Sunday, March 27, 2022

life lessons

 மனதில் பதியட்டும்  - 6.       நங்கநல்லூர்  J K  SIVAN


நம்ப முடியாத ஒரு உறவு  வயிற்றுடன் தான்.  எப்போது வேண்டுமானாலும் முரண்டு பிடிக்கும். செய்யக்கூடாதவற்றை செய்ய வைக்கும்.  அதனுள் உருவாகும் எரிமலை தான் பசி. பசி வந்தால் இதெல்லாம்  நம்மை விட்டு பறந்து ஓடிவிடும் என்று ஒரு லிஸ்ட்  போட்டாள்  பாட்டி.

மானம், குலம்,  கல்வி,  வண்மை,  அறிவுடைமை, 
தானம்,  தவம்,  உயர்ச்சி,  தாளண்மை,  -
தேனின் கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல்,   பத்தும் பசிவந்திடப்
பறந்து போம் '' என்றாள் .

பசிக்கு வேண்டியது  உணவு. அது எப்படி இருந்தால் என்ன என்று ஒப்புக்கொள்ளாதது  நாக்கு.  பசி இருந்தாலும் சாப்பிடுவதில் ருசி தேடுகிறது .  அன்னத்தை சாப்பிட்ட மாத்திரத்தில் வயிறு நிரம்பி விடுகிறது  என்றாலும்  வெறும் அன்னம்  போதவில்லையாம்? அநேகவிதமான பதார்த்தங்கள் எல்லாம் எதற்காக ?

இந்த பதிவில்  சொல்லிய விஷயங்கள் முக்கால் வாசி  ஏற்கனவே பலமுறை  மஹா பெரியவா  கூறிய  கருத்துக்கள், பொன்  மொழிகளை  விவரித்து  தான் என்பதை மறவாதீர்கள்.

ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு பதார்த்தத்திலே ருசி இருக்கிறது. அந்த ருசியை அனுசரித்து அவனவன் சாப்பிடுகிறான். அதனால் வெவ்வேறு ருசி  யுள்ளவற்றைச் சுவைக்கிறார்கள் 

பக்தி என்பதும் ஒரு வித  அற்புதமான பசி.  உருவற்ற தெய்வத்தை தேடாமல்  ஒவ்வொருத்தனுக்கும்  ஒவ்வொரு மூர்த்தியிடத்திலே ருசி இருக்கிறது. அதனால் அநேகவிதமான மூர்த்திகள் இருக்கின்றன. ராமன், கிருஷ்ணன், சிவன், அம்பாள்,கணேசன், முருகன்  எத்தனை எத்தனையோ  மனதுக்கு பிடித்த  உருவங்களை தெய்வமாக  உருவப்படுத்தி,அலங்கரித்து மகிழ்ந்து வணங்குகிறான். அருவத்தில்  லயிக்க  ஞானம் வேண்டும்.
 
புராணம் என்றால் பழசு என்பதுதான் அர்த்தம். ஸ்வபாவமாகவே  மிகவும் நல்லவர்களாகச் சிலர் இருக்கிறார்கள். சில பேரிடத்தில் கெட்ட அம்சம்  தான் அதிகமாக இருக்கும். அப்படி ரொம்ப நல்லவர்களாக அல்லது ரொம்ப கெட்டவர்களாக இருக்கிறவர்களுடைய சரித்திரங்களைப் புராணங்களாகச் சொல்லி யிருக்கிறார்கள். இந்தப் புராணங்களைப் பார்த்தால் ஏராளமான நீதிகள் இருக்கும். அவற்றை  யெல்லாம் பார்ப்பது இல்லை? தத்துவங்களைப் பார்ப்பது இல்லை. அவற்றில் இரண்டு  தலை, நான்கு  தலை, பசுமாடு லிங்கத்தின் மேல், அல்லது லிங்கத்தை மூடிய  புற்றின் மேல்  பால் சொரிந்தது,  யானை பூ எடுத்து வைத்து  பூஜித்தது என்று  வரும். இப்படி இருப்பவற்றைப் பார்த்து, ' இது என்ன? எல்லாம் கட்டுக்கதை' என்று சொல்லி  விடுகிறோம்.

ஒரு கையில் ஒடிந்த தந்தம் என்றால், இன்னொரு கையிலே கொழுக்கட்டை வைத்திருக்கிறார் விநாயகர். அதற்குள் தித்திப்பாக இருக்கிற வஸ்துவுக்குப் பெயர் பூர்ணம். பூர்ணம் என்றால் முழுமை. ஒரு கையில் இருக்கிற தந்தம் மூளி. இன்னொன்றிலோ முழுமை. என்ன  ஆச்சர்யமான உண்மை.  வாழ்க்கையை மூளியாக்குவதும்  முழுமையாக்குவதும்  உன்  ''கையிலே தான் '' என்று போதிக்கிறது. 

வியாதி வந்த பின்பு மருந்து சாப்பிட்டுப் போக்கிக் கொள்ளுவதைக் காட்டிலும் வராமலே தடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு உபவாசம் ஒரு பத்தியம்.    மிகவும் கீழான இடத்தில் மனதை வைத்தால் கீழான பைத்தியம் உண்டாகிறது. மேலான இடத்தில் மனதை வைத்தால் மேலான பிரம்ம  வித்தாக ஆகிறோம். 

ஆகவே  ஈசுவர சரணார  விந்தத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டால்  நமக்கு அப்படிப்பட்ட உயர்ந்த நிலை உண்டாகும்.

குழந்தைகளால் சொல்லப்படும் ஒரு விஷயத்துக்குப் பெருமை அதிகம். குழந்தை  தான் தெய்வம். அவர்களிடத்தில் காமக்  குரோதங்கள் இல்லை. 'குழந்தையாக இரு' என்று உபநிஷத் சொல்லுகிறது. பொறாமை இல்லை, பணம் காசு சொத்து  பதவி, கர்வம், அந்தஸ்து, இதில் எல்லாம் நாட்டம் இல்லை. 

'சிவ' என்ற இரண்டு அக்ஷரங்களை எப்பொழுது சந்தர்ப்பம் நேர்ந்தாலும் உச்சாடனம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டும். எந்த ஜென்மம் வந்தாலும் அதை மறக்காமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் ஜென்மமே இல்லாத பரம சாந்த நிலை உண்டாகும்.

ஒரு பிரபுவிடம் இரண்டு வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். ஒருவன் எப்பொழுதும் எதிரில் நின்று கொண்டு பிரபுவை ஸ்தோத்திரம் பண்ணிக் கொண்டே இருக்கிறான். மற்றொருவன் பேசவே மாட்டான். பிரபு எந்தக் காரியத்தைச் செய்ய வேண்டுமென்று நினைக்கிறாரோ அந்தக் காரியத் தைச் செய்வான். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு, வணங்கிக் கொண்டு நிற்பவன் மீது தான் பிரபு அதிக பிரியம் வைத்துள்ளார் போலும் என கருதுவர். ஆனால், வேலை செய்கிறவனிடத்தில் தான் அவருக்குப் பிரியம் இருக்கும். இது போல் தான் ஈஸ்வரன். வெறும் ஸ்தோத்திரம் செய்கிறவனிடத்தில் மட்டும் அதிகப் பிரியமாக இருப்பான் என்று நினைத்து விடக்கூடாது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...