Thursday, April 5, 2018

aindham vedham



ஐந்தாம் வேதம்   -  J.K. SIVAN

    22  கௌரவ   பாண்டவ  வம்சாவளி 

 மஹா பாரதம் ஒரு அமர  காவியம் என்பதில் துக்குணி யூண்டு கூட சந்தேகம் வேண்டாம்.  நவரசங்களையும் கொண்ட  மனித உணர்ச்சிகள் கொப்புளிக்கும் சம்பவங்கள் அதில் நிறைய உண்டு. 

விசித்திர வீர்யனின் மனைவிகள் அம்பிகை  அம்பாலிகை மற்றும் அவர்கள் தாதி பெற்ற மூன்று குழந்தைகளும் பீஷ்மர் மேற்பார்வையில்  வளர்ந்தனர். அரசர்களுக்கு  தேவையான  ஆயுத பயிற்சி பீஷ்மரிடம் பெற்றனர். உடல் வலிமை, தர்மம், நீதி சாஸ்திரம் எல்லாவற்றிலும் சிறந்து விளங்கி திருமணத்துக்கும்  தயாரானார்கள். 

பீஷ்மர்  கண் பார்வை இழந்து பிறந்த   திருதராஷ்டிரனுக்கு  காந்தார  தேசத்து  இளவரசி காந்தாரியை திருமணம் செய்து வைக்கிறார். காந்தாரி சிவ பக்தை . தனக்கு  நூறு பிள்ளைகள் வேண்டும் என்று வரம் பெற்றவள்.  அவள் சகோதரன் சகுனி முன்னின்று  சகோதரிக்கு மணமுடித்து வைக்கிறான். கணவன் பார்வை இன்றி உள்ளதால்  எனக்கும் பார்வை வேண்டாம் என்று அன்று முதல் காந்தாரியும் தனது கண்களை மறைத்துக் கொள்கிறாள்.

யாதவகுலத்தில் சூரசேனன் என்று  அரசன்.அவன் மகன் வாசுதேவன், மகள் ப்ரிதை. அவனது உறவினன் குந்திபோஜனுக்கு குழந்தைகள்  இல்லை என்பதால்  நட்பினால்  ப்ரிதை  குந்திபோஜனிடம் வளர்கிறாள்.  அதனால் அவள்  வளர்ப்பு  தந்தை பெயர் தாங்கி குந்தி என்று  எல்லோராலும் அறியப்படுகிறாள்.  அங்கு தான்  அவள்  கன்னியாக இருக்கும்போது ஒருநாள்  துர்வாசர்  விருந்துக்கு  குந்தி போஜன் அரணமனைக்கு வர, அவள் உபசாரத்தில் மகிழ்ந்து ஒரு  வரம் அருள்கிறார்.  ''குந்தி  நீ  இந்த மந்திரத்தை உச்சரித்து எந்த  தெய்வத்தை வேண்டினாலும் அவர் அருளால்  உனக்கு  புத்திர பாக்கியம் கிடைக்கும் ''

குந்தி சிறு பெண் ஆர்வக்கோளாறினால்  ''என்ன நடக்கிறது பார்க்கலாம்'' என்று  அர்க்கனை  வேண்டி துர்வாசர் உபதேசித்த  மந்திர உச்ச்சாடனம் செய்ய,  சூரிய பகவான் அருளால் கருவுருகிறாள், ஒரு குழந்தை  பிறக்கிறது .  பிறந்தபோதே  சூரிய ஒளியுடன், கர்ண குண்டல, கவசங்களோடு  அந்த குழந்தையை கண்டு அஞ்சுகிறாள்  குந்தி.   என்ன விபரீதம் இது.   நடுங்குகிறாள்.  அவளது தாதிகள் அறிவுரைப்படி  குழந்தையை ஒரு மரப் பேழையில் வைத்து  அது ஆற்றில் மிதந்து போகும் வரை  பார்க்கிறாள். 

