Friday, April 30, 2021

ORU ARPUDHA GNANI

 



ஒரு அற்புத ஞானி  ---   நங்கநல்லூர்   J  K  SIVAN 



யாரையாவது ஒருவரை நான்  ஆஹா  எவ்வளவு புண்யம் பண்ண  பாக்கியசாலி என்று கருதுவேனானால் அது  நிச்சயம்  ஸ்ரீ  குழுமணி நாராயண சாஸ்திரி அவர்களைத் தான் . நிச்சயம்.   அவரைப் போல் பலர்  சேஷாத்திரி ஸ்வாமிகள் அருகே அதிக நேரம் வாழ்க்கையில்  கழித்திருக்கலாம். ஆனால்  நூறு வருஷங்களுக்கு அப்புறம்  நம்மைப் போன்றவர்களுக்கு  அதால் என்ன பயன்.  ஸ்ரீ  சாஸ்திரிகள் அல்லவோ  தனது அனுபவத்தை நமக்குப்புட்டு புட்டு வைத்திருக்கிறார்.  ஆனந்தத்தை அருள்கிறார்.  இதுவும்  தெய்வ சங்கல்பம் தான்.  சேஷாத்திரி ஸ்வாமிகள்  அவரை இதற்கு பயன் படுத்தி இருக்கலாம்.

மஹான் சேஷாத்திரி ஸ்வாமிகள்  அவ்வப்போது  சிலருக்கு   ஒரு சில  குட்டி குட்டி  வார்த்தைகள்  சொல்வது தான் உபதேசம்.  எத்தனையோ பேர்  அதை லக்ஷியம் செய்யவில்லை.  ஏதோ பைத்தியக்காரன் பேத்தல் என்று சிரித்து விட்டு  வடை சாப்பிட போனவர்கள் தான் முட்டாள்கள்.  புதையல் கிடைத்தும் பிச்சை எடுப்பவர்கள்.  

 நன்றாக யோசித்தால், பின்பற்றினால்,  ஸ்வாமிகளின்  ஒரு சில  வார்த்தைகள் எவ்வளவு அதீத சக்தி கொண்டவை என்று   புலப்படும்.  ஓரிரு  உதாரணங்கள்  சொல்கிறேன்.  

ஒருவருக்கு  அவர் சொன்ன உபதேசம்:   நீ  இப்போதி லிருந்து   ''ராம ராம மஹா பாஹோ '' ன்னு  அடிக்கடி  சொல்லிண்டே வா.   மோக்ஷம் உடனே''. 

 இதென்ன  பெரிய உபதேசமா?   ஆமாம்.  இது  ஏதோ உளறல் இல்லை.   ஆதித்ய ஹ்ருதயத்தில் வரும் வார்த்தை.    அகஸ்திய  மகரிஷி   ஸ்ரீ   ராமனுக்கு உபதேசித்த  வாக்கு. ராமனுக்கு  ராவணனைக்  கொல்லும் யுக்தி சக்தி இதனால்  அமோக மாக  கிடைத்தது.   இந்த ஸ்லோகங்களை நாமும் சொல்லி வருவதால்  நமது தீமைகள்  அழிந்து  மோக்ஷ சாதகம் என்கிறார் ஸ்வாமிகள்.

''ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் பண்ணு . உதய காலத்திலேயே  அரை நிமிஷமாவது உட்கார்ந்து சொல்லு. ராக்ஷஸன் சாவான்''    

குழுமணி நாராயண சாஸ்திரி  முடிந்தவரை  சேஷாத்திரி ஸ்வாமிகளின் நிழலாக  அவரை தொடடர்ந்தவர் போல் இருக்கிறது.     மத்தியானம் உச்சி வெயில் நேரத்தில் ஒருநாள்  மேலே  சொன்ன  ஆதித்ய  ஹ்ருதயம் பற்றி   சாஸ்திரிகளுக்கு  ஸ்வாமிகள் உபதேசித்தார். சாஸ்திரி கீழே விழுந்து வணங்கி எழுவதற்குள் சுவாமியைக் காணோம்.   அவர்   சடைச்சி வீட்டு திண்ணைக்கு ஓடிவிட்டார்.    ஸ்வாமிகள்  நமது மனத்தில் உள்ள மலங்கள் விலகி பரிசுத்தமடையும் என்பதை  ' ராக்ஷஸன் சாவான்'  என்கிறார். 

இன்னொருவரிடம் ஸ்வாமிகள் சொன்ன  உபதேச வார்த்தை என்ன தெரியுமா?  

 ' நீ  சுந்தர காண்டம் வாசி. ஞானம் பிறக்கிறதா இல்லையா பார் ''   . இதற்கு அர்த்தம் சொல்லவேண்டாம். சுந்தர காண்டத்தின் மஹிமை தெரியாதவர் யார். 

இன்னொரு  பக்தருக்கு  ஸ்வாமிகள்  வழங்கிய  உபதேசம்  ஆசையை ஒழிக்கவேண்டும்  என்ற கருத்தில் அமைந்துள்ளது.  அது  இராமாயண சம்பூ காவ்யத்தில் அகஸ்திய முனிவரை வர்ணிக்கும் ஸ்லோகம்.  அதை ஸ்வாமிகள் நினைவு கூர்ந்து சொன்னது: 

 ''பரித்யக்த ஸர்வாசமபி  உபகத தக்ஷிணாசம்''  

 அதாவது,  அகஸ்தியர்  நான்கு திசைகளில் மூன்றை விட்டு தெற்கு திசை (தக்ஷிணம்) நோக்கி வந்தவர்.   இன்னொரு அர்த்தம்   எல்லா ஆசைகளையும் விட்டொழித்தாலும்  தக்ஷிணை யாசகம் வாங்குபவர் என்று ஒரு சிலேடை. அது முக்கியமில்லை.  

ஸ்வாமிகள்  '' இந்த ஸ்லோகத்தை சொல்லி நீங்கள் எல்லோரும்  நன்றாக அப்யாசம் பண்ணவேண்டும்''  என்று சொன்னது   ' உணவு பிரதானம் இல்லை, ஆசை வேண்டாம். இருப்பதைக்  கொண்டு திருப்தியோடு  சந்தோஷமாக இரு. பகவான் நாமாவை சொல்''  என்று உணர்த்துவதற்காகவே.

ஒரு முறை  தனது கட்டைவிரலை ச் சுண்டி விட்டு ''ராமன் எங்கேயும் வியாபித்திருக்கிறான். அப்படி இருப்பதால் ''ராம ராம ராம ' என்று  சதா விடாமல் ஜெபிக்கவேண்டும்''  என உபதேசித்தார்.

ஸ்வாமிகள் இதை நிறைய பேரிடம் சொல்ல காரணம்  கலியுகத்தில் இதை விட சிறந்த மோக்ஷ சாதனம் கிடையாது.  அதனால் தான் ''சதா'' என்கிறார். இதைச் சொல்ல  கால தேச நியமம் ஒன்றும் வேண்டாம். 

ஒருநாள் சாஸ்திரிகளிடம்  ''வா  என்னோடு  இளையனார் கோவில் மண்டபத்தில் ராத்திரி படுத்துக்கோ '' என்று சொல்லி  ஸ்வாமிகளின்  திருவடிகளை  சாஸ்திரிகள் தனது சிரத்தின் மீது தாங்கி படுத்திருக்கும்போது'' மேற்படி உபதேசம் அவருக்கும்  கிடைத்தது.    

ஏழு நாள்  இரவு  அங்கே சாஸ்திரி  ஸ்வாமிகளோடு சயனித்தார். அப்போது நடந்த ஒரு சம்பவத்தை  அடுத்ததில் சொல்கிறேன்.
 

LIFE LESSON


 

வாழ்க்கை  பயணம்     --  நங்கநல்லூர்   J K  SIVAN                                                     

ஆன்மிகம் என்றால்    ஏதோ பழுத்த கிழம் சம்பந்தப்  பட்டது என்ற எண்ணம் வேண்டாம்.  ஏழு வயதில் கூட  ஆன்மீகம் வரவேற்கத் தக்கது.  கடவுள் என்று ஒருவர் நமக்கு மேலே, நம்முள்ளே இருக்கிறார்.  அவரைப் போற்றி பணிவது நமது கடமை..  நன்றியறிவித்தல்.  அவர் இரவு பகல் சதா நமது நன்மைக்கே  எந்த பிரதிபலனும் எதிர்பாரா மல்  ஈடுபடுகிறார். அவரை  நினைக்க வாவது செய்வோமே  என்ற எண்ணம்  தான்  ஆன்மிகம். அவரை நாம் பார்க்க முடியவில்லை, அவர் பற்றி கேட்போம், படிப்போம், பேசுவோம், அவர் இருப்பதாக நம்பும் கோவிலுக்கு செல்வோம்.  அவரை ஏற்றி போற்றி ஈடுபடும் பஜனை, நாம சங்கீர்த்தனையில் பங்கு கொள்வோம்,  இல்லையேல் மற்றவர் பங்குகொள்வதையாவது ரசிப்போம்...  இது தான் ஆன்மிகம். இப்படி வாழ்வது தான் ஆன்மீக வாழ்க்கை.  பட்ட வர்த்தனமான  வேஷமில்லாத  வாழ்க்கை. 
 கடவுளோடு நெருங்கிய வாழ்க்கை தான்  சுதந்திர  வாழ்க்கை.  எந்த  நல்ல எண்ணமும், செயலும், வார்த்தையும்   நன்மையைத் தான்  பயக்கும்.   வாழ்வில்   அமைதி   இருந்தால், அது   நம்மோடு மட்டுமின்றி  சுற்றிலும் மற்றோருக்கும்  பரவும். இது நான் அனுபவிக்கும் நிதர்சனமான உண்மை. உதாரணம்  நமது ஸ்ரீ க்ரிஷ்ணார்ப் பணம் சேவா டிரஸ்ட்  முகநூல் பக்கம்,  JKSIVAN  முகநூல் பக்கம்  அடேயப்பா  ஆயிரக்கணக்கான  அன்பர்கள்  ஏன் இதை பார்க்கவேண்டும், படிக்கவேண்டும், மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டும், என்னோடு தொடர்பு கொள்ள வேண்டும்???  எனக்காக  அல்லவே அல்ல.  இதில் காணப்படும்  சத் விஷயம், ஆன்மீக விஷயங்கள்,   மஹான்களை பற்றி, ஆலயங்களை பற்றி,  வேத, இதிகாச, புராண விஷயங்கள்  நமது ஹிந்து  பண்பாடு, பழக்கவழக்கங்கள்,  நம்பிக்கை எல்லாம் பற்றி அறிய.   இதில் என்ன காசா பணமா செலவு செய்யவேண்டும்? 

