Wednesday, April 4, 2018

SUNDARAMURTHI NAYANAR




சுந்தர மூர்த்தி நாயனார் - J.K. SIVAN

சுந்தரரும் சேரமானும்
''அடடா என் பரமேஸ்வரனை பரவை என்பவளிடம் பலமுறை தூது அனுப்பிய சுந்தரரை நான் வி ட்டேனா பார் '' என கோபத்துடன் கிளம்பியவர் ஏயர் கோன் கலிக்காம நாயனார் என பெயர் கொண்ட சிவனடியார். திருப்பெரு மங்கலம் எனும் பொன்னி நாட்டை சேர்ந்தவர். சிவபெருமான் எப்படி இந்த இரு சிவ பக்தர்களையும் சமாதானப்படுத்தினார் என்பதை இதை விவரமாக கலிக்காம நாயனார் கதையில் அறிவோம்.

இன்னொரு விஷயமும் இங்கே சொல்லவேண்டும். சுந்தரரும் இன்னொரு சிவ பக்தருமான சேரமான் பெருமாள் நாயனார் என்பவரையும் நட்பு பெறச் செய்த சிவன் அருள் பற்றியும் பிறகு அறிவோம்.

ஒரு தடவை சுந்தரரும் சேர்மன் பெருமாள் நாயனாரும் மதுரைக்கு சென்று கொண்டிருந்தார்கள் . போகும் வழியி, நாகப்பட்டினம் எனும் திருநாகையில் காயாரோஹண ஈஸ்வரனை சந்தித்தனர். இந்த க்ஷேத்ரம் திருநாகைக் காரோணம் என பெயர் பெற்றது. எனக்கு ஒரு முத்து மாலை தா, இது மட்டும் போதாது, ஆடைகள்,நவரத்தினங்கள், ஆபரணம், திருவாரூர் மூன்றில் ஒரு பங்கு, காற்றைவிட வேகமாக பறக்கும் குதிரைகள் என்று பெரிய ஜாபிதாவாக தனது பாடல் ஒன்றில் சிவனை வேண்டுகிறார் சுந்தரர். '' நீ எனது நண்பன் அல்லவா, நான் கேட்பதை தருபவன் அல்லவா என்ற உரிமையில் இதை கேட்கிறார். சிவனுக்கும் சுந்தரருக்கு அப்படிப்பட்ட அற்புதமான ஸக்ய பாவம், தோழமை அல்லவா?

பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப்
பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர்
செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர்
செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொருநா ளிரங்கீர்
முத்தாரம் இலங்கி மிளிர் மணிவயிரக் கோவை
அவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறுங்
கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.

சேரமான் பெருமாளுடன் தெற்கே நிறைய சிவ ஸ்தலங்கள் சென்றிருக்கிறார் சுந்தரர்.

அவர்கள் இருவரும் திருக்கண்டியூர் சென்ற ஆற்றைக் கடக்கமுடியாத அளவு காவிரியில் பெரும் வெள்ளம். ஆற்றின் அக்கரையில் திருவையாறு .

''அடடா நாம் பஞ்சநதீஸ்வரரை தரிசிக்க வழி இல்லையே '' என ஏங்குகிறார் சேரமான் பெருமாள்.

''ஆமாம் என்ன செய்வது. ஆற்றின் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறதே. நமக்கு தான் சிவன் இருக்கிறாரே அவரையே உதவி கேட்போமே'' என்று சுந்தரர் ஒரு பாடல் படுகிறார். சிவனுக்கு சுந்தரர் பாடல்கள் தான் தேன் ஆயிற்றே.
ஆனந்தமாக சுந்தரர் பாடலைக் கேட்ட ஐயாறப்பர் மகிழ்கிறார். கங்கையையே அடக்கி தலையில் வைத்துள்ளவருக்கு காவிரியை கொஞ்சம் உன் நீரை நிறுத்திக் கொள் என்று சொல்வது கடினமா? வெள்ளம் அடங்குகிறது. காவேரி ஆற்றின் நடுவில் ஒரு வழி, மணல் பாதை, விடுகிறது. இருவரும் ஆற்றின் அக்கரையில் பஞ்சநதீஸ்வரரை தரிசிக்கிறார்கள். காவிரி மீண்டும் வெள்ளத்தால் நிரம்புகிறது. இரு பக்தர்களும் சிவனருளை கண்ணால் கண்டு வியந்து போகிறார்கள். இந்த அதிசயம் அங்கிருந்த அனைவரையும் சிலையாக்குகிறது. இப்படியா ஒரு சிவபக்தர். சிவ நேசராக, தோழனாக என்று சுந்தரரை வணங்குகிறார்கள்.

''சுவாமி என்னுடன் நீங்கள் என் ஊருக்கு வரவேண்டும்'' என்று சேரமான் சுந்தரரை வேண்ட அவருடன் செல்கிறார் சுந்தரர். மாலை மரியாதை வாத்திய வேத கோஷ மேள தாளங்களுடன் சுந்தரரை அழைக்கிறார். சிலகாலம் அவருடன் தங்குகிறார் சுந்தரர்.

''என்னை மறந்தாயோ சுந்தரா?'' என்று தியாகராஜன் கேட்பது போல் அடிக்கடி தோன்றவே திருவாருர் செல்ல விரும்புகிறார். சேரமான் சுந்தரருடன் திருவாரூர் செல்ல இயலவில்லையே என்று வருந்துகிறார்.

''ஐயா, சிவனடியாரே , நீங்கள் அரசர், உங்கள் கடமையை செவ்வனே செய்து ராஜ்ஜிய பரிபாலனம் செய்யுங்கள்''; என்று சுந்தரர் அவரை கேட்டுக்கொள்ள, தக்க மரியாதை, சன்மானங்களோடு அவற்றை சுமக்க நிறைய ஆட்களையும் கூட சேர்த்து திருவாரூருக்கு சுந்தரரை வழியனுப்புகிறார் சேரமான்.

சிவனுக்கு எப்போதும் சுந்தரர் தன்னிடம் தான் பரிசு பெறவேண்டும் என்று விருப்பமோ? எவ்வாறு மற்றவரிடம் தனது தோழர் சன்மானங்கள் பெறுவதை விரும்புவார் ?



ஓஹோ அப்படியா சேதி, சுந்தரா நீ எப்படி சேரமான் கொடுத்த பரிசுகளோடு திருவாரூர் செல்கிறாய் என்று பார்த்து விடுகிறேன்.''.......என்று பரமேஸ்வரன் சங்கல்பித்தான். அப்புறம் என்ன ஆயிற்று?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...