அஸ்தினாபுரம் வரை மிதந்த அந்த பேழை  ராதை என்பவளின்  கணவன்  அதிரதன் என்பவன் ஒருநாள் காலை ஆற்றங்கரைக்கு நித்ய கரம் அனுஷ்டானங்களை வந்தவன் கண்ணில் பேழை படுகிறது.  அதிசயித்த அவன் அதை எடுத்து  பார்க்கிறான்.  திவ்ய தேஜஸுடன் ஒரு ஆண்  குழந்தை.  திருதராஷ்டிரன்  அரண்மனையில் தேரோட்டும் அதிரதன்   மகனாக  அந்த குழந்தை வளர்கிறது.  காதில் பளபளக்கும் குண்டலங்களோடு பிறந்த குழந்தைக்கு கர்ணன் என்று பெயர் வைக்கிறார்கள்.  வசு சேனன்,  ராதேயன் என்றும் பெயர் அவனுக்கு.  திருதராஷ்டிரன் அரண்மனையில்  அவன் மற்ற குழந்தைகளோடு பழகி வளர்கிறான்.  குந்தி மீண்டும் கன்னிகையாக மாறுகிறாள். 

 குந்தியை  பீஷ்மர் பாண்டுவின் மனைவியாக மணமுடித்து வைக்கிறார். பீஷ்மர்  மாத்ர தேசத்துக்குச் சென்றபோது அந்த அரசன் பெண் மாத்ரியையும்  பாண்டுவிற்கு  மணமுடிக்கிறார்.  பாண்டு அரசனாகிறான்.

தாதிமகனாக பிறந்த  விதுரனுக்கும்  மணமுடித்து வைக்கிறார் பீஷ்மர்.

 திருதராஷ்டிரன்  காந்தாரியின் மூலம்  100 பிள்ளைகளின்  தகப்பனாகிறான்,   ஏற்கனவே  சொன்னபடி  குந்தி  தர்மன் பீமன், அர்ஜுனன் ஆகியோரை மகன்களாக அடைகிறாள்.  மாத்ரிக்கு  நகுல சகாதேவர்கள் பிள்ளைகளாகிறார்கள்.

 பாரதத்தில்   காந்தாரி  இரண்டு வருஷம் சூல் கொண்டும்  மகப்பேறு  நேராதாதால்  வயிற்றினுள் இருக்கும்  கருவை பலத்தோடு தாக்க,  அது சிதைந்து  ஒரு உருண்டையாக  வெளிவருகிறது.  அந்த நேரம்  வியாசர்  அங்கு  வர, அவர்பதறுகிறார். 

'காந்தாரி  என்ன  செய்துவிட்டாய்  நீ. உடனே  100 சிறு  மண் கலயங்களில் ஹோம  நெய் கொண்டு வா என்று சொல்லி அந்த உருண்டையை  100 துண்டுகளாக்கி    கட்டை விரல் நீளத்தில்  கலயங்களில்  சமமாக வைக்கப்பட்டு  இரண்டு வருடம் கழித்து வெளிவரட்டும்  என்கிறார்.  அவ்வாறே  அந்த  100 கலயங்களிளிருந்தும் துரியோதனன் முதலானோர்  பிறக்கிறார்கள் என்று வருகிறது.   அந்த காலத்திலேயே  ப்ரிமெச்சூர்  பேபி  எனும்  காலம் தப்பி அவசரக் குடுக்கைகளாக பிறக்கும் குழந்தைகளை பற்றி இவ்வாறு  சிந்தித்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

 இதற்குள் குந்திக்கு தர்மன் பிறந்துவிட்டதால்  அவன் முதலில் பிறந்தவன்  ஆகிறான்.  துரியோதனனும் பீமனும் ஒரே நாளில் பிறக்கிறார்கள். துரியோதனன் பிறந்ததும்  குழந்தை  கழுதையின் குரலாக  ஒலித்ததாம். எங்கும் ஓநாய்கள், நரிகள், கழுதைகள், காக்கைகள், கழுகுகளும்  சேர்ந்து ஒலித்தனவாம் .  காற்று  புயலென வீசியது. தீ  பல இடங்களில் பரவியது. தீய  சகுனங்கள். விளைவு??

திருதராஷ்ட்ரன்  பீஷமரையும்  விதுரனையும் இது விஷயமாக பேச அழைத்தான்..

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...