Saturday, March 5, 2022

VAINAVA VINNOLI

 வைணவ விண்ணொளி -  நங்கநல்லூர்  J K  SIVAN


ஒரு சிம்ஹாசனாதிபதி கதை 2

ஸ்ரீ வைஸ்ணவ சம்பிரதாயத்தில் வடகலை தென்கலை என்று  இரண்டு  முக்கிய  பிரிவுகள் உண்டு. அதில் வடகலை ஆச்சார்ய பரம்பரையில் முக்கிய மானவர்கள் சிலரை குறிப்பிடுகிறேன்.

திருக்குருகை பிள்ளான்   என்பவர் 1068ல்  பிறந்தவர்.  இவரை பிரசாண்டாம்ஸம் என்பார்கள்.  ஸ்ரீ ராமானுஜர்  காலத்தவர்.  திருப்பதி மலைக்கு  திருமலை என்று பெயர். அந்த  திருமலையில் அக்காலத்தில் ஒரு  வைணவப்பெரியார் வாழ்ந்து வந்தார். அவர் பெயர் பெரிய திருமலை நம்பி. அவருக்கு  பிள்ளையாக பிறந்தவர்  இந்த  திருக்குருகை பிள்ளான்.  எல்லோராலும்  பிள்ளான் என்றே  அழைக்கப்பட்டவர்.  உடையவருக்கு திருவடி சம்பந்தி மட்டும் அல்ல, ஞானபுத்ரர் என்றும் சொல்வார்கள். உடையவரின்  ஆக்கினைப்படி, அறிவுரையின் படி, நம்மாழ்வாரின் திருவாய்மொழி நூலுக்கு  முதல் வியாக்யானம் எழுதியவர். அதன் பெயர்  ஆறாயிரப்படி.  மிகச்சிறந்த ஞானியும்  விஷ்ணு பக்தருமாக  வணங்கப்பட்டவர்.  இவர் இயற்றிய  இன்னுமொரு  பிரபல  வைணவ நூல்  ''திருக்குருகை  பிரான் பிள்ளான்  பரம ரஹஸ்யம் ''

இந்த  வடகலை ஆசார்ய  பரம்பரையில் அவதரித்த  இன்னொருவர்  தான்  எங்களாழ்வான்
எனும்  சோழியர்  குல  ஸ்ரீ வைஷ்ணவர்.  1108ம் வருஷம் பிறந்தவர். இவரை  விஜயாம்சம் என்பார்கள். அவர் பிறந்த ஊர்  திருவெள்ளறை. ஒரு அருமையான  சோழநாட்டு  நான்காவது  வைஷ்ணவ க்ஷேத்ரம்.  108 திவ்ய தேசங்களில் ஒன்று.   திருவெள்ளறை  திருச்சிக்கு  அருகாமையில்  துறையூர் போகும் வழியில் உள்ள  ஊர்.  அந்த க்ஷேத்ரத்தில் அருளாசி வழங்கும் பெருமாளின் பெயர்  புண்டரீகாக்ஷன் , தூய  தமிழில்   செந்தாமரைக்கண்ணன்.
 
இந்த ஊரில் பிறந்த  எங்களாழ்வானுக்கு  அவருடைய  பெற்றோர் சூட்டிய  நாமகரணம் ''விஷ்ணு சித்தர்'' என்ற   புனித பெரியாழ்வாரின் பெயர்.  இவர்  பிற்காலத்தில்  ஸ்ரீ ராமானுஜரின்
சிஷ்யரானார்.  இவருடைய  குரு  தான்  திருக்குருகை பிரான் பிள்ளான். பெருமாளைப் பற்றிய  சகல  பகவத்விஷய காலஷேபமும் ஸ்ரீபாஷ்ய காலஷேபமும் திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடியில்  கசடறக்  கற்றவர்.  சுருக்கமாக  இன்னொரு கூரத்தாழ்வான் என்று சொல்லலாம்.  ஆகவே  ஸ்ரீ ராமா னுஜர்  இவரை மனமுவந்து ஏற்று  இவர் பக்தி ஞானம்  குருபக்தி எல்லாவற்றையும் மெச்சி  இனி நீ  ''எங்களாழ்வான்” என்ற பெருமைக்குரிய  நாமகரணத்தை சூட்டினார்.  அதுவே இவரது உலகறிந்த இன்றைய பெயராகிவிட்டது.   ஸ்ரீ ராமானுஜர் ஆக்கினைப்படி  விஷ்ணு புராணத்துக்கு  விசிஷ்டாத் வைத கோட்பாட்டின் படி , ஸ்ரீ பாஷ்யத்திற் கிணங்க  வியாக்யானம் செய்தவர். இவர் இயற்றிய மற்ற நூல்களில் முக்கியமானவை  ''சாரார்த்த  சதுஷ்டம்'', ' சங்கதி மாலை'' போன்றவை.

