Sunday, April 29, 2018

ADHI SANKARARAR PRASADHAM



நமஸ்காரம் இன்று 29.4.18 ஞாயிறு மாலை 5.30 முதல் ஸ்ரீ புவனேஸ்வரி சாரிட்டபிள் ட்ரஸ்ட் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணார்பணம் சேவா சொஸைட்டி இணந்து பெங்களூர் ஸ்ரீமதி சுபலக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு *ஸாஸ்திரீய ஸங்கீத கோகிலம்* என்ற விருது வழங்கும் விழாவிற்க்கும் , அதற்க்கு முன்பாக ஸ்ரீ மான் *ஜே கே சிவன்* மாமாவின் *ஆதிசங்கர ப்ரசாதம்* மற்றும் *மீராமாயாவின்* இரண்டாம் படைப்பு *குஷி* புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன் , நிகழ்ச்சிகள் *மாருதி ஹால் , தெற்கு சன்னதி தெரு , மாருதி நகர் , இராஜகிழ்பாக்கம் , சென்னை 73 (அஞ்சுகம் பூங்கா அருகில்)* நடைபெறுகின்றது நிகழ்ச்சியில் *என் பஞ்சாபகேசன்* நிறுவனர் *சாய் சங்கரா மெட்ரிமோனி* ஸ்ரீமதி *ஜெயலக்ஷ்மி சேகர்* மூத்த வீனை வித்வான் , நாத பூஷணம் *ஸ்ரீமதி விஜயலக்ஷ்மி சுப்ரமணியம்* *ஸ்ரீமான் தியாகராஜன்* அஸ்ட்ரோ வேதி ஸ்டடிஸ் , *ஸ்ரீ முரளி சீனிவாசன்* செயலாளர் sbct போன்ற சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்கள், உங்கள் அனைவரையும் வருக என SBCT சார்பில் வரவேற்க்கிறேன் - வேதிக்ரவி - ஸ்ரீ புவனேஸ்வரி சாரிட்டபிள் ட்ரஸ்ட் *இதன் நேரலை யு டியூப் சமூக தளத்தில் vedicravi என்ற ஐடியில் மாலை 6.00 முதல் ஒளிபரப்பு செய்யபடுகின்றது*

Friday, April 27, 2018

UTHTHAVA GITA



உத்தவ கீதை J.K. SIVAN

''அவதூதரின் அருமையான குருமார்கள் யார்?''

ஸ்ரீ கிருஷ்ணன் உத்தவருக்கு உபதேசம் செய்கையில் மஹாராஜா யதுவுக்கு ஒரு சமயம் தத்தாத்ரேயர் தனது குருமார்களை பற்றி விவரித்ததை நினைவுக்கூறுகிறார்.

''மஹாராஜா யயாதியின் மகன் யது காட்டில் அலைந்து தெரிந்தபோது ஒரு இளம் ப்ராமண யோகியை சந்திக்கிறான்.

'' மகரிஷி நீங்கள் யாத்ரிகராக எங்கெல்லாமோ அலைபவராக காண்கிறீர்கள், ஒரு குழந்தை மாதிரி துளியும் கவலை இன்றி உங்களால் எப்படி உலகில் வாழ முடிகிறது. அளவற்ற ஞானம் உங்களுக்கு எங்கே எப்படி இந்த வைராக்கியம் எல்லாம் அடையமுடிந்தது. எல்லோரும் ஏதோ ஒரு விருப்பு, வெறுப்பு, ஆசை பாசம் இதிலெல்லாம் மூழ்கி தவிக்கும்போது தாங்கள் எப்படி நிச்சிந்தையாக உலவுகிறீர்கள். உங்களது குரு யார். அவதாரிகனீர்
''அவதூதர் தத்தாத்ரேயர் பற்றி உன் வாயால் கேட்க வேண்டும் கிருஷ்ணா ''
கிருஷ்ணன் உத்தவருக்கு சொன்ன அந்த அவதூதர் ரிஷி தத்தாத்த்ரேயரை பற்றி அறிந்து கொள்வோம்:

த்ரி மூர்த்திகளான ப்ரம்மா விஷ்ணு சிவன் சேர்ந்த ஒரு அவதாரம் தத்தாத்ரேயர். ரிஷி அத்ரிக்கும் ரிஷி பத்னி அனசூயாவுக்கும் பிள்ளையாக தோன்றியவர். ''தத்தா'' என்றால் ''தந்தவர்'' '' த்ரேயர்'' திரி ''மூர்த்திகள்'' மும்மூர்த்திகளும் தங்களை ஒரு சிசுவாக தந்து ரிஷி தம்பதிகளுக்கு தத்தாத்ரேயராக அவதரித்தவர். ஆத்ரேயருக்கு இன்னொரு அர்த்தம் ''அத்ரி வம்சத்தை சேர்ந்தவர்'' அத்ரி மகன் ஆத்ரேயன். தத்தாத்ரேயன்.

ஆதி குரு, ஆதிநாத், யோகாச்சார்யன் என்று கோடானுகோடி ஹிந்துக்கள் வழிபடும் குரு தத்தாத்ரேயர். சிறுவயதிலேயே துறவியாக வெளியே கிளம்பி மஹாராஷ்ட்ரா, குஜராத், வட கன்னட பகுதிகளில் தேசாந்திரியாக காணப்பட்டார். கந்தமாதன சிகரத்தில் தவம் செய்தார் என்கிறார்கள். கிர்னார் மலைமேல் அவர் காலடி சுவடு இருக்கிறதாம். இவர் பரசுராமரின் குரு. ஓரிடத்தில் தங்காத அவதூதர்.

அவரது ''அவதூத கீதை '' விவேகானந்தர் விரும்பி படித்து பேசிய ஒரு தத்துவ பொக்கிஷம். பாகவத புராணத்தில் தத்தாத்ரேயரின் 24 குருமார்களை பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது.