வீணாகும் நேரத்தை திருப்திகரமாக செலவழிக்கிறோம். நமக்கு ஒரு  பொற்காலம்  ஏற்படுத்திக் கொள்ள   நாம்  செய்யவேண்டியது  ஒவ்வொருவரிடத்திலும்  உள்ள  நல்ல குணம், நல்ல செய்கை,  நல்ல  வார்த்தையை  மட்டுமே  மதிக்கவேண்டும்.   மற்றதை அறவே புறக்கணிக்க வேண்டும்.  இதால்   எல்லோரிடமும் அன்பு வளரும்.  அன்பு  நிறைந்த இடத்தில்  அணு சக்தி அழிவு எதற்கு  தேவை?.  அதற்கென்ற  அவசியம்   காணாமல் போய்விடும்.  உன் உள்ளே  உனக்காக  என்றும்  இருக்கும்,  இறைவன் மீது  அன்பை செலுத்து.  சக  மனிதரை  நேசி.  ''அவன்  குழந்தை மனசு கொண்டவனடா'' என்ற  பேர்  எடு. இது  தான்   அன்பு வழி.''

உடல்  வளர்ச்சி போல்   மன வளர்ச்சி, உள்ள  வளர்ச்சியும் ரொம்ப  அவசியம்.  ஒன்றாம் வகுப்பிலிருந்து  நேரே அடுத்த  ஜூன் மாதம்  காலேஜ்  போக  முடியுமா?.  அதே போல்  உள்ள  அமைதி  கொஞ்சம்  கொஞ்சமாக  தான்  விருத்தி அடையும்.  விடாது முயற்சி செய்ய வேண்டும்.   முக்யமாக பொறுமை  வேண்டும்.  ஒரே நாள்  ராத்திரியில்  அடையும்  சமாசாரம்   அல்ல இது.

 ஒரு மந்திரம் சொல்கிறேன்.  அது  தக்க சமயத்தில்  காக்கும்.   ''யாரையும்  தூக்கி எறிந்து  நிந்தித்து  பேசவேண்டாம்.  அப்போது தான்  நாம்  நிந்திக்கப்பட மாட்டோம். ''

வாழ்க்கையில்  '' அடிபடாததால் '' ( அனுபவ முதிர்ச்சி இல்லாததால்)  கஷ்டங்களை   அநேகர் எதிர் கொள்ள வேண்டி அமை கிறது. குழந்தைகள்  எப்படி  பெரியவர்கள்  ஆகிறார்களோ  அப்படித்தான்  வாழ்வில் அனுபவம் (maturity )  ஏற்படும்.  நாம்  நம்மை  ஆள  எவ்வளவு  தலைவர்களை நம்பி  பதவியில்  அமர்த்து கிறோம்  நாளை  முடிவு தெரிந்து விடுமே.  ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன கதை தான்.  நமது  செய்கையின் பலனை   அப்பறம்  தானே   ''அனுபவித்து '' உணர்கிறோம்.   இதையே வாழ்க்கையில்  ''பாடம் ''  என்று  கற்றுக் கொள்கிறோம்.  

நம்மை  விட ஏதோ  ஒரு  மேலான சக்தி  நிச்சயம்  உள்ளது.    சந்தேகமே வேண்டாம்.  அது நம்முள்  குடி கொண்டு  நம்மை  ஆட்டுவிக்கிறது மட்டும் அல்ல, எங்கும்  எதிலும்  பரவி அங்கிங்கெனா தபடி   எங்கும்  எதிலும் நிறைந்திருக் கிறது என்கிற  எண்ணம்  விடாமல் இருக்கவேண்டும்.   கடவுள்  என்று  அதை  எந்த பிடித்த  பெயராலும்  அழைப்போம்.    அன்பை எல்லோரி டத்திலும்  செலுத்தி   முழுமையாக இதை  உணரமுடியும். உள்ளத்தின்  அமைதியில்  அவனைக் காணலாம்.  ஒரு  தனி  ஆனந்தம்  உள்ளே   உருவாவதை அனுபவிக்க முடியும்.

நன்றியை  எதிர்பாராமல் தன்னால் இயன்றதை, தன்னிடம் இருப்பதை  கொடுப்பவன், அமோகமாக  பிரதிபலன்  பெறுவான். இதை நான் இரவு பகலாக தொடர்ந்து பல வருஷங்களாக  செயது வருகிறேன். என்னால் முடிந்தது நான் கற்று அதை மற்றவர்களோடு பகிர்வது மட்டும் தான். 83ல் அதற்கு மேல் என்னால் எதுவும் செய்ய இயலாது. 

தனக்கு நல்லது  என்று  தெரிந்ததை, அறிந்ததை,  செயல்படுத்தி  மற்றோருக்கும் உதவுபவன்  ச்ரேஷ்டன்.  

பகவானே  உன் செயல்  என்று  எதையும்  தன்னாலியன்றவரை  சிறப்பாக  செய்பவன்  நல்ல பலனையே பெறுவான். எல்லோரும்  நல்லவரே,  எல்லோரும்  என்னவரே  என்று  எவன்  அன்போடு பழகுகிறானோ அவன்  பலமடங்கு அன்பை பெறுபவன்.

நமக்கு  வரும்  கஷ்டங்கள், துன்பங்கள்  எல்லாமுமே  நாம் நம்மை  செலுத்தும் அந்த  பரம சக்தி காட்டும் வழியை புறக்கணிப்பதால்  தான்.
மனதில்  எப்போது  அமைதி  தோன்றுகிறதோ,  ஆன்மீக வளர்ச்சியில்  நீ  தொடர்கிறாய்  என்று அறியலாம்.  காரணம் என்னவென்றால்  நாம்  நம்முள்  நம்மை  செலுத்தும்  அந்த  அதீத  சக்தியை உணர ஆரம்பித்து விட்டதால் தான். 

பிறரிடம்  மாற்றத்தை  எதற்கு  எதிர் பார்க்க வேண்டும்?   முதலில் நாம்  மாறினாலே  அவர்களிடம்  மாற்றம் தானாக  தெரியும்.

கடவுள் மீது  நம்பிக்கையும், பக்தியும்  உள்ளவனுக்கு  எதிலும்   பயம் தோன்றாது.   அவன் தான்  எதையும் எவரையும் அன்பினால்  சொந்தம்  கொள்கிறானே.  பயம்  எங்கிருந்து வரும்?

நமக்கு  கஷ்டங்களும்  துன்பங்களும்  வருவது  கூட ஒரு   விதத்தில்  அந்த  நேரங்களில்  நம்மை  அவனை நினைக்கச் செய்வதால்  நன்மையே  என்று  கூட  தோன்றுகிறது.

அடிக்கடி  உடலில்  தோன்றும்  உபாதைகள்  அடே  மானிடா, உன் இந்த உடல்  ஒருநாள்  திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல்   அழிந்து விடும்  என்று  நினைவூட்டவே.    பழைய  சட்டை யை  தூக்கிப்  போட நேரம் நெருங்கி வருகிறது.  புதியது  நமக்கு   எங்கோ தயாராகி வருகிறது  என்று  உணர்த்தவே.

மற்றவரின்  செய்கைகள்  தவறு, சரி  என்று  சொல்ல  நமக்கேது  உரிமை?.   அவர்கள்    தாமாகவே தம்மை  ஆராய்ந்து கொள்ள  நீ  உதவினால்  இறைவன் உனக்கிட்ட  பணியை கொஞ்சமாவது  செய்து வருகிறாய்  என்று  அர்த்தம்.

ஒரு விஷயம்  கவனப்படுத்துகிறேன்.   மனம்  எப்போது  இறைவனின்  தொடர்பில்  ஈடுபட்டு விட்டதோ, அந்தக் கணம்  முதல்    நீ  தனியாக  இல்லை.  அவனது  அழகிய  ''நெட் வொர்க்''  திட்டங்கள்,  நேர்த்தியான  செயல்கள்  உனக்கு  பலனளிக்கத்  தொடங்கிவிட்டது  என புரியும்.  எப்போது  மனதில்  அமைதி  குடி புகுந்ததோ,  அப்போது  உனக்கு  வெளியே இருந்து ஒரு   புத்துணர்ச்சி  வந்து சேரும். களைப்பு  அலுப்பு  என்பதே  காணாமல்  போகும்.  20 மணி படித்து எழுதும் எனக்கு களைப்பு தோன்றவில்லை. திருப்தியாக இருக்கிறதே.

எப்போது  நீ  அவனை  நினைக்க  ஆரம்பித்து விட்டாயோ,  நீ    வெளிச்சம் தேடி  வேறு விளக்கொளி நாட தேவையே  இல்லை.  நீ  தான்   சூரியனையே நோக்கி   நடக்க ஆரம்பித்து விட்டாயே,   விளக்கொளி வெளிச்சம் அவசியமில்லை.

