Tuesday, March 29, 2022

vainva vinnoli


வைணவ விண்ணொளி -  நங்கநல்லூர்  J K  SIVAN 

கூரத்தாழ்வான்.        

''அருமையான குருவும் அபிமான சிஷ்யனும் ''-2 

ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ ராமானுஜருக்கு நீண்ட நாள் பிரிந்திருந்த குழந்தைகளை மீண்டும்  பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி. விரைவில் ஸ்ரீ ராமானுஜரின் பிரதம சிஷ்யனானார் கூரேசர். ஆச்சர்யனின் வலது கரமாகவும், கண்ணாகவும், செவியாகவும் ஏன், மனசாட்சியாகவுமே சேவை சாதித்தார். சுருக்கமாக சொன்னால், கூரேசர் ஸ்ரீ ராமானுஜரின் நிழலானார்!. 

ஸ்ரீ ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. அனேக வைஷ்ணவர்கள் பின் பற்றினர். அடியார் கூட்டம் பலத்தது,  ஒரு சித்தாந்தம், கோட்பாடு,  தத்துவம் கொள்கை, சீர் பட வேண்டுமெனில் முறை ஒன்று தேவை அல்லவா?. எனவே ஸ்ரீ ராமானுஜர் "ஸ்ரீ ராமானுஜ தர்சனம்" எழுத ஆரம்பித்தார். 4 முக்ய சீடர்கள் (கூரேசர், தாசரதி, தேவராட், எம்பார்) உதவினர் இரவும் பகலும் வேத சாஸ்த்ரங்கள், சூத்ரங்கள் திருவாய் மொழி போன்று  பல நூல்களை எல்லாம் ஆராய்ந்து  அலசினர். விசிஷ்டாத்வைத சித்தாந்தம் படிப்படியாக உரு பெற்றது. ஸ்ரீ ராமானுஜர் வியாசரின் பிரம்ம சூத்ரத்துக்கும் பாஷ்யம் எழுத தொடங்கினார்.

" கூரேசா, நீ தான், நான் சொல்ல சொல்ல என்னுடைய  பாஷ்யத்தை எழுதணும். நான் எதாவது தடம் மாறி சொன்னா எழுதறதை நிறுத்தணும். உடனே நான் புரிஞ்சிப்பேன்".

இப்படி தான் ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீ பாஷ்யம் தோன்றியது. ஒருநாள் ஸ்ரீ ராமானுஜர் ஜீவாத்மா பற்றிய விளக்கம் சொல்லிக்  கொண்டு வந்தபோது கூரேசர் எழுதுவதை நிறுத்தினார். குருவை நோக்கி னார்.  பல நாட்கள் இரவுகள் சிந்தித்த எண்ண ஓட்டம் தடை பட்டதில் ஆசார்யனுக்கு கோபம் வந்தது. வயதாகி விட்டதல்லவா? எழுதுவது நின்றால் சிந்தனை தொடரில் பிசகு என்றல்லவா அர்த்தம்? வெடித்து விட்டார்  ஆசார்யன்.

"கூரேசா, என்னைக்காட்டிலும் நீ வியாசரின் சூத்ரத்துக்கு பாஷ்யம் சரியாக எழுதுவதாக நினைத் தால் நீயே எழுது. போ”” என்று கூரேசரை விரட்டினார். மற்ற சீடர்கள், "ஏன் கூரேசா,  இவ்வாறு செய்தாய்?" என வினவினர்.   என்ன விபரீதம் இது என நடுங்கினர். ”நண்பர்களே,  கவலை வேண்டாம். நான் ஆசார்யனின் அடிமை. அவர் என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், செய்யலாம்."

இதற்கிடையில் கூரேசர் எழுதியிருந்ததைப்  படித்த ஸ்ரீ ராமானுஜர் தான் சொல்லிக் கொண்டுவந்த வாசகத்தில் ஓரிடத்தில் முரண்பாடு இருந்ததையும் கூரேசர் அதை சுட்டிக்  காட்டியது சரி என்பதையும் உணர்ந்தார். ஜீவாத்மா தனித்வம் கொண்டதாக இருந்தாலும் இறைவனிடம் சேஷத்வம் கொண்டது என்று தான் கூரேசன் திருத்தியபடி இருக்கவேண்டும் என தனது தவறை அறிந்தார். "அடேடே , வெளிச்சத்தை பற்றி சொல்லும்போது அதற்கு காரணமான சூரியனை மறந்து போனேனே" என்று வருந்தினார், மஹா புருஷரல்லவா?.

