Saturday, April 24, 2021

PESUM DEIVAM


 



பேசும் தெய்வம் -   நங்கநல்லூர்   J K  SIVAN  --


   
மஹா  பெரியவா அனுக்ரஹம்   தொடர்கிறது...... 


மஹா பெரியவா ஒரு  யுக புருஷர். அவர்  வாழ்ந்த காலம் ஒரு  புண்ய சகாப்தம்.  மீண்டும் அப்படி ஒரு காலம் வருமா?  அவரைப்போல் ஒருவர் அவதரிப்பாரா  என்பது அந்த பரம்பொருளுக்கு தான்  தெரியும்.    

மஹா பெரியவா  சம்பந்தப்பட்ட  நிகழ்வுகள், சம்பவங்கள்  கட்டுக்கதை அல்ல.  எங்கோ யாரோ  அனுபவித்து நமக்கு கைகள் மாறி வந்து சேர்ந்தவை.  ஸ்ரீ சுந்தரராஜன்  என்ற  பக்தர், டில்லியில்  மத்திய அரசாங்க நிதி அமைச்சராக  அலுவலகத்தில் ஒரு முக்கிய அதிகாரி. அவர் வாழ்வில் அனுபவித்த ஒரு சில சம்பவங்களை முன்பு ஒரு கட்டுரையில் எழுதி இருந்தேன். இது அதன் தொடர்ச்சி என கொள்ளலாம். 

ஐ.நா. சபையின் ஒரு முக்கிய பதவிக்கான தேர்வு நடந்தபோது  சுந்தரராஜன்   தன்னுடைய விவரங்கள் அடங்கிய மெடிகல் ரிபோர்டை தேர்வுக்காக  டெல்லியில் கொடுக்கச் சென்றார். 1976-ஆம் வருடம் பிப்ரவரி 4ஆம் தேதியன்று இவர் அப்படி ஐநா சபையின் டில்லி அலுவலகத்தில்   கொடுத்தபோது ஸ்ரீபெரியவாளின் திருக்கரங்கள் அனுக்ரஹிப்பதாகக் காட்சி தெரிந்தது. ஸ்ரீபெரியவாளின் மேல் கொண்டிருந்த மிகுந்த   நம்பிக்கையோடு தான் நிச்சயம் தேர்வாகிவிடுவோம் என்று உறுதியாக நினைத்து அப்படி அயல்நாடு போவதற்கு முன் தன் பத்து வயது  மகனுக்குத் திருப்பதியில் உபநயனம் செய்து வைக்க ஒரு மாதம் விடுப்பு எடுத்துக் கொண்டார்.

மஹா சிவராத்திரி அன்று  மஹா பெரியவாளை தரிசித்தார்.  

''பெரியவா,  நான்  வெளிநாடு  சொல்லணும்னு ஆபிஸ்லே உத்தரவாயிருக்கு.  வயசான அப்பா அம்மாவை விட்டு விட்டு போகணுமே ன்னு கவலையா இருக்கு. என்ன செய்யறதுன்னு புரியலை. நீங்க தான் எனக்கு எல்லாமே.   எது நான் செய்யணும்னு உத்தரவிடறேளோ  அதை பண்றேன்.''

பெரியவா  ஒன்றும் பேசவில்லை,  கை தூக்கி  அனுக்ரஹம்.  மெல்லிய புன்சிரிப்பு. பிரசாதங்கள் பெற்று  சுந்தரராஜன் திரும்பினார். 

அடுத்த நாள் டெல்லியில் அலுவலகத்தில் லீவ் முடிந்து வேலையில் சேர்ந்தார்.   ஐ.நா.  சபையில் சுந்தர்ராஜனை  தேர்வு செய்து விட்டதாக   தந்தி மூலம் உத்தரவு வந்தது.    ஜூன் மாதம் இவர் ஸ்பெயினில் ஐ  நா சபையில் அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்றபின் இவர் தேர்வான விபரங்கள் அடங்கிய கோப்பு இவரிடம் கொடுக்கப்பட்டது.

அந்தக் கோப்பில் ஒரு அதிசயம் காத்திருந்தது.     அந்தப் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டிருந்த ஏழு நாடுகளின் நபர்களில் அந்த நாட்டின் ஃபைனான்ஸ் செகரட்ரி பிளாக்கிலிருந்து ஒரு நபரைத் தேர்வு செய்து அதை பிரதம மந்திரிக்கு அனுப்பியிருந்தது தெரியவந்தது. 

ஆனால் டிரினிடாட் டுபாகோவின் பிரதம  மந்திரியான டாக்டர் எரிக் வில்லியம்ஸ் அதை ஏற்காமல் அந்த ஏழு பெயரில் முன் பின் தெரியாத  சுந்தரராஜன்  பெயரைத் தேர்வு செய்து உத்தரவில் கையெழுத்திட்டிருந்தார்.

இதில்  என்ன  அதிசயம் இருக்கிறது?

