Wednesday, April 7, 2021


 

ஒரு  லெச்சுமி  கதை.     நங்கநல்லூர்  J K  SIVAN 


சுப்ரமணிய பிள்ளைக்கு  தமிழ் பிடிக்கும்.  நாலு  க்ளாஸ்  தாண்ட  மூன்று  வருஷம் பெயில் ஆகி மேலே படிக்காமல் விட்டு விட்டு  அறுபது வயதில் திருக்குறள் படிக்க ஆசை.   வந்து திருக்குறள் படிக்கச்சொல்லி கேட்டு ரசிப்பார். 

''ஏனுங்க  திருக்குறள்  அம்புட்டு பேர் பெற்றாலும்  சின்னூண்டு  பாட்டாக இருக்கு.''
''அது தான் பிள்ளைவாள் அதன் மஹிமை, விசேஷம்.'குறுகத் தரித்த குறள் '' குறள்  என்றால்  குள்ளமான சின்ன என்று அர்த்தம். ஆனால் கடல் போல் விஷயம் அதில் அடக்கம் 1330  ஒண்ணரை  அடி பாடல்கள்.  மூன்று  பிரிவு. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால், என்று   அறம் , பொருள், இன்பம்  என்ற மூவகையில் அமைத்திருக்கிறார்  வள்ளுவர்.''படிச்சா புரியலீங்களே ''
'' சங்க கால தமிழ் கொஞ்சம்  கஷ்டம் தான்.  மு.வ.  என்ற பேரறிஞர்  அர்த்தம் எழுதி இருக்கிறார் அதைப் படித்தால் நல்லா  புரியும். நான் அதைப் பார்த்து தான் புரிஞ்சுண்டேன்.  சங்ககால தமிழ் எனக்கும் நெருடல் தான் பிள்ளைவாள்.  நான் தமிழறிஞர் இல்லை.   திருக்குறள் எல்லோரும்   படிக்க வேண்டிய  ஒரு  நூல்.  ரொம்ப  அருமை யான  அற்புதமான  ஒரு  புத்தகம்''

''ஒரு விஷயம். ஒரு பள்ளியிலே  தமிழ் வாத்தியார்  ராமசாமி  சார்  திருக்குறள் பாடம் நடத்தும்போது அன்பு பற்றி அதிகாரம்   குறள்  உரக்கச்  சொல்லி  அர்த்தம் விளக்கிக் கொண்டிருந்தார்.  ரெண்டு  பசங்க  கவனிக்கலே. அவருக்கு  ரொம்ப  கோபம் வந்துடுத்து.  அவங்க  ரெண்டு  பேரையும்   தலை யி லே மளுக் கென்று குட்டி,  காதைத்   திருகி,  திட்டி,  அவங்க ரெண்டு பேரும்  கத்த  கத்த   வெளிலே  அனுப்பி  முட்டி போட வைத்தார்.   அந்த  பீரியட் முழுக்க  அவங்க  ரெண்டு  பெரும்  வெளிலே   முட்டி போட்டு நின்று கொண்டிருந் தாங்க''  இதை ஹெட்மாஸ்டர் பார்த்துட்டு  ஹா ஹா என்று சிரித்தார். தமிழ் வாத்தியாருக்கு என்னவோ போல் ஆயிட்டது.  

''ராமசாமி,  தமிழ்லே  திருக் குரள்  ரொம்ப நல்லா சொல்லிக்கொடுக்கறீங்க. அதுவும் அன்பு பற்றி  சொல்லிக்கொடுக்கும்  போதே  இவ்வளவு  கோவம்  வந்தா  அப்புறம் எப்படி அன்பு  புரியும்?. குரள்  அன்பு பத்தி என்ன சொல்லுது. சொல்றேன் கேளுங்க: 

''உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது.  நாம்  ஒருத்தர்  கிட்டே  அன்பு  வைத்தால்  அவர்  எதாவது  கஷ்டப்   பட்டால்  தானாகவே  நம்  கண்களில்   கண்ணீர் துளிக்கும்.  இது தான்   உண்மையான  அன்பு .