தத்தாத்ரேயர் படம் பார்த்திருக்கிறீர்களா? மூன்று தலை மும்மூர்த்திகள். ஜாக்கிரதை, ஸ்வப்னா, ஸுஷுப்தி நிலைகள். கையில் பிடித்திருக்கும் நான்கு நாய்கள் நாலு வேதங்கள். நினைத்ததை அளிக்கும் கருணை வாய்ந்ததால் காமதேனு மாதிரி ஒரு பசு. அதன் கன்றுக்குட்டி. பசு தான் பூமாதேவி. கையில் உள்ள திரிசூலம் முக்குணத்தையும் வென்றதன் குறி.

மும்மூர்த்திகளும் கற்புக்கரசி அனசூயையின் பெருமையை நிலைநாட்ட ஒரு நாடகமாடினர். அதிதிகளாக அனசூயை ஆஸ்ரமம் வந்து பசிக்கிறது என்றார்கள். அத்ரி வெளியே எங்கோ போய்விட்டார்.
'' இருங்கள் இதோ இதோ உணவு தயார் பண்ணுகிறேன்'' என்று அனசூயை உணவு தயாரித்தாள் . உணவு ரெடியாகிவிட்டது. இலையின் முன்னே அமர்ந்த மும்மூர்த்திகள்

''அனசுயா, சொல்ல மறந்துவிட்டோம், நாங்கள் பரிசுத்தமாக உணவருந்துபவர்கள். எனவே நீ எந்த வித ஆடையுமின்றி எங்களுக்கு உணவு பரிமாறு '' என்றபோது அனசூயை திடுக்கிட்டாள். அவளுக்கு உடனே தெரிந்து விட்டது. வந்தவர்கள் வெறும் சாதாரண அதிதிகள் இல்லையோ? தன்னை சோதிக்க வந்தவர்களோ?. அதிதிகள் வார்த்தையை தட்டுவதோ, அவர்களை அவமதிப்பதோ, பாபம் ஆச்சே.

''ஆஹா அப்படியே செய்கிறேன் அதிதி ஸ்வாமிகளே''

ஆடையின்றி வருமுன் அனசூயா தனது கையிலிருந்த பூஜா பாத்திரத்தின் தீர்த்தத்தை அவர்கள் மேல் தெளித்து '' நீங்கள் சிறிய குழந்தைகளாக கடவது'' என்று வேண்டுகிறாள்.

குழந்தைகளாக மாறிவிட்ட அந்த மும்மூர்த்திகளும் அனுசூயா ஆடையின்றி பரிமாற சௌகர்யமாக உட்கார்ந்து நன்றாக சாப்பிட்டன!

வெளியே இருந்து திரும்பிய அத்ரி தனது மனைவி அனுசூயா சாப்பிட்ட அந்த மூன்று சிறு குழந்தைகளோடு விளையாடுவதை கண்டு அதிசயித்தார். தனது ஞான திரிஷ்டியால் நடந்ததை அறிந்தார். திரிமூர்த்திகளை வணங்க அவர்களும் தம் சுய உருக்கொண்டு அவரை ஆசிர்வதித்து அனசூயையின் பக்தி, கற்பை சிலாகித்து போற்றி அருள் பாலித்தார்கள். அவர்கள் வேண்டுதலின் படியே மூவரும் ரிஷி தம்பதிகளின் குழந்தை களானார்கள். மூவரும் ஒரே உடலுடன் மூன்று சிரங்களுடன் தத்தாத்ரேயராக பிறந்தனர்.

வடக்கே ஸ்ரீ ஷீர்டி ஸாயீ பாபா தத்தாத்ரேயரின் அம்சம் என்கிறார்கள்.

இந்த தத்த்ராத்ரேயருக்கு தான் 24 விசேஷ குருமார்கள். ரொம்ப ஆச்சர்யமான குருமார்கள். அவர்களை இனி தெரிந்து கொள்வோமா?

++
இதற்கிடையில் பழைய நினவு ஒன்று. சிறு குட்டிக்கதையாக அதை சொல்கிறேன்.

மஹா பாரதத்தில் வரும் ஒரு பெரிய யது குல ராஜரிஷி யயாதி. கிருஷ்ணனின் குலம். யயாதிக்கு அசுர குரு சுக்ராச்சார்யார் மகள் தேவயானி மனைவி. வயதாகியும் உலக ஆசைகள் யயாதியை விடவில்லை. மீண்டும் இளமையை தேடினான். யார் கொடுப்பார்கள்? . கிழவன் யயாதி தனது மகன் யதுவை ஒருநாள் கேட்கிறான்

''அன்பு மகன் யது, நாம் இருவரும் வயதை மாற்றிக்கொள்ளலாமா?''
'' ஸாரி அப்பா, நான் இந்த ஆட்டத்துக்கு வரவில்லை''
கோபித்த யயாதி மகன் யதுவை நாடு கடத்துகிறான். யது மனது உடைந்து காட்டுக்கு போகிறான். அவன் மனது இதமாக யாராவது அவனுக்கு ஆறுதல், உபதேசங்கள் சொல்ல மாட்டார்களா?? தேடுகிறான்? அப்போது தான் அங்கே ஒரு அவதூதரை (முற்றும் துறந்த நிர்வாண ரிஷி ) காண்கிறான்.

தாடி, மீசை, உடல் முழுதும் வெண்ணிற சாம்பல் பூச்சு. ஞான ஒளி வீச எதிரே வருகிறார் முனிவர். அப்படியே ஓடி அவர் காலில் விழுகிறான் யது .

''மகரிஷி நீங்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாமா?
''ஒரு அவதூதன்''
''அப்படியென்றால் என்ன அர்த்தம்?
'' உலக பற்றை அறவே விட்டொழித்தவன், ஆத்ம ஞானப் ப்ரம்மானந்தத்தை பிடித்துக் கொண்டு அதில் திளைப்பவன்''
''மகரிஷி எனக்கும் அஞ்ஞானத்திலிருந்து விடுபட்டு அழியாத ஞானம் பெற உபதேசம் செய்வீர்களா '' என்கிறான் யது .

