Wednesday, March 2, 2022

pesum deivam

 

பேசும் தெய்வம்  -   நங்கநல்லூர்  J K   SIVAN 

நாலு படி தானிய சுமை  வைத்தியம் 

மஹா பெரியவா  பற்றிய  அதிசயங்களை, அபூர்வ  அனுபவங்களைப்பற்றி  நிறைய அறிகிறோம். எப்போது எவர் வாழ்க்கையில் நடந்தது, எவர் அனுபவித்தது என்பதில் தான்  சங்கடம். பலர்  வெளியே சொல்வதில்லை, சொல்பவர்கள்  அனுபவிக்காமலேயே  தெரிவித்தாலும், சொன்னாலும், எழுதினாலும் அவற்றை  ''நம்பி''  என்கிற  வார்த்தை  உபயோகிக்க மாட்டேன்,தாராளமாக  நாம் 

ஏற்றுக் கொள்கிறோம்.   அதில் நானும் ஒருவன். நான்  அப்படி அறிந்த விஷயம் ஒன்று சொல்கிறேன்


ஒரு சமயம், காஞ்சி மடத்தில்,  மஹா பெரியவா முன்  ஒரு  சின்ன பையன். அதிக பக்ஷம்  பதினஞ்சு, பதினாறு வயஸுள்ளவன்.   அவனுக்கு  சில காலமாக   தாங்க முடியாத தலைவலி . துடிப்பான் . வலி தாங்க முடியாது.  டாக்டர்கள், வைத்யம்  எதிலும் பெற்றோர்கள் குறை வைக்கவில்லை.ஆனாலும்  நிவர்த்தி யில்லை.  கொஞ்சம் கொஞ்சமாக  அவனுடைய   ஞாபகசக்தியும் குறைந்து கொண்டே வந்தது!   யார் சொல்லியோ, யாரோ  அழைத்துக் கொண்டு வந்தோ,  அவன் எந்த ஜன்மத்தில் பண்ணிய புண்யபலனோ  என்னவோ,  அவனை  பெரியவா முன்னால்  நிற்க  வைத்தது. பெரியவா
 அப்போது மௌன விரதம் இல்லாமல் இருந்தது அவன் செய்த பாக்யம்.

''என்ன ஆச்சு உனக்கு, என்  இப்படி துடிக்கிறே?''

"தலைவலி தாங்க முடியலே பெரியவா.... அதோட மறதி ரொம்ப இருக்கு. ஸ்கூல்லே படிக்கிற
பாடத்தை ஞாபகம் வெச்சுக்கவே முடியலே.. எல்லோரும்  திட்டறா.   பெரியவாதான் காப்பாத்
தணும்".  பையன் வாய் விட்டு அழுதான்.

"கொழந்தே! நா  வைத்ய   சாஸ்த்ரம் படிச்சதில்லேடா..... வேதாந்த சாஸ்த்ரந்தான் படிச்சிருக் கேன்."

பையனோ  அவரை விட்டு  நகருவதாக இல்லை.  மஹா பெரியவாளிடம்  ட்ரீட்மெண்ட் எடுத்துக் காமல்  போகமாட்டான் போலிருக்கே.  அவனை கவனித்துக் கொண்டே இருந்த  மஹா  பெரியவா மனதில் தீர்மானித்து விட்டார். அவனை அதிகம் சோதிக்கவில்லை. 

"சரிடா,  உன் கஷ்டம் புரியறது.  எனக்கு தெரிஞ்ச  வைத்தியம் ஒண்ணு  சொல்றேன். கேட்டு அதன் படி நடப்பியா?
''உம். கண்டிப்பா  பெரியவா. சொல்லுங்கோ  செய்றேன்''
 ''நான் சொல்ற வைத்யம் ரொம்ப  கஷ்டமா தான் இருக்கும். பரவாயில்லையா?ஒன்னால அப்படி செய்யமுடியுமோ ன்னு சந்தேகமா இருக்கேடா?''
"அப்டீல்லாம் இல்லே பெரியவா...... ஒங்க வார்த்தைப்படி கட்டாயம் நடக்கறேன்!"
வழி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பையன் முகம் ப்ரகாஸமானது.

