Sunday, March 6, 2022

MAHA BARATHAM

 


ஒரு  மஹா பாரதப்  போர் சம்பவம் 
- நங்கநல்லூர்  J K   SIVAN 


மஹா பாரத  யுத்தத்தில்  14வது நாள் யுத்தம்  ரொம்ப  கொடியது. சூரியன் போல் தஹித்துக் கொண்டு   எதிரே தென்பட்டவரையெல்லாம்  காட்டுத்தீ போல் அழித்துக் கொண்டு முன்னேறினார்  துரோணாச்சாரியார். அவர் தான்   பீஷ்மர்  வீழ்ந்தவுடன் பொறுப்பேற்று  கௌரவ சேனையின் தலைமை தளபதியாக   வழி நடத்தியவர். முதல்  மூன்று நாடிகளில்  எஞ்சியிருந்த  அக்ரோணி சைன்யத்தை கட்டி காப்பாற்றிக்கொண்டு எதிரிகளை நிர்மூலமாக்க முன்னேறிக் கொண்டிருந்தார் துரோணர்.

அவருடைய  வில்லிலிருந்து புறப்பட்ட  சரங்களை எதிர் கொள்ள முடியாமல் திணறினான்  அர்ஜுனன்.  பாண்டவர் படை பின் வாங்க தொடங்கி விட்டது.  வெகு சீக்கிரம் துரோணர்  யுதிஷ்டிரனை சிறை பிடித்து விடப்போகிறார்.  அவ்வளவு தான்.   போர் முடிவுக்கு வந்துவிடும். கௌரவர்கள் வெல்வார்கள்.  பாண்டவர்கள்  உயிர் தப்பினால், சிறையில் தான் காலமெல்லாம். 

துரோணருடைய வில்லிலிருந்து அம்புகள்  இடைவிடாமல் பாண்டவ சேனையை வீழ்த்துவதையும்,   பாண்டவப் படையில் பயம்  நிலவுவதையும்  கவனித்த  கிருஷ்ணன்  அர்ஜுனனை  எச்சரித்தான்.

"அர்ஜுனா,  உனக்கு வில்வித்தை கற்றுத் தந்த  துரோணரின் வீரத்தைப் பார்த்தாயா?.  அவரை யுத்தத்தில் வெல்லக்கூடியவர் யாருமில்லை. அவர்  வில்லைத்  தாங்கி தேர் மீது நிற்கும் வரையில் யாரும் அவரை யுத்த முறையில் தாக்கி வெற்றி பெறமுடியாது.  இதற்கு  ஒரே வழி தருமத்தைப் புறக்கணித்துவிட்டு   வேறு  ஏதேனும்   உபாயம் செய்வதைத்  தவிர  வழியில்லை. அசுவத்தாமன் அவரது ஒரே மகன். அவன் மீது அளவு கடந்த பாசம் கொண்டவர் துரோணர்.  அஸ்வத்தாமன் 
 இறந்ததாக  ஒரு சேதி அவர் காதில் விழுந்தால்   அவர் நிலை குலைந்துவிடுவார். போர் புரிய மாட்டார். துயரத்தினால் ஆயுதத்தைக் கீழே போட்டுவிடுவார். அவரை அப்போது தான்  தாக்கி வெல்லவோ கொள்ளவோ முடியும். த்ரிஷ்டத்யும்னன் சபதமும் நிறைவேறும்.  இப்போது உடனே  செய்யவேண்டியது யாராவது  துரோணரிடம் சென்று 'அசுவத்தாமன் இறந்தான்' என்று  சேதி  அவர் காதில் பட  உரக்க  சொல்ல  வேண்டும். அது போதும் " என்று சொன்னான்  கிருஷ்ணன்.

இதைக் கேட்ட அர்ஜுனன் திகைத்தான்.  

''கண்ணா, அசத்திய வழியை என் மனம் ஒப்புக்கொள்ளாது.  இதில் எனக்கு சம்மதம் இல்லை.''
'ஆமாம் எங்களுக்கும் இதில் உடன்பாடில்லை ''  என்றார்கள்  மற்ற பாண்டவர்களும்.  அக்காலத்தில் அநேகர்  அதர்மச் செயலைப்  புரிய  மனம்  இல்லாதவர்களாக  இருந்தார்கள்.

''நீங்கள் சொல்வது எனக்கு தெரியாததோ , அதர்மச் செயல் என்றோ நான் அறியாதவன் இல்லை. ஆனாலும் இதை செய்தேயாகவேண்டிய சூழ்நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.   யோசித்த  பிறகு  தான் நான் இதை சொன்னேன்'' என்றான் கிருஷ்ணன்.
ஒரு கணம் எல்லோரும்  தயங்கி என்னசெய்வது என்று புரியாமல் நின்றபோது  யுதிஷ்டிரன்  ''கிருஷ்ணா'' என்று அழைத்தான்.  
''சொல்  யுதிஷ்டிரா''
''எல்லாம் அறிந்த நீ  சொல்கிறாய் என்கிறபோது அது காரணமில்லாமல் இருக்காது.  நீதி நேர்மை நியாயம், தர்மம் சகலமும் அறிந்தவன் நீ ஒருவனே.  ஆகவே  உன் சொல்படி  இந்தப் பாவத்தை நான் சுமக்கிறேன்"  என்றான்  தர்மன் எனும் யுதிஷ்டிரன்.