அவதூதரான தத்தாத்ரேயர் யதுவை கூர்ந்து கவனிக்கிறார். அவன் ஆர்வம் உண்மையானது என அறிகிறார்.

''அப்பனே, நானும் உன் மாதிரி சாதகன் தான். வாழ்க்கையே உலகில் பெரிய பள்ளிக்கூடம். அதில் எண்ணற்ற சாதகர்களுக்கு குருமார்களும் இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இருபத்திநாலு சந்தர்ப்பங்களில் எனக்கு உபதேசம் செய்தவர்களை என்னை உய்விக்க வந்த இருபத்து நாலு குருக்களாக ஏற்றுக் கொண்டவன்''

சாக்ஷாத் ஸ்ரீ தத்தாத்ரேயருக்கு ஒரு குரு அவசியமா என்ன? அவரே ஜகத் குரு. அவதூதராக அவர் சென்று கொண்டிருந்தவர்.

யதுவுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. மண்டை வெடித்து விடும்போல ஆகிவிட்டது.

''சுவாமி என்னால் நம்ப முடியவில்லையே. உங்களுக்கு யார் குரு தேவர்? ''
''குரு என்று நீ யாரையெல்லாம் நினைக்கிறாயோ அவர்கள் எல்லோருமே குரு தான்''
''உங்கள் பெற்றோரிடமிருந்து ஞானம் பெற்றீர்களோ?''
''பெற்றோர் மட்டுமல்ல, மற்றோர் யாராக இருந்தாலும் அவர்களுடமிருந்தும் அறியவேண்டியவை இருந்தால் அவர்களும் குரு தான்''
''உங்களது ஆசானைத் தெரிந்துகொள்ள வெகு ஆர்வமாக இருக்கிறது. யார் அவர் என்று சொல்லுங்களேன்''
''நான் தான் சொன்னேனே அப்பனே. எனக்கு 24 குருமார்கள் உண்டு''
''சுவாமி என்ன சொல்கிறீர்கள் உங்களுக்கு 24 குருவா? எப்படி அத்தனை பேரிடம் பயின்றீர்கள். என்ன தெரிந்துகொண்டீர்கள்?''
''நீ சரியான சாதகன். ஞான மார்க்கத்தை அடைய விழைபவன் என்று புரிகிறது. எனவே சொல்கிறேன் கேள்'' என்று ஆரம்பிக்கிறார் தத்தாத்ரேயர்.:


++

SUBASHITHAM



நீதி சதகம். J.K. SIVAN சுபாஷிதம். ஆள்பவனுக்கு அறிவுரை பர்த்ருஹரி ஒரு திருவோடு ஏந்தி சுற்றும் பரதேசி, சந்நியாசி மட்டும் அல்ல. ஒரு பெரிய சாம்ராஜ்ய மஹாராஜாவாக இருந்தவன். ஞானவான் . அவன் முற்றும் துறந்த துறவியாகியது அவனது வைராக்கியத்தை காட்டுகிறது. அவன் தான் வைராக்கியத்தை பற்றி பேச தகுதி கொண்டவன். राजन् दुधुक्षसि यदि क्षितिधेनुमेनां तेनाद्यवत्समिव लोकममुं पुषाण । तस्मिंश्च सम्यगनिशं परिपुष्यमाणे नाना फलं फलति कल्पलतेव भूमिः ॥ Raajan dudhukshasi yadi kshitidhenumenaam, Tenaadya vatsamiva lokamamum pushaana Tasmishcha samyaganisham paripushyamaane Naanaaphalam phalati kalpalateva bhoomih 1.44 அடே மஹாராஜா, நீ ஒன்றை முக்கியமாக புரிந்து கொள் . இந்த பூமி, அது தான், நீ ஆளும் ராஜ்ஜியம், இருக்கிறதே, அது ஒரு பசு மாதிரி. அந்த பசுவிடம் நன்றாக நிறைய பால் கறக்கவேண்டும் என்றால் முதலில் அதை பேப்பர், போஸ்டர் திங்க விடக்கூடாது. நிறைய புல், கீரை, தீவனங்கள் போடவேண்டும்.அதன் கன்றுக்குட்டியை வைக்கோல் அடைத்து நாலு குச்சியில் நடக்கக்கூடாது. கொழு கொழு வென்று கிருஷ்ணன் கால பிருந்தாவன கன்றுக்குட்டி போல் வளர்க்க வேண்டும். அதுவும் ஒரு குழந்தை தானே. அதன் அழகை விளையாட்டை பார்த்து தாய்ப்பசு நிறைய பால் தரும். நீயும் அதுபோலவே உன் நாடு பிரஜைகளை க்ஷேமமாக அவர்கள் தேவைகளை அறிந்து பூர்த்தி செயது அவர்கள் சந்தோஷமாக வாழ வழி வகுக்க வேண்டும். தாய்ப்பசு போல் ;உன் ராஜ்யம் செழித்து ஓங்கும். அனைத்து பிரஜைகளும் இப்போது போல் பல அல்ப கட்சிகள் போல் பிரியாமல் எல்லோரும் ஒற்றுமையாக உன்னை போற்றி பணிந்து ஒத்துழைப்பார்கள். நாடு வளரும். சுபிக்ஷம் எங்கும் நிறையும். आज्ञा कीर्तिः पालनं ब्राह्मणानां दानं भोगो मित्रसंरक्षणम् च । येषामेते षड्गुणाः न प्रवृत्ता: कोऽर्थस्तेषां पार्थिवोपाश्रयेण ॥ Aajnaa keertih paalanam brahmanaanaam Daanam bhogo mitrasamrakshanam cha Yeshaamete shadgunaah na pravruttaah Ko’rthasteshaam paarthivopaashrayena 1.47 ஒரு ராஜாவுக்கு, பக்க பலமாக, உறுதுணையாக இருப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? பதவியில் அதிகாரம், புகழ், ஏழைகள், பிராமணர்களை ரக்ஷிப்பது, தான தர்மம் செல்வத்தை சரியானபடி செலவழித்து நல்லது செய்வது, ஜனங்களை, நண்பர்களை காப்பது இதெல்லாம் செய்யவேண்டும். அப்படி இல்லை என்றால், தனக்கு, தனது குடும்பத்துக்கு, நெருங்கியவர்களை மட்டும் உதவுபவனுக்கு பொது சேவை செய்ய என்ன அருகதை இருக்கிறது. அவனை பொது சேவையில் வைப்பது தான் பெருந் தவறு. இதை நானா எழுதுகிறேன். ராஜா பர்த்ருஹரி புட்டு புட்டு பல நூறு வருஷங்களுக்கு முன்னாலேயே தமிழ் நாட்டுக்கு வருவதற்கு முன்பே எழுதியிருக்கிறார் பாருங்கள். रे रे चातक! सावधानमनसा मित्र क्षणं श्रूयतां अंभोदा बहवो हि सन्ति गगने सर्वेऽपि नैतादृशाः । केचिद्वृष्टिभिरार्द्रयन्ति वसुधां गर्जन्ति केचित् वृथा यं यं पश्यसि तस्य तस्य पुरतो मा ब्रूहि दीनं वच: ॥ Re re chataka saavadhaanamanasaa mitra kshanam shrooyataam Ambhodaa bahavo hi santi gagane sarve’pi naitaadrushaah Kechit vrishtibhiraardrayanti vasudhaam garjanti kechit vruthaa Yam yam pashyasi tasya tasya purato maa broohi deenam vachah 1.50 ஓ, சாதக பக்ஷியே, நான் சொல்வதை கேட்டுவிட்டு பற. மேலே மேகங்கள் இடையே பறக்கிறாயே. நீ பார்ப்பவை எல்லாமே ஒரே மாதிரி மேகங்கள் இல்லை. சிலது தான் அவற்றில் மழையை சூல் கொண்டவை. அவற்றால் தான் பூமி நனையும். மற்றது வெத்து வேட்டு . டமால் டுமீல் என்று இடி இடித்து விட்டு காணாமல் போகும். ஒரு சொட்டு மழைத் தண்ணீர் கூட வெளியே வராது. ஒவ்வொரு மேகத்திடமும் ''ஒரு சொட்டு மழை நீர் தா '' என்று கெஞ்சாதே. நல்ல ராஜா தான் குடிமக்களை காப்பான். மழை மேகம் போல். மற்றது எல்லாம் எலெக்ஷன் ப்ராமிஸ். अकरुणत्वमकारणविग्रहः परधने परयोषिति च स्पृहा । स्वजबन्धुजनेष्वसहिष्णुता प्रकृतिसिद्धमिदं हि दुरात्मनाम् ॥ Akarunatwamakaaranavigrahah paradhane parayoshiti cha sprihaa Swajana bandhujaneshwasahishnutaa Prakritisiddhamidam hi duraatmanaam 1.51 எல்லாறையும் நன்றாக அலசு. கவனி. பாதிக்கு மேல் கொடூரம், சண்டைக்கோழிகள், எதற்கெடுத்தாலும் ஒரு விதண்டா வாதம், பிறர் சொத்துக்கு செல்வத்துக்கு, ஆசை, பேராசை, பிறர் நன்றாக இருந்தால் பொறாமை, தூக்கமின்மை. இப்படிப்பட்ட கெடு மதிகொண்டவர்கள் குணம் இப்படித்தான் இருக்கும். அவர்கள் நடவடிக்கை பேச்சு நடத்தை இதிலிருந்தே அவர்களை நீ புரிந்து கொள்ளலாம். दुर्जनः परिहर्तव्यो विद्ययाऽलंकृतोऽपि सन् । मणिना भूषितः सर्पः किमसौ न भयंकरः ॥ Durjanah parihartavyo vidyayaa’lamkrito’pi san Maninaa bhooshitah sarpah kimasau na bhayamkarah? 1.52 ரொம்ப படித்து, பட்டங்கள் வாங்கியவன், தலை கர்வம் பிடித்தவனாக இருந்து என்ன பயன். தீயவனின் படிப்பு அங்கே பயனற்றதாக போகிறது. கொடிய விஷ நாகத்தில் முடியில் நாக மாணிக்கம் இருந்து யாருக்கு பயன். கிட்டே போகமுடியுமா? அது போல தான். தீயவர் நட்பு நெருக்கம் கூடவே கூடாது. ராஜா பர்த்ருஹரீ ரொம்ப விவேகமான துறவி ராஜா. நிறைய கேட்போம்.

DESIKAN 1



  ஸ்வாமி தேசிகர் வயது 750...  ஜே.கே. சிவன் 


இந்து சனாதன தர்மத்தின் இரு கண்களாக  சைவமும் வைணவமும் பல ஆயிர வருஷங்களாக இருந்து வருகிறதல்லவா. இந்த இரு பெரும் பிரிவுகளிலும் சில மஹா புருஷர்கள் தோன்றி அவ்வப்போது சமய பிரச்சாரம், அதன் மஹத்வம் எல்லாம் நினைவு படுத்தி வந்திருக்கிறார்கள், அது தொடர்கிறது. தொடரும். ஒன்று மற்றொன்றை  இழிவு படுத்தினால் தான் அங்கு சமய தற்கொலை நடக்கும். ஒன்று மற்றொன்றை மதித்து கௌரவித்தால் இரண்டுமே பலத்துடன் பெருகும்.எந்த கண் ஒஸ்தி?

