Wednesday, March 30, 2022

PESUM DEIVAM

 

பேசும் தெய்வம்  -   நங்கநல்லூர்   J K   SIVAN 

''அவரைப் போய்ப் பார் ''

மஹா பெரியவா, நூறு வருஷங்கள்  வாழ்ந்து,  தீபம் கடைசி சொட்டு  நெய்  திரியிலிருக்கும் வரை ஒளி வீசுவது போல், கற்பூரம் கடைசி பஸ்பம் வரை எரிவது போல் வாழ்ந்த  ஆத்ம  ஞானி.   அவர் பற்றிய  விஷயங்கள் எல்லாமே   ஓவ்வொரு முறை படிக்கும்போதும் நம் போன்ற  அஞ்ஞானிகளுக்கு  புத்தம் புதிதாக தான் மனதில் படும்.
++
ஒரு சமயம்  மஹா பெரியவா 1931ல்  செங்கல்பட்டில் முகாம் இட்டிருந்த போது  ஒரு பக்தர் வெளிநாட்டுக்காரர் ஒருவரோடு அவரை தரிசிக்க வந்தார்.

அந்த பக்தர்  ஸ்ரீ கே.எஸ். வெங்கடரமணி   இங்கிலிஷ் , தமிழ்  ரெண்டிலும் அற்புதமாக  எழுதுபவர்.  தேச பக்தி, தெய்வ பக்தி இரண்டிலும் தோய்ந்தவர். காஞ்சிப் பரமாச்சாரியாரிடம்   பரம பக்தி.  அவருடைய  நண்பர்  தான்  பால் ப்ரண்டன் எனும் சுவிட்சர்லாந்து காரர். பத்திரிகையாளர்,  சிந்தனை யாளர்,  தத்துவ ஞானி.  ஹிந்து  மத துறவிகள் ஆன்மிகம் போன்றவற்றில் நாட்டம் உடையவர். இந்தியாவில் பல யோகிகள் ஆன்மீக வாதிகளை சந்தித்தவர்.

மஹா பெரியவா பற்றி  கேள்விப்பட்டு எப்படியாவது ஒரு முறை  நேரில் தரிசிக்க ஆர்வம் வந்தது. எப்படி  சந்திப்பது?  வெளி நாட்டுக்காரன் ஆயிற்றே,   பேசும் மொழி தெரியாதே, அவரை நெருங்கமுடியுமா? என்னை சந்திப்பாரா?  என்று நினைத்தபோது தான்  வேங்கடரமணி நினைவில் வந்தார்.

பால்பிரண்டனின் ஆன்மிக தாகத்தை அறிந்த   வெங்கடரமணி, அவரைப் பரமாச்சாரியாரிடம் அழைத்துச் செல்ல மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டார்.  செங்கல்பட்டில் இருப்பதை அறிந்து இருவரும் சென்றார்கள்.  அப்புறம் நடந்ததை ப்ரண்டன் வாயால் கேட்போம்.
பெரியவா தங்கியிருந்த மடத்தில் ஒரு சின்ன கதவு வழியாக உள்ளே சென்றால் ஒரு குட்டி  அறை . வெளிச்சம் அதிகம் இல்லை. அதன் உள்ளே தீப ஒளி  நிழலில் சற்று உயரம் கம்மியான ஒரு உருவம். ஆடம்பரமில்லாத ஒரு பெரிய மதத்தின், ஹிந்து மத ஆச்சார்யர். தென்னிந்தியா முழுதுமே போற்றி புகழ்ந்து  அவரது உபதேசத்தை பின்பற்றியது. அமைதியாக  அவரைப் பார்த்தேன்.  காவி உடுத்த சாதாரணர்.  கையில் ஒரு தண்டம்  என்ற கோல்.  கிட்டத்தட்ட  நாற்பது வயதிருக்கும். அதற்குள் நரைத்த தலை. முகம்  தாடி மீசையின்   வெண்மை யாலும்  தங்க நிற உடலும்  முகமும்  சோபை அளித்தது.. பெரிய விழிகள். சாந்தமான முகம்.  மூக்கு  அதிக கூர்மை இல்லை. மத்திய காலத்தில் இருந்த  எங்கள்   கிருத்தவ  மத  மஹான்கள் முகம் இப்படித் தான் பார்த்திருக்கிறேன்.  இவர்  ஒரு சிறந்த புத்திமான்,  மிகவும் கற்றவர்  என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  அவர் விழிகள் பல  சேதிகள் சொல்ல வல்லவை.

''வாருங்கள்''  . என்னை அழைத்து உபசரித்தார். என் கூட வந்தவரிடம் தமிழில் அவர் சொல்வது எனக்கு புரிகிறது.
''உங்கள் ஆங்கிலம் அவருக்கு  புரிகிறது, ஆனால் அவர் பேசுவது உங்களுக்கு புரியாமல் இருக்கலாம் என்பதற்காக  என்னை மொழிபெயர்க்க  சொன்னார் '' என்றார் வேங்கடரமணி .

'இந்த தேசத்தில்  நீங்கள் பல இடங்களில் பல மக்களை சென்று கண்டீர்களே, உங்கள் சொந்த அபிப்ராயம், அனுபவம் என்ன?''
நான் பட்டவர்த்தனமாக என் மனதில் தோன்றியதை சொன்னேன். அப்புறம் வேறு ஏதேதோ பற்றி பேசினோம். ஆங்கில பத்திரிகைகள் பற்றி,  நாட்டு நடப்பு  வெளியுலகில் நடப்பவை. எங்கள் இங்கிலாந்தில் நடக்கும் விஷயங்கள் பற்றி கூட நன்றாக அறிந்திருக்கிறார்.    ஐரோப்பாவில்   ஆங்காங்கே   உருவாகும்  மக்களாட்சி  புரட்சி  பற்றிய  சம்பவங்கள் பற்றியும் என்னிடத்தில்  சொன்னபோது ஆச்சர்யப்பட்டேன்.

 வெங்கட்ரமணி  ''காஞ்சி பெரியவா தீர்க்க தரிசி'' என்று சொல்லி அழைத்து வந்தது நினைவுக்கு வந்தது. ஆகவே  அவரிடத்தில் உலக எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கேட்க தோன்றிற்று.

"ஐயா,   இந்த   உலகத்தில்  எப்போது  அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக இப்போதுள்ள நிலை மாறி   முன்னேற்றம் எபபோது  உருவாகும் என்று கருதுகிறீர்கள்?''

''முன்னேற்றம் என்பது  படிப்படியாக  நிகழ்வது.   ஒவ்வொரு தேசமும் போட்டி போட்டுக்கொண்டு   மேலும் மேலும்  மக்களைக் கொல்லும்  நாச காரிய   ஆயுதங்களை சேமிப்பதில் ஈடுபடும்போது முன்னேற்றம்  உடனே எப்படி எதிர்பார்க்க முடியும் ?

''போர்  வேண்டாம் என்று பேச்சு வார்த்தைகள் எங்கும் காதில் விழுகிறதே  ஐயா ?''

''உங்கள்  யுத்த கப்பல்களை நீங்கள் முடக்கி வைப்பதாலோ,  பீரங்கிகளை துருப்பிடிக்க செய்வ தாலோ  உலகத்தில் யுத்தம்  நிற்குமா? மக்கள் ஒருவரோ டொருவர்  மோதிக் கொள்வார்கள்.  தடியெடுத் தாவது  சண்டை போடும் குணம் இருக்கும்.

''இதை  எப்படி  மாற்றி உதவ முடியும்?''

''தெய்வ  நம்பிக்கை,   ஒவ்வொரு தேசத்தினிடையிலும் பரஸ்பரமாக  மக்கள்  மனத்திலும்   இருக்க வேண்டும். ஏழை பணக்கார  வித்யாசம்  விலக வேண்டும்.   நல் லெண்ணம் மக்களிடையே அப்போது தோன்றும். அமைதி நிலவும். செழுமை, வளமை எங்கும்  பெருகும்.''

" நீங்கள் சொல்வது  நடக்க வெகு நாளாகும் போல் இருக்கிறது. வெகு தூரத்தில் உள்ளது போல் இருக்கிறது.   அதுவரை  சந்தோஷப்பட  எதுவுமில்லை அல்லவா? ''

மஹா பெரியவா கையில் இருந்த தண்டத்தை அழுத்தி பிடித்துக் கொண்டிருந்தார்

"பகவான் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார். நல்லதே  நடக்கும்''
" நீங்கள் சொல்லும் பகவான் எங்கோ  வெகு வெகு தூரத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன்''

" பகவானுக்கு  மனித இனம் மேல் அளவற்ற அன்புண்டு '---அமைதியான மெல்லிய குரலில் பதில். ''மக்களிடையே நிலவும்  மகிழ்ச்சியற்ற நிலை, கஷ்டங்களை பார்த்தால்  பகவானுக்கு கருணை இல்லை என்று தோன்றுகிறதே''

என் வார்த்தை கேட்டு ஆச்சர்யமாக என்னைக்  கூர்ந்து பார்த்தார்.  நாம் ஏன் அவசரப் பட்டு இப்படி பேசினோ மென்று எனக்குள்உறுத்தியது.  பொறுமையாக பார்த்த அவரது   கண்கள் ஆழமாக யோசித்தன.  

''பகவான்  மனித சக்தியையே  பயன்படுத்தி  சமநிலை படுத்துவார். தக்க நேரம் அமையும்போது அது நிகழும்.  எல்லாம் சரியாகும். தேசங்களிடையே உள்ள  கலவரம், மனிதர்களிடையே காணும்  தீய எண்ணங்கள்,  செயல்கள், மக்களின் துன்பம், கோடானுகோடி மக்கள் துயரம் எல்லாம் சாதகமாக உருவெடுக்கும்.  மாற்றம் தேடும்.  அதன் விளைவாக  பொறுப்புள்ள, சரியான  தெய்வீக  அன்புள்ள  மனிதன் ஒருவன் தோன்றுவான்.  அப்போது நிலைமை சரியாகும். ஒவ்வொரு நூற்றாண் டிலும் இப்படி ஒருவர் தோன்றுவது வழக்கம்.  துன்பங் கள் அராஜகம், அக்கிரமம்  தெய்வ அவ  நம்பிக்கை, அறியாமை, உலக ஈர்ப்பு,  இதெல்லாம்  அதிகரிக்கும் போது  நிச்சயம்  ஒரு சக்திமான்   உதார குண புருஷன் அதைச்  சரிப்படுத்த  உலக க்ஷேமத்துக்கென்று உதயமாவான்.''

"நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நமது காலத்திலேயே அப்படி ஒருவர் தோன்றுவாரோ?''

"இந்த நூற்றாண்டிலேயே, அப்படி ஒருவர் நிச்சயம்  காணப்படுவார்.  உலகத்துக்கு அது தேவை. அஞ்ஞான  இருள்  அதிகரித்துவிட்டது.  ஒரு தேவ புருஷன் நம்மி டையே சீக்கிரமே அறியப் படலாம்''

"மக்கள் தரம் தாழ்ந்து விட்டது என்பது உங்கள் அபிப்ராயமா ?''
" இல்லை. நான் அப்படி என்றும்   நினைக்கவில்லை. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்   இறைவன் ஆத்மாவாக இருக்கிறான்.  ஆகவே  முடிவில் எல்லோரையும் இறை நம்பிக்கையில் ஈடுபடுத்த வாய்ப்பிருக்கிறது''

"எங்கள் மேலை நாடுகளில், பெரிய பெரிய  நகரங்க ளில் ராக்ஷஸர்களை உள்ளே கொண்ட மக்களைத்  தான் காண்கிறோம்.   கும்பலாக  பலம் கொண்ட சக்திகள் உள்ளனவே''

"மக்கள் மேல் குறை சொல்லவேண்டாம். அவர்கள் வாழும், வளரும் சூழ்நிலை அவ்வாறு உள்ளது.
அவற்றால் அவர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள்.  உங்கள் நாட்டில் மட்டும் அல்ல, கிழக்கிலும்   மேற்கேயும்  எங்கும்  அதே நிலை தான். சமூகம் மேம்படவேண்டும். அது அவசியம். அப்போது மக்கள்  மனநிலையும் நம்பிக்கையும் மாறும்.   உலக  ஈர்ப்பு வஸ்துக்கள், பொருள்மீது உள்ள  ஆர்வம், தேவை  மாறிவிடும். மனம்  ஒரு உயர்ந்த லக்ஷியத்தில்  ஈடுபடும். சமரஸம்  தழைக்கும். உலக துன்பங்களை மாற்ற இது ஒன்றே வழி.  ஏதோ ஒரு அசுரவேகத்தில் தேசங்கள் தவறான பாதையில் உழலும்போது   அதன் விளைவாக நிகழும் ஏமாற்றம், துயரம், கஷ்டம், துன்பம்  இத்தகைய  நல்ல மாற்றத்துக்கு  அடி கோலும் . கொடிய  செயல்களை, எண்ணங்களை கட்டுப் படுத்தும்.  தோல்விதான் வெற்றிக்கு வழிகாட்டி.''

''மக்கள் ஆன்மீக கொள்கைகளை, நம்பிக்கைகளை, அவர்களது  அன்றாட உலக விவகாரங்களில் ஈடுபடச்  செய்ய  வேண்டும் என  விரும்புகிறீர்களா?''

"ரொம்ப சரி.   அது முடியாததல்ல. நடக்காதது அல்ல. அது ஒன்றே வழி. எல்லோரிடமும் பரஸ்பர நம்பிக்கை, பயமின்மை, அன்பு,  அப்போது தான் மலரும்.அமைதி நிலவும்.    அது தோன்றி விட்டால்  அப்புறம் மறையாமல் தொடரும்  நிறைய ஆன்மீக புருஷர்கள் இவ்வாறு  தோன்றினால் மாற்றம் வேகமாக மலரும்.  பரவும்.  எங்கள் பாரத தேசம்  இந்தியா, அதை வரவேற்கும்,   வளர உதவும்., மரியாதையோடு மதிக்கும்.  ஆன்மீகத் தை மக்கள் செவி மடுத்து கேட்டு புரிந்து பின்பற்றி னால்,  அதன் வழி வாழ்க்கை முறை அமைந்தால்,  எங்கும் அமைதி சுபிக்ஷம் நிச்சயம் தோன்றும்''

எங்கள் சம்பாஷணை தொடர்ந்தது. மஹா பெரியவா மேலை நாட்டை இகழ்ந்து கீழ்நாடுகளை உயர்த்தி பேசவில்லை. 

'' உலக கோளத்தின்  இரு பகுதிகளும் வெவ்வேறு  கோட்பாடுகள், நல்லவை,  தீயவை,  கொண்டவை.  அந்த வகையில்  அவற்றுள் அதிக   வித்யாசம் இல்லை.  புத்திசாலித்தனம் கொண்ட அடுத்த  தலைமுறை  ஆசிய, ஐரோப்பிய தேசங்களில் நல்லவற்றை இணைத் து பொருத்தி மக்கள் நாகரிகத்தில் முன்னேற் றம் கொண்டுவரும். சமநிலை உண்டாக்கும்.''

''ஐயா நான் உங்களைபற்றி சில கேள்விகள் கேட்க லாமா?
''ஆஹா  தாராளமாக கேளுங்கள் ''
''எவ்வளவு காலமாக நீங்கள் இந்த ஜகத்குரு  பட்டம் பதவி ஏற்கிறீர்கள்?'
" 1907லிருந்து.  அப்போது எனக்கு 12 வயது. பட்டமேற்றவுடன் நான்கு வருஷங்கள் காவேரிநதியின் கரையில் ஒரு கிராமத்தில் தீவிர  தியானம், கல்வியில் மூன்று வருஷங்கள் ஈடுபட்டேன். அப்புறம் தான் பொது வாழ்வில் எனது காரியங்கள் ஆரம்பித்தது.''

"நீங்கள் உங்கள் தலைமை செயலகமான கும்பகோணத்தில் அதிகம் தங்குவதில்லையோ?''

"கும்பகோணத்தில் அதிகம் இல்லாததற்கு காரணம், என்னை  நேபாள  அரசர் 1918ல் அழைத்தார். அப்போது  வடக்கு நோக்கிய பிரயாண காலத்தில்  சில நூறு மைல் கள் தான் மெதுவாக  நகர இயன்றது.  ஏனென்றால்  அது என் பொறுப்பில் உள்ள சம்ப்ரதாயம், பண்பாடு,  வழக் கம்.  நான் வழியில்  உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் சென்று தங்கி அவர்கள் அழைப்பை ஏற்று  அங்கெல் லாம் ஆன்மீக  உரையாற்றி, ஆங்காங்கே  கோவில் களில்  பிரசங்கங்கள் உபன்யாசங்கள் செய்து ஆன்மீகத்தை, தெய்வீகத்தை வளர்க்க வேண்டும். மக்களுக்கு நல்வழி போதிக்க வேண்டும். இது தான் எனக்கிட்ட வேலை .'

"ஐயா, எனக்கு  யோக மார்கத்தில் உயர்ந்த  ஞானி ஒருவரை சந்திக்க வேண்டும். அதற்காக தான் நான் என் தேசத்திலிருந்து இங்கே வந்து தேட ஆரம்பித்தேன்.  சிறந்த யோகி யாராவது உங்களுக்கு தெரிந்தால் எனக்கு அறிமுகப்படுத்த முடியுமா. அவரது செயல்பாடுகளை  நான் கூர்ந்து ஆராய்ந்து ஏற்றுக் கொள்ள  விரும்புகிறேன்.  உதவுவீர்களா?''

மஹா பெரியவா அமைதியாக  நோக்கினார். மௌனம் சில வினாடிகள். அவரது விரல்கள் தாடியை தடவின.

"உங்களுக்கு  யோகமார்க்க   வழிகாட்டல்  வேண்டுமா னால் , உதவுகிறேன்.   உங்கள் ஆர்வம் நியாயமானதால் நிச்சயம் உங்கள் எண்ணம் ஈடேறும். உங்களிடம் திடமான மனம், மன உறுதி இருப்பதை அறிகிறேன். உங்களுக்குள்ளே ஒரு ஆன்மீக ஒளி உருவாகிவிட்டது. உங்களை அது சரியான  பாதையில் வழி நடத்தும்.''

''ஐயா  இதுவரை நான் எனக்குப்  புரிந்த, தெரிந்த , வழியில் தான் நடக்கிறேன்.  உங்கள் ரிஷிகள் கூட  ''உன்னைத்  தவிர வேறு தெய்வம் இல்லை'  என்கிறார் களே. ''

"பகவான் எங்கும் நிறைந்தவர். அவரை ஒரு இடத்தில் மட்டும் இருப்பதாக  கட்டுப்படுத்துவது தவறு. அவர்  இந்த பிரபஞ்சத்தையே  காப்பவர் ''

''ஐயா  உடனடியாக  நடைமுறையில் நான் செய்ய வேண்டிய காரியம் என்ன ?''
"உங்கள் பிரயாணம் தொடரட்டும்.  பிரயாணம் ஒருநாள் முடிவுக்கு வரும். அப்போது  நீங்கள் சந்தித்த  ஆன்மீக வாதிகள், யோகிகள், பற்றற்ற துறவிகளை  சந்தித்ததை எல்லாம் நினைவு கூர்வீர்கள்.  அவர்களுள்  எவர் சிறந்தவராக உங்கள் மனதுக்கு படுகிறதோ அவரை  நாடுங்கள். அவர் உற்ற துணையாக உங்களை வழிநடத்துவார்.  உங்களுக்கு அருள் புரிவார்.''

 மஹா பெரியவாளின்  சாந்தமான முகத்தை, தோற்றத்தில்  மகிழ்ந்து மனதில் போற்றினேன்.

"ஐயா, அப்படி எவரும் எனக்கு உசிதமானவராக  படவில்லை என்றால் என்ன செய்வது?''

