Monday, April 12, 2021

THIRUVIDAI MARUTHUR

 


பிரம்மஹத்தி  --    நங்கநல்லூர்  J K  SIVAN

கோபம் வந்தால்  அதிக பக்ஷமாக  என் தந்தையார்  அடிக்கடி  உபயோகிக்கும் ஒரு வசவு . ( திட்டு)   " ப்ரம்மஹத்தி'' .  நான்  பலமுறைகள் என் செய்கைகளால்  சிறு வயதில் ப்ரம்மஹத்தியாக  வாழ்த்தப்பட நேர்ந்தது.   அவர்  1978ல்   83 வயதில்  மறையும் வரை.   என்னை மட்டும் அல்ல.  பாரபக்ஷம் இல்லாமல்  எங்கள் குடும்பத்தில்  எல்லோரையும் ஆண்  பெண் பால் வித்தியாசமின்றி  ப்ரம்மஹத்தி யாக்கியவர்.  

ப்ரம்மஹத்திக்கு அப்போது எனக்கு அர்த்தம் தெரியாது.  ப்ராமணனைக் கொன்றால் உண்டாகும் தோஷம் தான் ப்ரம்ம ஹத்தி.  ராமர்  ராவணனைக் கொன்று ராமேஸ்வரத்தில்  பரிகாரம் தேடியது உங்களுக்கு தெரியும்.   சிவனுக்கும் அதே போல்  பிரமன் தலையை கொய்த  ப்ரம்மஹத்தி சாபத்தை நிவர்த்தி செயய  ஹரசாப விமோசன பெருமாள் கோவிலுக்கு  திருவையாறு பக்கத்தில் திருக்கண்டியூர் சென்று தவமிருந்து  விமோசனம் ஆயிற்று. அந்த கோவில் சென்று அதைப் பற்றி எழுதி இருக்கிறேன்.  சப்தஸ்தான க்ஷேத்ரம். 


ப்ரம்மஹத்தி என்றால் மறக்கமுடியாத  ஒரு ஸ்தலம் இருக்கிறதே  ஞாபகம் இருக்கிறதா.  மத்யார்ஜுனம்.  அப்படி ஒரு ஸ்தலமா என்று கேட்காதீர்கள்.  அது  தான் உங்களுக்கு தெரிந்த  திருவிடை மருத்துவர்.  இடை என்றால் மத்ய .  அர்ஜுனன் என்றால் மருத மரம். அருமையான  ஆலயம்.  திருவிசை நல்லூர் ஐயாவாள்  பற்றி எழுதும்போது  சொல்லி இருக்கிறேன். தினமும்  மஹாலிங்கஸ்வாமியை நமஸ்கரிக்காமல் ஒருநாளும் வீணானதில்லை.  ஐந்தாறு முறை இந்த ஆலயத்துக்கு சென்று  மகாலிங்க தரிசனம் பெற்றிருக்கிறேன்.  

ப்ரம்ம ஹத்தி பற்றி  ஒரு குட்டி கதை சொன்னால் நன்றாக இருக்கும் அல்லவா?

7வது நூற்றாண்டில்  மதுரையை ஆண்ட  பாண்டிய  ராஜா  வரகுண பாண்டியன்  ஒரு நாள் காட்டுக்கு வேட்டையாட சென்றான்.  வேட்டையாடி  பல மிருகங்களைக் கொன்றுவிட்டு  களைத்து குதிரை மேல் திரும்பி வந்து கொண்டிருந்தான். குதிரைக்கு  அவனைவிட களைப்பு அதிகம். பாவம்  அது தானே அவனையும் தூக்கிக் கொண்டு காட்டுக்குள்  அங்கும் இங்கும் ஓடி மிருக வேட்டைக்கு உதவியது.  இருள் சூழ்ந்து விட்டது.  வேகமாக  பசியோடு அரண்மனைக்கு திரும்பிக்கொண்டிருந்த  குதிரை  வழியில் இருட்டில்  மரத்தடியில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு  கிழ பிராமணன்  கழுத்தின் மேல் காலை வைத்து மிதித்து கொன்றுவிட்டது. நிரபராதி யான ஒரு  ப்ராமணனைக்  கொன்ற  ப்ரம்ம ஹத்தி தோஷம் பாண்டியனைப் பிடித்துக் கொண்டது.

வரகுண பாண்டியன் சிவ பக்தன்.   நேராக மதுரை சுந்தரேஸ்வரர் முன் சென்று முறையிட்டான்.

