Thursday, January 13, 2022

KOTHAIYIN GEETHAI

 கோதையின் கீதை  -   நங்கநல்லூர்  J K   SIVAN 

                          
24.   ஆண்டாள் கல்யாணம்   வைபோகமே! 

முடிப்பதை ஒரு கல்யாணத்தோடு முடித்தால் என்ன என்று தோன்றி அதை ஆண்டாள் திருக் கல்யாணத்தை  அவளே ''கனவு''  கண்ட படியே   நிறைவேற்றி, அவள் வாக்கிலேயே  அதைப்  பற்றி  சொல்வதில் தான் எத்தனை  மகிழ்ச்சி!

கோதை அரங்கனுக்கு  தான்  என்பது ஏஎற்கெனவே முடிவான  விஷயம்.  பெரியாழ்வார்  இனி விஷ்ணு சித்தர் அல்ல.   என்றைக்கு தன் மகள்  ரங்க மன்னாருக்கு மனைவியாகப்போகிறவள்  என்று முடிவு கட்டி விட்டாரோ,   அன்றே  ''மன்னாரின்  மாமனார்'' ஆகிவிட்டாரே.  
சாதாரண ஆழ்வார் பெரிய ஆழ்வார் ஆகிவிட்டாரே. அவர் கனவில் அரங்கன் தோன்றினான் ..
 
''உமது மகள் இனி என்னவள். உடனே அழைத்துக்கொண்டு எம்மிடம் வாரும்'' என்று தான் கட்டளை இட்டு விட்டானே. மதுரை அரசனுக்கும் சேதி போய் விட்டதே. சகல வித வாகனாதிகளோடும், மாலை மரியாதைகளோடும், தூப தீபங்களோடும்,  சீர்  வரிசைகளோடும் , வாத்ய வேத கோஷங்களோடும் அனைவரும் புறப்பட் டுவிட்டனரே. 

வில்லி புத்தூரை நோக்கி மாபெரும் ஊர்வலம் மதுரை மன்னன் அரண்மனையில் இருந்து  சிவிகை
யோடு கிளம்பிவிட்டது. மணப்பெண் தயாராக இருப்பாளே. அவளை ஏற்றிக்கொண்டு ஸ்ரீ ரங்கம் செல்ல வேண்டாமா? வழியெங்கும் கல்லையும் முள்ளையும், காட்டையும், பற்றி எல்லாம் யாருக்கு இனி கவலை?

மாப்பிள்ளை யார்?, சாதாரணமானவரா? சகல கல்யாண குணங்களும் பொருந்தியவரல்லவா? ஸ்ரீமன் நாராயணனே அல்லவா அரங்கனாக ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டு காத்துக் கொண்டிருக் கிறார். ஊர்வலத்தை பற்றி ஒரு சில விவரங்கள் உங்களுக்கு தர வேண்டுமல்லவா?.

அடேயப்பா, ஆயிரக்கணக்கான, மலையே அசைந்து வருவது போல், கூட்டமாக யானைகள் பிளிறிக் கொண்டு உற்சாகமாக நடை போடுகின்றன. அத்தனை யானைக்கும் முக படாம், மேலே வண்ண அலங்கார பட்டுத் துணிகள் போர்த்தப்பட்டு கண்ணைப் பறிக்கின்றன. வழி முழுதும் எங்கும் வித விதமனா கண்ணைப்பறிக்கும்  வண்ண  வர்ணங்களில் வகைகளில் காற்றில் பறக்கும் தோரணங்கள்.

ஆங்காங்கே வேத விற்பன்னர்கள் மந்திரமோதிக்கொண்டு தங்க மயமான  பள பளக்கும் கலசங்களில் பூரண கும்பங்கள் ஏந்தி நிற்கின்றனர்.  இதுவரை எவரும் அறியாத மிக மகோன்னத திருமணம்  ஒன்று நடக்கப் போகிறது. 

தென்னை பனை, வாழை பாக்கு மாந்தளிர் எல்லாவற்றையும் சேர்ந்த பந்தல் மிகப்பெரியதாக போடப்பட்டு விட்டதே. சூரியனே உள்ளே நுழைய முடியாது. தென்றல் குளு குளு வென்று வீசி சந்தனம், பன்னீர் ரோஜா வாசனை திரவியம் தைல மணம் மூக்கைத் துளைக்கிறதே. இதோ பந்தலுக்குள் மாப்பிள்ளை வீர நடை போட்டு சிங்கம்போல் நுழைகிறார். ''கோவிந்தா கோவிந்தா'' என்ற குரல் வானைப் பிளக்கிறதே.

