Sunday, March 20, 2022

VAINVA VINNOLI


 வைணவ விண்ணொளி -  நங்கநல்லூர்  J  K   SIVAN 

 ''பெரிய ஜீயர் ''மணவாள மாமுனிகள்.

ஸ்ரீ வைஷ்ணவத்  தூண் - 2ம் பகுதி 


மோக்ஷம் வேண்டினால்  அதற்கு ஒரே வழி கெட்டியாக  ஸ்ரீ  ராமனுஜரின்  திருவடிகளைப் பிடித்துக் கொண்டு சரணாகதி அடைவது ஒன்று தான்.   இது அழகிய மணவாளனுக்கும்    அவனது ஆசார் யன்  திருவாயமொழிப் பிள்ளைக்கும் நன்றாகத் தெரியும். 
கல்வி கற்று குருகுலவாசம் முடிந்து வணங்கி  குருவின்  ஆசியுடன்  சில  சிஷ்யர்கள்  தொடர   அழகிய மணவாளன் ஸ்ரீ ரங்கம்  பயணமானார்.   அவருடைய முக்ய சிஷ்யர்  பொன்னடிக்கால்  ஜீயர், அவருடைய இன்னொரு  பெயர்  ராமானுஜ ஜீயர்.  ஜீயர்கள்  மடம் என்கிற  வைஷ்ணவ  சம்ப்ரதாயம்  மணவாளன் மூலமே  தொடர்ந்தது.  
ஸ்ரீ ரங்கத்தில்  மணவாளன் ஆழ்வார்கள் பற்றியும்  அவர்களது  பொய்யாத  இனிய தமிழ்ப் பாசுர பொன் மொழிகளையும்  பரப்பினார்.
அந்த கால கட்டத்தில்  தான்  மனம் உடைந்து போக  துக்கம்  தரும் செய்தி  ஒன்று ஸ்ரீரங்கத்துக்கு வந்தது.    மணவாளனின் குரு  திருவாய் மொழிப் பிள்ளை பரமபதம் அடைந்தார் என்ற செய்தி அது.  அவர் பரம சந்தோஷத்துடன் தான் பராமனைச் சென்றடைந்தார்.  ஆமாம்  அவருக்கு ரொம்பவும் சந்தோஷம் என்ன தெரியுமா?   இனி  வைணவ உலகத்துக்கு அதைத் தாங்கும்  ஒரு  நிலையான  தூண்  ஒன்று  மணவாளன் உருவத்தில் கிடைத்துவிட்டது.  பல்லாயிரம் ஆண்டுகள் இனி வைணவ சம்ப்ரதாயம் ஒரு கவலை யும் படத் தேவையே இல்லை  என்று  குருவுக்கு  திருப்தி.

மணவாளன்  திருக்குருகூர்  சென்றார். ஆசார்யனுக்கு  செலுத்தவேண்டிய  அந்திம  கிரியைகள்,  மரியாதைகள் செவ்வனே நடந்தன. திருக்குருகூர்  வாசிகள் பாக்கியசாலிகள்.  மணவாளன் சில காலம் தங்கியதால்   அவர்களுக்கு  திருவாய்மொழி உபதேசம் வியாக்யானங்கள்  அவர்  வாய் மூலம் பக்தி ஆறாகப் பெருக  கிழ்ந்தனர்.

ஸ்ரீரங்கம்  பிறகு திரும்பியவர் ஓலைச்சுவடிகளைத்  தேடி கண்டுபிடித்து ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தத் தைப்   பரப்பினார்.

''எங்கே என்னை மறந்துவிட்டாய், இங்கே வா''   என்று  திருவேங்கடவன்  மணவாளனை அழைத்ததும்  அங்கே சில காலம் தங்கினார்.

திருப்பதியில் அடிவாரத்தில் தனது சிஷ்யர்  வானமாமலை  பொன்னடிக்கால் ஜீயர் சுவாமிகளோடு  தங்கி கோவிந்தராஜனை வழிபட்டார்.

அன்றிரவு திருமலை ஜீயர்  ஒரு அதிசய கனவு கண்டார்.   ''பள பளக்கும்   பொன்னிற மேனி கொண்ட ஒரு  ஆசார்யன்  சாய்ந்து   கொண்டிருக்க அவர்  கீழே ஒரு  திரிதண்டி சுவாமிகள் தோன்றினார்.'' என்ன  ஆச்சர்யம்   யார் இவர்கள்''  விசாரித்ததில்  செய்தி கிடைத்தது.   திருமலையில்  ஜீயரிடம்  அவரது சில  சிஷ்யர்கள்   ''ஸ்வாமின், திருப்பதியில்  கீழே ஒரு  ஆசார்ய சுவாமி,  அவரோடு  அவர் சிஷ்ய சுவாமி    ஆகிய இருவர்  வந்துள்ளார்கள்.  கோவிந்தராஜ சுவாமி ஆலயத்தில் வழிபட்டதைக் கண்டோம்.  அவர்களைப்  பார்த்தாலே பயமும் பக்தியும்  எங்களை அறியாமல் தோன்றியது சுவாமி '' என்றனர்.

