Thursday, March 3, 2022

vainava vinnoli


 வைணவ விண்ணொளி -  நங்கநல்லூர்  J K  SIVAN 


ஒரு சிம்ஹாசனாதிபதி கதை  1

நடாதூர்  அம்மாள்  என்று  படிக்கும்போது  நான்   யாரோ  ஒரு  ஸ்ரீ  வைஷ்ணவ பெண் திலகத்தைப் பற்றி  எழுதிய  விஷயம் என்று  நீங்கள்  நினைத்தீர்களானால்  நீங்களும்  என்னைப் போலவே  தான்  முழு விவரம் அறியவில்லை  என்று  ஆகும்.  உண்மையில் அவர் ஒரு வைஷ்ணவ ஆசார்யன்.  அவர்  ஏன்  அம்மாள்  என்று  அழைக்கப்பட்டு  இன்றும்  போற்றப் படுகிறார்  என்பதை இந்த கட்டுரை மூலம்  நீங்களும் அறியலாம்.  நான்  அறிந்ததை உங்களோடு  பகிர்வது எனது பாக்கியம் என்பேன்.

ஸ்ரீ  கூரத்தாழ்வானுக்கு  ஒரு  பிள்ளை.  மஹா தயா தேசன் என்றும்  மகா கருணீகர்  என்றும்  பெயர் கொண்டவர் . அவர் ஸ்ரீ  ராமானுஜரின்  இளைய சகோதரி கமலாம்பா வை மணந்தார். இந்த  மகா தயா தேசன் தான்  நடாதூர்  அக்ரஹாரத்தை ஸ்தாபித்தவர்.

ஸம்ஸ்க்ருதத்தில் ''நடம்''  என்றால் தாமரை மலர்.   தாமரை  என்றாலே  ஸ்ரீ வைஷ்ணவன் பெருமா
ளின்  திருவடியைத் தானே  நினைக்கிறான்.  அதுவே நினைவாக  மனதில் நிரம்பி வேறு எதையும் நாடாத அவர்கள்  ஊரும் நடாதார் ஊர்   என்று அழைக்கப்பட்டு  நாளடைவில் காலம் எல்லாவற்றை
யும் மாற்றுவது போல் நாடாதார்  நடாதூர் ஆகியதாக ஒரு வழக்கு.
மகா தயா தேசனின் மகன் வரத விஷ்ணு  என்கிற  சுதர்சனர்  தான்  நடாதூர் ஆழ்வான்.  ஸ்ரீ ராமானுஜ
ருக்கு  ஸ்ரீ பாஷ்யம் எழுதுவதற்கு உதவியாக இருந்தவர்.

கூரத்தாழ்வானைப்  போலவே  நடாதூர் ஆழ்வானும்  தனது ஆசார்யன் ஸ்ரீ ராமானுஜரின் அணுக்க தொண்டர்.  ராமானுஜரின்  மதிப்பை பெற்று  அவரால்  தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்ரீ பாஷ்யம் வியாக்யானம்  எழுதும் படியாக பணிக்கப்பட்டவர்.  ஸ்ரீ  ராமானுஜரால் சொல்லப்பட்ட  பிரம்மசூத்திர சித்தாந்தங்களை ஓலைச்சுவடிகளில் எழுதியவர்.
ஸ்ரீ ராமானுஜர்  நடாதூர் ஆழ்வானை  ''ஸ்ரீ பாஷ்ய சிம்ஹாசனாதிபதி'' என்று  கௌரவித்தார் என்றால்
 அவர் எவ்வளவு விஷயஞானம் உள்ளவர் என்பது புரியும்.
 நடாதூர்  ஆழ்வானின் மகன் தேவராஜசாரியார்  என்கிற  தேவ சூரி ஸ்ரீ பாஷ்யம் பிரசங்கத்தில் புகழ் பெற்று  கதக கேசரி  என்ற  பட்டம் பெற்றவர். அவர் மனைவி  லக்ஷ்மி அம்மாள்.  வெகுகாலம் இவர்களுக்கு புத்ர ப்ராப்தி இல்லை. தாயார்  பெருமாளிடம் சொல்லி  அவருக்கு புத்ர ப்ராப்தி உண்டானது என்பார்கள்.

அப்படி  பிறந்த குழந்தைக்கு  தங்கள்  கோத்ரம் பெயருடன் காஞ்சி பெருமாளின் பெயரையும் சேர்த்து  ஸ்ரீவத்ஸ வரதன், வரத குரு, என்று நாமகரணம் செய்தனர்.  இவரே பிற்காலத்தில் நடாதூர்  அம்மாள்.    ஒரு தாயைப்போல அவர்  வரதராஜனை போஷித்து வழிபட்டவர்.  

யானைக் கூட்டத்திலே  அவர்  ஒரு சிம்மமாக திகழ்ந்தவர் என்று  ஸ்ரீ  பாஷ்யம் உரைக்கிறது. காஞ்சி வரதராஜ பெருமாளை பேரருளாள  பெருமாளே  என  மனம் நிறைந்து வேண்டி,  நின் திருவடிகளே சரணம் என்று  தன்னை அவனுக்கு அர்ப்பணித்துக்கொண்டவர்.  

நடாதூர் அம்மாள் சுவாமிகள் 1165 கி.பி. யில் பிறந்தவர்  என்று சொல்வதுண்டு.  இதற்கு இணையான தமிழ் வருஷம்  பார்திவ  ஆண்டு. தந்தையைப் போலவே  மகன் கல்வி கேள்வியில் தேர்ச்சி பெற்றார். பாட்டன்  ஸ்ரீ  நடாதூர் ஆழ்வானிடமே  ஸ்ரீ பாஷ்யம்  கற்க ஏற்பாடாயிற்று. வரத குருவுக்கு வரதராஜ னின் மேல் தான்  அலாதி பக்தியும், பாசமும் உண்டே.

