Sunday, April 25, 2021

BATHRAGIRIYAR

 

பத்திரகிரியார்  புலம்பல்   -   நங்கநல்லூர்  J K  SIVAN   --



 ஒரு ராஜாவின் புலம்பல்

ஏக்கம் என்பது மனதின் அடியே தேங்கி நிற்கும் வண்டல் எனலாம்.  அது வெளியே அடிக்கடி வருவதில்லை. அது வந்தால் அதன் வெளிப்பாடு எப்படியெல்லாமோ இருக்கும். சிலர் அழுவார், சிலர் வெறுப்பில் சிரிப்பார், சிலர் கோபிப்பார், சிலர் பொறாமைப் படுவார், வாடி தனிமையில் வதங்குவார். ஏக்கம் எதனால் வருகிறது?    நினைத்தது நடக்காமல் போனால் மட்டும் அல்ல. முயன்றும் கிடைக்காதபோது. சோதனைகள் பல மேலும் மேலும் தலை நீட்டி உற்சாகத்தை கொல்லும்  போது .கொரோனா எதிர்பாராத  அதிர்ச்சிகளை தந்து  தெரிந்தவர்கள், வேண்டியவர்களை,  அகாலத்தில் கொண்டு செல்லும்போது,    அந்த நேரத்தில் மனம் தேடுவது ஆறுதல். இறைவனை நாடுதல். நண்பர்களின், உறவினர்களின் ஆதரவும் ஆதங்கமும்.வேதாந்தம் மனதுக்கு இனிக்கும் நேரம் அது. தத்துவங்கள் வாயிலும் வரும். செவியிலும் நுழையும்.

ரெண்டே அடியில் மிக உயர்ந்த தத்துவங்களைச் சொல்ல சிலரால் தான் முடியும்.  தத்துவங்கள் என்றாலே புரியாத விஷயம் என்று நாம் நினைக்கும் தருணத்தில், கால கட்டத்தில், அவற்றைப் படிக்க விருப்ப மூட்டும் வகையில் அமைந்திருப்பது பத்ரகிரி எனும் பழைய கால ராஜாவின் நீதி வாக்யங்கள். அந்த ராஜா பர்த்ருஹரி, பத்திரகிரியார்,  பட்டினத்தாரின்  சீடராக  திருவிடை மருதூரில் கோவில் வாசலில் அமர்ந்திருந்தார் என்றும் அறிகிறோம். 

நான் வடக்கே வாழ்ந்த ராஜா பர்த்ருஹரீ என்ற வேதாந்தி ராஜாவின் சமஸ்க்ரித ஸ்லோகங்களான நீதி சதகம், (சுபாஷிதம்) என்பனவற்றை தமிழில் அவ்வப்போது உங்களுக்கு அளித்து வருகிறேன். அந்த ராஜா தெற்கே வந்து திருவிடை மருதூரில் வந்து பட்டினத்தாரின் சிஷ்யராகி பத்திரகிரியார் என்ற பெயரில் தமிழிலும் வேதாந்த பாடல்கள் பாடினார் என்று சொல்வதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஒருவேளை எனக்கு தெரியாத எவ்வளவோ விஷயங்களில் இதுவும் ஒன்று என நான் புரிந்துகொள்ளாமலும் இருக்கலாம். இந்த நீதி வாக்யங்கள் தமிழில் பத்திரகிரியார் புலம்பல் என்று சிறப்பான கவிதைத் தொகுப்பாக உள்ளது.

திருக்குறளில் இதே போன்று அருமையான விஷயங்கள் உள்ளது. எனினும் சில குறள்களை மற்றொருவர் விளக்கிச் சொன்னால் மட்டுமே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. சில நேரடியாகவே புரிகிறது. ராஜா அப்படியல்ல. எளிய தமிழில் சிறப்பாக சொல்கிறான். ஒரு சமாசாரம் என்னவென்றால் அவன் சொல்லும் விஷயத்தின் தன்மை. மும்மலம், சுழுமுனை, இட பிங்கல விவகாரங்களை ஏற்கனவே கொஞ்சம் தெரிந்து வைத்துக்கொண்டிருந்தால் இந்த வாக்யங்கள் பூரணமாக தெட்டத் தெளிவாக மண்டையில் ஏறும்.

மிகவும் சக்தி வாய்ந்த மருந்துகளை நிறைய சாப்பிடக்கூடாது. வெறும் வயிற்றில் அம்மாதிரியான மருந்துகளை உட்கொள்ளக் கூடாது. அதுபோலவே இந்த நீதி வாக்யங்களை ஒவ்வொன்றாகத்தான் அனுபவித்து படிக்கவேண்டும். அது பற்றி சிந்திக்க வேண்டும். அப்போது தான் அவற்றின் உள்ளே புதைந்து கிடக்கும் உயர்ந்த கருத்து புலப்படும். எனவே கொஞ்சூண்டு மட்டும் அவ்வப்போது நேரம் கிடைத்தால் சொல்கிறேன்.