போன  கட்டுரையில் நடாதூர் அம்மாள் என்பவர் பற்றி அறிந்தோம். அவரைத்  தமது குருவாக ஏற்று  கல்வி கற்க  எங்கள் ஆழ்வானின் இருப்பிடமான  திருவெள்ளறைக்கு சென்றார் என்று சொல்லி  நிறுத்தி இருந்தேன்.   அவரை அனுப்பியவர்  அவருடைய தாத்தா  நடாதூர் ஆழ்வான்.

 ''வரதா, எனக்கு  ரொம்ப வயதாகி விட்டது அப்பனே,  நீ  நேராக  திருவெள்ளறை போ. அங்கே  எங்கள் ஆழ்வான் என்ற  ஒரு ஞானி இருக்கிறார்  அவரை வணங்கி அவர் சிஷ்யனாக சேர்ந்து கொண்டு கல்வி பெறுவாயாக ' என்று வாழ்த்தி அனுப்பினார் தாத்தா.

திருவெள்ளறை  எங்கே இருக்கிறது என்று விசாரித்துக்கொண்டு நடந்த   வரதகுரு ஒருவழியாக   எங்களாழ்வான் வீட்டை அடைந்து கதவைத் தட்டினார்.

''யாரப்பா  நீ ?''  
''நான்  வரதன்,  காஞ்சி  நடாதூர் தேவராஜ மஹா தேசிகன் புத்திரன்''
''யாராயிருந்தாலும் சரி, போ,  நான் செத்த பிறகு வா''

திடுக்கிட்ட  வரதன்  அழுதுகொண்டே  வீடு திரும்பினான்.
என்ன நடந்தது என்று  கேட்ட  அப்பா விஷயம் அறிந்தார்.

''எதற்காக அப்பா,  நான்  செத்தபிறகு வா''  என்று கோபமாக  என்னைப்பார்த்து அவர் கூறினார்.  நான்  என்ன செய்துவிட்டேன் அப்படி அவர் என்னை வெறுக்கும்படியாக ?''

 ''மகனே   ஆழ்வார் உன்னைக்  கோபிக்கவில்லை. ‘'நான்''  என்று நீ சொன்னாயே,  அந்த  ''நான்'' என்கிற  அஹங்காரம்  அழிந்தபின் என்னிடம்  வா, உபதேசிக்கிறேன்  என்று  சொல்லியிருக்கிறார்.  வைஷ்ணவ சம்பிரதாயத்தில்  ''நான்''  கிடையாதே.  ''அடியேன்'' அல்லது  ''தாசன்''  என்று  தானே  தன்னை  அறிமுகப் படுத்திக்  கொள்ளவேண்டும்.

வரதனுக்கு  உண்மை  விளங்கியது.  நேரே  திருவெள்ளறை  சென்று  எங்களாழ்வான் வீட்டுக் கதவைத் தட்டினான்.  
'யார் அது  வந்திருப்பது ?''
''அடியேன்  வரதன் வந்திருக்கிறேன் சுவாமி ' 

எங்கள் ஆழ்வான்  மனம் மகிழ்ந்து  அவரை  வரவேற்கிறார்.  வரதன்  ஆழ்வானின் திருவடிகளில்   சரணாகதி அடைந்தான். அவர் அவனை  உச்சி முகர்ந்து  புத்திரன் இல்லாத ஆழ்வான் வரதனை ஏற்று  பிள்ளையாக  வளர்த்து ஆளாக்கினார்.   ஆசார்யனோடு பல ஸ்தலங்களுக்கு, ஆலயங்களுக்கு  எல்லாம்  சென்று கடைசியில்  கொல்லகொண்டா  என்ற வில்லிப் புத்தூர் அருகே உள்ள  ஒரு சிறு  கிராமத்தை அடைந்தார்கள். 