அன்பு இல்லாதவர்களை   யாருமே  விரும்ப மாட்டார்கள்.  அவர்கள்  தமக்குத்  தாமே  தான் உரிமை கொண்டாட வேண்டும்.  அவர்களை  எவரும்  சீந்தக்கூட  மாட்டார்கள்.  எல்லோருடனும்   அன்பு செலுத்துவோர்  தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென அர்ப்பணிப் பவர்கள்.  

உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த தன்மையாகும். 

 அன்பு பிறரிடம் பற்றுதல்  கொள்ளச் செய்யும்.  அந்த உள்ளம்,  நாள் செல்லச் செல்ல நட்பு எனும் பெருஞ் சிறப்பை உருவாக்கும்.

உலகில்  சந்தோஷமாக  வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்ட வராக விளங்குவ தன் பயனே என்று தாராளமாக கூறலாம்.

 மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை எப்படிப்பட்டது  தெரியுமா ,   பாலைவனத்தில் பட்டமரம்  போன்றது. அதாவது ஈரம்  என்பதே  அறியாதது.  வரண்டது.

அன்பு என்பது   மனத்திலே குடி கொள்ளாத மனிதர்களுக்கு   வெளியே  உடல்  உறுப்புகள் அழகாக இருந்து என்ன பிரயோஜனம். சொல்லு ?  நான் கேக்கலே. வள்ளுவர் பளிச்சுனு கேக்கறாரு.

அன்பு உள்ளத்தில்  நிறைந்து  இயங்குபவனே உயிருள்ள மனிதன்.  இல்லையேல்,  அவன்  ஒரு  எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடல் மட்டும்  கொண்டவன் ஆவான்.''

''அடடா  எப்படி  ஸார் ,  நீங்க   இதெல்லாம்  தெரிஞ்சுண்டிருக்கீங்க ?''

''பிள்ளைவாள் இதெல்லாம்   திருக்குறளில்  திருவள்ளுவர்  சொல்றது.   உங்களுக்கு  அன்பு  செலுத்துறது  பற்றி ஒரு  கதை சொல்றேன் கேளுங்க.  எனக்கு பிடிச்சுது இந்த கதை.  

''ஒரு  கிராமத்திலே ராஜம்மா என்று ஒரு   கிழவியும், சேது என்று   அவள் பிள்ளையும்  இருந்தார்கள். .  கிழவி பையனுக்கு  ஒரு  சிறு  பெண்ணை  கல்யாணம் பண்ணி வைத்தாள்.   அந்த பெண் லெச்சுமி.  வந்த நாள்  முதல்  அவளை அதிகாரம் பண்ணி எல்லா வேலையும்  வாங்கினாள்  ராஜம்மா.  துளிக்கூட  அவளிடம்  அன்பு  காட்டவில்லை.  அந்த  பெண்  லெச்சுமி வாடியது.  எதிர்த்து  பேசாது.  பயம். மிஷின்  மாதிரி  வேலை செஞ்சுது.  அதுக்கு  வாழ்க்கை யே  வெறுத்து போய்விட்டது.  அந்த ஊரில்  ஒரு  நாட்டு  மருந்துக்காரர்  சோமு செட்டியார்.  அவர்  நண்பர்  மகள்  தான்  இந்த லெச்சுமி.   அப்பப்போ யாருக்கும் தெரியாம  செட்டியார் கிட்டே போய் லெச்சுமி அழும். 