"அப்படிஎன்றால்  நீங்கள் நேராக கடவுளை நாட வேண்டி யது தான்   அவரே தோன்றி உங்களை வழி நடத்துவார்.   இடைவிடாத தியானம்  அதற்கு அவசியம். அது தான் தவம்.  உங்கள் இதயத்தில் நல்ல விஷயங்களுக்கு பரந்த எல்லையற்ற  பாரபக்ஷமற்ற  அன்போடு  கலந்து  மட்டுமே இடம் தர வேண் டும். ஆத்மா பற்றிய சிந்தனை இருந்து கொண்டே இருக்க வேண்டும்.  விடியற்காலை அதற்கு  உகந்த நேரம். அடுத்தது அந்தி வேளை. உலகம் அமைதியாக தோன்றும் நேரங்கள் அவை.  உங்கள் தியானம் எந்த வித  தடங்கல்,  இடையூ றில்லாமல் தொடர உதவும்''

என் மீது  தாயன்பு கொண்ட  கருணைப்  பார்வை,   அவரது தாடி முக  தெய்வீக அமைதி  என்னை கவர்ந்தது.  (படம் இணைத்திருக் கிறேன். இதை வெகு  நேரம்  இன்று காலை பார்த்துக்கொண்டே இருந்தேன் . நீங்களும் அனுபவியுங்கள்.) .
எனக்கு பொறாமையாக இருந்தது. அவர் இதயத்தில் உலகில் காலத்தால் ஏற்படும்  எந்த வித  சலனமும் இல்லை.  திடீரென்று சடக்கென்று ஒரு கேள்வி கேட்டேன்.
''ஐயா,நீங்கள் சொல்வது போல் செய்து கடைசியில் ஒருவேளை  உங்களையே என் குருவாக தேர்ந்தெடுத்து உங்கள்  உதவி கோரி அணுகலாமா?''

''இல்லை. முடியாது '' என்று  மஹா பெரியவா  தலையசைத்தார்.

"நான் ஹிந்து ஸநாதன  தர்ம மதத்தில்  பொதுவான ஒரு  மடத்தின் தலைவன்.  ஜகத் குரு . எனது நேரம் எனக்குச்  சொந்தமில்லை.  உலக நன்மைக்காக மட்டுமே. ஆகவே  எனது காரியங்களுக்கே  எனது நேரம் போதவில்லை.   பல வருஷங்களாக நான் தினமும் மூன்று மணிகள் தான்  தூங்க முடிகிறது. நான் எப்படி   தனிப்பட்ட முறையில்  சிஷ்யர்களை ஏற்றுக் கொண்டு  குருவாக உதவ முடியும்? உலக மக்களுக்கு  வழிகாட்டும்  குரு ஒருவரை நீங்கள் அணுகவேண்டும்.

"ஐயா, ஐரோப்பாவில் நீங்கள் சொல்வது போல் குருமார்களை காண்பது அரிது. '
'
புரிந்து கொண்டு தலையசைத்தார்.
"சத்யம்  உண்மை என்றும் இருக்கிறது. உங்களால்  கண்டுபிடிக்க இயலும் ''
"நீங்களே  அப்படிப்பட்ட ஒரு உயர்ந்த யோகியான  குருவை எனக்கு அறிவிக்க முடியுமா?
சற்று மௌனம்.
"எனக்கு  தெரிந்து  ரெண்டு மஹான்கள் உடனே  ஞாபகத்துக்கு வருகிறார்கள்.  நீங்கள் தேடுவதை உணர்த்த அவர்களால் முடியும்.   ஒருவர் வடக்கே காசி க்ஷேத்ரத்தில் உள்ளவர்.  பெரிய மாளிகை போன்ற  இடத்தில்  உள்ளார்  வெகு சிலரே  அவரை அணுக முடியும். இதுவரை  ஐரோப்பியர்கள் எவரும் அவரது தனிமையை  நாடியதில்லை.   அவரிடம் உங்களை அனுப்புகிறேன்.  ஆனால்  அவர்  ஐரோப்பியர்களை  ஏற்றுக்கொள்வாரா  என்பது சந்தேகம் தான். ''

''ரெண்டு பேர்  என்கிறீர்களே, இன்னொருவர்?''  என் ஆர்வம் கொதித்தது. அவசரம். அவசரம்.

''மற்றவர் இங்கிருந்து  தெற்கே சென்றால்  உள்ளடங்கிய ஒரு மலையில் இருப்பவர்.  சிறந்த உயர்ந்த ஞான குரு. அவரிடம் நீங்கள் செல்லவேண்டும் என்பது என்  கோரிக்கை''
''யார் அவர்?''
"அவரை  ''மஹரிஷி''  என்பார்கள்.   அருணாசலம்  எனும்  மலையில் வாசம்  செய்பவர். அருணாசலம் என்பது வட ஆற்காட்டில் உள்ள  ஒரு  ஞானச்சுடர் வீசும்  ஆன்மீக தெய்வீக க்ஷேத்ரம்.   அவரிடம் போக விருப்பமென்றால் வழி சொல்கிறேன்.'''

''மிக்க நன்றி குருநாதா. அவரை குருவாக ஏற்ற ஒருவர் அந்த பக்கத்துக்காரர் ஒருவர் எனக்கு ஏற்கனவே  தெரியும். ''
"ஓஹோ. அப்படியென்றால் நீங்கள்  அருணாசலம் செல்வீர்களா?''
''நிச்சயமில்லை.   நான் நாளை நான் தென்னிந் தியாவை விட்டு  செல்ல ஏற்பாடுகள் ஆகி விட்டது.''
"அப்படியென்றால்  நான் உங்களிடம்   ஒன்று கேட்கலாமா?'   'என்கிறார் மஹா பெரியவா பால் ப்ரண்டனிடம்.
''தாராளமாக ''
"மஹரிஷியைப்  பார்க்காமல்  தென்னிந்தியாவை விட்டு செல்வதில்லை என்று எனக்கு வாக்கு கொடுங்கள்''
மஹா பெரியவா கண்களில் எனக்கு  உள்ளூர உதவும்  அன்பும் நேர்மையும் கொண்ட பார்வை எனக்கு பிடித்ததால் நான் ''அப்படியே செய்கிறேன்'' என்று வாக்கு கொடுத்தேன்.



''சஞ்சலம் மனதில் வேண்டாம். நீங்கள் தேடு வதை நீங்கள் கண்டுபிடித்து அடையப் போகிறீர்கள்''
வாசலில் பக்தர்கள், தெருவில் போவோர் களின் குரல்  உள்ளே கேட்கிறது.

மஹா  பெரியவா,  காஞ்சிமடம்  ஸ்ரீ சங்கராச்சார்யர்  அருகே இருந்தவரிடம்  காதில் ஏதோ சொல்கிறார்  '' ப்ரண்டன்''  என்ற என் பெயர் மட்டும் எனக்கு  விளங்குகிறது.  தெளிவாக கேட்கிறது. 
"இந்த சந்திப்பை  நீங்கள் மறவாதீர்கள், நானும் உங்களை நினைவில் கொள்வேன்''  என்றார்மஹா பெரியவா. 
பால்ய  வயதில் இருந்தே தனது வாழ்க்கையை கடவுளிடம் அர்ப்பணித்த  அந்த  அற்புத  புனிதரி டமிருந்து விடை பெற மனதில்லாமல்  வெளியேறு கிறேன்.  உலகத்தில் எந்த அதிகாரத்தையும்  தேடாத, விரும்பாத  ஒரு மதகுரு. முற்றும் துறந்த உண்மையான ஒரு துறவி. உலக சம்பந்தப்பட்ட எந்த பொருளை யார் கொடுத்தாலும் அதை உடனே அங்கேயே  தேவைப்பட்ட ,மற்றவர்களுக்கு  அளித்து விடும்  ஞானி.  ஆம் .  சத்ய மாக அவர் சொன்னது போல் அவர் என் மனதில் நீங்காத இடம் பெற்று விட்டார்.''
++
மஹா பெரியவாளின்  கருணைக் கண்கள்  ப்ரண்டனைப்  பார்த்தன.  ஆன்மிகத்திற்கு எல்லை, மதம் நாடு மொழி வேறுபாடு உண்டா?  காஞ்சி மடத்தின் அருகேயுள்ள மசூதியிலிருந்து மாலை நேரம் தொழுகை ஒலி கேட்கும்போது, அது பகவானை எனக்கு ஞாபகப்படுத்தும்''   என்றவர் ஆச்சே. 

SURDAS

 

ஸூர்தாஸ்  - நங்கநல்லூர்  J K  SIVAN 

அன்பும் எளிமையும் நீ தானடா.

ஒரு காரியம் செய்வோம். உலகத்தில் இருக்கிற  எளிமை ,அன்பு, அத்தனையையும் சேகரித்து,   இது போல  வேறு எங்கும் எதுவும்  கிடையாது என்று சொல்லும்படி ஒரு  உருவம் அமைத்தால், அதைப் பார்த்து விட்டு எல்லோரும் எப்படி  உரக்க கோஷமிட்டு அடையாளம் கண்டு கொள்வார்கள்  தெரியுமா?  ''ஹரே கிருஷ்ணா,  ஹரே கிருஷ்ணா ''என்று தான்.  உலகத்தில் அதிகம் பேசப்படும் ஒரே பெயர்  ''கிருஷ்ணன் கிருஷ்ணன் கிருஷ்ணன்'' என்ற   ஒன்றே தான். இதில் என்ன சந்தேகம்?


இதை எப்படி நம்பலாம்?  அதற்கு ஒரு குட்டி சம்பவம் சொல்லட்டுமா?

கிருஷ்ணன் ஹஸ்தினாபுரம் போனான். பாண்டவர்களுக்காக தூது சென்றான். அவர்களுக்கு ஞாயம் கிடைக்க, கௌரவர்களுக்கு நியாயம் எடுத்து சொல்ல, யுத்தம் வேண்டாம் சமாதானமாக இருவருமே வாழுங்கள் என்று எடுத்துச் சொல்ல... ஆனால் யார் கேட்டார்கள்?
அவன்  ஹஸ்தினாபுரம் வந்தபோது  ''சரி, ஏதோ கிருஷ்ணன் இங்கே வந்துவிட்டான், என்ன செய்வது?. நமக்கும் வேண்டியவன். ஆகவே அவனுக்கு தங்க ஒரு நல்ல வசதியான அரண்மனை. நல்ல அருமையான சுவையான சாப்பாடு எல்லாம் ஏற்பாடு செய்தான் துரியோதனன்.
கிருஷ்ணன் தேர் ஹஸ்தினாபுரம்  வந்தவுடன்  ''வரணும். வரணும். எங்கள் ராஜோபசாரத்தை ஏற்று இந்த கௌரவர்களை கௌரவிக்கவேண்டும்'' என்று துரியோதனன்  நீலித்தனமாக உபசரித்தான்.