சமீபத்தில் ஆதி சங்கரர் முதலில் விஜய யாத்திரை துவங்கியதை நாடு நினைவு கூர்ந்து மகிழ்ந்தது. அதற்கு முன்  ஸ்ரீ ராமானுஜர்  ஆயிரமாவது பிறந்த நாள் உலகெங்கும் கொண்டாடப்பட்டது. 

இன்னொரு மஹான் ஸ்ரீ வேதாந்த தேசிகன். சுவாமி தேசிகன் என்று போற்றப்படுபவர். தூப்புல் நிகமாந்த தேசிகன் -  1268ம் ஆண்டு அவதரித்தவர். 101 வருடங்கள் இருந்தவர் 1369ல் வைகுண்டம் ஏகிய அபூர்வ மனிதர். மனிதரா அவர்?  தெய்வம் மனித உருவில். கவிஞர், தத்துவ மேதை, வேதாந்தி, ஆசார்யன். தேசிகன் என்றாலே   திசை காட்டுபவர் என்று தான் பொருள். நல்வாழ்வு வாழ ஒரு வழிகாட்டி. 

கிடாம்பி அப்புள்ளார்  என்கிற  ஆத்ரேய ராமானுஜாச்சாரியார்  ஸ்ரீ ராமானுஜரின் வைணவ குருபரம்பரையில் வந்தவர். அவரிடம் சிஷ்யராக இருந்தவர் தேசிகன். திருப்பதி வெங்கடேசனின் அவதாரமாக வடகலை  ஸ்ரீ வைணவர்கள் போற்றி வழிபடுகிறார்கள்.

ஒரு ஆச்சர்யனை மற்றொரு ஆசார்யன் அவரது சிஷ்யனாக மரியாதையோடு  போற்றிபடுவது தனியன் என்ற வகை பாடல். 
  
"ராமானுஜ தயா பாத்ரம்  ஞான வைராக்ய பூஷணம் 
ஸ்ரீமத் வேங்கடநாதார்யாம் வந்தே வேதாந்த தேசிகம்: ''||

ஸ்ரீமன்  வேங்கடநாதார்ய கவிதார்க்கிக கேசரி 
வேதாந்தாசார்ய வரியோமே சந்நிததாம் ஸதாஹ்ருதி:

வேதாந்த தேசிகன் எனும் வேங்கடநாத ஆச்சர்யனை, கவிஞர்களுக்கு  தர்க்கவாதிகளுக்கு சிம்மமாக இருப்பவரை,   ஸ்ரீ ஆத்ரேய ராமானுஜரின்   தயை, கருணைக்கு பாத்திரமாக  உள்ள 
அதே நாமம் கொண்டவரை தண்டனிட்டு வணங்குகிறோம்.''

இது ஒரு தனியன். தேசிகன் மீது. இதை இயற்றியவர் ஸ்ரீ ப்ரம்ம தந்த்ர ஸ்வதந்த்ர பரகால மட ஜீயர் அதுவும் ஒரு ஆவணி மாதம் ஹஸ்த நக்ஷத்ரம் போது  (காஞ்சி வரதராஜ பெருமாளின் நக்ஷத்ரம் அல்லவா).  இதைச்சொல்லாமல் ஆழ்வார்களின்  திவ்ய பிரபந்தம் சொல்லும் வழக்கம் முக்கியமாக  வடக்கலையாரிடம் இல்லை. 

இன்றைக்கு 750 வருஷங்கள் ஆகிவிட்டது ஸ்ரீ தேசிகன்  காஞ்சிக்கு அருகே தூப்புல் கிராமத்தில் ஸ்ரீ அனந்த சூரி  தோதாம்பா  தம்பதியருக்கு புத்திரனாக பிறந்து.
தேசிகன் தமிழிலும் சமஸ்க்ரிதத்திலும் பாண்டித்யம் கொண்டவர், பிராகிருதம், மணிப்ரவாளத்திலும் எழுதியிருக்கிறார். அவை ஆழ்வார்கள் பாசுரங்களுக்கு ஈடானவை.
தேசிக பிரபந்தம் என்று புகழ் பெற்றவை. சமஸ்க்ரிதத்தில்  2000 ஸ்லோகங்கள் எழுதியவர்.
ஸ்ரீ ரங்கம் , திருப்பதி, கஞ்சி க்ஷேத்ர பெருமாள்களின் மீது பக்தியைப் பிழிந்து ரசமாக தரப்பட்டவை.

நாம் தமிழில் வெண்பா, ஆசிரியப்பா, கலித்தொகை,அந்தாதி  போன்ற பல  வித அசைகளை ஓசைகளை கொண்ட இசைப் பாக்களைப் போல, வடமொழியில், ஸ்தோத்ரம், கத்யம், தண்டகம்  போன்ற பிரிவுகள் உள்ளன. அனைத்திலும் தேசிகர் இயற்றியிருக்கிறார். 

ஒருமுறை  ஸ்ரீரங்கத்தில் தேசிகர் வசித்தபோது ஒரு போட்டிக் கவிஞன் அவர் மஹிமையை உணராதவன் ஒரு நல்ல காரியம் செய்தான்.  அவர் இருந்த இடத்திற்கு  இரவு வெகுநேரம் கழித்து  வந்தவன் கதவைத் தட்டினான்.