 ''பரமேஸ்வரா, நான்  வேண்டுமென்றோ,  தண்டனையாகவோ ,காரணமில்லாமலோ,  அந்த பிராமணனைக் கொன்றதால்   ப்ரம்ம ஹத்தி தோஷம்  பிடித்துக் கொண்டது.  யாகமெல்லாம் செய்தேன். தான தர்மம்  புரிந்தேன். என் குதிரை செய்த தவறு என்னுடையது என்று ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு எப்படியாவது இந்த தோஷத்தி லிருந்து விமோசனம்  தரவேண்டும்'' என்று வேண்டினான்.

''என்னுடைய  ஆலயம் இருக்கும் திரு விடைமருதூருக்குப்  போ. அங்கே  என்னை வழிபடு '' என்று கனவில் மதுரை சொக்கநாதர் சொல்லிவிட்டார்

பாண்டியனுக்கு ஒரு சங்கடம்.  

''சுந்தரேஸ்வரா,  திருவிடை மருதூர்  சோழ தேசத்தில் இருக்கிறதே. பாண்டியன் நான் , எப்படி அங்கே செல்வது. உறவு இருவருக்கும் சரியில்லையே.  பகைவர்களாகி விட்டோமே.  என்னை அங்கே போகச் சொல்கிறாயே, எப்படி?''

''வரகுணா , கலங்காதே, இன்னும் சிறு நாளில் சோழன் உன் மேல் படையெடுத்து தோற்று, சோழ தேசம் உன் வசமாகும் நீ திருவிடைமருதூர் செல்வாய்''

பாண்டியனுக்கு  ப்ரம்மஹத்தி தோஷத்தோடு  அதிர்ஷ்டமும் அவன் பக்கம் இருந்தது. சில நாளில் சோழன் படையெடுத்து திடீரென்று    பாண்டிய நாட்டைத்  தாக்கினான்.  கடும்போர்  பாண்டியன் படைக்கும் சோழ படைக்கும் நடந்து பாண்டியன் போரில் வென்றான்.  சோழனை வென்று திருவிடை மருதூர் அவன் கைவசம் வந்தது. அங்கே  மஹாலிங்க சுவாமி கோவில் கிழக்கு வாசல் வழியாக  உள்ளே சென்றான். வேண்டிக் கொண்டான்.

அவனை நிழல் போல் தொடர்ந்து வந்த ப்ரம்ம ஹத்தி  சிவாலயம் உள்ளே செல்ல முடியாமல் வாசலிலேயே  பாண்டியன் திரும்பி வெளியே வந்தால் மீண்டும் பிடித்துக்கொள்ள  காத்திருந்தது.

விஷயம் தெரியாத  வரகுணன் திரும்பி  வந்த வழியே  கிழக்கு வாசலில் வெளியே திரும்ப யத்தனித்தபோது ஒரு அசரீரி அவனுக்குள் கேட்டது.

''அடே   வரகுணா , வந்த கிழக்கு வாசல் வழியே  வெளியே செல்லாதே. அடுத்த  வாசல் வழியாக செல். இனி ப்ரம்மஹத்தி உன்னைத் தொடராது. உன் தோஷம் இங்கு வந்ததால் நீங்கியது''   என்கிறார் மகாலிங் கேஸ்வரர்.

அன்று முதல் யாருக்கெல்லாம்  ப்ரஹ்மத்தி  மற்றும் தோஷங்கள் உண்டோ, அவர்கள் திருவிடைமருதூர் மகாலிங்கத்தை வேண்டி வழிபட்டால் நிவர்த்தியாகும் என்று பக்தர்கள் நம்பிக்கை.

தோரண வாயிலில்  தெற்கு சுவற்றில் இரு  கைகளால் முழங்கால்களை கட்டிக் கொண்டு  முழங்கால்களுக்கு இடையே  கோரமான முகத்தை புதைத்துக் கொண்டு ப்ரம்மஹத்தி உட்கார்ந்திருப்பதைப் போல் ஒரு சிலை வடித்திருக்கிறது.  திருவிடைமருதூர் சென்ற போதும் அதைப் பார்க்காதவர்கள்  அடுத்த முறை செல்லும் போது பார்க்கலாம்.

வீட்டில் யாராவது  முழங்காலை கட்டிக்கொண்டு உட்கார்ந்தால் போதும் என் அம்மா  படு பயங்கரமாக கத்துவாள்  ''எடு கையை, சரியாக உட்காரு. ப்ரம்மஹத்தி மாதிரி உட்காராதே''   அதைப்போல்   கன்னத்தில் கை  ஊன்றினாலும் கோபம் வரும்.  கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை ஊன்றாதே.   யார் ஊன்றினாலும்   ஊன்றவே கூடாது. கப்பல் கம்பெனியில்  வேலை செய்பவன் அப்போது.  என் பிழைப்பே  கப்பல் கவிழாமல்  மிதப்பதால் தானே..




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...