Thursday, April 5, 2018

koupeena panchakam

ஆதி சங்கரரின் கௌபீன பஞ்சகம் - J.K.SIVAN
ஆத்மானந்தம்

இதை யாராவது பழம் பஞ்சாங்கம் என்றால் 2018 விளம்பி வருஷ பஞ்சாங்கம் கிடைக்காமல் போய்விடும். ஜாக்ரதை.

இதற்கு வயதே கிடையாது. மனிதன் பூவுலகில் தோன்றியநாள் முதல், கடைசி மனிதன் காணாமல் போகும் வரை இது ஏற்றுக் கொள்ளக்கூடிய போற்றவேண்டிய உண்மைகளை கொண்ட ஒரு பொக்கிஷம்.

உலகம் மாறிக்கொண்டே வரலாம். உண்மைகள் மாறுவதில்லை. மாறும் மனிதன் மனதில் இது ஒரு முறை பதிந்து விட்டால் அவன் மனமும் மாறாது.

ஆதி சங்கரர் 32 வயது வாழ்ந்தாலும் முக்காலத்துக்கும் உகந்த முழு உண்மைகளை உரைத்து விட்டு தான் சென்றார். இனி சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்பதால் மறைந்தாரோ என்னவோ? அப்படித்தான் விவேகானந்தர் சொல்லிக்கொண்டிருந்தார் என்று படித்திருக்கிறேன். அதே 32 வயது. இந்த நம்பரில் அப்படி என்ன ஒரு சூக்ஷ்மம்??

இந்த கௌபீன பஞ்சகம் முழு ஆடை சம்பந்தமில்லாத கோவண தாரிகளுக்கான ஐந்து ஸ்லோகங்கள் மட்டும் என்று கருதவேண்டாம். கோவணம் தரிப்பது என்பது உலகைத் துறந்த தைரியசாலியின் வைராக்யத்தை குறிக்கும் ஒரு அடையாளம். எல்லாமே வெறுத்தவன் ஏற்றுக்கொள்ளும் ஆடையை தான் கோவணம் என்போம்.

ஒருதரம் சுவாமி நித்யானந்தா, (ஐயோ, இப்போது இந்த பெயருள்ள 'சந்நியாசி (?)' அல்ல). அந்த காலத்தில் இதே பெயரில் இருந்த ஒரு ''உண்மையான, நல்ல'' மகான். அவதூதர். துணி உடலில் இருந்ததா என்பதே கூட தெரியாதவர், போலிஸ்காரர்களால் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரைப் பிடித்து ஒரு பூட்டிய அறையில் அடைத்தனர். வெளிநாட்டு பணம் கள்ளத்தனமாக லேவா தேவி செய்பவர், என்று வெள்ளைக்காரன் அரசாங்கம் அவர் மீது குற்றம் சாட்டியது. வெளி நாட்டு பணம் எப்படியோ கடத்திக் கொண்டு வந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு. அவரை ஒரு இருட்டு அறையில் அடைத்து பூட்டிவிட்டு வெளியே சென்ற இன்ஸ்பெக்டர் அரைமணி நேரம் கழித்து திரும்பி வரும்போது அவரை வழியே தெருவில் காற்று வாங்கி கொண்டு நிற்பதைப் பார்த்தான். பாக்கெட்டில் துழாவினான். சாவி பத்திரமாக இருந்ததே. பூட்டிய சிறையில் இருந்து இந்த ஆள் எப்படி வெளியே??

ஒரு முறை சதாசிவ பிரம்மேந்திரர் என்கிற அவதூதர், தன் உடல் பற்றிய சிந்தனை இல்லாதவர் ஒரு முஸ்லிம் வீட்டில் பசிவேளையில் பிக்ஷைக்கு கையேந்தியபோது அவர்கள் உணவு கொடுக்காவிட்டாலும் மகிழ்ந்து பாடிக்கொண்டு காவேரிக்கு சென்று நீர் குடிக்க போகும்போது அவர் வலது கரம் வெட்டப்பட்டு அது கீழே விழுந்ததுகூட தெரியாமல் சென்றபோது அதை வெட்டிய முஸ்லிம் அதை அவரிடம் கொண்டு வந்து நடுங்கிக் கொண்டே கொடுத்தபோது அதை எடுத்து தோளில் பொருத்திக்கொண்டு அது மீண்டும் அவர் உடலோடு சேர்ந்தது என்றெல்லாம் கூட எழுதினேனே. கவனம் இருக்கிறதா. இவர்கள் எல்லாம் பிரம்ம ஞானிகள்.

