Saturday, March 5, 2022

SURDAS

 


ஸூர்தாஸ் -   நங்கநல்லூர்   J K  SIVAN 

'' யாரோ   நீ யாரோ ? என்ன பேரோ?.

இந்த உலகத்தில்  நாம்  எத்தனையோ பேர் எவ்வளவோ காலமாக  திரும்ப திரும்ப  இறந்து பிறக்கிறோம்.    பிரத்யேகமாக யாருக்காவது என்று ஒருவர் மற்றொருவருக்காக  பிறக்க முடியுமா? யாரோ யாரோடோ  பாதி வழியில் சேர்ந்து கொண்டு தானே  கணவன் மனைவியாகி  குடும்பமா கிறோம். சிலது எலியும் பூனையும். சிலது ஜோடி கிளிகள். அதது அவரவர் அதிருஷ்டம்.பாக்யம். கிளிகளை பார்த்து எலி-பூனை ஜோடிகள் பொறாமைப் படும். படட்டும். அது வந்த வழி அப்படி, அதற்கு  யார் என்ன செய்யமுடியும்?.

கிருஷ்ணனை ராதை பார்த்தாள் .
அண்ணலும் நோக்கினான். இதயங்கள் ஒன்றை ஒன்று இடம் ?ஒன்றாயின. இது தெய்வீக உறவு. வைகுண்ட உறவு வ்ரஜ பூமியில் தொடரக்கூடாதா? கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடியது. எத்தனையோ பக்கங்கள் பேசியது. அத்தனையிலும் அடிநாதம் பிரேமை. உணர்வு ஒன்றாக கலந்த பின்னர் வார்த்தைக்கு என்ன வேலை?

எந்தெந்த ஜென்மத்தில் என்னென்னவாய் இருந்தோம்?. என்னென்ன பேசினோம்?. என்னென்ன பரிமாறிக் கொண்டோம் ??-   ஹுஹும் ... நீண்ட  ஆழமான  மறதி..எல்லாம்   மனதுக்குள்  இருண்ட  அறியாத தெரியாத  பகுதி...

சின்ன சின்ன  இளம்வயது நினைவுகள் மட்டுமே  ஒன்றன் பின் ஒன்றாக கூட்ஸ் வண்டியை போல் வரிசை  வரிசையாக  வருகிறது.  நான் சின்ன வயசில் கூட்ஸ் வண்டி யை கோடம்பாக்கம் சூளை மேட்டு  வீட்டில் இருந்தே பார்க்க முடிந்தது. இப்போது ஐந்து அடி  தூரத்தில் இருக்கும் எதையும் கூட பார்க்க முடியாத அளவு காங்க்ரீட் வீடுகள் கூடுகள்.  அப்போது வாசலில் உட்கார்ந்து கூட்ஸ் வண்டியின் வித வித வர்ண உருவ பெட்டிகளை எண்ணுவேன். நூற்றுக்கும் மேலே கூட போகும். மெதுவாக போகும்  கூட்ஸ்  ரயில் வண்டி  ஊர்வது ஒரு மரவட்டை நேராக நகர்வது போல் இருக்கும்.
பாம்பும் பூரானும் வளைந்து ஓடும். மரவட்டை நூறு கால்களோடு நேராக சீராக நகர்வது ஒரு தனி அழகு.

ஒவ்வொருவர் மனத்திலும் தமது முன் ஜென்மத்தின் தொடர்புகள் அலை அலையாக முடிவின்றி எழுப்புவதை ராதையும் ரசித்தாள் கண்ணனும் சிரித்து தலையாட்டினான்.
ஒன்று பட்ட மனம் பேசியது. மனங்கள் என்று சொல்லவில்லை. ரெண்டும் தான் ஒன்றாகிவிட்டதே.

'' ராதா, வா, என் வீட்டிற்கு ''
'' உன் வீடு எங்கே என்று சொல்லாமல் வா என்றால் எப்படி வருவது ?'' -
''உனக்கு தான் எல்லாமே தெரியுமே என்று நான் சொல்லவில்லை. இந்த பிருந்தாவனத்தில் நந்தகோபன் வீடு என்று கேள்.. நேராக உன்னை என்னிடம் தான் கொண்டு வந்து விடுவார்கள்.''
''அவ்வளவு பெரிய ஆளா நீ? உன் பேர் என்ன ?
''கிருஷ்ணன் என்று கூப்பிடுவார்கள். யார் எந்த பேர் சொல்லி கூப்பிட்டாலும் நான் வருவேனே''
''ஓஹோ  அப்படியா.  ரொம்ப  சரி ''
''நீ எங்கே இருக்கிறாய் என்று இன்னும்  நீ  சொல்லவில்லையே ராதா?
''ரொம்ப தூரத்தில் இருக்கிறேன்...''
'''உன் வீடு எங்கோ தூர இருக்கிறது என்று சொல்கிறாய். உன் ஊர் சப்தம் இங்கே கேட்கிறதே?'' என்றான் கிருஷ்ணன்
''கேட்கும், கேட்கும்... நீ மனது வைத்தால் எங்கெங்கோ யார் யாரோ பேசுவது, உன்னை கூப்பிடுவது கூட இங்கேயே உனக்கு கேட்கும் என்று எனக்கு தெரியும் '' என்றாள் ராதா.
''நீ என் வீட்டுக்கு வருவாயா? உன் அப்பா யார்?'
''விருஷபானு -எங்கள் ஊரில் எல்லோருக்கும் அவர் பேரை சொன்னாலே தெரியும்.''
''ஓ, அப்படியென்றால் அவ்வளவு பெரிய மனிதர் பெயரில் நீ சத்தியம் செய், என்னை பார்க்க என் வீட்டுக்கு வருவேன் என்று ''
''அவர் பெயரில் சத்தியம் செய்யாமல் உன் தலையில் அடித்தே சத்தியம் செய்கிறேனே. '''வருகிறேன் உன் வீட்டுக்கு'' , போதுமா '
''காலையிலும் வரவேண்டும். தினமும் மாலையிலும் நீ வரவேண்டும்.  வருகிறாயா''
''அப்படியென்றால் மத்தியானத்திலே  வரக்கூடாதா?'' என்று கேட்டாள் ராதா.
மரங்களில் பக்ஷிகள், விலங்குகள், யமுனை நதியின் நீரோட்டம், காற்று, மலர்கள் எல்லாமே இந்த  இருவரின் சம்பாஷணையைக்  கேட்டு  குலுங்கி குலுங்கி சிரித்தன. எங்கும் மகிழ்ச்சி பிரவாஹம் .

சூர்தாஸ் கண்ணின்றி மனதுக்குள் இந்த காட்சியை கண்டு, ரசித்து ஆடினார் பாடினார்.
அந்த பாட்டு எது என்று தெரியாமல், யாரோ  எதையோ பற்றி ஆங்கிலத்தில் சில வரிகள் எழுதிய கண்ணை மூடிக்கொண்டு  ஸூர்தாஸ் மாதிரி யோசித்தபோது மேலே சொன்னதை எழுத முடிந்தது.  இதுவும்  கிருஷ்ணன் வேலை தான். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...