உண்ணும்  உணவு  உடலை நன்றாக  செயல்  பட தேவையானதாக மட்டும்  இருக்கட்டுமே.  அது   தான் ஆரோக்கியம்.  வாழ்வதற்கு  தான்  உணவே  தவிர  உண்பது  தான்  வாழ்க்கை  அல்ல. இன்னும்  வேண்டும்  என்ற  எண்ணம்  வரும் போது உண்பதை நிறுத்திக் கொள்.  அப்புறம்   டாக்டர்  வீடு  அட்ரஸ்  மறந்து,   தெரியாமல் போகும். வாழ்க்கை   இதால் முழுமை  பெரும்.

நமது  நல்ல  எண்ணங்களும் நற்செய்கைகளும் தான்  நமக்கு மட்டுமல்ல  பிறர்க்கும்  உதவுகிறது என்பதை விட  உள்ளும்  புறமும்  தூய்மையடைய உதவுகிறது. இது  இருந்தால்   அவன்   தானே  நம்முள்  வந்து அமர்வானே.  குப்பையிலா  ஒருவன் வசிப்பான்?  ஒரு   இனிய சங்கீதம்   மனதை வருடவில்லையா?.  அது போல்  இதயம்  இதால் குளிரும்.  

உள்ளே நின்று   ஒருவன்  அக்கறையோடு வழி காட்டினால், தப்பான  பாதையில் எப்படி  போகமுடியும்?.  கல் முள்   எதுவும் இல்லாத  சீரான  பாதை  அல்லவா  அது.?  பயணம்  - ஒரு  சுற்று  பயணம்  ஆகிறது -  சுற்றி  சுற்றி  அவனை யே  அல்லவா  சேர்கிறோம்.

 கடவுள்  என்பவர்  ஏதோ  ரொம்ப  படித்த,  யாகம் செய்த,   தானம் செய்த,  தனவந்தனுக்கு,  ஆயிரம்  கோவில்  குளங்கள்  சென்றவனுக்கு  மட்டும் சொந்தமானவர்  என்பது   ராங் நம்பர்.  கடவுள்  எல்லோருக்கும் எப்போதும் எங்கும்  கிடைப்பவர்.  ஒரே  ஒரு  கணம் மட்டுமே  போதும்.    சுத்தமாக,  கலப்படமில்லாத,   மனத்தால்  நினைத்தால்  அவனை  உணரமுடியும்.  அவனை  அடைந்து விட்டோம்  என்று  எப்படி  தெரியும்? அன்பு  உன்னிடமிருந்து  எதனிடமும்  எவரிடமும் பெருகி விட்டதல்லவா?  அதே அதே.

கடவுள்   நமக்காக காத்திருக்கிறான்.    நாம் தான்  எதிர்   திசையில், வேறு பக்கம் நோக்கி  போய்க்  கொண்டிருக்கிறோம்.   அவன்   உள்ளே  இருக்கும்  போது, நம்  இதயத்தை   பூரணமாக  ஆக்ரமித்த போது,        ' நான்,   எனது ''      எப்படி  ஞாயமாகும் ? .  வீட்டை  வாடகைக்கு  விட்டு விட்டு  ''எனது என்று  சொல்லலாமா,  ''நான்'' அங்கு  வசிக்க முடியுமா'' ?
   

ஒரு   காற்றின்  சுகத்தில்,  நீரின் தெளிவில்,  பூவின்  மணத்தில்,  பறவையின்  குரலில்,  நிலவின்  ஒளியில்,  உலகத்தின் இயக்கத்தில்,  விடியல் அமைதியில்,   நிசப்தத்தில்,  எதில் வேணுமானா லும்  அவனை  உணர முடியுமே.     கும்பலாக  சப்தம்  போட்டுக்  கத்த வேண்டாம்.   ஸ்பெஷல்  வரிசைக்கு  டிக்கெட்  தேவையில்லை.  கண்ணை முடி  உள்ளே நோக்கினால்  ''நான்   இங்கே தானேடா  உனக்காக எப்போதும் இருக்கிறேன்'' என்று  குரல் கொடுக்கிறானே. ஆரவாரத்தில்  அமைதியை  தேடலாமா?  இது நான்  புதிதாக  கண்டுபிடித்து சொல்லவில்லை.  காலம் காலமாக   பல மஹான்கள், ரிஷிகள், முனிவர்கள், சிறந்த பக்தர்கள் அனுபவித்து சொன்ன உண்மை   ஏட்டிலும் எழுத்திலும்  பாட்டிலும்  இருக்கிறது.   யார்  அதை லக்ஷியம் செய்கிறார்கள்?  இருந்தா லும் நான் விடுவதில்லை. அதெல்லாம் பற்றி எழுதிக்கொண்டே தான் இருப்பேன்.

olden days wedding

 


பழைய நினைவுகள்.     நங்கநல்லூர்  J K SIVAN

மணப்பெண் தலையில் நுகத்தடி  ஏன்?
 
நமது ஹிந்து சம்பிரதாயமே புனிதமானது. பெருமைப் படக்கூடிய ஒன்று. ஏனோ இப்போது கொஞ்சம் விசித்ரமானது. அதில் எல்லோருக்கும் ஈடுபாடு முழுவதுமாக இருக்குமா என்று யாராவது கேட்டால், சந்தேகத்துக்கு இடமே இல்லாமல் ''கிடையாது சார் '' என்று சொல்லிவிடலாம். ஏன்?

சம்ப்ரதாயம் முழுதும் யாருமே தெரிந்து கொள்ள முயல வில்லை. நமது முன்னோர்களை எடுத்துக் கொண்டால் அந்தந்த சந்தர்ப்பத்துக்கு ஏற்ற சம்பிரதாயங்களை மற்றவரிடமிருந்து  பாரம்பரியமாக, வாழையடி வாழையாக  தெரிந்து பழக்கத்தில் வைத்திருந்தார்கள். அந்த ''மற்றவர்கள்'' வேறு ''மற்றவர்களிடமிருந்து'' அறிந்த விஷயமாக அது இருந்தது. கர்ண பரம்பரை என்பது இதைத்தான். அதனால் தான் இடத்துக்கு இடம், குடும்பத்துக்கு குடும்பம் இந்த சம்பிரதாயங்கள்  கொஞ்சம் மாறுபடும்,  வேறுபடும். எங்கும் முழுதும் புத்தகமாக யாரும் எழுதி வைத்துக் கொள்ளவில்லை.
எனவே தான் விஷயம் அறிந்தவர்களாக காட்டிக்கொண்ட சில வைதீகர்கள் காட்டில் கொள்ளை சிரபுஞ்சி மழை. ஒவ்வொருத்தர் சொல்வதும் ஒரு விதமாக இருக்கும். அது தான்  சம்ப்ரதாயம் என்று அடித்து வேத வியாசர் மாதிரி தன்னை காட்டிக் கொள்வார்கள்.

சில சம்ப்ரதாயங்கள் அனைவராலும் கடைபிடிக்கப் படுகிறதா? என்று கேட்டால். ஏதோ வாத்தியார் சொல்கிறாரே, அதை செய்யவேண்டும். அதை எல்லாம் சொல்லிக்கொடுக்க தானே அவருக்கு சம்பாவனை'' என்று விட்டு விடுபவர்கள் தான் ஜாஸ்தி.

உண்மையில் சம்ப்ரதாயங்கள் என்ன சொல்கின்றன. எதற்காக, ஏன் எப்படி ? என்று ஊன்றி கவனித்து தேடி விஷயம் சேகரித்தால் அதன் ருசியே தனி. அதன் அர்த்தமே வேறு தான்.கல்யாணத்தில் மட்டுமல்ல  நமது வாழ்க்கையே  பிறந்த கணம் முதல்  கடைசியில் மேலே  பித்ருலோகம் செல்லும்வரை  ஏகப்பட்ட சம்ப்ரதாயங்கள்.  மந்திரங்கள்  இருக்கிறது.   அடேயப்பா  இதுபோல்  வேறு எந்த மதத்திலும் இருக்குமா என்பதே  சந்தேகம்.

கல்யாணம் என்று எடுத்துக் கொண்டால்,  நாந்தி. ஜாதகர்மா,நாமகர்மா, ஜானவாசம், மாப்பிள்ளை அழைப்பு, நிச்சயதார்த்தம், முஹுர்த்தம், பாணி கிரஹணம். கன்னிகா தானம், அம்மி மிதிப்பது, அருந்ததி பார்ப்பது, சப்தபதி, ஹோமம். இதெல்லாம் நடக்கிறதே. கொஞ்சமாவது அதையெல்லாம் பற்றி சிந்திக்கிறோமா. அதன் அர்த்தங்கள், காரணங்கள் புரியுமா. தெரிய வேண்டாமா?   எல்லாவற்றையும் பற்றி எழுதவேண்டும் என்றால் ஒரு பெரிய தலைகாணி புத்தகம் எழுதவேண்டியிருக்கும்.  அவை பற்றியும்  ஒவ்வொன்றாக  சொல்ல  விருப்பம்.  ஒரு சில  விஷயங்கள் மட்டுமாவது நாம் புரிந்துகொள்வோம்.

மணமகன் ஒரு தாம்பாளத்தில் திருமாங்கல்யம் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு, அக்ஷதை புஷ்பங்கள் போட்டு பூஜிக்க வேண்டும்.

மணமகள் கூறைப்  புடவை கட்டிக்கொண்டு மேடைக்கு வந்தவுடன்  பிள்ளையாண்டான்  கன்னியின் வலது கரத்தை பிடித்த வண்ணம், அக்னியின் அருகில் அழைத்து வந்து   அந்த கன்னிகையிடம் கூறும் மந்திரத்தின் அர்த்தம்  

''நீ எனது வீட்டிற்கு தலைவியாகவும் அடக்கி ஆள்பவளாகவும் நற்காரியம் எவை என அறிவித்து, செயல்படுபவளாகவும் இருப்பாயாக'.  இனிமே ல் நீ தான் நம் வீட்டு  எஜமானி.   நம் குடும்ப  கெளரவத்தை காப்பாற்றுவது உன் பொறுப்பு.  ''நாமிருவரும் நமக்கிட்ட  கர்மாக் களை செய்வோம். நல்ல  ஸத் புத்திரர்களை அடைவோம். தீர்காயுள் உள்ள பிள்ளைகளை பெறுவதற்காகவும்,தெய்வ பக்தி உள்ள வளாகவும் என்னை சேர்ந்த மனித ர்களிடமும், நாற்கால் மிருகங்க ளிடமும் நீ நன்மை பயப்பவளாக இருப்பாயாக.''.