ஆண்டாள்  கல்யாணத்துக்கு வந்த  கூட்டத்தில் நிறைய முகங்கள் ஏற்கனவே பார்த்தவையாக இருக்கின்றனவே. ஒ, அடடா, இது தேவேந்திரன் அல்லவா?. என்ன தேஜஸ், அவரைச் சுற்றி தான் எத்தனை தேவாதி தேவர்கள் -- இவர்கள் பிள்ளை வீட்டார்களாயிற்றே. சகல மரியாதைகளோடும் அமர்ந்திருக்கிறார்கள்.

''என்னை முறையாக பெண் கேட்க நிச்சயதார்த்ததுக்கு அல்லவோ வந்திருக்கிறார்கள். என் அப்பா, மதுரை ராஜா சில ஆழ்வார்கள் மட்டுமே என் பக்கம். நாங்கள் பெண் வீட்டார். இரு பக்கமும் கலந்து பேசி கல்யாணம் நிச்சயமாகி விட்டது. எல்லோருக்குமே பரம சந்தோஷம்.

மத்தள நாதஸ்வர சப்தம் காதைப் பிளக்க அதோடு கலந்து வேத மந்த்ரங்கள் முழங்க இதோ கூரைப்புடைவை எடுத்து என் கையில் கொடுத்தாகி விட்டது. நான் அதை இதோ ஒரு நொடியில் சம்பிரதாயப்படி உடுத்திக்கொண்டு வந்து விடுகிறேன். ஒரு நிமிஷம் பொறுங்கள்.''

இந்த அழகிய தெய்வீக மங்கை யார்? பார்த்திருக்கிறேன் ஞாபகம் வருகிறது நன்றாக. இவள் தான் என் கணவனின் சகோதரி துர்க்கை என்பது தெரிந்துவிட்டது. அவள் எனக்கு முக மலர்ச்சியுடன் மாலை சூட்டுகிறாளே ''.

''வழி விடுங்கள் வழி விடுங்கள்'' என்று ஒலித்துக்கொண்டே ஒரு கூட்டம் வருகிறதே இவர்கள் யார். எதற்கு இங்கு? அவர்கள் கையில் இருப்பதைப் பார்த்ததும் தான் புரிகிறது. ஓஹோ, சகல புண்ய நதிகளின் தீர்த்தம் அல்லவோ இந்த குடங்களில்  கொண்டு வந்தவர்கள். வாய் மணக்க வைதீகர்கள் மந்திரம் ஒலிக்க,  நாலா பக்கமும் மாவிலையால் ப்ரோக்ஷணம் பண்ணிக்கொண்டு வந்து விட்டார்கள். எங்கும் பரிசுத்தம், நறுமண கந்தம். உரத்த குரலில் ஆயிரக்கணக்கான வேதியர்கள் மந்திரம் ஒலிக்கிறார்கள். எனக்கும் ''அவருக்கும் '' மங்களா சாசனம் நடக்கிறது. புன்முறுவலிக்கும் ''அவரை''  கடைக்கண்ணால் வெட்கத்துடன் ஒரு பார்வை பார்க்கிறாள்.
'' ஆஹா இந்த ஆணழகன் நறுமண மலர் மாலைகள் அணிந்து கம்பீரமாக எத்தனை கொள்ளை கொள்ளும் வசீகரன். இதோ பார்த்தீர்களா எங்கள் இருவர் கைகளிலும் கங்கணம் காப்பு''  என்கிறாள். .

''அட, இதென்ன, இத்தனை நேரம் இங்கே திரும்பி பார்க்காமல் போய்விட்டேனே!. அப்பப்பா , எத்தனை வரிசை. அழகான இளம் பருவ மங்கைகள், பல் வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று அவர்களது உடை, ஆபரணம் , அலங்காரம் எல்லாம் கதை கதையாக சொல்கிறதே. அனைவர் கைகளிலும் தீபங்கள், வித வித தட்டுகள் நிறைய என்னன்னவோ பொருள்கள், பொன் கலசங்கள். யாருக்காக இவர்கள் இங்கு நிற்கிறார்கள்?  எவரை எதிர்கொண்டழைக்க தயார் நிலையில் உள்ளார்கள்?.  ஆமாம் அவர்கள் காத்திருக்க இதோ மதுரை மன்னன் சுந்தரேஸ்வரரும் வந்து விட்டாரே.
மத்தள மேளங்கள் கொட்ட, வரியுடைய சங்குகளை ஊத, அந்த மதுசூதனன், முத்து மாலைகள் கட்டித் தொங்க விடப்பட்ட அழகிய பந்தலில் என் கைத் தலத்தைப் பற்றுகிறாரே.
வேத உச்சரிப்பில் வல்லவர்களான வேதியர்கள் சிறந்த வேதத் தொடர்களை ஓத, அந்தந்தச் சடங்குகளுக்கு உரிய மந்திரங்களாலே, பசுமையான தர்ப்பைகளையும், ஸமித்துகளையும் பரத்தி வைத்து வேள்வி செய்து, சினம் கொண்ட மத யானை போன்ற கண்ணன் என் கையைப் பிடித்துக் கொண்டு அக்னியை வலம் வருகிறான் !