''இல்லை துரியோதனா , நான் விதுரன் குடிசைக்கு செல்கிறேன்'' என்று நிராகரித்து கிருஷ்ணன் விதுரன் ஆஸ்ரமத்துக்குச் சென்று அங்கே அவன் அளித்த  காய் கனி கிழங்குகளை, வேர்களை உண்டான். எளிமையான சாத்வீக உணவே போதும் என முடிவெடுத்தான். அவனுக்கு உணவு பெரிதல்ல. யார் எப்படி அதை அளிக்கிறார்கள் என்பது தான் முக்கியம். ஒரு சிறு இலை, ஒரு சொட்டு ஜலம், ஏதாவது காய்ந்த கனியாக இருந்தாலும் அன்பாக பக்தன் எதை கொடுத்தாலும் திருப்தி அடைபவன் அல்லவா?

இந்த  எளிமை, பக்தர்களிடம் பூரண அன்பு,  கிருஷ்ணனின்  இந்த  பிறவியில் மட்டும் அல்ல, அதற்கு முந்தைய ராமன் பிறவியிலும்  உண்டு.  ராமன் தண்டகாரண்யவனத்தில் சபரி எனும் முதிய பக்தையை சந்திக்கிறான். தேவர்கள் முனிவர்கள்  தங்களிடம் ''வருவானா என்று காத்திருக்கும்படியான  ராமன் என்னிடம் வந்திருக்கிறான் அவனுக்கு என்று நல்ல பழங்களை தரவேண்டும். எப்படி நல்ல சுவையான பழம் என்று கண்டுபிடிப்பது. பார்ப்பதற்கு அழகாக கவரும்படி இருக்கும்,  ஆனால்  கடித்தால் புளிக்கும். ஆகவே நாம் ஒரு ஓரத்தில் துளியூண்டு கடித்து சுவையானதாக இருந்தால் அதை ராமனுக்கு என்று தனியாக எடுத்து வைப்போம் என்று ஒவ்வொரு பழமாக கடித்து சுவைத்து ராமனுக்கு அளித்தாள் சபரி. அது தான் ராமனுக்கு பிடித்தது. அவன் எச்சில் என்று பார்க்கவில்லை. சபரி மேல் கோபம் கொள்ளவில்லை. மோக்ஷம் கொடுத்தான். அத்தனை எளிமை அன்பு....போதுமா"?

கிருஷ்ணனுடைய  எளிமைக்கும் அன்புக்கும் இன்னொரு உதாரணமும் தரட்டுமா?
அவன் இப்போது மாடு மேய்க்கும் பிருந்தாவன கோபர்களில் ஒருவன் அல்ல. மதுராபுரி மன்னன். துவாரகை அரசன். பல ராஜ்ஜியங்கள் அவனுடைய ஆளுமைக்கு அடக்கம். மஹா வீரன். எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம். மஹா சக்தி  வாய்ந்தவன்.

அவன் என்ன செய்தான்?. மஹா பாரத யுத்தத்தில் அவனுடைய வ்ருஷ்ணிகுல யாதவ குல நாரா யணி சைன்யங்களை அப்படியே கௌரவர்களுக்கு கொடுத்துவிட்டு வெறும் கையனாக பாண்ட வர்களுக்கு உதவ வந்தான். அர்ஜுனனுக்கு தெரியும். கிருஷ்ணன் மட்டுமே போதும். அவனுடைய  நாராயணி  சைன்ய உதவி வேண்டாம் என்று. ஆகவே கிருஷ்ணா,  நீ எனக்கு கொஞ்சம் தேர் ஒட்டு அது போதும். நான் உன்னருகே இருந்து கொண்டு உன்னோடு பேசிக் கொண்டு யுத்தம் புரிகிறேன். பார் என் வீரத்தை அப்போது '' என்றான் அர்ஜுனன்.

அவ்வளவு பெரிய மஹாராஜா கிருஷ்ணன், கர்வம் கொள்ளாமல், அகம்பாவம் இன்றி,  எளிமையாக அன்பாக, சாதாரண  ஒரு  தேரோட்டியாக கீழே தேர் தட்டில் அமர்ந்து குதிரை ஓட்டினான்.

இந்த அன்பால் தான் பிரிந்தாவனத்தில்  எண்ணற்ற கோபியர்கள் தங்கள் இதயங்களை அவனிடம் பறிகொடுத்தவர்கள்.

ஸூர்தாஸ் இதை தெரிந்து வைத்திருப்பவர். அதனால் தான் தனக்கும் அவன் அன்பில் பங்கு கேட்கிறார். கெட்டிக்காரர். கண் எதற்கு? துரியோதனன் போல் முட்டாள் தனமாக எதையாவது கேட்பதற்கு தான் அது வேண்டும்..

AVVAIYAR

 பாட்டி சொல் தட்டாதே  -   நங்கநல்லூர்  J K  SIVAN 


''
செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இரு நிதியம்?-வையத்து
அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று
வெறும் பானை பொங்குமோ மேல்!

என்  பின்னால்  தெரிகிறதே  ஒரு பெரிய  மலை  அது தான்  நான் செய்த  பாபங்கள். அவற்றை நானே  புரிந்து விட்டு  பகவானே  நீ ஏன் என்னை துன்பத்தில் ஆழ்த்துகிறாய்?  என்று கடவுளை நொந்து என்ன பயன்?  வாழ்வில் நான் சுகப்படுவதற்கு இனியாமாவது பாபங்களை செய்யாமல்   புண்யகாரியங்களில் ஈடுபட வேண்டும். மலையின் உயரம் பருமன் கொஞ்சம் குறையும். வெறும் பானையை நீர் நிரப்பி கொதிக்க வைத்தால் சாதம் கிடைக்குமா? அதில் அரிசி வேண்டாமா சாதமாகி வயிற்றின் பசியை போக்க ?  அருமையான கேள்வி கேட்கிறாள் பாட்டி.

பெற்றார் பிறந்தார் பெரு நாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் என வேண்டார்-மற்றோர்
இரணங் கொடுத்தால் இடுவர்; இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம்.18

அப்பா  அம்மாவாகட்டும், கூடப் பிறந்தவர்களாகட்டும், சொந்த பந்தங்கள் யாராக வேண்டு மானாலும் இருக்கட்டும்,  வேண்டியவன், நண்பன் எவனாக இருந்தாலும் வினர்கள், வேண்டியவர் என்று யாராய் இருந்தாலும், இந்தப் பெருலகில் பெருமை மிக்க நாட்டில் வாழ்பவர் ஆயினும், நச்சரித்து வற்புறுத்தினால்தான் கொடுப்பார்கள். வணங்கி  ஐயா  சாமி  என்று கெஞ்சிக்  கேட்டால் தரமாட்டார்கள்.   எங்காவது  பலமாக அடிபட்டால், உதை பட்டால்  அந்த இடம் காயம் ஏற்பட்டு ரணமாகிறது.   வன்முறையாலும்  சில விஷயங்களை  பெறலாம் என்பது பாட்டியின் அறிவுரை.

சேவித்தும் சென்று இரந்தும் தெண் நீர்க்கடல் கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டு இசைத்தும் போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம்.19

என் இளவயதில் பஞ்சம்  என்றால் என்ன என்று  அனுபவித்திருக்கிறேன்.  ரெண்டாம் உலகமகா யுத்தத்தின் போது  அரிசிக்கு  தட்டுப்பாடு.  பிரேசில் அரிசி என்று ரப்பர்  மாதிரி வெள்ளையாக நீள  வேகாத ஜவ்வு மாதிரி அரிசி சாதம்   ரேஷன் அரிசி அளவு  எங்கள் அனைவர்க்கும் போதாமல் கஞ்சியாக  காய்ச்சி  அம்மா கொடுத்தது ஞாபகம் இருக்கிறது.

ஒரு படி  அரிசிக்கு எவ்வளவு  இடம் போகவேண்டும்,  எவ்வளவு பேரை புகழவேண்டும், பொய்  நிறைய சொல்லவேண்டும். ஊர் ஊராக அலையவேண்டும்.  இதில் போட்டா போட்டி வேறே சமாளிக்கவேண்டும்.   எல்லாம்  சாண்  வயிறே உனக்காக, உன் பசிக் கொடுமைக்கு நாள்தோறும் ஒரு  பிடி  அரிசி  போதாதே,  படி அரிசி வேண்டுமே. கெஞ்சி பிச்சை வாங்குகிறோம். 

அம்மி துணையாக ஆறு இழிந்தவாறு ஒக்கும்
கொம்மை முலை பகர்வார் கொண்டாட்டம்-இம்மை
மறுமைக்கும் நன்று அன்று மாநிதியம் போக்கி
வறுமைக்கு வித்தாய் விடும்.20

ஆழமான ஆற்றில் நடந்து அக்கரை  அடையமுடியாதே . அதற்கு ஒரு  ஓடம் வேண்டும்.  அம்மிக் கல்லை போட்டு அதன் மேல் ஏறி அக்கரை  பெறமுடியுமா?   தனது  உடலை  யார் அதிகம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு என்று 
 ஏலம் போட்டு விற்கும்  பரத்தையரைக் கொண்டாடித் துய்க்கும் இன்பம் இவ்வுலக வாழ்க்கைக்கும், மறுபிறவி வாழ்க்கைக் கும் நன்மை பயக்காது. வைத்திருக்கும் பெருஞ் செல்வத்தை அழித்துவிடும். அது ஒரு விதை. கையில் காசில்லாதவனாக்கும் விதையோ வித்தையோ  என்னவோ   என்கிறார் பாட்டி. என்ன கோவமோ, யார் மேலோ ?


நீரும் நிழலும் நிலம் பொதியும் நெல் கட்டும்
பேரும் புகழும் பெரு வாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ் நாளும் வஞ்சமில்லார்க்கு என்றும்
தரும் சிவந்த தாமரையாள் தான்.21

செந்தாமரை மலரில் வீற்றிருக்கும்  மஹா லக்ஷ்மி, திருமகள்,  என்ன  அருள் புரிவாள் நமக்கு தெரியுமா?   வெயிலில் வருந்துபவர்க்கு நீரோடு கூடிய நிழல்,  நிலமெல்லாம் கட்டுக்கட்டாக நெல், பாரில் எல்லோரும் போற்றும் நல்ல பெயர், புகழ், பெருமையுடன் வாழும் வாழ்வு, நல்ல மக்களை உடைய ஊர், வளரும் செல்வம், ஆகியவற்றை  எல்லாம் தருவாள்.  யாருக்கு என்று கேட்கவேண்டாமா?  நெஞ்சில் வஞ்சம் இல்லாதவருக்குத் தான் இதெல்லாம் வழங்குவாள். கொடியவருக்கு அல்ல.