நெல்  பரப்பி போல   (இதை விரை கோட்டை ) அதன் மேல்   கல்யாணப்பெண்ணின் அப்பா  உட்கார  அவரது மடியில் பெண் அமர்ந்திருக்க

மணமகன்   ''இதமஹ யா த்வயீபதிக்னீ அலக்ஷ்மீ:தாம் நிர் நிஷாமி ''  என்ற மந்திரம் சொல்லி  தனது வலது கட்டை விரலாலும் மோதிர விரலாலும் தர்பையை பிடித்து கொண்டு , மண பெண்ணின் இரு புருவங்களிடையே துடைத்து தர்பையை மேற்கு பக்கமாக எறிந்து விட்டு கை அலம்ப வேண்டும்.  இது  எதற்காக என்றால்:
'' கன்னிப்  பருவமாய், தனது வீட்டில் செல்ல மகளாய் , வளர்ந்து வந்த அந்த பெண்ணிடம் ஏதேனும் தீய குணங்கள், தீய சக்திகள் அவளை யே அழிக்க கூடிய வகையில் இருந்தால் அவை யாவும் தூக்கி எறிய படட்டும் ''

அப்புறம்  பெண்ணின்  தலைமீது தர்ப் பையால் ஆன சிறிய பிரிமணை போல் வடமாக செய்து,அதை வைத்து, அதன் மேல் சிறிய நுகத்தடி , அதன் வலது துவாரத்தில் ஸ்வர்ணம் வைத்து( தற்போது திருமாங்கல்யம் வைக்கிறார்கள் ) ஜலத்தால் மந்திர ஸ்நானம் செய்யபடும்.

ஸ்வர்ணத்தில் பட்ட இந்த நீர் துவாரத்தின் வழியாக பெண்ணின் தலையில் பட வேண்டும்.   நுகத்தடி வைக்கும் போது சொல்லும் மந்திரம்:

'' கேநஸ: கேரத: கேயு கஸ்ய ஷஸீப்தே அ பாலாம் இந்திர த்ரி: பூர்த்வீ அகரத் ஸூர்ய வர்ச்சஸம்.''

அர்த்தம்:   சசி தேவியின் கணவனான இந்திரனே,  நீ   அத்ரி முனிவரின் பெண்ணான  அபாலா   என்பவளது சரும நோயை  உனது தேரின்  சக்ரத்தின் தேர்தட்டு,  நுகத்தடி,   இவற்றிலுள்ள  துவாரத்தின் வழியாக  விட்ட  ஜலம்  அவள் மேல் பட்டு அந்த பெண்  சரும நோய் நீங்கி   சூரியனை போல் ஒளி வீசுபவளாய் ஆக்கினாய்.   அது போல  இதோ இந்த பெண்ணின்  சிரசில் வைக்கப்பட்டுள்ள நுகத்தடி துவாரத்தின் வழியாக சேர்க்கப்படும் புனித நீரால் இவளது தோஷங்களையும் போக்கி யருள வேண்டும்.  யார்  இந்த  பெண்  அபாலை ? இதற்கு சுருக்கமாக  ரிக் வேதத்தில் கூறப்பட்டிருக்கும்  ஒரு கதை சொல்கிறேன். 

தொழுநோய், சொரி, சிரங்கு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட  ஒரு பெண்  தான்  அபாலை .  அத்ரிமுனிவரின்  புத்ரி.   இவளை எவரும்  கல்யாணம்  செய்துகொள்ள  தயாராக இல்லை.  அவள் மணம்புரிந்து கணவனுடன் ஸோமனை வழிபட ஆவலாய் இருந்தாள். இந்நிலையில் ஒரு தினம் அவள் ஒரு நதியின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாள். அவ்வெள்ள நீரில் ஸோம தேவனுக்கு மிகவும் ப்ரியமான ஸோமரஸத்தைக் கொண்ட ஸோமலதை எனும் கொடி அவள் கையில் தற்செயலாகக் கிட்டியது. அவள் அதன் ரஸத்தை பல்லால் கடித்துப் பிழிந்து ஸோமனை த்யானித்து அவனுக்குச் ஸமர்ப்பித்தாள். இதனால் த்ருப்தியடைந்த இந்த்ரன், அவளை தன் தேர் சக்கரம், தேர்த்தட்டு, நுகத்தடி இவற்றின் வாயிலாக மந்திரிக்கப்பட்ட தீர்த்தத்தைச் செலுத்தி அவளை நல்ல அழகுள்ள ரூபவதியாக்கினான்.

நுகத்தடியில் ஸ்வர்ணத்தை (தற்போது திருமாங்கல்யம்) வைக்கும் மந்த்ரம்:

''சந்தே ஹிரண்யம் :- ஏ பெண்ணே! மந்திர ஜலத்தின் ஸ்பரிசத்திற்காக உன் தலையில் வைக்கப்படும் இந்த ஸ்வர்ண மயமான தங்கமானது உனக்கு எல்லாவித நலன்களையும் அளிக்கட்டும். அபாலையை பரிசுத்தப்படுத்திய அதே மந்திரத்தால் நுகத்தடி வழியாக செலுத்தப்பட்டு, தங்கத்தில் தோய்ந்து உன் அங்கங்களை வந்தடையும் இந்த ப்ராஹ்மணர்களால் கொண்டுவரப்பட்ட பரிசுத்தமான புண்ணிய ஜலம் உன்னை ஸகலவிதமான தோஷங்களிலிருந்தும் விடுவித்து பரிசுத்மாக்கி என்னுடன் இரண்டறக் கலந்து எல்லா மங்கலங்களையும் அநுபவிப்போமாக.''



அப்புறம்  ஒரு   5 மந்திரங்கள் உச்சரிக்க பட்டு ஜலம் ப்ரோக்ஷிக்க படுகிறது.   இந்த  நுகத்தடி வைக்கும் வைபவம் யஜுர வேத காரகள்  மட்டுமே  பின்பற்றுகிறார்கள்.  

இன்னும்  நிறைய  விஷயங்கள் பற்றி பேசுவோம்.

PATTINATHAR


 

பட்டினத்தார்    -- நங்கநல்லூர்   J .K. SIVAN


பட்டினத்தார்  ஒரு சிறந்த வேதாந்தி.  வாழ்க்கையின்  அநித்யத்தை   வசதி இருக்கும்போதே  புரிந்து  கொண்டு வீடு வாசல் சொத்து, சுற்றம் அனைத்தையும் துறந்தவர்.   இறைவனே அவருக்கு  காதறுந்த  ஊசியும் கடைவழி வாராது என்று உணர்த்திய  பாக்கியசாலி.   ஆஹா  அவர் தமிழ் தான் எத்துணை எளிதானது. படித்தால்  யாருக்குமே  புரியும். இன்று ஒரு சில தத்துவப் பாடல்களை  அளிக்கிறேன்.   

''இருப்பதுபொய் போவதுமெயென்றெண்ணிநெஞ்சே
யொருத்தருக்குந்  தீங்கினை நீ  யுன்னாதே - பருத்தொந்தி
நம்மதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்மதென்று தாமி  ருக்குந்தான் ''  


எத்தனை பொய் , பித்தலாட்டம், ஏமாற்று  வித்தை, இதெல்லாம் செய்து,  கூட்டணி சேர்ந்து  காசு தேடி சொத்து சேர்த்து சுகமான வாழ்வை வாழும் தொந்தி பெருத்த  தனவான்களே. கொஞ்சம் இதை கேளுங்கள். ஒரு நிமிஷம் யோசியுங்கள்.  ''நீங்கள்  காண்பது கனவு.  இந்த உலக வாழ்வு  தாமரை இலைத்  தண்ணீர்.  சாஸ்வதம்  அற்றது.   இந்த உலகை விட்டு எதையும் கொண்டு போகாமல் வெளியேறப்போவது மட்டும் தான் நிச்சயம்.ஆகவே எவரையும் துன்புறுத்தாதே. தவறு  தீமை, தீங்கு எதுவும் நினைக்காதே. நீ  தடவிக் கொடுத்துக் கொண்டு ஊஞ்சலில் ஆடுகிறாயே , தம்பி,  உன் ஆசைத் தொந்தி  நீ  நினைத்துக் கொண்டிருப்பது போல்  உனதல்லவே அல்ல.  அதோ  எதிரில் தெரிகிறதே   இடுகாடு, அதில் உலவுகின்றதே, நாய்கள், நரிகள், கண்ணுக்குத்  தெரியாத பேய் பிசாசுகள்,  மேலே வட்டமிடுகிறதே உன்னைப் பார்த்தவாறே   ஒரு சில கழுகுகள் அவை எல்லாவற்றிற்கும்  நன்றாகவே தெரியும்  ''ஒரு நல்ல கொழுத்த தொந்தி நமக்கு நிச்சயம் ஆகாரமாக ஒருநாள் வரப்போகிறது. அது வரை  நன்றாக கொழுக்கட்டும்.''  பசியைப் பொறுத்துக்கொண்டு  காத்திருப்போம்.....  