 திருமலையிலிருந்து  ஜீயர்  தனது சிஷ்யர்கள் புடை  சூழ  மலையிலிருந்து கீழே இறங்கிவந்தார். அழகிய மணவாளனை   கோவில் மரியாதைகளோடு வரவேற்றார்.

திருமலையிலிருந்து மணவாளன் காஞ்சி சென்றார். என்ன ஆச்சர்யம்.  அங்கே  கனவில்  ஸ்ரீ ராமானுஜர்  காட்சியளித்தார்.

''மணவாளா,  நீ  செய்யவேண்டியது ஒன்று உண்டு.   உடனே ஸ்ரீ பாஷ்யத்தை  கவனமாகப் படி. தெரிந்துகொள். அதை உனக்கு  தக்கவாறு  கற்பிக்கக்  கூடியவர் கிடாம்பி  நாயனார்  என்பவரே. அவரைத்  தேடிச் செல்''. உத்தரவு ஸ்ரீ  ராமானுஜரிடமிருந்து வந்தது.

கிடாம்பி நாயனாரைத் தேடி  அடைந்தார்  மணவாளன். தெண்டனிட்டு அவரை குருவாக  ஏற்றுக் கொண்டார். குரு அவரை  ஒரு ''வித்வத் சதஸில்'' கலந்து  கொள்ளச்  செய்தார்.
வித்வத் சதஸ் என்பது பல  அறிஞர்கள்  வந்து  தங்களது  கல்வி கேள்வி ஞானத்தை வெளிப்படுத்தி தர்க்கம், வாதம்  விவாதம், கலந்துரையாடல் போன்றவற்றை  நடத்துவது.  சிறந்த  வித்வான்கள், பண்டிதர்கள், வேத வித்தகர்கள்  வந்து பங்கேற்று  கலந்து கொண்டு  கருத்துகள், வியாக்யானங்கள் அங்கே  நிறைய  பரிமாறப்படும். கேள்விகளுக்கு  விடை சொல்வார்கள்.   பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட் டவர்களே சிறப்படைவார்கள்.

அழகிய மணவாளன்  வித்வத் சதஸில் கலந்து கொண்டார். அவரது  பேச்சு, அவர் உரைத்த கருத்துகள்,  வினாக்களை  தொடுத்தவர்களுக்கு அவரது அருமையான விளக்கங்கள், விடைகள், அனைவராலும் புகழப்பட்டது. கிடாம்பி நாயனாருக்கு  தெரிந்துவிட்டது  மணவாளன்  சாமானியர் அல்லர்  என்று.
தனியே  மணவாளனைக் கண்டு சந்தித்தார் கிடாம்பி.

''சுவாமி  தாங்கள்  யார்.  உங்கள்  உண்மை ஸ்வரூபம் எனக்கு  காட்டி அருளவேண்டும்'' என்று வேண்டினார்.
''அதற்கென்ன   அப்படியே என்று  மணவாளர்  சிரித்துக்கொண்டே சொல்ல  கிடாம்பி  நாயனார் முன்  கண  நேரத்தில்   ஆயிரம்  படங்கள் கொண்ட ஆதிசேஷன்  குடையாக நிற்க சங்கு சக்ரங்களோடு ஸ்ரீமன்  நாராயணனே காட்சி தந்தார்.

ஸ்ரீ வைஷ்ணவ சரித்திரத்தில்  ஸ்ரீ கிடாம்பி  நாயனார்  ஒருவரே  இப்படி  அழகிய மணவாளனின் விஸ்வரூப  தரிசனத்தைக் கண்டவர்.   வேறெவரும் இல்லை  என்பது ஆச்சரியம்.

காஞ்சியில்  தங்கிய  காலத்தில்  மணவாளன்  அநேக  கைங்கர்யங்களை புரிந்தார். ஒரு காலத்தில் இனி  இந்த வாழ்வில்  நான்  பரமனின் சேவையில் இடைவிடாது, இடரேது மின்றி உழைக்க  சன்யாச மார்க்கம் ஒன்றே சிறந்தது என முடிவெடுத்தார்.