பாற்கடலைக் கடைந்தபோது தேவர்களுக்காக பரமேசுவரன் ஆலகால விஷத்தைக் குடிக்க முன்வந்தான். நம்பிய சிநேகிதனைக் காப்பாற்ற வேறு வழியில்லாமல் ஸ்ரீராமனும் பாபத்தைச் சுமந்து வாலியை அதர்மமாக  மறைந்து நின்று  கொல்லத் துணிந்தான்.   அதையெல்லாம்  மனதில் யோசித்து வாறே யுதிஷ்டிரனும் தன் புகழை  இப்படிப்பட்ட செயலுக்காக  தியாகம் செய்ய  முன் வந்து ஒப்புக்கொண்டான்.

கிருஷ்ணன் தீட்டிய  நாடகத்தின் படி,  பீமன் தன்  பெரிய  இரும்புக் கதாயுதத்தைத் 
 தூக்கி
 அசுவத்தாமன் என்ற ஒரு பெரிய போர் யானையைக் கொன்றான். கொன்று விட்டுத் துரோணரு
டைய படைப்பகுதியண்டை சென்று அவர் காதில் விழும்படி உரத்த குரலில் "அசுவத்தாமனைக் கொன்றேன்" என்றான். சொல்லிவிட்டு வெட்கத்தில் மூழ்கினான். இழிவான செயலைக் கனவிலும் எண்ணாத வீரனாகிய பீமசேனன் இவ்வாறு சொல்லும்பொழுது வெட்கப்பட்டான் என்று வியாசர் சொல்லுகிறார்.

துரோணர் அச்சமயம் பிரம்மாஸ்திரத்தை எடுத்து அர்ஜுனன் மேல்   பிரயோகிக்கும் தருவாயில் இருந்தார். அவர் அதை செலுத்தி இருந்தால்  பாரதத்தின்  முடிவே  வேறு மாதிரியாக இருந்திருக்கும்.  அர்ஜுனன் உயிரைக் காப்பாற்ற, கிருஷ்ணன்  அந்த  பிரம்மாஸ்திரத்தை தன்  மேல்  தாங்கிக் கொள்ள  தயாராக இருந்தான்.    

திடீரென்று  பீமன் குரலில்  தனது குமாரன் இறந்துவிட்டான் என்ற பேச்சைக் கேட்டதும்  துரோணாசாரியார்  ஒரு கணம் திடுக்கிட்டார். புழுவாய் துடித்தார்.  கை கால்   சோர்வடைந்தன. கண்கள்  இருண்டது . தலை சுற்றியது.  ''ஹா, என்  மகனே '  என்று ஒரு கணம்  வாடினார்.  இருக்காது, இது உண்மையாக  இருக்காது.  இதை உடனே  ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளவேண்டுமே  என்ன செய்யலாம், என்று திரு திருவென்று  அங்குமிங்கும்  கண்கள் அலைபாய  நம்பிக்கையில்லாமல்  அஸ்வத்தாமனை யுத்தகளத்தில் தேடினார்.   அவர் கண்ணில் யுதிஷ்டிரன் பட்டதும் ஒரு எண்ணம் தோன்றியது.  

''இவன் உண்மையே பேசுபவன். இவனைக்  கேட்கலாமா என்று தோன்ற ''யுதிஷ்டிரா, என் மகன் இறந்தானா? அது உண்மையா?" என்று கேட்டார். மூன்று உலகங்கள்  கிடைக்குமென்றாலும் கூட  யுதிஷ்டிரன் பொய் சொல்லமாட்டான் என்று நம்பிகை அவருக்கு. 

அச்சமயம் கிருஷ்ணன் பெருத்த மனவேதனை அடைந்தான். யுதிஷ்டிரர் தருமத்தைப் புறக்க
ணிக்க  பயப்பட்டாரானால், பாண்டவர்களுடைய நாசம் நிச்சயம். துரோணருடைய பிரம்மாஸ்திரம் வீணாகாது என்று எண்ணிதுரோணாச்சாரியார் இன்னும் அதிகம் கோபத்தோடு  வெறித்தனமாக  பாண்டவராகள் சேனையை த்வம்சம் செய்துவிடுவார்.  அர்ஜுனன்  சாவது நிச்சயம்.  யுதிஷ்டிரனோ அசத்தியத்திற்குப் பயந்து அச்சத்தில் மூழ்கி நின்றான்.ஆனால், வெற்றி பெறவேண்டும் என்ற ஆசையும் அவனை விடவில்லை. 