''எந்  தொழிலைச்  செய்தாலு  மே தவத்தைபட்டாலு
முத்தர் மனமிருக்கு மோனத்தே - வித்தகமாய்க்
காதி  விளையாடி யிரு கை வீசி வந்தாலுந்
தாதி மன நீர்க்குடத்தேதான் ''   


இந்த கிராமத்தில் கிழக்கே ஒரு ஆறு. அதன் கரையில் தினமும்  கிராமப் பெண்கள் குளித்து நீராடி, துணி பிழிந்து,  குடத்தை பளபளவென்று ஆற்றுமணலில் தேய்த்து  கழுவி நல்ல  குடிநீர் பிடித்து நிரப்பி  ஒன்றன் மேல்  குடங்கள் அவர்கள் தலையில்  இடம் பெற்றுவிட்டன.   என்னென்னவோ ஊர் கதை பேசுகிறார்களே. வாய் ஓயாமல் பேசினாலும், கைகள் அதற்கேற்ப  அபிநயம் பிடித்தாலும், சிரித்தாலும், மேடு பள்ளம்  அசைந்து நடந்தாலும் அவர்கள் மனம் நினைவு, முழு கவனம்,  பூராவும் தலையில் சும்மாட்டில் இருக்கும் நீர் குடத்தின் மீது தான். அசையாமல்    கீழே விழாமல், அதில் நிறைந்திருக்கும் நீர்  சிந்தாமல்  வீடு போய் சேரவேண்டுமே  என்பதில் தான்  கவனம் பூரா இருக்கும்.   அது போலவே தான் முக்தர்களும். என்கிறார்  பட்டினத்தார்.  எப்படி என்றால்,  என்ன பணியில் வேண்டுமானாலும் நாம் ஈடுபட்டிருக்கலாம். அந்த பணி  காரணமாக பல விதமான அவஸ்தைகள் பட நேரிடலாம்.  இருந்தாலும் நல்லோர்,  சான்றோர்,முக்தி  நாடுவோர் மனது எப்போதும் மற்றதெல்லாம் மறந்து இறைவன் பால்  மட்டுமே சேர்ந்திருக்கும் . 

''மாலைப்பொழுதி னறுமஞ்சளரைத்தே குளித்து
வேலை மினக்கிட் டு விழித்திருந்து - சூலாகிப்
பெற்றாள் வளர்த்தாள் பெயரிட்டாள் பெற்ற பிள்ளை
பித்தானால்  என் செய்வாள் பின்.    


'' கிருஷ்ணா, எனக்கு ஒரு தங்கமான பிள்ளை வேண்டும்  என்று ஒரு  தாய்   வேண்டினாள்.  தினமும்  மாலை  வேளையில்  இதற்காகவே பளபளவென்று  ஒளிவீசும்  நறுமணம் மிக்க மஞ்சளை  தானே அரைத்து பூசிக்கொண்டு  குளித்தாள்.  இரவும் பகலும் விழித்திருந்தாள். அவள் பட்ட  பாடு வீண்  போகவில்லை.ஒரு நாள் கருத்தரித்தாள் பத்து மாதம் காத்திருந்து ஈன்றாள்.  நான் பிறந்ததும்  எனக்கு ப் பெயரிட்டாள். ஊர் கூட்டி கொண்டாடினாள் .  வளர்த்தாள் . இதோ அவள் பெற்ற  நான் பித்தனாக இறைவனை மட்டுமே,   திருவெண் காடனை  மட்டுமே நாடி எல்லாம் துறந்து சொல்கிறேனே . அவள் கனவு என்னவானது??  ஆவென்று வாயைப் பிளந்து என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறாளே. சிரிப்பு தான் வருகுதய்யா..

''நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியந் தேடி
      நலனொன்று மறியாத  நாரியரைக்கூடிப்
பூப்பிளக்கப்  பொய்யுரைத்துப் புற்றீசல்போலப்
      புலபுலெனக்கலகலெனப் புதல்வர்களைப்பெறுவீர்
காப்பதற்கும்வகையறியீர்கைவிடவுமாட்டீர்      கவர்பிளந்தமரத்துளையிற்கானுழைத்துக்கொண்டீர்
ஆப்பதனையசைத்துவிட்டகுரங்கதனைப்போல
      அகப்பட்டீர்கிடந்துழலவகப்பட்டீரே''    


 ஆஹா இந்த உலகத்தில் நாம்  வாழும்  வாழ்க்கை பற்றி மொபைல் காமிராவில் செல்ஃபீ  படம் எடுப்பது போல் அல்லவா பட்டினத்தார்  படம் பிடித்து காட்டுகிறார்!  ஒன்றா இரண்டா, இரவு பகல் என்று பாராமல் எப்போதும் பொய், பொய்,  பொய்,  மட்டுமே பேசி எல்லோரையும் ஏமாற்றி  காசு சேர்த்து, கட்டிடம் கட்டி, கார் வாங்கி, நாய்  வளர்த்து,  ஒன்றுமறியாத  அழகான மனைவியை, ( மனைவிகளை)   மணந்து,   இந்த பூமியே ரெண்டாக பிளந்துபோகும் அளவு பொய்களைச்   சொல்லி,  நிறைய புற்றீசல்  போல்,  மழைக்கால புழுக்கள் போல்  எண்ணற்ற குழந்தைகளைப்  பெற்று அவர்களை எப்படி வளர்ப்பது என்பது தெரியாமல், விழித்து, அவர்களை நல்ல படியாக  பாதுகாக்கவும் தெரியாமல்,  வெளியே விடவும்  முடியாமல், அங்கு   மிங்குமாக அலைந்து நீ  அவஸ்தைப்  படுவதை பார்க்கும்போது  யாரோ ஒருவன்  மரத்தை பாதி பிளந்து அது மீண்டும் ஒன்று  சேராமல்  இருப்பதற்காக  அதன்  பிளவின் நடுவில் ஒரு  ஆப்பு செருகி வைத்து விட்டுப்  போயிருந்த சமயம்  அந்தப்பக்கம் வந்த  ஒரு முட்டாள்  குரங்கு அந்த மரத்தின் மேல் அமர்ந்து அதன் வால்  அந்த பிளவில் நுழைந்திருப்பதை கவனியாமல்,  மரப்பிளவில்  இருந்த  ஆப்பை  வெளியே  பிடுங்கி விட்டது. மரப்பிளவு அடுத்த கணமே,  மீண்டும் ஒன்று சேர்ந்து, மரத்தின் இடுக்கில் வால் மாட்டிக்கொண்டு விட்டதால் தவிக்கும் குரங்கு  வேறு யாரோ இல்லை,  நீ   தான் ஐயா '  'என்கிறார்  பட்டினத்தார்.  இதைக்காட்டிலும் எப்படி  நாமாக வரவழைத்துக்  கொண்டு தவிக்கும்  உலகவாழ்க்கையைப்  பற்றி சொல்லமுடியும். 

பட்டினத்தார்  தொடர்வார் 

PESUM DEIVAM


 


பேசும் தெய்வம்   -  நங்கநல்லூர்  J K  SIVAN 

''நிர்குண உபாசனை ''


இன்றும்  எனக்கு  ஒரு  ஆனந்தமான அனுபவம்.  மஹா பெரியவா படமாக  என் முன்  அபயஹஸ்தத் தோடு  அருளாசி வழங்கி கொண்டிருக்கிறார். எத்தனை ஆயிரம் முறை அவரைப் பார்த்துக்கொண்டே   இருக்கிறேன். கணக்கில் அடங்காது. எண்ணிக்கை இல்லை.  ஒரு விஷயத்தை, இதுவரை  நான் அறியாததை என் நண்பர்  ஸ்ரீ ராம் எனும்  பெரியவா பக்தர்  எனக்குக்  காட்டிக்கொடுத்ததை  என்றும் மறவேன்.  நான் பார்த்துக்கொண்டிருக்கும்  மகா பெரியவா படத்தில்  அவர் முகம் அருகே வெள்ளையாக மங்கலாக  ஏதோ சுவரோ, வான்வெளியோ, ஏதோ  தெரிகிறது. அதை இடை இடையே  செடிகொடிகள்  மறைத்திருப்பது போல் தெரிகிறது. 

''அதை உற்றுப்பாருங்கோ  என்ன தெரிகிறது ? -- ஸ்ரீராம்.   
உற்றுப்பார்த்தேன். 
''ஒன்றுமே தெரியவில்லையே ஸ்ரீ ராம்''
''இப்போ பாருங்கோ,  பக்கமா சாய்ந்துகொண்டு  தாடி மீசையோடு  பெரியவா தம்பி  சிவன்சார் தெரிகிறாரா?????''
''  ஆமாம்  சார்..என்றேன்...  (படம்  இணைத்திருக்கிறேன்.  சிவன் சார் முகம்  கலரில்  மார்க்  பண்ணி இருக்கிறது)
இது   ஒரு கண்முன் இருந்தும் தெரியாத சமாச்சாரம்.  மஹா பெரியவா விஷயங்கள் எல்லாமே அதுபோல் தான். எதையும் மேலெழுந்தவாறு நாம்  கவனிக்கிறோம், பார்க்கிறோம். ஊன்றி கவனிக்கும் சக்தி இருந்தும் உபயோகிப்பதில்லை.
பரமேஸ்வரன் போல் நமக்கு  நெற்றிக்கண் இல்லையென்றாலும் ஞானக்கண் என்று ஒன்று உள்ளே இருக்கிறது. அதை நாம் எவருமே யூஸ் பண்ணுவதில்லை.  