ஒருநாள்  இரவு, பெருமாளை  சந்தோஷமாக  ஆத்மார்த்தமாக ஸ்லோகம் சொல்லி  வழிபட்டுக் கொண்டிருக்கும்போது  ஆலய பட்டாச்சார்யர்  சுடச்சுட பால் கொண்டுவந்து  பெருமாளுக்கு  நைவேத்யம் செய்ததைப் பார்த்து  விட்டு திகைத்து, ''இவ்வளவு சூடான பால்  என் வரதனுக்கு குடிக்க கொடுத்தால் அவனது  இளம் நாக்கையும் வாயையும் அதன் சூடு,  புண்ணாக்கி விடுமே '' என்று  அஞ்சி ''நிறுத்து''  என்று  பட்டாசார்யாரை தடுத்தார்.  பாலை விசிறி  ஆற்றி  சூடாரின பிறகு நைவேத்யம் செய்தார்.  பெருமாளுக்கு  வரதனின் வாத்சல்யம் மிக்க மகிழ்ச்சி அளித்து  அவரை தாயாக கருதி  ''என் அம்மா'' என்று  அழைத்தார்.  அன்று முதல் வரத  குரு  நடாதூர் என்ற ஊர் பெயருடன்  ''அம்மாள்'' என்ற பெருமாள்  அளித்த  சொல்லோடு நடாதூர் அம்மாள்  என்றே  பெயர் பெற்றார். இன்றும் அப்பெயரில் விளங்குகிறார். என்றும் அவ்வாறே  அறியப்படுவார். 
ஒரு தாயைப்போல அவர்  வரதராஜனை போஷித்து வழிபட்டவர்.  

ஒரு நல்ல நாள்  பார்த்து  நடாதூர்  ஆழ்வான்  பேரன்  வரத குருவுக்கு   ''அகில புவன'' என்று உபதேசம் செய்ய ஆரம்பித்தார்.  
''அப்பா,  தாத்தா ,  ஏன்  எம்பெருமானார்  ''அகில'' என்று  ஆரம்பித்தார். ''சகல''  ''நிகில'' என்பவையும்  அதே அர்த்தம் தானே கொடுக்கிறது?'' என்று கேட்டார்  வரத குரு.

''மகனே,  உடையவருக்கு தெரியாததா?  ''அ'' தானே  முதல்  உயிர் எழுத்து.  ஸ்ரீ நாராயண தேவராஜன் எல்லா உயிர்களையும் காப்பவன்  மேலும்  அவன் முழு முதற் கடவுள் என்பதால் உடையவர்  உயிர் எழுத்தில்  முதலாவதை  ப்ரயோகம் செய்திருக்கலாம்.''
மகனின் அறிவுப் பசி  அப்பாவுக்கு தெரிந்து விட்டது.  தாத்தா  நடாதூர்  ஆழ்வானுக்கோ விருத் தாப்யம்  நெருங்கிவிட்டது. எனவே மகனை திருவெள்ளறை எங்களாழ்வானிடம் கல்வி பெற அனுப்பினார்.      
எங்களாழ்வான்  ஏற்கெனவே திருக்குருகைப் பிரான் பிள்ளானிடம் நீண்ட கால பயிற்சி பெற்றவர். திருவெள்ளறையில் தங்கி தனிமையில்  பெருமாளை  தியானம் செய்து வந்தவர்.  சுவாமி எங்களாழ் வான்  விஷ்ணு  புராணத்திற்கு  அருமையாக விஷ்ணு சித்தீயம் என்ற  வியாக்யானம் எழுதியுள்ளார்.  புராணங்களில்  விஷ்ணு புராணம் பிரதானமானது.  இது ஒரு  மாணிக்கம் என சுவாமி ஆளவந்தார்  போற்றி  யிருக்கிறார். 

எங்களாழ்வான்  எழுதிய இந்த ஒரு  நூல் மட்டுமே நமக்கு தேறி இருக்கிறது. அதுவே  நாம் செய்த பாக்கியம் எனலாம்.  அவர் எழுதிய  ''பிரமேய சங்க்ரஹம், சங்கதி மாலா, கதய-வியாக்யானம்''  எல்லாம்  பெயரளவில் தான்  நமக்குத் தெரிகிறது.  ஒப்புமையில்லாத செல்வங்களை  எல்லாம் நாம்  இழந்து விடுவதில்  வல்லவர்களாயிற்றே.  நாம் கோட்டை விட்டது ஒன்றா இரண்டா?  

 எங்களாழ்வான்  சில சந்தர்ப்பங்களில் உரைத்த  சில  வார்த்தைகள் இன்றும்  வார்த்தை மாலா, என்ற  சில ஆச்சார்யர்களின்  சொல் முத்துகள்  கொண்ட  புத்தகத்தில் தற்போது  காண முடிகிறது.  ஒரு இடத்தில்  ஆசார்யன் என்பவனின்  அடிப்படை தன்மைகளை, குணங்களையும்  ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாய கோட்பாடுகளையும்  ''சாராதாசதுஷ்டயம்'' என்பதில்  விவரிக்கிறார்.

எங்களாழ்வானுக்கும்  வரத குருவுக்கும் இடையே   குருவுக்கும் சிஷ்யனுக்குமான  ஒரு சம்பவம்  நிகழ்ந்தது.  அடுத்த பதிவில் சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...