''ஏது உன்னிடம் இவ்வளவு பணம்? என்று வெள்ளைக்கார இன்ஸ்பெக்டர் கேட்ட போது ''என்னை ஏன் கேக்கறே? உன் கை முட்டியை தேய்த்துப் பாரேன்'' என்றார் அந்த நிர்வாண யோகி. வெள்ளைக்கார இன்ஸ்பெக்டர், முழுக்கை சட்டையை ஒதுக்கி விட்டு முட்டியை மற்றொரு கையால் தேய்த்தான். கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் கீழே விழுந்தன. அவர் காலில் விழுந்து அவரை விடுவித்தான் இன்ஸ்பெக்டர். இந்த ஞானி பிறந்தபோது அவரை ஒரு கொட்டும் மழைநாளில் கஞ்சன்காடு என்கிற ஊரில் மலையாள தேசத்தில் வளர்த்தது ஒரு ராஜ நாகம். பிறகு ஒரு வேலைக்கார பெண்மணி வீட்டில் வளர்ந்தவர்.

ரமணரும் கோவணதாரியாக வாழ்ந்தவர். வெள்ளைக்கார துரைகளும் துரைசானிகளும் அந்த உடையில் தான் அவரை வணங்கினார்கள்.

சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் குரு சமர்த்த ராமதாசரும் கோவண தாரியே . நமது மஹா பெரியவா கூட கோவணத்தில் தரிசனம் கொடுத்திருக்கிறார். அவர் படத்தை இத்துடன் இணைத்திருக்கிறேன். எவ்வளவு தேஜஸ் பாருங்கள் முகத்தில். நாம் எவ்வளவு வெட்கப்படுவோம்.

இந்த கோவணதாரி பட்டியல் போதும். கோவண காவியம் - கெளபீன பஞ்சகம் என்ற ஆதி சங்கரரின் ஐந்து ஸ்லோகங்களை இனி பார்ப்போம்
वेदान्तवाक्येषु सदारमन्तो
भिक्षान्नमात्रेण च तुष्टिमन्तः ।
अशोकवन्तः करुणैकवन्तः
कौपीनवन्तः खलुभाग्यवन्तः ॥१॥

Vedantha Vakhyeshu Sada ramantho,
Bhikshannamathrena trishtimantha,
Vishokamantha karane charantha,
Kaupeenavantha Khalu bhaghyavantha . 1

வேதாந்த வாக்கியேஷு சதா ரமந்தோ
பிஷான்ன மாத்ரேண த்ரிஷ்டிமந்த
விசோகமந்த கரணே சரந்தா,
கௌபீனவந்தா கலு பாக்கியவந்தா''
வேறெந்த சிந்தனையும் இல்லையே, வேதாந்த, சித்தாந்த வனத்தில் சஞ்சரிப்பவன். பசி நேரத்தில் கை நீட்டி எது கையில் திருவோட்டிலோ அல்லது நீட்டிய கையில் விழுகிறதோ, அதுவே அன்றைய உடலை காக்கும் உணவு என்ற திருப்தி அடைந்தவன். சுகம் துக்கம் எதுவுமே சமமாக அனுபவிப்பதால் எப்போதும் ஆனந்தமானவன், சதானந்தன் வெளி உலகை கவனிக்க நேரமில்லாமல் தனது ஆன்ம உலகிலே உள்ளேயே உலவுபவன், ஏ, கோவணதாரி, நீ தானடா பாக்யவான்.ஜிலுஜிலுவென்று காற்று உடலெங்கும் வீசி குளிர்விக்க சுகமாக வாழ்பவன். ''

मूलं तरोः केवलमाश्रयन्तः
पाणिद्वये भोक्तुममत्रयन्तः।
कन्थामपि स्त्रीमिव कुत्सयन्तः
कौपीनवन्तः खलुभाग्यवन्तः॥२॥'

Moolam tharo kevalam ashrayantha,
Panidhvayam bhokthuma manthrayantha,
Kandhamiapi sthreemiva i kuthsayantha,
Kaupeenavantha Khalu bhaghyavantha 2

மூலம் தரோ கேவலம் ஆஷ்ரயந்த
பாணித் வயம் போக்தும மந்த்ரயந்த
கந்தாமபி ஸ்த்ரீமிவ குத்சயந்த
கௌபீனவந்தா கலு பாக்கியவந்தா

ஆஹா, இந்த மரத்தடி வேர் ஆசனம் எவ்வளவு சுகம். மணம் கமழ் நிழல். கிழங்குகள், வேர்கள், இலைகள், ரெண்டு கவளம் எந்த சோறு கிடைத்ததோ அது கை நிரம்பி விட்டதே. இனி வயிரை நிரப்பிவிடுமே. கிழிசலை ஓட்டுப்போட்ட துணி தான் இந்த உலக செல்வம் எல்லாம். உடுத்த கோவணம் இணையற்ற செல்வம் என்ற நினைப்பு ஸ்வர்கத்துக்கே தூக்கி சென்றுவிடுகிறது. ஏ, கோவணதாரி, நீ தானடா பாக்யவான்.ஜிலுஜிலுவென்று காற்று உடலெங்கும் வீசி குளிர்விக்க சுகமாக வாழ்பவன். ''