இதோ மஹா பெரியவா சொல்வதைக் கேளுங்கள்: 

''இதோ எனக்கு முன்னால் வாழைப்பழச் சீப்பு வச்சிருக்கு.   "இதைப் பார், மஞ்சளாக இருக்கிறது" என்று நான் சொன்னால் இது மஞ்சள் தான்  என  பார்க்கிறீர்கள்.  அதற்குமேல் மனஸில் அதைப்பற்றி எந்தப் பிரதி சிந்தனையும் ( reaction ) எழுவதில்லை. மாறாக, இதே வாழைப்பழத்தைக் காட்டி, "இதோ பார், இது சிவப்பாக  இருக்கு ''  என  நான்  சொன்னால் நீங்கள் மனஸில் ஒர் ஆட்சேப உணர்ச்சியோடு  அதை பார்ப்பீர்கள்.   இதை  மஞ்சள்,   சிவப்பு என்றோ  ஒன்றும்  நான் சொல்லாமல், "இந்த வாழைப்பழம் சிவப்பாக இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்" என்று சொன்னால் அப்போது உங்கள் மனஸில் ஒருவிதமான பிரதி உணர்ச்சி உண்டாகிறது.    மஞ்சள் பழத்தையே சிவப்பாக இருப்பதுபோல் உங்கள் மனஸில் கற்பனை செய்து பார்க்கிறீர்கள். மனஸை ஒருமுகப்படுத்தினால் அப்படி பாவிக்கவும் முடிகிறது.

உபாஸனை  என்பது  இப்படி தான். பரம்பொருள் இப்படி இப்படி இருப்பதாக பாவியுங்கள் என்று பலவிதமான குணங்களைக் கொண்ட பல மூர்த்திகளைக் காட்டிக் கொடுப்பது  தான்  உபாஸனா மார்க்கம். வாழைப்பழம் உண்மையில் மஞ்சள் நிறம் என்பதுபோல் பரமாத்மாவின் உண்மையான குணம் என்ன? அது குணம் கடந்தது.   


பரமாத்மா எல்லா குணமும் கடந்த வஸ்து  என்றால்  அப்புறம்  ஜனங்களின் மனசு அதில் மேற்கொண்டு நிற்காது.   இது நமக்குப் புரிபடாத வஸ்து  என்று  நகர்வார்கள்.   வாழைப்பழத்தைச் சிவப்பு என்ற போது மனசு ஆட்சேபித்ததுபோல் ஒரு சிலையைக் காட்டி இதுதான் பரமாத்மா என்றாலும், அதை எவராலும் ஏற்க முடியாது. 

'இது ஒரு கல் பொம்மை அல்லவா? இது எப்படி உலகத்தை நடுத்துகிற பரமாத்ம சக்தி ஆகும்?' என்று  கேட்க தோன்றும். ஆனால், ஒரு சிலையைக் காட்டி, "இதைப் பரமாத்மா என்று பாவியுங்கள்" என்றால் அப்படி பாவிக்க முடிவதாகத் தோன்றும்- வாழைப்பழத்தைச் சிவப்பாகக் கற்பனை செய்வதுபோல். ஆனால் சிவப்பு என்றால் என்னவென்று மனசுக்குத் தெரிவது  போல் பரமாத்ம லக்ஷணம்  நமக்குத்  தெரியாதே! 

அதனால்  கடவுள் விக்ரஹத்தை   'ஏதோ பெரிய வஸ்து என்று  கொஞ்சம்  எண்ணிப் பார்க்கலாமே தவிர, அதிலேயே ஆழ ஊன்றி நிற்க முடியாது. 

தெரிந்த விஷயங்களில்தான் மனசு பிடிமானத்தோடு நிற்கும். எனவே ஒர் காருண்யமும் சௌந்தரியமும் வழிகிற மாதிரி ஸ்திரீ ரூபத்தில் விக்கிரகம் செய்து,     "இதில் பரமாத்மா தாயாராக வந்திருக்கிறார் என்று பாவனை பண்ணு" என்றால், மனசு அதை நன்றாகக்   க்ரஹித்துக்கொண்டு அப்படியே  அதில்  ஆழ்ந்து ஈடுபட முடிகிறது.

குணமற்ற பரமாத்ம வஸ்துவிலிருந்துதான் அனந்த கல்யாண  குணங்களும்  உண்டாகிறது.  ரூபமற்ற பரமாத்மாவிட மிருந்துதான் சகல உருவங்களும் தோன்றின.  அந்தந்த குணத்துக்கு அநுகூலமான ரூபம், முத்திரை, ஆயுதம் முதலியவற் றோடு திவ்ய மூர்த்திகளைக் காட்டினால் அவற்றில் மனசு ஈடுபடுகிறது.  புரியாத பரமாத்ம தத்துவத்தை நமக்குப் புரிகிற விதத்தில் உபாஸிக்க முடிகிறது.

சகலமும்  சர்வமும்  ஆன பரமாத்மா, அவரை  நாம்  எந்த ரூபத்தில் உபாஸித்தாலும்  அந்த உருவத்தில்  அருளுகிறார்.  படிப்படியாக நம் மனநிலையை உயர்த்துகிறார். 
கடைசியில் மனஸே இல்லாத, மனஸைக் கடந்த  ஒரு  நிலையிலேயே குணமும் ரூபமும் கடந்த  நிர்குண பரமாத்மாவை உள்ளபடி அநுபவிக்க நம்மால் முடியும்.  ஆரம்பத்தில் நமக்குப் பலவித மனோ விகாரங்கள் இருப்பதால்  "பரமாத்மா எல்லாம் கடந்தவர்"   என்பதில்  பிடிப்பு இல்லை.  ரூபத்தில், குணத்தில் அவரை உபாஸித்தால், அது முற்றிய நிலையில், எல்லாவற்றுக்கும் அதீதமான பரமாத்மாவை உள்ளபடியே   நம்மால்  அநுபவிக்க முடியும் . மஞ்சள் பழத்தை மஞ்சளாகவே பார்க்கிறபோது மனஸுக்கு வேலை இல்லை .   மனசுக்கு வேலை கொடுத்து அதை சிந்திக்க வைத்தால்  தான்  இதெல்லாம் புரியும். 

 "உபாஸனையின்போது, பரமாத்மாவை   இந்த இந்த ரூபத்தில், இப்படி இப்படி  உபாசித்தால், மந்திரம்  ஸ்லோகம் எல்லாம் உச்சரித்தால், பூஜித்தால்  இப்படி இப்படி பாவனை செய்தால் அதற்கு இன்னின்ன மந்திரம் ஜபிக்க வேண்டும். இன்னின்ன ஆசாரம் வேண்டும். இன்னின்ன பூஜா பத்ததி வேண்டும்" என்று விதிகள் இருக்கின்றன. பாவனை போய், அவரை உள்ளவாறு அறிகிறபோது எந்த விதியும் இல்லை, செயலும் இல்லை. சரீரம் மனசு இவற்றின் காரியமாகிற உபாஸனை இப்போதுதான் அநுபவமாகிற ஞானம் என்பதாகப் பழுத்து விடுகிறது.

இந்த ஞானம் நமக்கு ஆரம்பத்திலேயே வந்து விட்டதாக பாவனை செய்துவிடக்கூடாது. உபாஸனையே பெரும் பாலான ஜனங்களுக்கு ஞானம் பெற உபயமாகும்,   படிப்படியாக  ஏறி  தான்  மேலே  போகவேண்டும்.   திவ்ய மூர்த்திகள் நாமாகச் செய்கிற கல்பிதமான பாவனை மட்டுமல்ல. பரமாத்மாவே மகான்களுக்கும் ரிஷிகளுக்கும் இந்த ரூபங்கள், மந்திரங்கள், விதிகள் எல்லாவற்றையும் அநுக்ரஹித்  திருக்கிறார். பரமாத்மா வாஸ்தவமாகவே இப்படிப்பட்ட மூர்த்திகளாகி, அவற்றை அடைகிற மந்திர, யந்திர, தந்திரங்களாகவும் ஆகியிருக்கிறார். எனவே, உபாஸனை முறையை நம்பிக்கையுடன் சிரத்தையுடன் பின்பற்றினால் நிச்சயம் ஞானத்துக்கு வழி உண்டாகும்.

ஞானம் வருவதும் வராததும் இருக்கட்டும். இப்போது உபாஸிக்கிறபோது அன்போடு அதைச் செய்யவேண்டும். இந்த அன்பே, பக்தியே நமக்கு பெரிய நிறைவைத் தரும். அதனால் பகவானின் எல்லையில்லாத அன்பையும் அனுபவிப்போம். அதுவே பெரிய ஆனந்தம்.  இதற்கப்புறம் அவர் இஷ்டப்பட்டு அத்வைத ஞானம்  நமக்கு  தரட்டும்; தராமல்தான் இருக்கட்டும். அதைப்பற்றி இப்போது கவலைப்பட வேண்டாம். நாம் செய்யக்கூடியது பக்திதான். இதற்குப் பிரதியாகப் பெறக்கூடிய பகவதநுக்ரஹ  ஆனந்தமே நமக்குப் போதும்.''

VIVEKA CHINTHAMANI

 



யாரிந்த கவிஞர்?       நங்கநல்லூர்   J K SIVAN

ஒரு சின்ன  கேள்வி கேட்கட்டுமா?
விவேக சூடாமணி தெரியுமா?
எங்கோ  கேள்விப்பட்டமாதிரி இருக்கிறதே. MKT   பாகவதர் நடித்த படமா?
இல்லை சுவாமி.  இது   ஆதி சங்கரர் ஸமஸ்க்ரிதத்தில் எழுதிய வேதாந்த நூல். அது ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில்  மொழிபெயர்க்கப்பட்டு  வெளி வந்துள்ளது.
''அப்படியா.  ஓஹோ ;; 
''சரி இன்னொரு கேள்வி  கேட்கலாமா?''
.... ம்ம்ம்   .....
''சீவக சிந்தாமணி'' தெரியுமா?''சத்தியமாக  தெரியாது.  சொல்லுங்கள். கேட்கிறேன்''
''இது திருத்தக்க தேவர் என்பவர் எழுதிய ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று.''
''உங்களை  மேற்கொண்டு கொரோனா காலத்தில் அதைவிட கொடுமையாக சோதிக்க விரும்பவில்லை  ஒரே ஒரு வினா மட்டும். ''விவேக சிந்தாமணி''  தெரியுமா ?
''இல்லை ஸார் ,  தெரியாது''
''அற்புதமான பாடல்கள் எளிய தமிழில் இருக்கும் இந்த  விவேக சிந்தாமணி என்ற நூலை   யார் எழுதியது. என்ற கேள்விக்கு   பதில் இன்னும் தெரியவில்லை.''