''யார்...  வாருங்கள் சுவாமி. அடியேன் என்ன செய்யட்டும் ''  - தேசிகர் கையில் விளக்கொளியில் கேட்டார்..
''ஓஹோ நீர் தான் அந்த வேதாந்த தேசிகனோ?''
''தாசன் அடியேன்''
''நீர் கவித்துவம் கொண்டவர் என்று புகழ்கிறார்களே .  சரி நான் சொல்வதன் மேல் ஒரு ஸ்லோகம் உம்மால் இயற்ற முடியுமா?''
''தாசன் அடியேன் தங்கள் சித்தம்''
'' ஹ்ம்ம்.   ஒரு ஜோடி செருப்பின் மேல் ஒரு ஸ்லோகம் எழுதும்.நாளை காலை வருகிறேன்''

அந்த ஆசாமி மறுநாள் காலை சூரியோதயம் ஆனவுடன் வந்துவிட்டான். தேசிகரை திணற அடித்து விட்டோம் என்று பெருமிதம்.  அந்த ஆசாமி யாரோ.  ஆனால் அவரை தான் நாம் எல்லோரும் முதலில் சாஷ்டாங்கமாக வணங்கவேண்டும்.  அவரால் தான் நமக்கு 
ஸ்ரீ தேசிகனின் ''பாதுகா ஸஹஸ்ரம் ''  -  ஆயிரம் ஸ்லோகங்கள் ஸ்ரீ ரங்கநாதனின் பாதுகைமேல் வெள்ளமாக  பாடிய ஸ்தோத்திரங்கள் பரிசாக கிடைத்துள்ளது. ஒரே இரவில் இடைவெளி இல்லாமல் எழுதப்பட்ட காவியம் அது.

இன்னும் நிறைய பேசுவோம்.

Thursday, April 26, 2018

rituals. 2




நமது சாஸ்திரம்: J.K. SIVAN

2. போனவனுக்கு போகப்போகிறவன் செய்வது....​​

எனக்கு ஒரு நண்பர் மார்க்கண்டேயன்.என்றும் பதினாறு இல்லை. ;அதற்கு மேல் ஐம்பது வருஷங்கள் இருந்து நிறைய பேரை படுத்தி விட்டு ஒரு நாள் பக்கோடா நிறைய சாப்பிட்டு விட்டு படுத்தவர் அப்புறம் எழுந்திருக்க மறந்து விட்டார்.

அவருக்கு அடுத்த பதிமூன்று நாட்களில் செய்ய வேண்டிய கர்மா அல்லது நியமங்களை சாத்திரத்தில் சொல்லியபடி செய்தார்கள்.

கவனித்து பார்த்தால் அவற்றில் சில சடங்குகள் வெறும் சாஸ்திரம் மட்டும் இல்லை. விஞ்ஞான ரீதியாகவும் அமைந்திருக்கிறது. மற்றதெல்லாம் வெறும் நீதி போதனையாக இருக்கிறது. நாம் எல்லோரும் எப்போதும் ஒழுக்கத்தோடு நேர்மையாக .-- இது முடியுமா? சாஸ்திரம் சொல்கிறது அப்படித்தான் நாம் வாழவேண்டும். ஆமாம். நிச்சயமாக. பக்தி கடவுள் நம்பிக்கை பெரியோரிடம் மதிப்பு, பயபக்தி எல்லாமும் இருக்கவேண்டுமே. நித்ய கர்மாநுஷ்டானங்களை விடவே கூடாது. நிறைய விஷயங்கள் நமது வாழ்க்கையில் ஏதோ ஒரு நம்பிக்கையின் பேரில் தான் நடக்கிறது. பரம்பரை பரம்பரையாக, காலா காலமாக இது தான் நடைமுறை. இதை மாற்றவேண்டிய அவசியமும் இல்லை. கூடவும் கூடாது. இதில் என்ன கஷ்டம், நஷ்டம்?

சில பழக்கவழக்கங்கள் அந்த காலத்தில் சௌகரியமாக, எல்லோராலும் அனுஷ்டிக்கும்படியாகி இருந்தது. கொஞ்சம் காலத்திற்கு ஏற்றபடி ''யதா சௌகர்யமாக '' சிறிது மாற்றிக் கொள்ளலாம் தவிர நம்பிக்கை அதே.

அந்தணர்கள் நிறைய பேர் இதில் ஈடுபட்ட காலம் அது. இப்போது அந்தணர்கள் வேறு உத்யோகங்களில் ஈடுபட்டு அவர்களுக்கு பதிலாக யாரோ பேசிய ஒலி அவர்கள் அசரீரியாக பல இல்லங்களில் மந்திரங்களாகி, அதை பின் பற்றி நிறைய சடங்குகள் நிறைவேறுகிறது.

அப்போது இந்த மாதிரி ப்ரோஹிதர்கள், வைதீகர்கள் தமது சேவைக்கு கொடுத்த தக்ஷணை களையும், தானங்களையும் இப்போதும் செய்ய வழியில்லை என்பது வாஸ்தவம். பசுவை தானமாக கொடுக்க முடியவில்லை.... இதை வியாபாரமாக்கி அவர்கள் இப்போது பல மடங்கு பணமாக கேட்கிறார்கள் என்றும் குறை . அவர்கள் பிழைக்க வழி என்ன? என்பது ஒருபுறம் இருக்க அவர்கள் உச்சரிக்கும் மந்திரம் பொருத்தமானதா, சரியானதா? முழுதுமா ? தவறில்லாமலா? என்ற கேள்விகளுக்கு பதில் தெரியாது ஏன் என்றால் அந்த மந்திரங்களோ அவற்றின் அர்த்தமோ தெரிந்து கொள்ள எவருக்கும் விருப்பமில்லை.

கருடபுராணம் ஆச்சரியமாக சில விஷயங்களை சொல்கிறது. இறந்தவன் செல்கிற பாதை எப்படிப் பட்டது. அவனுக்கு செய்யவேண்டிய சடங்குகள் என்ன ? இதெல்லாம் முதலில் கருடாழ்வாருக்கு ஸ்ரீமன் நாராயணனே போதிக்கிறார். அது தான் கருட புராணம்.