Tuesday, March 29, 2022

vainva vinnoli


வைணவ விண்ணொளி -  நங்கநல்லூர்  J K  SIVAN 

கூரத்தாழ்வான்.        

''அருமையான குருவும் அபிமான சிஷ்யனும் ''-2 

ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ ராமானுஜருக்கு நீண்ட நாள் பிரிந்திருந்த குழந்தைகளை மீண்டும்  பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி. விரைவில் ஸ்ரீ ராமானுஜரின் பிரதம சிஷ்யனானார் கூரேசர். ஆச்சர்யனின் வலது கரமாகவும், கண்ணாகவும், செவியாகவும் ஏன், மனசாட்சியாகவுமே சேவை சாதித்தார். சுருக்கமாக சொன்னால், கூரேசர் ஸ்ரீ ராமானுஜரின் நிழலானார்!. 

ஸ்ரீ ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. அனேக வைஷ்ணவர்கள் பின் பற்றினர். அடியார் கூட்டம் பலத்தது,  ஒரு சித்தாந்தம், கோட்பாடு,  தத்துவம் கொள்கை, சீர் பட வேண்டுமெனில் முறை ஒன்று தேவை அல்லவா?. எனவே ஸ்ரீ ராமானுஜர் "ஸ்ரீ ராமானுஜ தர்சனம்" எழுத ஆரம்பித்தார். 4 முக்ய சீடர்கள் (கூரேசர், தாசரதி, தேவராட், எம்பார்) உதவினர் இரவும் பகலும் வேத சாஸ்த்ரங்கள், சூத்ரங்கள் திருவாய் மொழி போன்று  பல நூல்களை எல்லாம் ஆராய்ந்து  அலசினர். விசிஷ்டாத்வைத சித்தாந்தம் படிப்படியாக உரு பெற்றது. ஸ்ரீ ராமானுஜர் வியாசரின் பிரம்ம சூத்ரத்துக்கும் பாஷ்யம் எழுத தொடங்கினார்.

" கூரேசா, நீ தான், நான் சொல்ல சொல்ல என்னுடைய  பாஷ்யத்தை எழுதணும். நான் எதாவது தடம் மாறி சொன்னா எழுதறதை நிறுத்தணும். உடனே நான் புரிஞ்சிப்பேன்".

இப்படி தான் ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீ பாஷ்யம் தோன்றியது. ஒருநாள் ஸ்ரீ ராமானுஜர் ஜீவாத்மா பற்றிய விளக்கம் சொல்லிக்  கொண்டு வந்தபோது கூரேசர் எழுதுவதை நிறுத்தினார். குருவை நோக்கி னார்.  பல நாட்கள் இரவுகள் சிந்தித்த எண்ண ஓட்டம் தடை பட்டதில் ஆசார்யனுக்கு கோபம் வந்தது. வயதாகி விட்டதல்லவா? எழுதுவது நின்றால் சிந்தனை தொடரில் பிசகு என்றல்லவா அர்த்தம்? வெடித்து விட்டார்  ஆசார்யன்.

"கூரேசா, என்னைக்காட்டிலும் நீ வியாசரின் சூத்ரத்துக்கு பாஷ்யம் சரியாக எழுதுவதாக நினைத் தால் நீயே எழுது. போ”” என்று கூரேசரை விரட்டினார். மற்ற சீடர்கள், "ஏன் கூரேசா,  இவ்வாறு செய்தாய்?" என வினவினர்.   என்ன விபரீதம் இது என நடுங்கினர். ”நண்பர்களே,  கவலை வேண்டாம். நான் ஆசார்யனின் அடிமை. அவர் என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், செய்யலாம்."

இதற்கிடையில் கூரேசர் எழுதியிருந்ததைப்  படித்த ஸ்ரீ ராமானுஜர் தான் சொல்லிக் கொண்டுவந்த வாசகத்தில் ஓரிடத்தில் முரண்பாடு இருந்ததையும் கூரேசர் அதை சுட்டிக்  காட்டியது சரி என்பதையும் உணர்ந்தார். ஜீவாத்மா தனித்வம் கொண்டதாக இருந்தாலும் இறைவனிடம் சேஷத்வம் கொண்டது என்று தான் கூரேசன் திருத்தியபடி இருக்கவேண்டும் என தனது தவறை அறிந்தார். "அடேடே , வெளிச்சத்தை பற்றி சொல்லும்போது அதற்கு காரணமான சூரியனை மறந்து போனேனே" என்று வருந்தினார், மஹா புருஷரல்லவா?.

”என் மகனே, கூரேசா,  நீ சுட்டிக் காட்டியது சரி தான். ஜீவாத்மா ஸ்வரூபத்தை நீ விளக்கியவாறே எழுது. மேலே தொடர்வோம்"

இவ்வாறே ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீ சம்ப்ரதாயம், ஸ்ரீ பாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த சாரம், வேதார்த்த சங்க்ரஹம், கீதா பாஷ்யம் எல்லாம் உருப்  பெற்றது . எங்கேயோ ஒரு நிரடல் ஸ்ரீ ராமானுஜருக்கு. விசிஷ்டாத்வைத சித்தாந்தம் பூரணமாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டு மானால் வியாசரின் " போதாயன வ்ருத்தி" என்கிற ஓலை சுவடு நூல் அவசியம். அதிலிருந்து மேற்கோள் காட்ட வேண்டும். அதை எங்கே தேடுவது? காஷ்மீரத்தில் ராஜாவுடைய லைப்ரரியில் கிடைக்குமா ? மற்ற பாஷ்ய காரர்களின் உரை ( குகதேவர், பருசி, தங்கா, திராமிடர்) எல்லாம் கூட ஒரே இடத்தில் காஷ்மீரத்தில் கிடைக்கலாமே.

ஸ்ரீ ராமானுஜர் வயதான காலத்திலும் கால்நடையாக திக்விஜயம் கிளம்பினார். போகுமிடமெல்லாம் விசிஷ்டாத்வைத பிரசாரம்!  வழியில்  எங்கெங்கெல்லாம் தங்கினாரோ அங்கெல்லாம் ராமானுஜ கூடங்கள், மடங்கள் எல்லாம் உருவாயின. கூரேசன் முதலான சிஷ்ய கோடிகள் ஸ்ரீரங்கத்திலிருந்து அவரைப் பின் தொடர்ந்தனர். காஷ்மீர் ராஜா அவ்வளவு சீக்கிரத்தில் ராமானுஜரையும் விசிஷ்டாத்வைத சித்தாந்தமும் ஏற்றுக் கொள்வானா? நாட்கணக்கில் பண்டிதர்களுடனும், வேதாந்திகளுடனும் விவாதம். முடிவில் ராமனுஜரின் மகிமை பெருமை எல்லாம் ராஜா உணர்ந்தான். கூரேசனுக்கு ராஜாவின் லைப்ரரியில் வேண்டிய ஓலைச் சுவடி தேட அனுமதி கிடைத்தது. தோற்றுப் போன  அரண்மனை பண்டிதர்களுக்கு பொறாமை ஞாயம் தானே? போதாயன வ்ருத்தி ஓலைச்சுவடி கிடைக்காதபடி செய்ய எண்ணம் வந்தது. ஓலைச்சுவடி லைப்ரரியை  விட்டு வெளியே நகரக்கூடாது. அங்கேயே படிக்கப்பட வேண்டும் என்று ராஜாவின்  அனுமதி பெற்றார்கள்.  ஸ்ரீ ராமானுஜரும் கூரேசரும் அங்கேயே படிக்க ரெடி. ஓலைச்சுவடியிலிருந்து குறிப்பு எடுக்கக் கூடாது என்று மற்றொரு கெடுபிடி.   விடுவாரா கூரேசர்?. ஆஹா அப்படியே அன்று முதல் அனைத்து ஓலைச்சுவடிகளையும் மனப்பாடம் செய்ய ஆரம்பித்தனர் இருவரும். வேறு வழியில்லை இந்த இருவரையும் கொல்வது தான் முடிவு என பண்டிதர்கள் தீர்மானிக்க இருவரும் காஷ்மீரை விட்டு வெளியேறினர்.

ஸ்ரீரங்கம் திரும்பியதும் ஸ்ரீ பாஷ்யம் எழுதத்  தொடங்கினர். கூரேசரின் அபார ஞாபக சக்தியால் ஓலைச்சுவடியின் அத்தனை விஷயங்களும் எழுத்தில் மிளிர்ந்தது. பல வருஷங்கள் ஆயிற்று இந்த அதிசயத்தை பூர்த்தி செய்ய. ஸ்ரீ ராமானுஜருக்கு பரம திருப்தி. கூரேசனின் புத்தி கூர்மையால் தான் தன் எத்தனையோ வருட கனவு நிறைவேறியது என மன நிறைவு. ஸ்ரீ வைஷ்ணவமும் ராமானுஜ ப்ரபாவமும் நாடெல்லாம் இப்போது பரவியது. அநேக சிஷ்யர்களும் தொண்டர்களும் அவர் பின் இப்போது. ராமானுஜர் வாசம் செய்த ஸ்ரீ ரங்கம் தான் வைஷ்ணவத்தின் தலைநகர் என ஆயிற்று. ஆசார்யனுக்கு தனது குருவுக்கு வாக்களித்ததை நிறைவேற்றியதில் களிப்பு.

 

maharishi ramana

 மஹரிஷி ரமணர் --   நங்கநல்லூர்  J.K. SIVAN


''1950  ஏப்ரல் 14  இரவு  8.47 மணி.''

திருவண்ணாமலை சென்னையிலிருந்து 120 மைல் தூரம். திருவண்ணாமலை ரயில் நிலையத் திலிருந்து 3 கி.மீ. ரமணாஸ்ரமம் என்ற பேர் தாங்கி ஒரு வளைவு. அதில் அநேக மரங்கள். ஒன்று 400 வயது இலுப்பை மரம்.    ஆலயத்தை ஒட்டி கிரி வல பாதையில் அக்னி லிங்கம் கடந்து இடது பக்கம் ரமணரின் ஆஸ்ரமம். அதை ஒட்டி சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆஸ்ரமம்.  அங்கே  நடக்கும்போது என் மனதில் எங்கிருந்தோ ஒரு ஆனந்த அமைதி ஓடிவந்து நிரம்பியது.