யாராக இருந்தால் என்ன. நன்றாகவே எழுதி இருக்கிறார். அதில் சில பாடல்களை இனிமேல் சொல்வதாக இருக்கிறேன்.


பெண்களை உயர்வாக மதித்து போற்றி எழுதிய பாடல்கள் நிறைய  அறிவீர்கள்.   இந்த விவேக சிந்தாமணி ஆசிரியர் தான் யார் என்று காட்டிக்கொள்ளாததால் ஏதோ  ஒரு  தைரியத்தோடு ''பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே''..... என்று அல்லவோ பாடுகிறார். பாடல் எழுதிய விதத்தை மட்டும் நாம் ரசிப்போம். நாம் பெண்கள் எதிரிகள் அல்ல. அவர்கள் தயவு இல்லாமல் ஒன்றுமே நடக்காது. அடுத்த வேளை  நாம்  வீட்டில் சாப்பிட வேண்டாமா? இப்போது கொரோனா சமயத்தில் வெளியேயும் எதுவும் கிடைக்காதே. போகவும் முடியாதே.
இது தான் அந்த பாட்டு.


''மங்கை கைகை (கைகேயி) சொற்கேட்டு மன்னர்
புகழ் தசரதனும் மரணம் ஆனான்
செங்கமலச் சீதை சொல்லை ஸ்ரீராமன்
கேட்டவுடன் சென்றான் மான் பின்;
தங்கை அவள் சொல்லைக் கேட்டு இராவணனும்
கிளையோடும் தானும் மாண்டான்
நங்கையற் சொற் கேட்பதெல்லாம் கேடுதரும்
பேர் உலகோர் நகைப்பர்தாமே.''

''ஆண்களே ஜாக்கிரதை , பெண்கள் ஏதாவது சொன்னால்  ''ஆஹா,  இதோ''   என்று சொல்லி விட்டு ஓடிவிடுங்கள். அவர்கள் பேச்சைக்  கேட்டு எதையாவது செய்து எக்கச்சக்கமாக மாட்டிக்  கொள்ளாதீர்கள். உங்களுக்கு முன்னே இப்படி அகப்பட்ட சில அசடுகள் பெயர்கள் சொல்கிறேன். உங்களுக்கும் தெரிந்தவர்கள் தான். 

கைகேயி தனது கணவன்  தசரதனை பிடித்து       'நாதா எனக்கு ரெண்டு வரம் தருவதாக சொன்னீர்களே, கொடுக்கிறீர்களா என்றதும், 

''அதற்கென்ன கண்ணே, நீ கேட்டு நான் இல்லை என்பேனா'' என்று சொன்னவன் அவள் கேட்ட வரத்தை  கொடுத்ததால்  உயிரையே இழந்தான் .. 

சீதையும் சும்மா இருந்த ராமனிடம், ''நாதா அந்த அழகிய மான் குட்டியை பிடித்துத்  தாருங்கள்''  என்று சொல்ல, மானைத்தேடி ஓடி, மனைவியை இழந்து, இலங்கை எரிந்து, நிறைய பேர் மடிந்து போனார்கள். பத்து தலையில் பத்து மூளை இருந்தும் முட்டாள் ராவணன். ''அண்ணா உனக்கேற்றவள் அந்த சீதை, பேரழகி , அவளை யாரோ ஒரு மானுடன் மனைவியாக கொள்வது எவ்வளவு அநியாயம், உடனே சென்று அவளை உங்களவளாக்கிக் கொள்ளுங்கள் என்றதால் சாமியார் வேஷத்தில் சென்று சாம்ராஜ்யம், உயிர் எல்லாவற்றையும் இழந்தான். ஆகவே தான் சொல்கிறேன் பெண்ணின் பேச்சை கேட்காதே .

ஊர் உலகமெல்லாம் உன்னை பார்த்து சிரிக்கும்'' (அம்மணிகளே , இது நான் சொல்லவில்லை... யாரோ பேர் தெரியாத விவேக சிந்தாமணி எழுதிய கவிஞர் சொன்னது என்று முன்பே சொல்லி இருக்கிறேன்).

பெண்டுகள் சொல் கேட்கின்ற பேயரெனும்
குணம் மூடப் பேடி லோபர்
முண்** களுக்கு இணையில்லா முனை வீரர்
புருடரென மொழியொணாதே
உண்டுலகம் உதிர்ப்பாருள் கீர்த்தியறம்
இன்ன தென உணர்வே யில்லார்
அண்டினவர் தமைக் கொடுப்பா ர் அழிவழக்கே
செய்வதவர் அறிவுதானே

ஸாரி . இதை கொஞ்சம் ஸ்ட்ராங்காக, சற்று விரசமாக கூட எழுதியிருக்கிறார் கவிஞர்.
பெண்டாட்டி பேச்சுக்கு தலையாட்டுபவன் மனுசனா? குணம் கெட்டவன், முட்டாள், கருமி. விதவன்,(விதவைக்கு ஆப்போசிட் ஆக எடுத்துக் கொள்ளவும்) ஆம்பளையே இல்லை. அலி, உலகத்தில் வீரம் தர்மம் , கம்பீரம் எதுவென்று தெரியாத அறிவற்றவன். அநீதிக்கு துணை போகிறவன். அவனிடம் உதவிக்கு போகிறவனை ஆழமாக குழியில் தள்ளுபவன்..... (கவிஞருக்கு பெண்கள் மேல் என்ன கோபமோ, வார்த்தைகள் கடினமாக இருக்கிறது)


.''ஆலகால விடத்தையும் நம்பலாம்
ஆற்றையும் பெருங் காற்றையும் நம்பலாம்
கோல மாமத யானையை நம்பலாம்
கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்
காலனார் விடும் தூதரை நம்பலாம்
கள்ள வேடர் மறவரை நம்பலாம்
சேலை கட்டிய மாதரை நம்பினால்
தெருவில் நின்று தயங்கித் தவிப்பரே.''

ஐயா, நான் சொல்வதை காது கொடுத்துக் கேளுங்கள், இது அனுபவ அறிவுரை என்கிறார்  கவிஞர்.

''ஆலகால கொடிய விஷத்தை கண்ணை மூடிக்கொண்டு நம்புங்கள். ஆழமான ஆற்றை நம்புங்கள், பெரும் சூறாவளி காற்றை தாராளமாக நம்புங்கள். மஹா பெரிய மதம் பிடித்த யானையை நம்புங்கள், ஒன்றும் செய்யாது. அட யானையை விடுமய்யா. வரிப்புலி இருக்கிறதே அதை வாடா தம்பி என்று கொஞ்சி நம்புங்கள், கையில் பாசக்கயிற்றை எடுத்துக்கொண்டு நாய் பிடிப்பது போல் உங்களை பிடிக்க வருகிறானே   எம தூதன் அவனை முதலில் நம்புங்கள், திருடன் கொள்ளைக்காரன், குருவிக்காரன்   எவனை வேணுமானாலும் நம்புங்கள், ஆனால் ஆனால் ஆனால் சேலை கட்டிக்கொண்டு உங்கள் முன் நிற்கிறாளே , தெருவில் போகிறாளே , கண்ணில் படுகிறாளே , சிரித்துக்கொண்டு... ஐயய்யோ , அவளை மட்டும் நம்பவே நம்பாதீர்கள். அவ்வளவு தான் நீங்கள்..... ( இதை சினிமாவில் பழைய படத்தில் TMS பாடியிருக்கிறார். எந்த  சினிமா  கவிஞன் கண்ணில் இந்த பாட்டு பட்டதோ, காசு பண்ணி விட்டான்).


இந்த மூன்று இப்போதைக்கு போதும். இன்னும் சிலது இருக்கிறது. அது பெண்கள் கோப ஜுரம் நிற்காவிட்டால் அடுத்த டோஸ் நாளைக்கு தருகிறேன்...

Thursday, April 29, 2021

OLDEN DAYS WEDDING




 


பழைய நினைவுகள்.     நங்கநல்லூர்  J K SIVAN 


''கல்யாணம்  டும் டும்  டும்  கல்யாணம்''

