுதியிலே பர தேவதையோடுமே ஒன்றாகும் நிலையை ஸாதகன் அடைகின்றான்” என்று ஆசீர்வாதம் பண்ணி இருக்கார்.

சமீபத்தில் இந்த மூக பஞ்ச சதி புத்தகத்தை ஒரு அற்புத மனிதர்  எழுதி இருப்பதை அறிந்தேன்.  நான் அறிந்தது தான் சமீபத்தில், அவர்  எண்பது  வருஷங்கள் முன்பே இதை எழுதி காஞ்சி காமகோடி மடம்  பிரசுரித்திருக்கிறது. விலை  ஒண்ணரை ரூபாய்,   ஒண்ணேகால்  ரூபாய் என்று ஐந்து சாதகங்களை ஐந்து புஸ்தகமாக்கி இருக்கிறார்கள்.  அதை பின்பற்றி இனி மூக பஞ்சசதி படித்து எழுத உத்தேசம்.  எழுதிய  ஸ்ரீ  G V  கணேச ஐயர் ஒரு வக்கீல்.  நிறைய  ஸமஸ்க்ரித  கிரந்தங்களை படித்து அற்புதமான  வியாக்யானம் எழுதியவர்.  அவர் கண்டு பிடித்து சொன்னது:

மூக பஞ்ச சதி எழுதிய மூகர்  யார்?  காஞ்சி காமகோடி பீடாதிபதி பாரம்பரியத்தில் 20வது பீடாதிபதி பெயர்  மூக சங்கரர். எந்த ஊர்க்காரர் என்று தெரியவில்லை.  கோதாவரி ஜில்லாவில் எங்கோ அதிஷ்டானம் உள்ளது போல் இருக்கிறது .   437 வது வருஷம்  சித்தி அடைந்தார் என்றால் கிட்டத்த்தட்ட 1650 வருஷங்களுக்கு முன்பு இருந்தவர்.  35 வருஷ காலம்  காஞ்சி காமகோடி பீடாதிபதியாக இருந்தவர்  என்று போட்டிருக்கிறது.  போட்டோ  விவரங்கள்  எதுவும் கிடைக்கவில்லை என்பது நமது துர்பாக்கியம்.     ஆதியில் ஊமையாக இருந்தவர்.  19வது பீடாதிபதி ஸ்ரீ வித்யாகனேந்திர சரஸ்வதி அனுக்ரஹத்தால்   பேசும் சக்தி அடைந்தார் என்று தெரிகிறது. அவர் தான்  மூக பஞ்சசதி  இயற்றிப்பாடியவர். 

எல்லா ஸ்லோகங்களும் படிப்பதற்கு இனிமையாகவும்  கேட்பதற்கு ஜிலு ஜிலு என்று  ரம்யமாகவும் இதமாகவும் இருக்கிறது என்கிறார் கணேசய்யர்.  காமாக்ஷி,  காஞ்சி, ஏகாம்ர நாதர்,  கம்பா நதி என்று காஞ்சிபுர விஷயங்கள் அனைத்தும் அடிக்கடி  வருகிறது.   ஸ்ரீ லலிதாம்பிகை தான் காமாக்ஷி, அவர்கள் பார்வை கிடைத்தாலே பக்தர்களின் காமங்கள் , விருப்பங்கள் பூர்த்தியாகும். காமாக்ஷியின் பாதி  காமேஸ்வரர்  தான் ஏகாம்ரேஸ்வரர் . 

ஸ்ரீ காமாக்ஷி கிரகத்தின்  வாயு பாகத்தில், ருத்ரகோடியில்   ஏகாம்பரேஸ்வரர் கோவில் , ஆக்னேய பாகத்தில் வரதராஜர் கோவில்.  ஏகாம்ரம்  எனும் ஒற்றை மாமரம் இன்னும் கோவிலில் இருக்கிறது. நீங்களும் சென்று பார்க்கலாம். 

கைலாசத்தில் வேடிக்கையாக ஒருநாள்  உமா  பரமேஸ்வரன் கண்களை தன்  இரு கரங்களால் மூட, உலகம் அஸ்தமிக்க, பரமேஸ்வரன் அவளை சபிக்க, காஞ்சியில் கடும்தவமிருந்து  மாமரத்தின் அடியில் மண்ணால் சிவலிங்கம் அமைத்து வழிபட, அவளது பக்தியை சோதிக்க கங்கையை சிவன் பிரவாகமாக அனுப்ப, கங்கையிடமிருந்து காப்பாற்றிய லிங்கம்  ஏகாம்பர நாதர்.  கங்கா   ப்ரவாஹத்தை கண்டு  காமாக்ஷி நடுங்கியதால் கங்கா அங்கே கம்பா என்று பெயர் பெற்றது. கம்பம் என்றால் நடுங்குவது  பூமி நடுக்கத்தை நாம் பூகம்பம் என்கிறோமே.

இனி மெதுவாக  எனக்கு முடிந்தவரை மூக பஞ்சசதி முதல் நூறு சதகமான  ஆர்யா சதகத்தில் கணேசய்யர் உதவியோடு  பிரவேசிக்கலாமா?





 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...