ரமணாஸ்ரமத்தில் அநேக குரங்குகள், மயில்கள், வெள்ளைக்கார ஆண்கள் பெண்கள், இந்தியாவின் பல பகுதி மக்கள்,    ரமணர் சிலையோடு ஒரு பெரிய நிசப்தமான தியான மண்டபம். ரமணர் அறைகள். சில குரங்குகள் என் கையிலிருந்து வேர்க்கடலை பெற்றுக் கொண்டன, சிலது என் கையில் வாயை வைத்து தின்றன. பயம் எனக்கோ குரங்குகளுக்கோ துளியும் இல்லை. மயிலிடம் நான் இந்த விளையாட்டை வைத்துக் கொள்ளவில்லை. வேர்க்கடலை கொத்தும்போது கையில் துளை போட்டுவிடும். கூரான பலமிக்க அலகுகள். எனவே அவை என்னருகே சுவர்  மேடையில்  வைத்த  வேர்க்கடலையை   ஏற்றுக் கொண்டன.

வெள்ளைக்காரர் ஒருவர் கட்டு  குடுமியோடு வேஷ்டி ஜிப்பாவுடன் நெற்றியில் குங்குமத்தோடு பளிச்சென்று ஒரு ஜன்னல் மேல் அமர்ந்து கொண்டு கண்ணை மூடி சிலையாக தியானத்திலும், ஒரு பெண் காட்டன் புடவையில் எளிமையோடு கால் நீட்டி மடியில் ஒரு உபநிஷத் புஸ்தகத்தை வைத்து படித்துக் கொண்டும் வெகுநேரம் தென்பட்டார்கள்.

வரும்போது எப்படி பார்த்தேனோ அப்படியே நான் திரும்பும்போதும் அவர்கள் அவ்வாறே. யார் வாந்தாலும் போனாலும் கவனம் சிதறாது அவர்கள் கருமமே கண்ணாயிருந்தது மிக்க ஆச்சரியம். . மற்றும் சிலர் சௌகர்யமாக கால் மடித்து உட்கார்ந்து யோகிகள் போல் கண்ணை மூடி தியானத்தில் இருந்த காட்சியை படம் பிடிக்க மனம் இடம் கொடுக்க வில்லை.

ரமணரின் தாய் அதிஷ்டானம் ஒரு சிவலிங்கத்தோடு ஒரு கோயிலாக உள்ளது. மாத்ரு பூதேஸ்வரர் ஆலயம் என்று பெயர் அதற்கு.

 ரமணரின் அதிஷ்டானம் மற்றொரு ஆலயமாக வழிபாட்டுக்கு எண்ணற்றோரை வரவேற்கிறது. அவர் மீது பாசம் கொண்ட பசு லக்ஷ்மிக்கு ஒரு சிலை. அழகாக நிற்கிறது. ஆலயமாக. லக்ஷ்மியைப் பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேனே.

என் மனத்திரையில்  காட்சிகள் படபடவென்று கருப்பு வெளுப்பாக  ஓடியதைச்  சொல்கிறேன்: 

1948ல் மகரிஷி ரமணரின் இடது கையில் ஒரு புற்றுநோய் கட்டி. ஆபரேஷன் செய் கட்டியை அறுத்து  எடுத்தார்கள். 1949ல் ரேடியம் சிகிச்சை செய்தார்கள். அவர் லக்ஷ்யமே பண்ணவில்லை. யாருக்கோ எங்கோ ஏதோ நடப்பது போல் தான் இருந்தார். தோளிலிருந்து வலது கையை எடுத்தால் உயிர் தப்பலாம் என்கிறார் டாக்டர். அவசியமே இல்லை. தேவையற்ற வேலை என்றார் மகரிஷி. ஆகவே மீண்டும் ரெண்டு மூணு ஆபரேஷன் செயது பார்த்தார்கள். மருந்துகள் அவரை உடல் வலிமையற்ற வராகச் செய்தது தான் மிச்சம்.

'' நீங்களே ஏன் உங்களை பாதிக்கும் கட்டியை புற்றுநோயை போக்கிக் கொள்ளக் கூடாது'' என்று கெஞ்சிய பக்தர்களை மகரிஷி வேடிக்கையாக சிரிப்புடன் நோக்கி 

''இந்த உடல் மேல் அவ்வளவு அக்கறையா? தேவையா?'' நான் எங்கே போகப் போகிறேன். இங்கே தானே இருப்பேன், நான் இந்த  உடல் என்றா  நீங்கள் இன்னும் நினைத்துக் கொண்டிருக்க்கிறீர்கள்?' என்றார்.

ஒரு பூட்டிய சிறிய அறையில் ( நிர்வாண அறை என்று பெயரோடு) அவர் வாழ்ந்த போது கடைசியாக எப்படி இருந்ததோ அப்படியே வைத்திருக்கி றார்கள். கமண்டலம், திருவோடு, ஒரு கட்டில் அருகே ஒரு அலமாரியில் பழைய அலாரம் டைம் பீஸ். அது காட்டும் நேரம் 8.47 இரவு. ஆம் அன்று 14.4.1950 மகரிஷி ரமணர் நிர்வாணம் அடைந்த நேரம்.

பகவான் ரமண மஹரிஷி  தனது  இடது முழங்கையை தேய்த்துக்கொண்டு ஒருநாள்  1948 கடைசி யிலோ 1949  ஆரம்பத்திலோ  தனது  தேகத்தை விட்டு  விலகுவது பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.  அவர் இடது முழங்கை பகுதியில் ஒரு வேர்க்கடலை அளவு ஒரு கட்டி , கொப்புளமாக இருந்த காலம் அது. கொஞ்சம் கொஞ்சமாக அது வளர்ந்தது. வலியும்  அதோடு கூடியது.   ரமண ரிஷி வெளியே இருந்து எந்த  டாக்டரையும் கூப்பிடவில்லை.  ஆஸ்ரமத்திலிருந்த, தனக்கு அடிக்கடி மருத்துவம் செய்யும் ஒரு டாக்டரிடம் ''இதை வெட்டி விடுங்களேன்'' என்று சொல்லியிருக்கிறார்.

ஒருநாள் காலை அவர்  உணவு உட்கொள்ளும் முன்  குளியறையில் அந்த கட்டியை டாக்டர் வெட்டி எடுத்தார்.  கையில் கட்டு போட்டால்  பக்தர்கள் மனது சங்கடப்படுமே என்று  ஒரு துணியை அதன் மேல் சுற்றி இருந்தார்.

'' சுவாமி  கையில் என்ன  துணி சுற்றி இருக்கிறீர்கள் ''என்று அனைவரும் கேட்க ஆரம்பிக்க சிரித்துக் கொண்டே 
''இதுவா, அது ஒரு  கங்கணம்.  என் முழங்கையில் ஒரு சிவலிங்கம் ஸ்வயம்புவாக வளர்ந்து வருகிறதே'' என்பார்.  சில  மாதங்களில்  அந்த  முழங்கை கட்டி  ரத்தக்கட்டி  tumour  என்று உறுதி யானது.  அதை ஆபரேஷன் செய்ததும் காயம்  ரணம்   ஆச்சர்யமாக  சில  வாரங்களில் குணமா கியது.   பக்தர்கள் மனம் மகிழ்ந்தது.  ரமணரை பொறுத்தவரை  கட்டியோ, அதன் வலியோ  மனதில் பதியவில்லை.
ஒரு மாதகாலம்  சென்றபின்  மீண்டும் கட்டி தலை தூக்கியது.  மறுபடியும்  ஆபரேஷன் செய்தவர்கள்.  அதை சோதனை செய்தபோது அது புற்று நோய்க்  கட்டி என்று தெரிந்தது.  ரேடியம் சிகிச்சை துவங்கினார்கள்.  ரணம் இந்த முறை  ஆறுவதாக இல்லை.  அவரது கையை  துண்டிக்கவேண்டும் என்ற நிலை வந்தது.

''அதெல்லாம் எதற்கு?  இந்த உடம்பே ஒரு வியாதி பிண்டம்.  அதுவாக இருக்கும் வரை இருந்து விட்டு போகட்டுமே'' அதை எதற்காக துண்டிக்கவேண்டும்?  அந்த இடத்தை  சுத்தம் செய்து கட்டுப்போட்டு வையுங்கள்  அது போதும் என்றார்.  கட்டியை ஆபரேஷன் செய் து  மருந்து வைத்து கட்டுப்போட் டார்கள். அவர் கட்டியையோ அதன் வலியையோ அறியவில்லை.

சூரிய வெளிச்சம் கொஞ்சம் உதவும் என்று டாக்டர்கள் சொல்ல  ரமணர் தினமும்  கோசாலையில் மாட்டுக்கொட்டில் பின்னால் கட்டவிழ்த்து  காயம் சூரிய ஒளியில் பட உட்கார்வார்.   ரத்த கட்டியை பார்த்து ஆஹா  என் உடலில் விலையுயர்ந்த  பவழமும்  இருக்கிறதே.   சூரிய ஒளியில் எப்படி தகதக வென்று ஜொலிக்கிறது   என்று கேலியாக சொல்லி சிரிப்பார். எனக்கு இப்படி ஒரு விலையுயர்ந்த ஆபரணமா?''  என்பார்.

புற்றுநோய்  தனது வேலையை அதிவேகமாக தொடங்கிற்று. அவரது உடலின் ரத்தக்குழாய்களில் பரவ ஆரம்பித்தது.  ஆபரேஷன் பண்ண பண்ண  மீண்டும் மீண்டும்  ராவணனாக தலை முளைத்தது.

மூன்றாவது ஆப்பரேஷன் ஆயிற்று. அது முடிந்த சில மணி நேரங்களில் மகரிஷி  ஏராளமான  பக்தர்களின்  விருப்பத்துக்  கிணங்கி  தரிசனம் கொடுத்தார்.

மறுநாள்  டாக்டர்கள்  திரும்பினார்கள் .  ரமண மஹரிஷி தரிசன மண்டபத்துக்கு வந்தார். யாரையும் காக்க வைக்க விரும்பவில்லை.

1949 டிசம்பர்  இன்னொரு  ஆபரேஷன் நடந்தது.   அதனால் குணமடைவதற்கு பதிலாக  புற்றுநோய் வலுவடைந்தது.