இது எப்படி நமக்கு தெரியும் என்றால் நாராயணன் எழுதிவைக்கவில்லை. கர்ண பரம்பரையாக, அதாவது ஒருவர் சொல்லி மற்றவர் கேட்டு, அவர் சொல்லி அதற்கு பின் பலர் கேட்டு மந்திரங்கள் கொஞ்சமும் மாறுபடாமல் வழி வழியாக வந்து யாரோ ஓலைச்சுவடியில் வடமொழியில் அல்லது கிரந்தம், தமிழ் எதிலோ எழுதி, அதை சிலர் பாதுகாத்து, காகிதத்தில் எழுதி, அதை வெள்ளைக்காரன் அச்சு யந்திரம் கண்டுபிடித்து அது நமது நாட்டிலும் வந்தபின் தான் காகிதத்தில் கருப்பு வெள்ளையாகியது. முதலில் ஆற்றங்கரையில், மரத்தடியில் சொன்ன நேரம் காலம் சூழ்நிலை வேறு, அதை பல நூற்றாண்டுகள் கழித்து ஒலி நாடாவில் குளுகுளு அறையில் சோபாவில் அமர்ந்தவாறு கேட்கும் இக்காலம் வேறு. மாறுதலுக்கு காலம் ஒன்றே பொறுப்பு. ஆனாலும் சில சடங்குகள் மாறவே மாறாது. மாற்றினால் அவற்றை செய்வதில் அர்த்தம் இல்லை. பண விரையம், விளையும் பாபம் ஒன்று தான் மிச்சம்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு ப்ரோஹிதர், வாத்யார் இருப்பார். அவர் தான் அந்த வீட்டில் நடக்கும் சுப அசுப காரியங்கள் எல்லாவற்றையும் நடத்திக் கொடுப்பவர். அவர் மீது வீட்டுக்கார்களுக்கும் வீட்டுக்காரர்கள் மீது அவருக்கு பரஸ்பர நம்பிக்கை இருக்கும். அவரை கூப்பிட்டு மார்க்கண்டேயன் குடும்பத்தினர் என்ன செய்யவேண்டும் நாங்கள் என்று கேட்டால் அவர் சொல்வது:

''வழக்கமாக இந்த பன்னிரண்டு பதிமூன்று நாளும் செய்யவேண்டிய சம்ப்ரதாயம் சொல்றேன்.அதுக்கப்புறமும் ஒருவருஷம் பூரா இருக்கு. அப்புறம் வருஷத்துக்கு ஒரு தடவை ஸ்ரார்த்தம் வரை சொல்றேன்''.

மார்க்கண்டேயன் வீட்டில் அவன் மறைந்த பின் ஏற்றப்பட்ட விளக்கு அடுத்த பன்னிரண்டு நாள் வரை தெற்கு பக்கத்தில் எரிந்து கொண்டே இருந்தது. அணையாமல் எண்ணை விட்டு கதவை காற்று படாமல் மூடி வைத்தார்கள். அந்த பன்னிரண்டு நாட்களிலும் பூஜை அறையில் விளக்கு எரியாது. பூஜை கிடையாது. சில வீடுகளில் இப்போதும் அந்த பன்னிரெண்டு நாட்கள் சமையல் அறையிலும் பூனைக்குட்டி படுத்திருக்கும். சமையல் கிடையாது. அடுப்பு எரியாது. ஏன்? மார்க்கண்டேயன் இறப்பினால் விளைந்த துக்கம், துயரம். மகிழ்ச்சி இதர உணர்வுகளை மட்டு படுத்த.இறந்தவர் நினைவில் இருக்க. மார்க்கண்டேயன் இப்போது யமனின் ஆதிக்கத்தில்.

எதற்காக பூஜை செய்வதில்லை, என்றால் பூஜை செயது விளக்கேற்றி நாமாவளி சொல்லி மனம் லயித்தால் அங்கு தெய்வம் நிச்சயம் சாந்நித்தியம் ஆகும். நம் கண்ணுக்கு தெரியாததை மனம் அனுபவிக்கும். இதயம் அடையாளம் கண்டுகொள்ளும். அசுப காரியம் நடந்துகொண்டிருக்கும் இடத்தில் சில ஜீவன்கள் மறைந்த ஜீவனுடன் சம்பந்தப்பட்டவை உலவும். அவை இருக்குமிடத்தில் தெய்வத்தை அழைக்க கூடாது. அந்த ஜீவன்களை முதலில் அவை போகவேண்டிய இடத்துக்கு வெளியேற்ற வேண்டும். அனுப்பவேண்டும். மார்க்கண்டேயன் ஜீவன் அங்கேயே ஏக்கத்தோடு, ஏமாற்றத்தோடு சுற்றிக் கொண்டிருக்கிறதே. அதனால் தாம் அவரோடு இத்தனை நாள் இருந்த குடும்பம் அவரை விட்டு வேறு மகிழ்ச்சி காரியங்களில் ஈடுபடுவதில்லை. அசுப இடங்களில் தெய்வம் கிடையாது.

மார்க்கண்டேயன் செய்த பாவங்களுக்கு பரிகாரங்கள் செய்து அவனை யமனுலகுக்கு அனுப்பி வைக்க தான் சடங்குகள்.

ஸ்ரீவாஞ்சியத்தில் வாஞ்சிநாதர் ஆலயத்தில் உள்ளே நுழைந்ததும் யமதர்மன் சந்நிதி பார்த்தது நினைவுக்கு வருகிறது.

மேற்கொண்டு பேசுவோம்.

book release 29.4.18


Dear Friends

you are cordially invited for the joint function in association with SRI BHUVANESWARI CHARITABLE TRUST has following events as part of the agenda 

date & time                           29.4.2018  SUNDAY, FROM 5.30 PM.
venue                                    MARUTHI HALL,  SOUTH SANNIDHI STREET, MARUTHI NAGAR, RAJAKILPAKKAM, CHENNAI 73

PROGRAM:

1.  RELEASE OF  ''ADHI SANKARA PRASADHAM''  - A  few collection of selected slokas of HH Adhi Sankara, narrated in simple Tamil by  Bagavath Seva Rathna  &  Vainava Seva Rathna   Sri J.K.Sivan, President SREE KRISHNARPANAM SEVA TRUST, 
This is  35th book by Sri J.K.Sivan.

Book release by  SRI N. PANCHAPAKESAN , FOUNDER , SAI SANKARA MATRIMONY.