சடகோப யதி  என்ற  ஞானி ஒருவர்  காஞ்சியில் இருந்த காலம்  அது.   அவரைச் சரண் அடைந்து  அழகிய மணவாளன்  துறவு பூண்டார். அவரால் தீக்ஷை பெற்ற  அன்றுமுதல்  அழகிய மணவாளன்  ''மணவாள மாமுனிகள்''  ''பெரிய ஜீயர்' ஆனார்'.  இந்த  மணவாள மாமுனிகள் என்ற பெயர்   வைணவ உலகில் தமிழுள்
ளவரை,  கடைசிப் பாசுரம் எதிரொலிக்கும் வரை சூரிய சந்திரர்கள் உள்ளவரை  நிலைக்குமே.
பெரிய ஜீயர்  ஸ்ரீரங்கம்  திரும்பினார்.   பல்லவராயன் மடத்தில் தங்கினார். திருமலை ஆழ்வார் மண்டபம்  அவரால் உருவானது.  அந்த  மண்டபத்தில் குடியேறினார்.  தினமும்  அவரது தேனமுதக் குரலில்  ஸ்ரீ பாஷ்யம் உபன்யாசம் அங்கே  நடைபெற்றது.  கேட்டவரெல்லாம்  பாக்யசாலிகள்.

பசி எடுத்துவிட்டது அவருக்கு.   நம்மாழ்வாரைக் காணவேண்டும் என்ற பக்திப் பசி, பாசுரப்  பசி. திருக்குருகூர் சென்றார். ஆழ்வாரைக் கண்குளிர  தரிசனம் செய்தார். பெரியஜீயர் என்கிற பேர்  எட்டு திக்கும்  பெருமையோடு சென்று சேர்ந்தது. அவர் பெருமையில் மனம் புழுங்கி சில  அற்ப ஜீவிகள்  பொறாமைப் படத்தானே செய்யும்.    அவரைக் கொல்ல  விஷமிகள் தீட்டிய திட்டம் தயாரானது.

நிசப்தமான  ஒரு  நள்ளிரவில்  ஊரே  அடங்கிய   அமைதியான நேரத்தில்  மணவாள மாமுனிகள் தங்கியிருந்த ஆஸ்ரம குடிசை தீப்பற்றி எரிந்தது.    விஷயம்  பரவியது.  தூக்கத்தை விட்டு  ஊரே  திரண்டது. எல்லோரும் காண  ஒரு  கரு நாகம்  பற்றி  யெரியும் குடிலிலிருந்து வெளியேறியது. ஒரு கண நேரத்தில்  அந்த பெரிய  கருநாகம்  பெரிய ஜீயராக தோன்றி மறைந்தது.

தீய எண்ணம் கொண்ட  தீங்கிழைத்தோர்  வெட்கித்  தலை குனிந்தனர்.  பெரிய ஜீயர் மகத்வம் புரிந்தது.  திருக்குருகூர் மக்கள்  சிரமேற் கரம் குவித்தனர். ''பெரிய ஜீய சுவாமிகளே''  என்று  பிரார்த்தித்தனர்.     அந்த ஊர்  ராஜாவின்  உதவியுடன் திருக்குருகூர்  ஆலயம்  புதுப்பிக்கப்பட்டது.  பெரிய ஜீயர்  ஸ்ரீரங்கம் திரும்பினார்.

அங்கு தான்  எறும்பி  என்கிற ஊரில் வாழ்ந்த  அப்பா  என்கிற வைஷ்ணவர் அவர்  சிஷ்யரானார்.
காஞ்சியில்  ஒரு  மஹான். அவரை எல்லோரும்  அன்பாக  அண்ணா  என்றழைத்தார்கள். சிறந்த  வைஷ்ணவ  ஞானி. அவருடன் தர்க்கம் செய்வது  எளிதல்ல.  எந்த  கருத்தையும்  ஆழ்ந்து சிந்தித்து  தக்க  விடை கூறி  எதிரிகளின் வாதத்தைப்  பொடி செய்பவர்  என்பதால் அவருடன் வாதம் செய்பவர்கள் அவரை பெருமையுடன்  பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்  என்று அழைத்தனர். அவர்  திருமலையில் தங்கி  வெங்கடேச பெருமாளுக்கு  திவ்ய  கைங்கர்யம் செய்து  வந்தார்.  ஒருநாள்  அவரிடம்  ஸ்ரீரங்கத்திலிருந்து  வந்த ஒருவர்  பெரிய ஜீயர் பற்றி சொல்ல அந்த  கவனத்தில் பிரதிவாதி பயங்கரம், பெருமாளுக்கு    தீர்த்தம்  தக்க நேரத்தில்  சாதிக்கவில்லை.  மேலும் தீர்த்தத்தில்  வாசனை திரவியமும் கலக்கவில்லை. இதால் அவர் குன்றிப்போய்  மிக்க விசனம் உண்டாயிற்று.