எழுத்தெல்லாம் மாண்டிறந்தே ஏகமாய் நின்றதிலே
அழுத்தமாய்ச் சிந்தையை வைத்தன்பு கொள்வது எக்காலம்?

எழுத்து என்றால்  என்ன, நான் இதுவரை படித்தவை, எழுதியவை, கேட்டவை, திருப்பி திருப்பி  அவற்றால் எனக்கு என்ன பயன். நேரம் தான் வீணாகியது.உள்ளே ஒன்றும் ஏறவில்லை.  என் சிந்தையிலே  குடிகொள்ள வேண்டிய  ஒரே எழுதது ஐந்தெழுதது ஓம் நமசிவாய  என்ற உன் பஞ்சாக்ஷரம். அதை திருப்பி திருப்பிச்சொல்ல முடியவில்லை என்றாலும் ரெண்டே எழுத்து போதும்.   சிவ சிவா.  மஹா பெரியவா இதைத்தான் விடாமல் சொல்லிக்கொண்டே இருங்கள் என்றார்.  ராம ராம  என்றும் சொல்லலாம். இதையும் சுருக்கி  ஒரே  எழுதாக   ஓம்  என்று சொல்லலாம்.  சொல்ல சொல்ல அதுவே  மனதில் எப்போதும் தங்கிவிடும். இதை நான் அனுஷ்டிப்பது எக்காலம் என்று அழுத்தமாக கேட்கிறார்  பத்ரகிரியார்.

''அருளாய் உருவாகி ஆதி அந்தம் ஆகின்ற
குருவாக வந்து எனை ஆட்கொண்டு அருள்வது எக்காலம்?''

ஆண்டவன், பகவான்  என்று எந்த பேரில் அவனை அழைத்தாலும்  அவன் அருள்மயமான ஒருவன் தான்.  ஆதி அந்தம் இல்லாத  எல்லாம் அன்பே யானவன்.  அவன்  என் குருவாக வந்து என்னை நல்வழிப்படுத்தி நான்  உயர்வது எப்போது?

''நான் என்று அறிந்தவனை நான் அறியாக் காலம் எல்லாம் 
தான் என்று நீ இருந்ததனை அறிவது எக்காலம்?''

நீ யார்  என்று எவரேனும் என்னை கேட்டால்  நான்  இன்னார் மகன்  இது தான் என் பெயர்  என்று தானே சொல்லிக் கொண்டிருக்கிறேன். நான் அது இல்லை. நான் என்பது நீயே என்று என்றாவது ஒருநாள் நானும் உணரவேண்டும். பத்திரகிரியார் இதை ஒருநாள் உணர விரும்பி  நான் என்பது நீ தான் என்று என்றைக்கு நான்  புரிந்துகொண்டு  உய்வது  என்று கேட்கிறார் பத்ரகிரியார்.

''என் மயமாய்க் கண்டதெல்லாம் எண்ணி எண்ணிப் பார்த்த பின்பு
தன் மயமாய்க் கொண்டதிலே சார்ந்து நிற்பது எக்காலம்?''

இது என் பெரிய  மாளிகை, இது என் கார்,  இது என் மனைவி குழந்தைகள் உறவினர் என்று எதைப்பார்த்தாலும் எனதாகவே, நானாகவே  இதுவரை வாழ்ந்த வாழ் நாளை வீணாக்கிவிட்டேனே ப்ரபோ,  இதெல்லாம் எண்ணும்போது  இனியாவது  எல்லாமே  நீ தான் உன் உருவம் தான், நான் உன் அடிமை, உன் உடைமையே,  இனி நான் நீயே  என்று எப்போது  அறிவேன்?

''ஒளியில் ஒளியாம் உருப்பிறந்த வாறதுபோல்
வெளியில் வெளியான விதம் அறிவது எக்காலம்?''

ப்ரம்மம் ஒக்கட்டே  என்ற   சதாசிவ ப்ரம்மேந்திராள் பாட்டை   நூறு தடவைக்கு மேலே  கேட்டாலும் அதன் அர்த்தம் என் நெஞ்சில் பதியவில்லையே.  பாட்டின் ராகம் தானே மனதை கவர்ந்தது?  . அதற்காகவா அவர் பாடினார்?  சர்வம் ப்ரம்மமயம் என்று சொன்னால் போதாது அப்பனே,   அதை  யோசித்து  சிந்தித்து  அர்த்தம்  உணரவேண்டும், எல்லாம் ஒளிமயமாக தோன்றுவது அவனே, ஒளியில் ஒளி அவனே, பரவெளியில் எங்கும் நிறைந்திருப்பது அவனே  என்று எப்போது நான் அறிந்து நற்கதி அடைவேன்?  என்கிறார் பத்ரகிரியார் .

மேற்கொண்டு  பார்ப்போம் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...