2. RELEASE OF   ''KHUSHI''  BY ''Meera Maya''  (Smt Shobana Narayanan)
Book release by Smt Jayalakshmi Sekar, renowned  Veena Artiste, 

3. RELEASE OF  CARNATIC AUDIO CD  NAADA ROOPINI  (Devi Kritis) sung by Bangalore Smt. Subhalakshmi Krishnamoorthy & party.
CD release by Dr smt Vijayalakshmi Subramaniam

4. Honouring with a Title and presentation of Citation of the Title  ''SASTHREEYA SANGEETHA KOKILAM''  to  Smt Subhalakshmi Krishnamorthy  by  Sri J.K.Sivan & Sri Vedhic Ravi, representing SKST & SBCT respectively

5. Carnatic Vocal concert by Smt. Subhalakshmi Krishnamoorthy & Party,

ALL ARE WELCOME

Wednesday, April 25, 2018

GITANJALI. 7



ரபீந்திரநாத் தாகூர் -- J.K. SIVAN

கீதாஞ்சலி 7

My desires are many and my cry is pitiful,
but ever didst thou save me by hard refusals;
and this strong mercy has been wrought into my life through and through.

Day by day thou art making me worthy of the simple,
great gifts that thou gavest to me unasked---
this sky and the light, this body and the life and the mind---
saving me from perils of overmuch desire.

There are times when I languidly linger and times
when I awaken and hurry in search of my goal;
but cruelly thou hidest thyself from before me.

Day by day thou art making me worthy of
thy full acceptance by refusing me ever and anon,
saving me from perils of weak, uncertain desire.
_______________________________

ஆசை என்பதே அலைபோல தான். நாம் எல்லோரும் ஓடம்போல அதன் மேல் ஆடி அலைக்கழிக்கப்
படுபவர்கள். வாஸ்தவம். ஆசை நேரவேண்டும் என்ற தாகம், வேகம், அது நிறைவேற தாமதமானாலும் நடக்காவிட்டாலும் சோகம்......எவ்வளவோ அழுதுவிட்டேன் கிருஷ்ணா, கண்ணீர் வற்றிப் போய்விட்டது.

என் ஆசை நிறைவேறவில்லை என்று ஏங்கி நொந்தேனே. அது நிறைவேறாமல் நீ காத்து அருளியிருக்கிறாய் என்று அப்புறம் தானே புரிகிறது. குழந்தையின் நல்வாழ்வுக்கு உடல் நன்மைக்கு உதவாது என்றறிந்து அது இனிப்பு கேட்டால் தாய் கண்டிப்பாக கொடுப்பதில்லையே.

''கிடையாது போ. நடக்காது '' என்று பலமுறை நீயும் என் தாயாக என் ஆசை வெள்ளங்களுக்கு அணைபோட்டவன். கடின இதயம் உனக்கு இந்த விஷயத்தில். நீ எனக்கு நல்லது தான் செய்திருக்கிறாய்.
இந்த உறுதியான உன் கருணையை நான் என்வாழ்க்கையில் பல முறை அநுபவித்தவன்

ஒவ்வொரு நாளும் நான் கேட்காமலேயே எத்தனை அருமையான பரிசுகள் தருகிறாய். இதோ மேலே பார்த்து மயங்குகிறேனே இந்த பரந்த நீல நிற அளவற்ற ஆகாயம், அதில் சூரிய சந்திர நக்ஷத்ர ஒளி ஒன்று விட்டு ஒன்று. இதோ இந்த அற்புதமான விந்தை பல கொண்ட உடம்பு, தேகம், அதற்குள் உன் அம்சமாக ஒரு உயிர், இதற்காக உன்னை நன்றியுடன் நினைக்க ஒரு மனம், ஒரு அன்பு நிறைந்த இதயம். ஆமாம் தந்திருக்கிறாய் .....ஆசையில் இருந்து விலக எத்தனையோ வழிகள்.. நான் எங்கே இதை எல்லாம் அறிந்தேன்?

''ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய் வரும் துன்பம்
ஆசை விட விட ஆனந்தமாமே .....

ஆமாம் நிறைய திருமூலர் படிப்பேன். படிப்பதோடு சரி. உள்ளே விஷயம் போனதில்லை, போனாலும் அதே வேகத்தில் எங்கோ வெளியேறிவிட்டது. மனதில் நின்றால் தானே பலன்?
நிறைய தடவை அப்பப்பா, உன் மேல் எவ்வளவு கோபம் பட்டிருக்கிறேன். நீ மட்டும் என் கையில் அப்போது கிடைத்திருந்தால்.......அப்போது ,தேடியது எதற்கோ. இப்போது உன்னை தேடுவது வேறு எதற்கோ....

பாதி தூக்கத்தில் கூட எழுந்து உட்கார்ந்து என் லக்ஷியம் எது என்று புரியாமலேயே அதை தேடுபவன் நான்.
நீ நான் எவ்வளவு குட்டிக்கரணம் போட்டு தேடினாலும் எட்டாதவன், கிட்டாதவன் என்னிடம் மாட்டாதவன்.
கடின நெஞ்சம் கொண்டவன்.

நான் முட்டாள் கிருஷ்ணா, அப்புறம் தான் நிதானமாக புரிந்தது. நீ எப்படி கொஞ்சம் கொஞ்சமாக என் உலக ஆசைகளை எப்படியோ நிறைவேறாமல் தடுத்து, விலக்கி உன் பால் என்னை இழுத்து என் பலஹீனங்களை புரிந்து கொண்டு, என் மற்ற எண்ணங்களை நிறைவேறாமல், அழிய, உதவியவன். இல்லை கிருஷ்ணா, நீ என்னை காப்பாற்றியவன், காப்பாற்றுகிறவன், என்றும் காப்பாற்றுபவன்.


உன்னை நன்றியோடு வணங்குகிறேன்.

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...