இந்தப் பிறவிக்கும், இனி  மேல் வரும் எல்லாப் பிறவிகளுக்கும் அடைக்கலமான பற்றுக்கோடாக, நமக்கு நாயகத் தலைவனாக உள்ள நம்பியான நாராயணன், தன் செவ்விய திருக்கையால் எனது கால்களைப் பிடித்து அம்மியின் மேல் எடுத்தும் வைத்து விட்டான். அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் நேரம் அல்லவா  இப்போது. 

என் முன்னே ஹோம குண்டத்தில் நெருப்பை இட்டு வளர்த்து, வில்லினை ஒத்த புருவமும், ஒளி பொருந்திய முகமும் கொண்ட  என்னை அதன் முன்னே நிறுத்தி, அச்சுதனான அந்தக் கண்ணன் கைமேல் என் கையை வைத்து, பொரிகளை அள்ளி அக்னியில் சேர்த்து விட்டார்கள். இதை என்னால் மறக்கமுடியுமா ?''

நான் மேலே சொன்னதெல்லாம் என் கற்பனை அல்ல சுவாமி. இதெல்லாம் ஆண்டாள் என்கிற கோதை தனக்கும் அந்த மாயவன் அரங்கனுக்கும் கனவில் நடந்த திருமணம் என்று தோழிக்கு உணர்த்தும் அருமையான காவியம் தான் வாரணமாயிரம் பாசுரங்கள்.

அவற்றை கீழே அளித்துள்ளேன். இதைப் படித்துவிட்டு அந்த பாசுரங்களை பாடி மகிழும் போது தான் அதன்  அர்த்தம்,  தத்ரூப ருசி எல்லாம் உணரமுடியும்,  தெரியும். புரியும்.  இந்தப் பத்துப் பாசுரங்களையும் பயில வல்லவர்கள், நல்ல குணங்களுடைய குழந்தைகளைப் பெறுவர். கன்னியர் கண்ணனைப் போன்ற கணவனைப் பெற்று மகிழ்வர் என்று அதன் பல ஸ்ருதி வாக்குறுதி அளிக்கி றது.

556:வாரண மாயிரம் சூழவ லம்செய்து,
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.) 1

557:நாளைவ துவைம ணமென்று நாளிட்டு,
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்
காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான். 2

558:இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்,
வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து,
மந்திரக் கோடியு டுத்திம ணமாலை,
அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 3

559:நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி,
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி,
பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை,
காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 4

560: கதிரொளி தீபம் கலசமு டனேந்தி,
சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள,
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான். 5

561:மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத,
முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான். 6

562: வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,
பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,
காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,
தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான். 7

563: இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
நம்மையு டையவன் நாராய ணன்நம்பி,
செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான். 8

564:வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி,
அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து,
பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான். 9

565:குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,
மங்கல வீதி வலம்செய்து மணநீர்,
அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல்,
மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 10

ஹோமப் புகையின் முன்னே நெடுநேரம் நின்றிருந்ததால் ஏற்பட்ட வெப்பத்தைத் தணித்து 
குளிர்ச்சி தர குங்குமக் குழம்பை உடலில் பூசி, சந்தனத்தை நிறையத் தடவி விட்டனர். பின் அங்கிருந்த ஒரு யானையின் மீது நான் கண்ணனுடன் கூடி அமர, அலங்காரம் மிகுந்த தெருக்களிலே திருமண ஊர்வலம் வந்து, நிறைவாக வாசனை நீரில் மஞ்சன நீராட்டுவதைக் கனவினில் கண்டேன் தோழி!

566:ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை,
வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்,
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,
வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே. (2) 11

கோதை என்ற பெண் ஆண்டாள் ஆகி அந்த அரங்கனோடு தனக்கு திருமணம் முடிவது போல் கனவு கண்டாள் . இதில் ஒரு இனிய விஷயம் என்ன என்றால் நினைவிலும் கனவிலும் அவள் சுவாசம் அரங்கனாகவே இருந்தது என்பதே.