நான்  எழுதும்  இந்த கல்யாண  விஷயங்கள்  ஏதோ  பொழுது போக்குக்காக  எழுதப்பட்டதல்ல . மூன்று  தலைமுறைக்கு முன் நடந்தது எவ்வாறு, இப்போது எப்படி  அது  சுருங்கி விட்டது.  காலத்திற்கேற்றவாறு  மாற்றம் என்ற  சால்ஜாப்பு எல்லாவற்றிற்கும் சொல்ல  முடியாது. சிலது அப்போதும் இப்போதும்  எப்போதும்  ஜாக்கிரதையாக  கவனித்து செய்ய  வேண்டிய விஷயங்கள்.  அப்படி செய்யாததால்  நிறைய  மணப்பெண்கள், மாப்பிள்ளைகள்  கருப்பு கோட்டுக்கு பணம் கொடுத்து கோர்ட் வாசலில் நிற்கிறார்கள். எத்தனையோ லக்ஷங்கள் கடன் வாங்கியாவது கல்யாணம் செய்த  பெற்றோர்  ரத்தக் கண்ணீர்  விட்டு வாங்கிய கடன்களை அடைக்கும் முன்பேஅவர்களது பெண்ணோ பிள்ளைக்கோ நடத்திய   கல்யாணம் ரத்து ஆகும் வருத்தமான சூழ்நிலை.  முடிந்தவரை  எதெல்லாம் தவிர்க்க முடியுமோ அதைச் செய்வோம். அப்புறம்  ஈஸ்வரன் விட்ட வழி. 
நமது ஹிந்து கலாச்சாரத்தில் சில மாதங்கள் ரொம்பவும் பிஸியான கல்யாண மாதங்கள். ஒரே நாளில் ரெண்டு மூன்று கல்யாணம். எங்கே எதற்கு போவது?. எதில் பங்கேற்று வாழ்த்தி சாப்பிடுவது? ஒன்றில் தலையைக் காட்டி அழைப்புக்கு'' (ரிசப்ஷன்) சென்று யாருமே கேட்காத இன்னிசையை காதில் வாங்கிக்கொண்டே சாப்பிட்டு, தெரிந்த சில முகங்களிடம் அர்த்தமில்லாமல் சிரித்து விட்டு பையை வாங்கிக்கொண்டு திரும்புவது. மற்றொன்றில் முகூர்த்தம் என்று அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் காலையில் வெறும் இட்டிலி பொங்கல், பூரி, தோசை,கேசரி சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொண்டு சாப்பிடாமல் திரும்புவது. சிலதில் காலையிலேயே ஏதாவது வீட்டில் கொஞ்சம் வயிற்றை நிரப்பிக் கொண்டு அங்கே முகூர்த்தம் முடிந்து போஜனத்தை உண்டு வீடு திரும்புவது வழக்கமா, பழக்கமா, ஏதோ ஒன்று ஆகி விட்டது.  ஒரே  கல்யாண மண்டப  கட்டிடத்தில் மூன்று கல்யாணம்.  நான் சம்பந்தமில்லாத தெரியாத ஏதோ ஒன்றின் ரிசெப்ஷன் சென்று சாப்பிட்டுவிட்டு தெரியாத பெண்ணுக்கு  பரிசு கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்து திட்டு வாங்கினேன்.  நான் செல்லவேண்டிய கல்யாணம் மூன்றாவது மாடியில் இருந்த மண்டபத்தில் என்று பத்ரிகையை  சரியாக பார்க்காமல் செய்த தவறு.
கல்யாணம்  என்பது  கொஞ்சம் கூட  அவசரம் இல்லாமல் செய்யவேண்டிய  ஒரு முக்கிய கார்யம்.  அதில் எத்தனை விஷயங்கள் இருக்கிறது.  மறுபடியும்  ஞாபகப் படுத்துகிறேன்.

கல்யாண விஷயத்தில்  பெண் பிள்ளை  பொருத்தம்  பார்ப்பது  என்பது  வெறும்  ஜோசியர்  சமாச்சாரம் மட்டும் இல்லை. இப்போது போல்  டிடெக்ட்டிவ்   ஏஜென்ஸி  எடுத்து  பையன்  பற்றிய  ரகசிய  வேவு  பார்ப்பது போல்  அப்போது  கிடையாது.  
''வது வர குண பரிக்ஷம்'  என்று  சமஸ்க்ரிதத்தில்  சாஸ்திரம் ஒன்று இருக்கிறது.   இதன் மூலம் ஒரு பையன் பெண்ணுக்கு தகுந்தவனா அல்லது பெண்பையனுக்கு ஏற்றவளா என்று சோதிப்பதற்காகத்தான், பெரியவர்கள் சம்பந்தம் பேசுமுன் சகல விபரங்களையும் கேட்டு அறிவார்கள்.  ஒரு வீட்டில்  பெண் பார்க்கிறார்கள்  என்றால்  அந்த கிராமத்தில் அநேகருக்கு இது தெரிந்த விஷயமாக இருக்கும்.   அவர்களில் யாராவது  பெண்ணைப் பற்றி, பையனைப் பற்றி   சகல விஷயங்களையும் அஆற்றங்கரையிலோ, அரசமரத்தடியிலோ,   மதகு வாராவதி மேல்  அமர்ந்தோ கோயில் வாசலிலோ  எல்லாவிஷயமும் சொல்லிவிடுவார்கள்.  குடும்பம்  பற்றிய  சப்  ஜாடா  விஷயமும்  தெரிந்துகொள்ள  இயன்றது.  பொருத்தம்  பார்ப்பது இதற்காகத் தான்.

அதேபோல்  ஒருவீட்டில் பெண்  எடுக்கும்போது  திடு திப் என்று  செல்ல மாட்டார்கள்.  ' வரப்ரசேன, வரவரித்தி கர்மா''  என்ற  முறைப்படி, சரியானவர்களை, அனுபவஸ்தர்களை  தக்க படி  அனுப்பி பெண் வீட்டில்  பெண்ணைப் பற்றி  கல்யாணத்துக்கு இருக்கிறாளா என்று சகல விஷயமும் அறிந்து வருவார்கள்.  

 பெண்வீட்டார் முதலில் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு பிள்ளை தேடுதல் வழக்கமானது. இப்போது இதற்கென சில ப்ரோக்கர்கள். அவர்களது நோக்கம் எப்படியாவது எவரையாவது ''பிடிப்பது'' தனக்கு ஆதாயம் பெறுவது. அப்போது  இந்த சுயநலம் இல்லை. அதனால் தான்  டைவர்ஸ் கோர்ட் விவகாரம் இல்லை.  தொங்க தொங்க தாலியோடு  கிழட்டு தம்பதிகளாக வெகுகாலம் ஒருவரை ஒருவர் பிரியாமல் இருந்தார்கள். பத்து குழந்தைகளாவது நிச்சயம் ஒவ்வொரு வீட்டிலும்.

 ''வரி நிஸ்சயம்.''  இந்த சமஸ்க்ரித வாக்கியம் என்ன சொல்கிறது என்றால்,  இப்படி  ஜல்லடை போட்டு தேடி சரியான பெண்ணையோ பிள்ளையையோ தேர்ந்தெடுத்து   நிச்சயம் செய்து கொள்ளுதல்.

 ''மண்டபகரணம்'' -என்றால்  ஒரு நல்ல இடமாக தேர்ந்தெடுத்து   கல்யாணம்  நடத்த இப்போதெல்லாம்   ஒரு வருஷம் முன்பே  அலைய வேண்டி இருக்கிறதே.  கல்யாண மண்டபம் தேடி பிடித்த பிறகு தான்  அதற்கு ஏற்றவாறு  கல்யாண தேதி வைக்கும் அவசியமும் வந்துவிட்டது.   அக்காலத்தில்  பெண் வீட்டிலேயே தெருவை மடக்கி பந்தல் போட்டு விமரிசையாக கல்யாணம் நடக்கும்  என்று முன்பே சொல்லியிருக்கிறேன்.  

அநேகர்  வீட்டு கல்யாணம்  அவர்களது  குல தெய்வ ஊரிலேயே   நடந்தது.   சில கோவில்களில் கல்யாணம் செய்ய அனுமதி உண்டு. இடமும் இருக்கும்.

'வது கிரஹ கமனம்''  இது என்னவென்றால்  மறு வீடு என்று  பால் பழம் சாப்பிட  செல்கிறார்களே  அது போல்.  கல்யாண மாப்பிள்ளை  பெண் வீட்டுக்கு செல்வது. அதற்கு முன் பெண்ணுக்கும் பிள்ளைக்கும் பரிச்சயம் இல்லை. இப்போது படித்து சந்தோஷமாக ''பேத்தல் '' என்று சொல்லி சிரிக்கலாம். தடை இல்லை.

கல்யாண  சடங்குகள்  நடக்கும் முன்பு   'நாந்தி ச்ராத்தம், புண்யாஹவாசனம்' -போன்ற  முன்னோர்கள்,  தேவர்கள், தேவதைகள் ஆசியை பெறும்  சடங்குகளை    ஹோம  குண்டம் வைத்து   ஹோமங்கள்  ப்ரீதிகள்  செய்வது வழக்கம்.  .

வேதங்களில் '' தைல ஹாரித்ர லேபனம்'' என்று மஞ்சள் குங்குமம் தடவி பெண்ணை அலங்கரிப்பது பற்றி வருகிறது. ஒருவிதத்தில் மெஹந்தி, நலங்கு இது தான் இப்போது இதை குறிப்பதாக எடுத்துக் கொள்வோம்.

'மதுபர்க்கம்'' - பிள்ளையை பெண் வீட்டுக்கு அழைத்து பாலும் பழமும் கொடுப்பது. கல்யாண மண்டபத்திலேயே இது ஊஞ்சலில் இப்போது நடைபெறுகிறது. அந்த காலத்தில் 7 நாள் கல்யாணம் நடக்கும். இப்போது கல்யாணம் ஆகு  முன்பே சாயந்திரம் நிச்சயதார்த்தம்,  கல்யாணமானவர்களைப் போல  பெண்ணும் பிள்ளையும் அனைவரையும்   வரவேற்பது,  அவர்கள்  கல்யாணம்  நடந்த பின் சொல்லவேண்டிய  வாழ்த்தை முன்பாகவே சொல்வது.   கல்யாணமாகாத ''தம்பதிகளோடு'' போட்டோ  எடுப்பது,   இதெல்லாம் முடிந்த பின் அடுத்தநாள் காலை  உண்மையாகவே  கல்யாணம் . பண்ணிக்கொள்வது,   சாப்பிட்டவுடன்,   கை   ஈரம் காயும் முன்பே  மத்தியானம்  கல்யாண  ஹாலை , சாத்திரத்தை  இடத்தை காலி பண்ணுவது.  ஏதோ ஒரு மெஷின் மாதிரி  வேலைகள் நடக்கிறது.  

மாப்பிள்ளையை விஷ்ணுவாக பெண்ணை லக்ஷ்மிதேவியாக பாவித்து உபசரிப்பது வேதங்களில் சொல்லப்படுகிறது. இப்போது யாரேனும்  ஒரு நிமிஷம் இதுபோல் நினைக்கிறார்களா?

இன்னும்  கொஞ்சம் சொல்கிறேன்.

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...