அந்த அயல்நாட்டு பிரதமமந்திரி கையெழுத்திட்ட அந்த அயல்நாட்டு நேரம் சரியாக இந்திய நேரத்தின் படி   மஹா சிவராத்திரி தினம்.  சுந்தர்ராஜன்  அன்றைய தினம்  தான்  நீங்க என்ன உத்தரவு இடறேளோ  அதன் படி நடக்கிறேன் என்று சொன்ன நேரம்.  மஹா பெரியவா  மெளனமாக சிரித்து  அனுக்ரஹம் செய்த நேரம்.!! இதை கவனித்த சுந்தர்ராஜனுக்கு  மயிர்க் கூச்செறிந்தது.  மேனி சிலிர்த்தது. வியர்த்தது.   இது உலக மஹா அதிசயம் இல்லையா?

1987-ஆம் வருஷம் நவம்பர் மாதம் சுந்தர்ராஜனுக்கு ஒரு கடுமையான சவாலான பணி கொடுக்கப்பட்டது. யுகோஸ்லாவி யாவில் ஒரு அகில நாடுகளின் வர்த்தக சபையின் பிரதிநிதிக்கான தேர்தலில் நம் நாட்டின் உறுப்பினருக்கு பிரசாரம் செய்ய இவரை இந்திய அரசாங்கம் நியமித்தது.  அப்போது இந்திய நாட்டில் வறட்சி காரணமாக இதற்கான செலவுகளை தாராளமாகச் செய்ய முடியாத நிலையில் இவருக்குப் பக்கபலமாக ஆட்களையோ, தேர்தல்  பிரசாரத்தில்  செலவழிக்க பணமோ கிடைக்கவில்லை.

 ஆனால் இந்திய உறுப்பினரும், பாகிஸ்தான் உறுப்பினரும் நேருக்கு நேர் போட்டியிடும் நிலைமை வந்தது. மற்ற 27 நாடுகள் இதில் கலந்து கொள்ளவில்லை. பாகிஸ்தான் வேட்பாளருக்கு தக்க பலமாக ஆறு உயர் அதிகாரிகளுடன் மற்ற நாடுகளின் அங்கத்தினரை மகிழ்விக்க கேளிக்கைகளுக்காக நிறையப் பணமும் அந்த நாடு கொடுத்திருந்தது.   

பெல்கிரேட் சென்று நம் நாட்டு தூதரை சுந்தர்ராஜன் சந்தித்தபோது அவர், "நீங்க எப்படி பிரசாரம் செஞ்சாலும், பாகிஸ்தான் காரன் மத்தவங்களுக்கு பணத்தைக் கொட்டி சந்தோஷப்படுத்தி நம்மை தோக்க வைக்கத்தான் போறான்"  என்று  அவநம்பிக்கையோடு பேசினார்.  

 சுந்தர்ராஜனுக்கும் அது  தான் யதார்த்தமான உண்மை என்று தோன்றியது.     இருந்தாலும் நாடு தனக்கு இட்டிருந்த பணியை இந்த இக்கட்டில் எப்படி நிறைவேற்றுவ தென்று மன உளைச்சலோடு தூக்கம் வராமல் இரவு சென்றது.  மஹா பெரியவாளை மனதி த்யானம் செய்து கொண்டே   அன்றிரவு படுத்தார். 

அதிகாலை ஒரு அதிசயக் கனவு.
மஹாபெரியவா சுந்தரராஜன்  முன் தோன்றி தன் இருகரங்களை விரித்து அபயகரமாக காட்டுகிறார். நடுநாயகமாக நடராஜ மூர்த்தியான   மஹா  பெரியவா  தரிசனம் நல்க வலது திருக்கரத்தில் வெங்கடாசலபதியும் இடது திருக்கரத்தில் பத்மாவதித் தாயாரும் தோன்ற அருள்கின்றனர்.  

இந்த சொப்பனம் கண்டவுடன் மெய்சிலிர்க்க  சுந்தரராஜன்  உடல் சிலிர்க்க  உடனே எழுந்து, அப்போது எத்தனை மணி என்றும் பார்க்காமல் நம் நாட்டுத் தூதரை போன் மூலம் தொடர்பு   கொண்டு தான் கண்ட கனவைக் கூறினார். 

மஹா  பெரியவாளைக் கனவில் காண்பது அத்தனை சுலபமல்ல அப்படிக் கனவில் மஹான் வந்து ஆசீர்வதித்தால்
எப்படியும் நம் நாடு  தான் ஜெயிக்கப் போகிறதென்று இவர் உணர்ச்சி பொங்கப் பேசினார். அந்த அகாலத்திலும்   இவர் சொல்வதை அவமதிக்காமல்  அந்த அதிகாரி கேட்டுக் கொண்டார்.

அடுத்த நாளில் 27 நாடுகளின் வாக்காளர்களிடம் சுந்தர்ராஜன் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினார். ஸ்ரீபெரியவாளின் மாபெரும் கருணையினால்   அந்த 27 நாடுகளிலிருந்து 20 நாடுகளின் வோட்டு இந்தியாவிற்கும் மற்ற 7 வோட்டு பாகிஸ்தானுக்கும் கிடைக்க இந்தியப் பிரதிநிதி அமோக வெற்றி யடைந்தார். இது இந்தியாவுக்கும், ஏன் நமக்கும் பெரிய வெற்றி.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...