புருஷன் சேதுவோ  அம்மா மனைவி  விஷயத்தில்  தலையிடாமல்  தப்பித்துக்  கொள்பவன்.  கண்டும் காணாம இருப்பான்.  தாங்க முடியாமல் போய்  லெச்சுமி  ஒருநாள்  செட்டியாரிடம்

''ஏதாவது  விஷம்  கொடுங்கள்  நான்  சாப்பிட்டு  இறந்து போகிறேன்''   என்றாள்.  அவர்  புத்திமதி  சொன்னார்.  அவள்  என்ன சொல்லியும்  கேட்கா மல்  விஷம் கேட்டாள் .  செட்டியாருக்கு  ஒரு யோசனை தோன்றியது.

'லெச்சுமி குட்டி, நீ   எதுக்கு   சாவணும் . அந்த  கிழவிக்கு   இந்த  விஷத்தை  சோத்துல கலந்து வை. இந்த  மூலிகை இலை , வேர் இருக்குது பார். இதை  கொஞ்சம் கொஞ்சமா  வெட்டி  தினமும்  அதுக்கு  நல்ல  ருசியா  சாப்பாடு செய்து  அதிலே கொஞ்சம்  இந்த  இலை , வேர்  சேர்த்துடு.  ரெண்டு மாசம்  விடாம  நல்ல  சாப்பாடு  செய்து  அது சாப்பிடும்போது   கலந்து  வை.   ஆறே  மாசத்தி லே  அது காலம்  முடிஞ்சுடும்.  அதுவரை யிலும்  அதுங்கிட்டே  அன்பா  இரு. மூஞ்சியை காட்டா தே.   கிழவி என்ன தான்,  எவ்வளவு  தான்  கெட்டவளா  இருந்தாலும்,  கோவிச் சுக்கிட்டாலும்  நீ  அதுங்கிட்ட  அன்பா  சிரிச்சுகிட்டு பழகு.  அப்ப தான்  அதுக்கு  ஏதாவது  நடந்தா  கூட  உன்  மேலே   ஊரிலே  யாரும்  சந்தேகப்  படமாட்டாங்க.  புரியுதா.?

லெச்சுமி  மூலிகை  இலை வேர்  எல்லாம்  எடுத்துக் கொண்டு  வீட்டுக்கு  வந்தாள் .  கிழவியிடம்  ரொம்ப  பாசமாக  நடக்க ஆரம்பித்தாள் .  தினமும்  கொஞ்சம் கொஞ்சமாக  விஷ  இலை  வேர்  எல்லாம்  துண்டு துண்டாக  கிழவியின்  ஆகாரத்தில்  சேர்த்தாள் .  

மாதங்கள்  ஓடியது.  என்ன ஆச்சரியம். கிழவி  இப்போ தெல்லாம்  லெச்சுமியை எதுவும் சொல்ற தில்லே. கஷ்டப்படுத்தலே.  சந்தோசமா  பெருமை யா ஊரிலே    எல்லோர் கிட்டயும்   நான் எவ்வளவு  அதிர்ஷ்டக்காரி  இத்தகைய  அருமையான  மருமகள்  கிடைச்சதுக்கு என்பாள்.  தினமும்   நல்ல  ருசியான  சாப்பாடு.  அன்போடும்  பாசத் தோடும்  கவனிப்பு.  கிழவிக்கு  லெச்சுமியை  ரொம்ப ரொம்ப  பிடிச்சுட்டுது.   

அதேபோல் லெச்சுமிக்கும்  இப்பல்லாம் கிழவி மேலே பாசம், மரியாதை,  ஆசை.   ஆறுமாசம்  ஆகப்போவுது.  இன்னும் கொஞ்ச நாளிலே தினப்படி   உணவில் கலந்து கொடுத்த  விஷ இலையும்  வேரும்  வேலை செய்யப்போவுது.  அய்யய்யோ  ழவி மண்டையைப் போட்டுடுவா ளே.  என்ன செய்யறது?    உள்ளே  என்னமோ  கலக்கிச்சு  லெச்சுமிக்கு.  ரொம்ப பிடிச்ச  அந்த கிழவி போய்ட்டா என்ன செயறது ?