'நான் செய்யும்  செயலால் பாபம் என்னை சேரட்டும்'' என்று  யுதிஷ்டிரன்  கணநேரத்தில்  முடிவெடுத்து  மனதை உறுதிப்படுத்திக் கோபிண்டு  ''அசுவத்தாமன் இறந்தது உண்மை"என  உரத்த குரலில்  சொன்னான். சொல்லும்போது மறுபடியும் அதர்மத்திற்குப் பயந்து, "அசுவத்தாமன் என்கிற யானை" என்று தாழ்ந்த குரலில் வேறு  சேர்த்துச் சொன்னான். இதுவெல்லாம்  கண் மூடும் நேரத்தில் நடந்தது. 
யுதிஷ்டிரன்  இப்படி   முதன்முறையாக   பொய்  உரைத்ததால்  அவனது  ரதம்  அதுவரையில் பூமியை தீண்டாமல் எப்போதும் தரைக்கு மேல் நான்கு  அங்குலத்தில் சென்று  கொண்டிருந்த தானாகவே   திடீரென்று கீழே இறங்கி மண்ணைத் தொட்டதாம்.

பூமியைத் தருமபுத்திரனுடைய தேர்  இது வரை    தர்மம்,  சத்யம்,  மிகுந்தவன் என்பதால் தொடாமலிருந்தது. வெற்றிக்கு ஆசைப்பட்டு அசத்தியத்தில் இறங்கி விட்டபடியால், தருமபுத்திரனுடைய தேரும் பாபம் நிறைந்த பூமியின் மட்டத்திற்கு வந்துவிட்டது என்கிறார் வியாஸர்.

தனது ஆசை மகன், ஒரே பிள்ளை , சுத்த வீரன், அசுவத்தாமன் இறந்தான்' என்கிற மொழியை கேட்டதும், துரோணருக்கு   தந்து உயிர் மேல்  இருந்த  பற்று
 அறவே நீங்கிவிட்டது. அந்த நிலையில் அவர் இருக்கையில், பீமசேனன் அவரைக் கடுமையான மொழிகளால்  ஏசினான். .

"கெட்டுப்போன பிராமணர்கள் தமக்குரிய தொழிலை விட்டு க்ஷத்திரியர்களுடைய தொழிலில் புகுந்த  படியால் அல்லவோ அரசர்களுக்கு ஆபத்து வந்தது? அதர்ம வழியில் பிராமண குலத்தவர்கள் பிரவேசிக்காவிடில், அரசர்கள் மாண்டு  போகாமல் தப்பியிருப்பார்கள்.  அஹிம்சை தான் பரமோ தர்மம் , அந்த தர்மத்துக்கு  பிராமண குலமே வேர்   என்று தெரிந்திருந்தும்  துரோணாச்சாரியாரே  பிராமணராக பிறந்த  நீங்கள்  மனச் சாட்சியே  இல்லாமல்   இப்படி கொலைத் தொழில் செய்து வருகிறீர்களே , ஏன் இவ்வாறு செய்து பாபத்தை  மூட்டை கட்டிக்கொள்கிறீர்?  என்றான்.  

மகன்  அஸ்வத்தாமன்  இறந்துவிட்டான் என்று ஏற்கனவே உயிர் மேல்  வெறுப்பு  கொண்ட துரோணர் பீமனின்  இந்த நிந்தனையைக் கேட்டதும், அஸ்திரங்களை   கீழே  எறிந்து விட்டுத் தேர்த்தட்டின் மத்தியில் உட்கார்ந்து யோக நிஷ்டையில் அமர்ந்தார். இந்தச் சமயத்தில் திருஷ்டத்யும்னன்  தனது உடைவாளை உருவிக்கொண்டு  த்ரோணருடைய ரதத்தில் தாவி  ஏறினான்.  
'ஹா....  ஹா ''' என்று சேனையில்  நான்கு பக்கமும் சப்தம் எழுந்து  கொண்டிருந்தது.  கோபத்தோடு  திருஷ்டத்யும்னன்   வாளை  ஓங்கி  ஒரே வெட்டில்   துரோணாச்சார்யரின்  தலையை ரெண்டு   துண்டாக்கினான்.  ரிஷி  பரத்வாஜரின்  புத்ரனான   துரோணாச்சாரியாரின்  ஆத்மா  யுத்த களத்தில்  எல்லோருடைய கண்ணுக்கும்  தெரியும்படியாக  ஒரு  ஜோதிமயமாய் மேலுலகம் நோக்கி  சென்றது.   இது மஹா பாரதத்தில் ஒரு கறை  படிந்த பக்கம்.  

     

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...