”என் மகனே, கூரேசா,  நீ சுட்டிக் காட்டியது சரி தான். ஜீவாத்மா ஸ்வரூபத்தை நீ விளக்கியவாறே எழுது. மேலே தொடர்வோம்"

இவ்வாறே ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீ சம்ப்ரதாயம், ஸ்ரீ பாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த சாரம், வேதார்த்த சங்க்ரஹம், கீதா பாஷ்யம் எல்லாம் உருப்  பெற்றது . எங்கேயோ ஒரு நிரடல் ஸ்ரீ ராமானுஜருக்கு. விசிஷ்டாத்வைத சித்தாந்தம் பூரணமாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டு மானால் வியாசரின் " போதாயன வ்ருத்தி" என்கிற ஓலை சுவடு நூல் அவசியம். அதிலிருந்து மேற்கோள் காட்ட வேண்டும். அதை எங்கே தேடுவது? காஷ்மீரத்தில் ராஜாவுடைய லைப்ரரியில் கிடைக்குமா ? மற்ற பாஷ்ய காரர்களின் உரை ( குகதேவர், பருசி, தங்கா, திராமிடர்) எல்லாம் கூட ஒரே இடத்தில் காஷ்மீரத்தில் கிடைக்கலாமே.

ஸ்ரீ ராமானுஜர் வயதான காலத்திலும் கால்நடையாக திக்விஜயம் கிளம்பினார். போகுமிடமெல்லாம் விசிஷ்டாத்வைத பிரசாரம்!  வழியில்  எங்கெங்கெல்லாம் தங்கினாரோ அங்கெல்லாம் ராமானுஜ கூடங்கள், மடங்கள் எல்லாம் உருவாயின. கூரேசன் முதலான சிஷ்ய கோடிகள் ஸ்ரீரங்கத்திலிருந்து அவரைப் பின் தொடர்ந்தனர். காஷ்மீர் ராஜா அவ்வளவு சீக்கிரத்தில் ராமானுஜரையும் விசிஷ்டாத்வைத சித்தாந்தமும் ஏற்றுக் கொள்வானா? நாட்கணக்கில் பண்டிதர்களுடனும், வேதாந்திகளுடனும் விவாதம். முடிவில் ராமனுஜரின் மகிமை பெருமை எல்லாம் ராஜா உணர்ந்தான். கூரேசனுக்கு ராஜாவின் லைப்ரரியில் வேண்டிய ஓலைச் சுவடி தேட அனுமதி கிடைத்தது. தோற்றுப் போன  அரண்மனை பண்டிதர்களுக்கு பொறாமை ஞாயம் தானே? போதாயன வ்ருத்தி ஓலைச்சுவடி கிடைக்காதபடி செய்ய எண்ணம் வந்தது. ஓலைச்சுவடி லைப்ரரியை  விட்டு வெளியே நகரக்கூடாது. அங்கேயே படிக்கப்பட வேண்டும் என்று ராஜாவின்  அனுமதி பெற்றார்கள்.  ஸ்ரீ ராமானுஜரும் கூரேசரும் அங்கேயே படிக்க ரெடி. ஓலைச்சுவடியிலிருந்து குறிப்பு எடுக்கக் கூடாது என்று மற்றொரு கெடுபிடி.   விடுவாரா கூரேசர்?. ஆஹா அப்படியே அன்று முதல் அனைத்து ஓலைச்சுவடிகளையும் மனப்பாடம் செய்ய ஆரம்பித்தனர் இருவரும். வேறு வழியில்லை இந்த இருவரையும் கொல்வது தான் முடிவு என பண்டிதர்கள் தீர்மானிக்க இருவரும் காஷ்மீரை விட்டு வெளியேறினர்.

ஸ்ரீரங்கம் திரும்பியதும் ஸ்ரீ பாஷ்யம் எழுதத்  தொடங்கினர். கூரேசரின் அபார ஞாபக சக்தியால் ஓலைச்சுவடியின் அத்தனை விஷயங்களும் எழுத்தில் மிளிர்ந்தது. பல வருஷங்கள் ஆயிற்று இந்த அதிசயத்தை பூர்த்தி செய்ய. ஸ்ரீ ராமானுஜருக்கு பரம திருப்தி. கூரேசனின் புத்தி கூர்மையால் தான் தன் எத்தனையோ வருட கனவு நிறைவேறியது என மன நிறைவு. ஸ்ரீ வைஷ்ணவமும் ராமானுஜ ப்ரபாவமும் நாடெல்லாம் இப்போது பரவியது. அநேக சிஷ்யர்களும் தொண்டர்களும் அவர் பின் இப்போது. ராமானுஜர் வாசம் செய்த ஸ்ரீ ரங்கம் தான் வைஷ்ணவத்தின் தலைநகர் என ஆயிற்று. ஆசார்யனுக்கு தனது குருவுக்கு வாக்களித்ததை நிறைவேற்றியதில் களிப்பு.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...