வீட்டிலே நிம்மதி, அமைதி,  பொண்டாட்டி, அம்மாக்காரி  ரெண்டு பேத்துக்கும்  ரொம்ப  பிடிச்சுப் போனதிலே  சேதுவுக்கு சந்தோஷம்.  ரெண்டு பேரை யும்  கொஞ்சினான்  தூக்க மில்லா மல் தவித்த  லெச்சுமி செட்டியாரிடம் ஓடினாள்.  

 ''என்னம்மா லெச்சுமி    ஏன்  இப்படி  படபடப் போடு ஓடி வந்தே என்ன விஷயம் சொல்லு?  நான்  கொடுத்த  இலை  வேர் எல்லாம்  கொடுத்தியா?  இன்னும்  எத்தனை  நாள்  இருக்கு?'''
'செட்டியார்  மாமா,  அதுக்கு  தானே  ஓடி வந்தேன்.  இன்னும்  15  நாளிலே  எங்க  ஆத்தா  செத்துடுமேன்னு  கவலை  புடுங்கி தின்னுது.   ''ஒ   அப்படின்னா  உனக்கு  சந்தோஷமா  தானே  இருக்கணும் புள்ளே''

 ''இல்ல  மாமா, நீங்க  என்னா  செய்வீங்களோ தெரியாது.  எப்படியாவது  வேற மருந்து  கொடு த்து   எங்க   ஆத்தா  சாவாம  பண்ணனும்.''   

 ''ஏன் புள்ள.  நீந்தானே  அவங்க  சாவணும்னு   விரும்பினே''

''அது  அப்போ.  அவங்க இப்போ  ரொம்ப   ரொம்ப  நல்லவங்க  மாமா.  எங்கிட்ட  எம்புட்டு  பிரியமா  இருக்கா ங்க.  அவங்க  சாவக்கூடாது. வேற  ஏதா வது மாத்து  மருந்து   கொடுத்து   நீங்க  கொடுத்த விஷம்  வேல செய்யா ம  பண்ணிடுங்க''

''நான்  எங்க  உனக்கு  விஷம்  கொடுத்தேன் ?''

 ''இதென்னா  அப்படி   பேச்சு மாத்தி  சொல்றீங்க.  நீங்க விஷம் இலை  வேர் கொடுத்து   இத்தினி நாளா   விடாம  அவங்களுக்கு  கொடுத்தேனே, தினம்  நல்ல  சாப்பாடு செஞ்சி  அதிலே கலந்து  நான்  தானே நீங்க சொன்னபடி   கொடுத்தேன். ''
 செட்டியார்  சிரித்தார்.

'' இதோ பார்  லெச்சுமி,  உனக்கு  நான் கொடுத் தது  விஷ இலை , வேர்,  இல்லை.  சாதாரண  உடம்புக்கு  ஒண்ணும் கெடுதல் செய்யாத  இலை, மூலிகை  வேர்.   உன்னை  மாத்தறத்துக்கு  அந்த  மாதிரி சொல்லி  அவங்க கிட்ட  அன்போடு  பாசத் தோடு  நடக்க  சொல்லி கொடுத்தேன்.  நீ  அன்பா பாசமா  இருந்ததாலே  அவங்க  பல மடங்கு திருப் பி  உன் மேலே  பாசத்தை கொட்டறாங்க.  நீங்க  ரெண்டு  பேத்துக்கும்  இப்ப  சந்தோஷம்  தானே. போய்ட்டு  வா.  நீ  என் பொண்ணு மாதிரி.  ஆத்தா வுக்கு தப்பு  செஞ்சதா  மனசிலே நினைக்காதே.  நீ  அப்படி  செய்யலையே. ''

 இந்த  ''அன்பு  பாசம்'' கதை எப்படி இருக்கு?  முன்  கை  நீண்டா தான் முழங்கை நீளும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...