ஆங்கில வைத்தியம் தவிர   ஹோமியோபதி, ஆயுர்வேத   சிகிச்சை முறைகளும் பின்பற்றினார்கள்.   தினமும்  சாயந்திர வேளையில்  நடை உண்டு.   அப்படி ஒருநாள்  நடக்கும்போது  ஜுரத்தில் உடல் நடுக்கம் கண்டது.  நடக்க முடியவில்லை.  அவரது  சாய்மானமான ஆசனத்தில்  அமர்ந்து விட்டார். உடம்பில் நடக்க சக்தி இல்லை.  பக்தர்கள் வருந்தினார்கள்.

உடல்நிலையை பற்றி யாராவது கேட்டால் ''அதற்கு என்ன? அதற்கு தேவை உள்ளே இருக்கும் உயிர். அதான் இன்னும் இருக்கிறதே. அது எல்லோருக்கும் திருப்தி தானே?  இன்று கொஞ்சம்  நடராஜா  டான்ஸ்  ஆடுகிறது தெரிகிறது   எப்போதும் உள்ளேயே  ஆடுவது இன்று தாண்டவ தரிசனம்  கொஞ்சம் வெளியேயும் தெரிகிறது. அதெல்லாம் பற்றி துளியும் கவலை படாதீர்கள்'' என்கிறார்.
 
நாட்கள் நகர்ந்தன. ஒருநாள்  குளியலறை செல்ல மெதுவாக நடக்கிறார்.  உள்ளே நுழையும் முன்பு கால் தடுமாறுகிறது. விழுகிறார்.  இடுப்பு, கால்களில் பலத்த அடி . துளியும் லக்ஷியம் செய்யாமல் யார் உதவியும் தேடாமல் தானே  மெதுவாக எழுகிறார். நிற்கிறார்.  உடலில் ஆடையெல்லாம் சிகப்பாக ரத்த வெள்ளம்.  எலும்பு முறிந்துவிட்டது.  அவரிடம் எந்த  பாதிப்பும் இல்லை.  கொஞ்சமும் சத்தமே இல்லை.
செய்தி பரவியது.  அவர் விழுந்ததை எலும்பு முறிவை பிரகடனப்படுத்த வேண்டாம் என்று சொல்லி விட்டார்.   விழுந்ததால்,  எலும்பு முறிவால் உண்டான வலியையும், ஏற்கனவே பலமுறை ஆபரேஷன் செய்து வலிக்கும் புற்று நோய் கட்டியால் உண்டாகும் வலியையும்,   கொஞ்சமும் பொருட்படுத்தாமல் எல்லோருக்கும்  விடி காலை யிலிருந்தே  தரிசனம் கொடுக்கிறார்.   யாருக்கும் நடந்ததே தெரியாத படி அவரிடம் எந்த வித்தியாசமும் இல்லை.

இப்போதெல்லாம் அவரால்  படிகள் ஏறி நடக்க  முடியவில்லை.  தினமும்  கிழக்கு வாசல் வழியாக வருவது இப்போது முடியாமல்  நின்றுவிட்டது.  அங்கே  கொஞ்சம் படிகள் உண்டு. எனவே வடக்கு வாசல் வழியாக  மண்டபம்  வாருங்கள் என்று சொல்கிறார்கள்.  

 ''அதெல்லாம் வேண்டாம். வடக்கு வாசல் பெண்  பக்தர்கள்  உபயோகிக்கும் பிரத்யேக வழி. அதை யெல்லாம் மாற்றவேண்டாம்.   தரிசன மண்டபம் வர  முடியாத போது  கிழக்கு வாசல் அருகே இருக்கும்  தன்னுடைய  சிறிய அறையில்  இருப்பார்.  அதை தான்  'நிர்வாண  அறை''  என்கிறார்கள்.  அங்கே தான் மகரிஷி தேக வியோகம் அடைந்தார். இன்றும் ரமணாஸ்ரமத்தில் அந்த அறையை பார்க்கும்போது  என்னை அறியாமல் கண்களில் நீர் வடிகிறது.

காலம்  யாருக்கும் காத்திருக்க வில்லை. 1950ம் வருஷம்  ஏப்ரல் மாதம் ஆரம்பத்திலேயே  இனி பகவான் ரமண மகரிஷி அதிக காலம்  தேஹத்தோடு  காட்சி தரப்போவதில்லை என்று ஊர்ஜிதமாகி விட்டது.    ஆனால்  அவரோ தொடர்ந்து வழக்கம் போல  தரிசன மண்டபம் மெதுவாக வந்து கஷ்டப்பட்டு சாய்வு நாற்காலி சோபாவில் உட்காருவார்.  நமது அருமை குரு இன்னும் அதிக காலம் நமக்கு கிடைக்க மாட்டார் என்று பக்தர்கள் அறிந்து வாடினார்கள். கூட்டம் கூட்டமாக அவரது தரிசனம் பெற ஓடி வந்தார்கள். அவர் உடல்  கொஞ்சம் கொஞ்சமாக மரணித்துக் கொண்டிருந் தாலும்  அவர் உடலில் ஒரு அபூர்வ ஒளி வீசியது.  அவரது சிரமத்தை பார்த்து  யாராவது கண்ணீர் விட்டால்  அவர்  பொறுக்க மாட்டார்.

''ஏன் நான் இறப்பதை பற்றி  உங்களுக்கு வருத்தம்.  நான் எங்கே போய்விட்டேன்? எங்குமே போகவில் லையே.  எங்கே போவேன் நான்?  எப்போதும் இங்கேயே தான் இருக்கிறேன்'' என்று சமாதானம் சொல்வார்.

1950  ஏப்ரல்  10 - அதிகமான பக்தர்கள் கூட்டம் பெருகியது.   இப்படி தரிசனம் தருவது மகரிஷிக்கு  ரொம்ப கடினம், கஷ்டம் தான்.  உடல் ரீதியாக கொஞ்சம் கூட முடியவில்லை.  என்றாலும்  அளவற்ற இரக்கம் கருணை கொண்டவர் என்பதால்  முடியாத போதும்  முகத்தை பக்தர்கள் பக்கமே,   தரிசன நேரம் முழுதும்,   திருப்பி வைத்துக் கொள்வார். அதில் அவர்  அனுபவிக்கும் எந்த  உபாதையின் அடையாளமும் தெரியாது. அவரது  ஆசனம் கிழக்கு மேற்காக .  அந்த சின்ன அறையின் வாசல் தெற்கு பக்கம்.   அறையின் கதவு திறந்திருக்கும். அந்த பக்கத்தை  நோக்கியே  ஒருமணி நேரத் துக்கும்  மேலாக  அசையாமல்  முகத்தை திருப்பி வைத்துக் கொண்டு தரிசனம் தருவார். அதனால் கழுத்து வலி உண்டாகும். அவர் அதை லக்ஷியம் பண்ணுவதில்லை.  அவரது உடல் நிலைக்கு இதெல் லாம் ரொம்ப சித்ரவதை தான்.  அவர் தான் எதையுமே பொருட்படுத்து வதில்லையே.  தரிசனம் கொடுப்பதை நிறுத்தவில்லை. நேரத்தையும் குறைத்துக் கொள்ளவில்லை.
கொஞ்சம்  பழச்சாறு,  இளநீர் க்ளுகோஸ் கலந்து, தக்காளி சாறு மட்டுமே கொடுத்து வந்தார்கள்.

1950  ஏப்ரல் 12   தனது சோபாவில்  sofa  முழு நீளமாக படுத்திருந்தார். குழி விழுந்த கண்கள். தொங்கிய கன்னங்கள், வெளிறிய முகம்,  ஒளி குன்றிய தேகம் ....  அவரது சக்தி குறைந்து கொண்டே வருவதை உணர்த்தியது.  தீபம்  அணையப்போகிறது . சுடர் பிரகாசம் இன்னும்  அடங்கவில்லை.  
மூன்று பக்தர்கள் கால்களை அமுக்கி விட்டார்கள்.  இடுப்புக்கு மேல் வலி ஜாஸ்தியாக இருக்கும் என்று  அவர்கள் அறிந்து அதை தொடுவதில்லை. அவரும் ஒன்றும் சொல்வதில்லை.  காலை ஒன்பது மணிக்கு   அரை மணி நேர தரிசனம் கொடுத்து வந்தார்.   சில சமயம் மட்டுமே  முகத்தை  தெற்கு பக்கம் வலியோடு திருப்ப முடிந்தது.  அவரது நினைவு அடிக்கடி தப்பியது.  டாக்டர்கள் பக்தர்களை அங்கிருந்து விலக்கினார்கள்  அவரை மேற்கொண்டு  மருத்துவ  சோதனைகளுக்கு ஆளாக்க வில்லை.
உடல் கொஞ்சம் கொஞ்சமாக பயனற்றதாக  நிலைமை மோசமாகியது.  சாறுகள் நீர் கூட இப்போது உள்ளே செல்லவில்லை.  மலஜலம் நின்றுவிட்டது.  நாடி ரொம்ப ரொம்ப தளர்ந்து விட்டது. ரத்த அழுத்தம் குறைந்து  விட்டது.  இதயம் துவண்டது.  ஜுரம்  அதிகமாகியது.  விக்கல் அதிகரித்தது.  

சாயங்காலம் மகரிஷி ஹீன ஸ்வரத்தில்  ''காலம்பற ரொம்ப பேர்  வரிசையாக காத்திருந்தாளா?'' என்று கேட்டார். அவர் கவனம் அப்போதும் பக்தர்கள் மேல் தான்.

''இல்லை குருநாதா, நாங்கள் தரிசனத்தை நிறுத்திவிட்டோம்''

''பக்தர்கள் தரிசனம் காண வந்தபோது தடுத்தால்  நான் இனி ஒரு துளி ஜலமும் பருகமாட்டேன்'' என்று ஆணையிட்டார்..
          
ரமணாஸ்ரமத்தில் எவர் முகத்திலும் ல் சந்தோஷம் இல்லை. எத்தனையோ கண்கள் குளமாக காட்சி அளித்தன.