''பெருமாள்  கைங்கர்யத்தில்  தவறு செய்துவிட்டேனே''  என்று  கலங்கினார்  பிரதிவாதி பயங்கரம். என்ன ஆச்சர்யம்?  வாசனை திரவியங்கள் கலக்காமலேயே  புனித தீர்த்தம்  கம கமவென்று மணத்தது. அசரீரி  அவர் காதில் ஒலித்தது. ''உன்  தீர்த்தத்தை நான் ஏற்றுக்கொண்டேன்'' 

அந்த க்ஷணமே  பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீ ரங்கம் அடைந்து  பெரிய ஜீயரை வணங்கி ஏற்றுக்கொண்டு அவர்  சிஷ்யரானார்.

பெரிய ஜீயர்  விட்டுச் சென்ற  செல்வங்கள் நமக்கு என்ன  தெரியுமா?
தேவராஜ  மங்களம்.
ஸ்ரீ காஞ்சி திவ்ய தேச ஸ்துதி
யதிராஜ விம்சதி
உபதேச ரத்னமாலை
திருவாய் மொழி நூற்றந்தாதி.
ஆரத்தி பிரபந்தம்
திரு ஆராதனம் க்ரமம்  

வயதேற ஏற உடல் குன்றியது பெரிய ஜீயருக்கு.  உள்ளம்  உற்சாகத்தோடு தான் இருந்தது.
திமு திமுவென்று கூட்டம்  எப்போதும்  பெரிய ஜீயர் செல்லும் இடமெல்லாம்  சேரும். 
ஒருநாள் மண்டபத்தில்  வழக்கம்போல்  பெரிய ஜீயர்,   ரங்கநாதன், ரங்கநாயகி முன்பு அமர்ந்து பிரவசனம் செய்துகொண்டிருக்கும்போது,  சம்பாவனை செய்கின்ற நேரம்  வந்தது. அப்போது  ஒரு  ஐந்து வயது குழந்தை கோஷ்டியிலிருந்து  ஓடி வந்தது.
எல்லோரும்  அதிசயிக்க  ''நான்  ரங்கநாதன்  வந்திருக்கேன் என்று சொல்லி  கணீரென்ற குரலில்  

''ஸ்ரீ சைலேச  தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
 யதீந்திர பிரவணம் வந்தே ரம்யாஜ மாத்ரம் முனிம்''

''திருவாய் மொழிப்பிள்ளையான  ஸ்ரீ சைலேசரின்  பெட்டகமான  ஸ்ரீ  மணவாள மாமுனிகளுக்கு  என்னுடைய   நமஸ்காரங்கள். அவர் தான் ஞானம், பக்தி மற்ற  சிறந்த  குணங்களின்  சாகரம், இருப்பிடம், எப்போதும்  ராமனுஜரின்  த்யானத்தில்  தன்னை இழந்தவரல்லவா?''.

இந்த  ஸ்லோகம்  சொல்லிய  குழந்தை  எங்கே ?  திடீரென்று தோன்றிய குழந்தை மாயமாய் மறைந்தது.
அங்கிருந்த அனைவருக்கும் புரிந்துவிட்டது. வந்தது ரங்கநாதனே என்று.   அன்றுமுதல் அந்த ஸ்லோகம்  ஆச்சர்யனின் தனியனாக,  ஸ்லோகமாகி விட்டது.

அன்று முதல் இன்றுவரை  எங்கெல்லாம்  பிரபந்தம்  பாடப்படுகிறதோ, அங்கெல்லாம் தென்கலை  வைஷ்ணவ பக்தர்களால் முதலிலும் முடிவிலும் இந்த ஸ்லோகம்  சொல்லப்படுகிறது.

பிரபந்தம் கேட்டவாறே  தனது 74 வது வயதில்  1444ம்  ஆண்டு   ருத்ரோத்காரி  என்ற  தமிழ்  வருஷத்தில், மாசி மாதத்தில்,திருவோண நக்ஷத்ரம், சனிக்கிழமை, கூடிய  கிருஷ்ணபக்ஷ  த்வாதசி அன்று திருநாடு எய்தினார். அவரது பூத உடலை  பத்மாசன கோலத்தில் அமர்த்தி சிஷ்யகோடிகள்  காவிரிக்கரைக்கு  ஒரு  புஷ்ப பல்லக்கில் பக்தியுடன் சுமந்து ஒரு சந்யாசிக்குறிய முறையில் அந்திமக்ரியைகள் செய்தனர்.   அந்த புனித இடம்  இன்றும் அவரது  பொற்பாதுகை  கொண்ட  க்ஷேத்ரமாக   போற்றி வணங்கப்படுகிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...