'எங்களாழ்வான்  விஷ்ணுபுராணத்துக்கு  உரை  எழுதின  சில  காலத்திலேயே  பரமபதம் அடைந்தார்.  பிள்ளையாக  வரதசூரி அவருடைய அந்திம  கிரியைகளை  ஸ்ரத்தையாக செய்தார். அவருடைய  அர்ச்ச விக்ரஹத்தை  திருவெள்ளறையில் பிரதிஷ்டை செய்தார். அவர் காலடியில் அமர்ந்தவாறு காட்சியளிக்கிறார்.

நடாதூர் அம்மாள் சுவாமிகள்  காஞ்சி வரதராஜனுக்கு தினமும்  பெற்ற தாய்  தனது சேய்க்கு அளிப்பதுபோல்  வெது வெதுப்பான பால் கைங்கர்யம் செய்து வந்தவர்.  அதனால் தானே  பெருமாளே  அவரை ''அம்மா'' என்று ஆசையோடு அழைத்தான்.  

பேரருளாளனான காஞ்சி  வரதன் மேல்  கொண்ட  அளவற்ற தாயினும் சிறந்த  அன்பினால்  அவர்  ஊரான நடாதூர் என்பதுடன் அம்மாள்  என்ற பெயரும் ஒட்டிக்கொண்டு  அவர்  நடாதூர் அம்மாள் என்றே  அனைவராலும்  மரியாதையோடு அழைக்கப்பட்டார்.    .

நடாதூர் அம்மாள்   தத்வ சாரம்  என்கிற  த்யானஸ்லோகத்தில்  தனது  ஆச்சார்ய  பக்தியை எழுதியுள்ளார்.  எங்களாழ்வான்  மகள் குடும்பத்தார்  திருவெள்ளறையில்  அந்த  அர்ச்ச மூர்த்தியை  பாதுகாத்து வழிபாடு செய்துவருகிறார்கள்.   அம்மாளாசார்யார்கள்  என்று  பேர் பெற்றிருக்கிறார்கள்.  தனது குருவுக்கு  தான்  இயற்ற வேண்டிய கடமைகள் முடித்து  நடதூர் அம்மாள்  காஞ்சிபுரம் திரும்பினார்.

காஞ்சியில் பெருமாளின் சந்நிதிக்கு  கிழக்கே   வைத்தான்  மண்டபம் என்று  ஒரு  மண்டபம். அதில்  நடாதூர் அம்மாள்  ஸ்ரீ பாஷ்யம் உபன்யாசம் செய்ய ஆரம்பித்தார். இந்த இடத்தை ஏன் அம்மாள் சுவாமிகள்  தேர்ந்தெடுத்தார் என்பதற்கும் ஒரு காரணம்  சொல்கிறார்கள். இங்கு தான் திருக்கச்சி நம்பிகள்  ராமானுஜருக்கு  விடுத்த  ஸ்ரீ பாஷ்யத்தில் ஆறு கேள்விகளின் பதில்கள் பெருமாள் அருளால்  கிடைத்தனவாம்.   காஞ்சி வரதராஜ பெருமாள்  என்னென்ன  ஆறு பதில்களை அளித்தார்?

1) நான் ஸ்ரீயின்  பதி.  பிரம்மம் ஆக அறியப்படுபவன்.  

2)  ஜீவர்கள்  ஒருவரில் ஒருவர்  வேறுபட்டாலும், என்னில் வேறுபட்டவரே ஆவர்.   இதுவே என் ''பேத'' சித்தாந்தம்

3) என்னை அடைவதற்கு சரணாகதி ஒன்றே  சிறந்த  சுலபமான  வழி.

4)என்னைச் சரணடைந்தவன் தனது அந்திம காலத்தில் என்னைப் பற்றி எண்ணவேண்டிய அவசியமே இல்லை.

5) முக்தி , மோக்ஷம்  என்பதெல்லாம்  இந்த  பஞ்ச பூதங்களாலான அழியும்  தேகத்தை விடுத்தபிறகே தான்  கிடைக்கும்.

6) ஸ்ரீ  பெரிய நம்பிகள்  தான்  ஸ்ரீ  ராமனுஜரின் குரு.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...