 நாம்  செய்த  பாக்கியம்  தமிழ் கூறும்  நல்லுலகில்  ஆழ்வார்கள்  தோன்றியாது.    அவர்கள்  அருளிச் செய்த  பக்தி பாசுரங்கள் ஒன்று, விஷ்ணுவையோ, அவரது அவதாரம் பற்றியோ,  அல்லது  அவரது  அவதார ஸ்தலத்தைப் பற்றியோ  அமைந்திருக்கிறது.    எதுவாயினும்  அவர்களைப்   போற்றிப் பாடாத  நூல்  இல்லை.  ஆழ்வார்கள் வாழ்ந்த காலம்  அநேகமாக  பல நூற்றாண்டுகளுக்கு முன்பு (4200 BCE - 2700 BCE.).

 ஆரம்ப காலத்தில்  ஆழ்வார்கள்   பதின்மர் என்று தான்  அறியப்பட்டார்கள்.  பின்னர்,  மதுரகவி ஆழ்வாரும்  ஆண்டாளும்  சேர்க்கப்பட்டு  பன்னிரு  ஆழ்வார்கள்  ஆயினர்.  இந்தப்  பன்னிரு ஆழ்வார்களுள் ஒரே  பெண்  ஆழ்வார்  ஆண்டாள்  தான்.

தெள்ளு  தமிழ்த்தேனில்   இதயத்தைப்  பிழிந்து கலந்த  பக்தி பிரவாகமாக ஆழ்வார்கள்  கவித்வம்  அமைந்திருக்கிறது.   விஷ்ணுவை  பக்தியோடு  பின் பற்றுபவர்கள்  வைஷ்ணவர் எனப்  பெயர் பெற்றனர்.  விஷ்ணுவின்  ஆலயங்கள்  அமைந்த  ஸ்தலங்களில்  108 முக்யமாக  திவ்ய  தேசங்கள்   என  அழைக்கப்படுகின்றன.  ஆழ்வார்கள்  இவற்றில்   அனேக  ஸ்தலங்களை  தரிசித்து  பாசுரங்கள்  இயற்றியிருக்கிறார்கள்.   அவர்கள்  பக்திப் பாசுரங்களின்  தனித் தன்மை  அவை  பாசத்தோடும், பரிவோடும்,  அன்பைக்கூட்டி  பக்தியில் கலந்து

 சொல் நயம், பொருள் நயம்  கூட்டி   இலக்கண சுத்தமாக எளிய நடையில்  சந்தத்தோடு மிளிர்வது ஒன்றே.  நாலாயிர திவ்யப் ப்ரபந்தம்  என்ற  தமிழ்  களஞ்சியம் அனைவரும்  வாழ்வில் ஒரு முறை யாவது படித்து மகிழ வேண்டிய  நூல். வைணவரோ, சைவரோ, எவரோ, தமிழ்  தெரிந்த  ஒவ்வொருவர் வீட்டிலும்  இருக்க வேண்டிய  பொக்கிஷம்.

வைணவர்களுக்கு  ஒரு  வாழ்வின் வழிகாட்டியாக  அமைந்துள்ளது  நாலாயிர  திவ்யப்பிரபந்தம்.  வேத  யஞ  ஸம்ஸ்க்ருத   முறையினின்றும் எளிமைப்படுத்தப்பட்டு  எவரும் அழகிய  பழகும் தமிழில்  பக்தி மூலம்  முக்தி  பெற வழி காட்டுபவையாக  அமைந்தவை  நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்கள்.  

பின்னர்  ஒரு காலத்தில் ஐந்து தத்வங்கள்  பாஞ்ச ராத்ரம் ஸ்ரீவைஷ்ணவ -  சம்பிரதாயங்கள்  கொண்டதாக  அமைந்தது.  மீண்டும்  நினைவு படுத்துகிறேன்.  விஷ்ணுவிடம் முழுதும்  பக்திப்  பரவசத்தில்   ''ஆழ்ந்த''வர்களே  ''ஆழ்வார்கள்'' --  ( மேலும் மேலும்  ஆழ்ந்து கொண்டே இருப்ப வர்கள்).

 பன்னிரண்டு ஆழ்வார்களில்  பொய்கை ஆழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார்  ஆகியோர்  முதல்  ஆழ்வார்கள் எனப்படுவர்.  7ம் நூற்றாண்டு வாழ்ந்தவர்கள். மதுரகவி  நம்மாழ்வார்  இருவரும் 10ம் நூற்றாண்டினர். மீது  7 ஆழ்வார்களும் 9ம் நூற்றாண்டில் தோன்றியவர்கள்.