1950  ஏப்ரல்  13ம் தேதி..  மகரிஷிக்கு நுரையீரல் அடைப்பு.  மருந்துகள் கொடுத்து ஸ்வாசம் சரியாக டாக்டர்  அருகே செல்கிறார்.  
''ஒண்ணும்  பண்ண வேண்டாம்.  இன்னும் ரெண்டு நாள்  தான் இருக்கு. எல்லாம் சரியா போயிடும்''   மகரிஷி டாக்டரை மருந்து கொடுக்க அனுமதிக்கவில்லை. .
சில மணி நேரங்கள் நகர்ந்தன.   மகரிஷி  ஒருவரை கூப்பிட்டு  எல்லோரையும்  அங்கிருந்து போக சொல்லிவிட்டார்.
''நான் தனியாக இருக்கவேண்டும். எல்லோரையும்  இங்கிருந்து போகச்சொல்லுங்கள்''  அவருக்கு பணிவிடை செய்யும்  ரங்கசாமி நகரவில்லை. அவர் காலடியிலேயே உட்கார்ந்திருந்தார்.  

காலையில்  ரங்கசாமியை ஜாடை காட்டி  அழைத்து மகரிஷி அவரிடம்  ''தேங்க்ஸ் '' என்று ஆங்கிலத்தில் சொன்னார். ரெங்கசாமிக்கு இங்கிலிஷ் தெரியாது. விழித்தார்.  மகரிஷி சிரித்துக் கொண்டு  ''ஆங்கிலத்தில்  தேங்க்ஸ்  என்று ஒரு வார்த்தை உண்டு '' நமக்கு  அதற்கு சரியாக ஒரு வார்த்தை  சொல்ல வேண்டும் என்றால் ''சந்தோஷம் '' என்கிறார் .

காலையிலிருந்து  மதியம் வரை பக்தர்கள் திறந்திருந்த  மஹரிஷியின் சின்ன அறையை  எட்டிப் பார்த்த வண்ணம் இருந்தார்கள்.  குருவை தரிசிக்க  தீராத  ஆர்வம்  ஆசை.   மஹரிஷியின் தேகம் ரொம்ப க்ஷீணமாகி விட்டது. எடை அதிகம் குறைந்துவிட்டது. விலா  எலும்புகள் வெளியே சருமத்தை பிளந்து வெளியே வரும்போல் தோன்றின.  மஹரிஷியின் உடல் கருத்து விட்டது.  அவரை இந்த நிலையில் பார்த்த பக்தர்கள் கதறினார்கள்.

ஞானிகளுக்கு  வலிக்காது என்று தப்புக்  கணக்கு போடுகிறோம்.  ரமணருக்கு  கடுமையான வலி இருந்தது.  தனியே  இரவில் அவர்  துன்பத்தால் வாடுவது தெரிந்தது.  பிறர்  கவனிக்காத போது தான் அவர் தனது உபாதைகளை, வலிகளை  வெளிப்படுத்தினார்.   சோபாவில் படுத்தவாறு முனகுவது தெரிந்தது. வலி ஏற்படுவது உடலுக்கு  இயற்கை யானது என்பார்.   சாதாரண மானவனாக இருந்தாலும்  சன்யாசிகளில் ராஜாவாக இருந்தாலும்  உடலை கத்தியால் வெட்டினால் ரத்தம் பீறிடும்.  வலி பெருகும்.  ஆனால் அந்த உடலின் அவஸ்தையை எப்படி உணர்கிறோம்,  வெளிப் படுத்துகிறோம் என்பதில் தான் வேறுபாடு உள்ளது.

எவ்வளவு வலி, கஷ்டம், உடல் பாதிப்பு இருந்தபோதிலும்  ரமண  மகரிஷி கடைசிவரை பக்தர்கள் தரிசனம் செய்ய வருவதை தடுக்க   வில்லை.   அவர்கள் மேல் அவரது த்ரிஷ்டி,  கருணையோடு அன்போடு,   படிந்து  கொண்டே இருந்தது.   ஆஸ்ரமத்தில் வாழ்ந்த  இதர ஜீவன்கள் , பறவைகள், மிருகங்கள் மீது அதிக அக்கறையோடு கடைசிவரை  அவரது பாசமும் நேசமும் நிறைந்திருந்தது.

அவர் மறையும்  சில மணி நேரங்கள் முன்பு  ஆஸ்ரமத்தில் அனைத்து மயில்களும் உரக்க கத்தின. அருகில் இருந்தவரை  மெதுவாக  கையசைத்து  கூப்பிட்டு  ஈனஸ்வரத்தில்   ''மயிலுக்கு  எல்லாம்  ஆகாரம் போட்டாச்சா?'' என்று கேட்டார்.  அவை  அவரது அறையைச்  சுற்றி சுற்றி வந்தன.  பசுக்கள், நாய்கள், குரங்குகள் எல்லாமே  நிம்மதியின்றி  அமைதியின்றி இருப்பது தெரிந்தது.  எஜமானனுக்கு உடல் நிலை ஆபத்தான நிலையில் உள்ளதை அறிந்து  செய்வதறியாது திகைத்தன.   ஒரு வெள்ளை மயில் அடிக்கடி மஹரிஷியின் அருகே நிற்கும்.    அது விடாமல் அவர் இருந்த நிர்வாண அறையின் கூரையில்  ஏறி நின்று வாய் ஓயாமல் கத்தியது.
எத்தனையோ பக்தர்களின்  குரல்கள்  ''பகவானே எங்களை விட்டு போக எப்படி மனம் துணிந்தது?'' என்று கதறியபோது  
''எதற்கு இத்தனை முக்யத்வம் இந்த தேகத்துக்கு கொடுக்கிறீர்கள்?  உங்கள் குரு இந்த தேகம் இல்லை.  இந்த தேகம் இல்லாவிட்டாலும் கூட உங்கள் குரு உங்களை விட்டு போகமாட்டார். உங்களில் நான் உண்டு, என்னில்  நீங்கள் உண்டு. சந்தோஷமாக சென்று வாருங்கள்'' 
என்று   சமாதானம் செய்து  அனுப்பினார்.  என்னுடைய  பக்தன் என்ற நினைப்பே வேண்டாம்.  அழுகை துக்கம் ஒன்றுமே வேண்டாம். மேலும் மேலும் துன்பப்படுவதற்கு இந்தமாதிரி ஒரு காரணம் வேண்டவே வேண்டாம்.  உங்களால் எனக்கு எதையும் தரவும் இயலாது.  நானும் பெற முடியாது.  அமைதியாக அமர்ந்து ; எனது அன்பை அனுபவியுங்கள். உங்கள் மேல் எனக்குண்டான ஆர்வம், நேசம் அதை உணருங்கள்.  அது சந்தோஷத்தோடு என்னை உங்களோடு பிணைக்கும்.. வேறெதுவும் வேண்டாம் ''
1950  ஏப்ரல் 14ம் தேதி.   சாயந்திரம்.  எந்த கணமும்  பகவான் இந்த பூத உடலில் இருந்து புறப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.  பெரிய  தலையணைகளில் அவர் சாய்ந்து கொண்டிருந்தார். உட்கார்ந்தவாறு  அவர் தலையை பின்புறம் சாய்த்து அதில் அமர்ந்திருந்தார்.  வாய் திறந்திருந்தது. ஸ்வாசம்  சிரமமாக இருந்தது.  சில நிமிஷ நேரங்கள்  அவருக்கு பிராணவாயு செலுத்தினார்கள். அதால் பயனில்லை.. அதை யெல்லாம் எடுத்து  விடுங்கள் என்று சைகை காட்டினார்.

கடைசி நிமிஷங்களில்  ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ( தமிழக முதல்வராக இருந்தவர்)  மகரிஷி  கூட  இருந்தார்.   அவர் படும் சிரமத்தை பார்த்து ஒரு திரை போட்டு  தரிசனம் வேண்டாம் என்று  தரிசன கூட்டத்தை விலக்கினார்.  மகரிஷி படும் அவஸ்தையை அவரும் கண்ணால் காண இஷ்டப்படவில்லை.  

மகரிஷி தன்னை நிமிர்த்தி உட்கார வைக்கச்  சொன்னார்.   'அருணால சிவா...'' என்று அருகிலிருந் தோர்  தியான பாராயணம் செய்தார்கள் .  மகரிஷி காதால் அதை சந்தோஷமாக கேட்டார்.  கண்களை அகல திறந்து நோக்கினார்.  கண்கள் ஒளி வீசின.  புன்னகைத்தார்.  கண்களில் நீர் பெருகி  ஒட்டிய கன்னத்தில் வழிந்தது.  பத்மாசனத்தில் அமர்ந்தார். ஒரு பெருமூச்சு  விட்டார் . பிறகு அசைவில்லை.  அப்போது நேரம்  இரவு 8.47. 
அவருக்கு விசிறிக் கொண்டிருந்தவர்கள் நிறுத்தினர்.  வெளியே  விசிறும் சப்தம் கேட்கவில்லை என்பதிலிருந்தே திரைக்கு வெளியே இருந்த பக்தர்கள் புரிந்து கொண்டார்கள்.   பகவான்  ரமண  மகரிஷி இனி பூதவுடலில் இல்லை.  உடைந்து போன இதயங்கள் வெகுநேரம் அழுதன.

 அன்றிரவு  8.47க்கு   விண்ணில் ஒரு  வால்  நக்ஷத்ரம்  பளிச்சென்று மின்னி   விரைந்து சென்று அருணாசல மலைகள்  மேல் பறந்து சிகரத்தின் பின் மறைந்ததை  பார்த்ததாக பல பத்திரிகைகள் மறுநாள் எழுதின.
ஹென்றி கார்டியர் ப்ரெஸ்ஸன்  என்கிற  பிரெஞ்சுக்காரர் புகைப்பட நிபுணர்,   ரமண  பக்தர்  திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் வசித்தவர் என்ன சொல்கிறார்  :

'' நான் என் வீட்டின் வெளியே  அப்போது இருந்தேன். என்னோடு இருந்த நண்பர்கள்  ''அதோ பார் ஒளிவீசி வானில் ஏதோ ஒரு நக்ஷத்திரம் வால்  நீண்டு பறக்கிறது ''என்று என்னை கூப்பிட்டு காட்டினார்கள். அது மாதிரி நான் பார்த்தது இல்லை.  கடிகாரம் அப்போது இரவு  8.47 என்று காட்டியது. ஆஸ்ரமத்துக்கு ஒடினோம். எங்கள் மனதிலிருந்த பயம்  உறுதியாகியது.  அங்கே  அந்த குறிப்பிட்ட நேரத்தில் பகவான் மஹா நிர்வாணம் அடைந்தார் என்று அறிந்து கொண்டோம்.''
 

 


GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...