"சரி.  உனக்கு  ''பட்டணம் படி'' ன்னா தெரியுமா.  ஒவ்வொரு வீட்டிலேயும்  மரத்திலே, அலுமினியத்
திலே, பித்தளையிலே வச்சிருப்பா.  பெரிய  படி  ன்னு கூட சொல்வா.  தலை வழிச்சு போடறது, கும்பச்சியா போடறது ன்னு தான் அளவு.     அதுலே  நாலு  படி அரிசி, கோதுமை, நெல்லு,   இது மாதிரி மாதிரி எதாவது ஒரு தான்யத்தை அளந்து ஒரு சாக்கிலே  (கோணிப்பையில்)  கட்டி .. சபரி மலைக்கு இருமுடி கட்டிண்டு போறவாளை பாத்திருக்கியோ? அது   மாதிரி, அந்த நாலு படி  தான்யத்தை ஒன்னோட தலையில சுமந்துண்டு , தெனோமும் ஒரு மைல் தூரம் நடக்கணுமே ! உன்னாலே  முடியுமா?. செய்வியா ?

"முடியும் பெரியவா.  அப்படியே  தலையிலே  சுமந்துண்டு கட்டாயம் நடக்கறேன்....."

"இரு .... இரு.... இன்னும் நான் முழுக்க சொல்லி முடிக்கலே! ஒரு மைல் தொலைவு நடக்கறச்சே வழியிலே  யார்  கிட்டயும் ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது.  சிவ நாமாவோ, ராம நாமாவோ மட்டும் தான்  சொல்லிண்டிருக்கணும்! அந்த தான்யத்தை அன்னன்னிக்கி எதாவுது சிவன் கோவிலுக்கோ, பெருமாள் கோவிலுக்கோ,..க்ராம தேவதை கோவிலுக்கோ எதுவானாலும் சரி, தூக்கிண்டு போய்   குடுத்துடணும்! இல்லாட்டா.... யாராவது ஒரு ஏழைக்  குடும்பத்துக்கு அது போய் சேரணும்.  

''எத்தனை நாளைக்கு இப்படி பண்ணனும் பெரியவா?''
''சரியா பதினோரு நாள் பண்ணினியானா போறும். ஒன்னோட தலைவலி உன்னை விட்டு ஓடியே போய்டும்; ஞாபகசக்தியும் நன்னா வ்ருத்தியாகும்..."

பையனுக்கு பரம சந்தோஷம் ! ஆஹா  இது ஒன்னும் பிரமாதம் இல்லை பெரியவா.  நிச்சயம் நீங்க சொன்னபடி பண்றேன் பெரியவா"விழுந்து நமஸ்காரம் பண்ணிவிட்டு போனான்.

ரெண்டு வாரத்துக்கு அப்புறம்  ஒரு நாள்  அந்த பையன் மீண்டும் மஹா பெரியவா முன்னால்  காஞ்சிபுரத்தில் நின்றான்.  இப்போது வேதனை எதுவும் இல்லை. துடிக்கவில்லை. சந்தோஷமாக சிரித்துக்கொண்டே இருந்தான். 
அவனை  ஜாடையால்  எப்படி இருக்கே?  என்று கேட்டார்.

"பெரியவா. நீங்க சொன்னபடியே செஞ்சேன். என் தலைவலி போய்டுத்து! டாக்டர்கள்  எல்லாம் ரொம்ப ஆச்சர்யப்பட்டா!
"என்ன மருந்து சாப்ட்டே?"ன்னு கேட்டா.....
 பெரியவா பண்ணச் சொன்னதை சொன்னேன்.... தலைல ஏதோ நரம்பு பிசகி இருந்திருக்கும், தான்யத்தோட வெயிட் ஏறினதும், அது சரியாகி இருக்கும்ன்னு சொன்னா! இன்னும் பாக்கி இருக்கற தையும் பண்ணிடறேன் பெரியவா"

சிரித்துக் கொண்டே தலை ஆட்டி  அவன் சொன்னதைக் கேட்டுவிட்டு,  காமாக்ஷி குங்கும ப்ரஸாதம் கொடுத்து ஆசீர்வதித்தார். அவர் அனுக்ரஹம் அவன் மண்டை மேல் சுமந்த  தானியம் வழியா சிரசிற்குள் இறங்கி அவன் இந்த வைத்யநாத டாக்டர் அருள் பெற்றது அவனுக்கு எப்படி தெரியும்?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...