மதுரகவி,  பெரியாழ்வார், ஆண்டாள்   மூவரும்  அந்தண  வகுப்பினர் . குலசேகராழ்வார் க்ஷத்ரியர்.  நம்மாழ்வார்  விவசாயி. பாணர் எனும்  இசை ஞானிகள்  வகுப்பைச்  சேர்ந்தவர்  திருப்பாணாழ்வார்.   சங்க நூல்களில்  பாணர்களைப்  பற்றி அறியலாம்.   திருமங்கை ஆழ்வார்  என்பவர்  கள்வர் என்ற  பிரிவைச்  சேர்ந்தவர்.

வைணவத்தைப்  பற்றிய  விவரங்களை  கருட வாகன பண்டிதர் என்பவர்  11ம்  நூற்றாண்டில் எழுதிய  ''திவ்ய  சூரி   சரித்திரம்''   எனும்  நூல்  தருகிறது.  பெருமாள்  ஜீயர் எழுதிய  குரு பரம்பர பிரபாவம்,   ஆண்பிள்ளை  கந்தாடை  அப்பன் எழுதிய   பெரிய திரு முடி அடைவு,   பிள்ளை  லோகாசார்யர்  எழுதிய   செய்த  ''யதீந்திர  பிரணவ பிரபாவம்''  என்கிற   திவ்யப்  பிரபந்த வியாக்யானம்  போன்று மற்றும்  ஏராளமான  குரு பாரம்பரிய வியாசங்கள்,  ஆலய  வரலாறுகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், புராணங்கள், எல்லாமே ஆழ்வார்களைப்  பற்றி  நிறைய சொல்பவை. முழுதும்  இவற்றை  அலச  ஒரு  பிறவி  போதாது.  சில  விஷயங்களைப்  படித்து  யோசிக்கும்போது  எளிதில்  புலனாவது  என்னவென்றால்  விஷ்ணுவின்  ஏதாவது  ஒரு  அம்சமே இந்த  ஆழ்வார்கள் என்பதில்   துளியும் சம்சயம்  இல்லை.நம் போன்ற  சாதாரணர்களிலிருந்து  இவர்கள் பெரிதும்  மாறுபட்டவர்கள்.  அபூர்வர்கள்.  

நிறைய சந்தர்ப்பங்களில்  நாலாயிர  திவ்யப் பிரபந்தங்களை  விஷ்ணு  ஆலயங்களிலும்  மற்றும்  விழாக் காலங்களிலும்  அருகில் நின்று  கேட்டு  ஒரு இனம்  புரியாத இன்ப உலகத்துக்குத்  தூக்கிச்  செல்லப்பட்டிருக்கிறேன். என்னைக் கடத்தியது  அழகு தமிழா?  அன்பின்  எதிரொலியா?  ஆழ்ந்த  பக்திப்  பிரவாகமா?  பிரயோகித்த  இசையின்  பாங்கா?  எல்லாமேவா?

சேர  சோழ  பாண்டியர்களோடு   சேர்ந்து  பல்லவர்கள்  காலத்திலும் ஆழ்வார்கள்  நாயன்மார்கள்       ( சைவ குருமார்கள்)  இணைந்து வாழ்ந்தவர்கள்.  நமது  இந்து ஸநாதன   தார்மீகத்தின்  இரு   கண்களாக  இருந்து  தொண்டு செய்ததன் பயனாக  பிற மதங்களான   ஜைன, புத்த மத  ஆதிக்கம்  சற்று  கட்டுப்பாட்டில்  வைக்கப்பட்டது என்கிறது நமது சரித்திர சான்றுகள்.  5ம்  நூற்றாண்டு முதல்  9ம் நூற்றாண்டு வரையில்   சரித்திர வரலாற்றின் படி   (The Encyclopædia Britannica) ஆழ்வார்களின்  இந்த  சீரிய  தொண்டு குறிக்கப்பட்டுள்ளது.   
  
 ஆழ்வார்கள் எந்த  நூற்றாண்டுக்காரர்களாக இருந்தால் என்ன.  சரித்திரம்  எதையாவது  சொல்லட்டும்.  ஆழ்வார்கள்  எல்லா  யுகத்துக்குமே  சொந்தமானவர்கள். சுகர் காலத்தில்,  அதாவது  பாகவத  புராணத்தில்,  ஆழ்வார்கள்  இருந்ததாகவும்  துவாபர  யுகத்தில்  சிலர்  இருந்ததாகவும்,  ஏன்  கலியுக  ஆரம்பத்தில்  நம்மாழ்வார்  உலவியதாகவும்   கூட சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...