स्वानन्दभावे परितुष्टिमन्तः
सुशान्तसर्वेन्द्रियवृत्तिमन्तः ।
अहर्निशं ब्रह्मसुखे रमन्तः
कौपीनवन्तः खलु भाग्यवन्तः ॥ ३॥

Swanandha bhave pari thushti mantha,
Sushantha sarvendriya vruthi mantha,
Aharnisam brahma sukhe ramantha,
Kaupeenavantha Khalu bhaghyavantha 3


ஸ்வானந்த பாவே வ பரி துஷ்டி மந்த
சுஷாந்த சர்வேந்திரிய வ்ருத்தி மந்த
அஹர்ணிசம் பிரம்ம சுகே ரமந்த கௌபீனவந்தா கலு பாக்கியவந்தா

எண்ணமே எங்கே ஓடுகிறாய், வெளியே, போ திரும்பி உள்ளே, அங்கே இல்லாத சுகமா வெளியே? என்று எண்ணங்கள் மற்றும் ஐந்து புலன்களையும் கட்டுப்பாட்டில் கொண்டவன், ஜிதேந்த்ரியன், புலனடக்கிய சக்ரவர்த்தி, இரவு பகல் என்று இல்லாமல் சதா சர்வ காலமும் பிரமத்தில் ஐக்யமாகி சுகிப்பவன், ஏ, கோவணதாரி, நீ தானடா பாக்யவான்.ஜிலுஜிலுவென்று காற்று உடலெங்கும் வீசி குளிர்விக்க சுகமாக வாழ்பவன். '

देहादिभावं परिवर्तयन्तः
स्वात्मानमात्मन्यवलोकयन्तः ।
नान्तं न मध्यं न बहिः स्मरन्तः
कौपीनवन्तः खलु भाग्यवन्तः

Dehadhi bhavam parivarthayantha,
Swathmana athmanyavalokayantha,
Naantha na Madhyam na bahi smarantha,
Kaupeenavantha Khalu bhaghyavantha 4

தேஹாதி பாவம் பரிவர்தயந்த
ஸ்வாத்மனா ஆத்மன்யவலோக யந்த
நாந்தன மத்யம் ந பஹி ஸ்மரந்த
கௌபீனவந்தா கலு பாக்கியவந்தா

எங்கோ கடையில் ஷோ கேஸில் அடுக்கி வைத்திருக்கும் பொம்மையைபோல் ஆர்வமாக உன் உடம்பையே, அதன் மாறுதல்களை வேடிக்கை பார்க்கும் வினோத மனிதா. இந்த உடம்பு நம்மை கேட்காமலேயே எப்படியெல்லாம் மாறுதல்களை அடைகிறது பார்த்தாயா. இந்த நரை, திரை, மூப்பு , தலை முடியை காணோம், சில பல் எப்போது விழுந்தது, ஏன் கொஞ்சம் காது கேட்கவில்லை. சரியாக நடக்க எதற்கு ஒரு மூங்கில் கம்பு, எப்போது என் முதுகு தானாகவே வளைந்தது? தெரியவில்லையே. ஆசை மட்டும் அப்படியே இருக்கிறதே.!

தேகமில்லாத ஆத்மாவாக உன்னை கண்டு கொண்டவனே, முடிவோ, நடுவோ, எதுவுமே இலட்சியமில்லாத பிரபோ, ஏ கோவண தாரியே , நீ தானடா பாக்யசாலி. .ஜிலுஜிலுவென்று காற்று உடலெங்கும் வீசி குளிர்விக்க சுகமாக வாழ்பவன்.

ब्रह्माक्षरं पावनमुच्चरन्तो
ब्रह्माहमस्मीति विभावयन्तः ।
भिक्षाशिनो दिक्षु परिभ्रमन्तः
कौपीनवन्तः खलु भाग्यवन्तः ॥

Brahmaksharam pavanamucharantho,
Brahmahamasmeethi vibhavayantha,
Bhikshashano dikshu paribramayantha,
Kaupeenavantha Khalu bhaghyavantha 5

ப்ரம்மா க்ஷரம் பாவன முச்சரந்தோ
ப்ரம்மாஹ மஸ்மீதி விபாவயந்தா
பிக்ஷா ஷனோ திக்ஷு பரிப்ரமயந்த
கௌபீனவந்தா கலு பாக்கியவந்தா

சர்வம் பிரம்மமயம் என்று ஆடிப் பாடுபவனே, ''நானே தானடா அந்த ப்ரம்மம்'' என்ற நினைப்பில் களிப்பவனே, எங்கே எதற்கு ஏன் என்றே தெரியாமல், கால் போனபடி போகும் சுதந்திரமானவனே, கிடைப்பதை உண்டு மகிழ்பவனே, ஏ கோவணதாரியே , நீ தானடா பாக்யசாலி. ஜிலுஜிலுவென்று காற்று உடலெங்கும் வீசி குளிர்விக்க சுகமாக வாழ்பவன்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...