Thursday, March 17, 2022

VIDHURA NEETHI

 விதுர நீதி -   நங்கநல்லூர்  J K   SIVAN 


''கேள்வியும் பதிலும்''  

என்னைப்போலவே  பலருக்கும்  முற்பிறவிகளைப் பற்றி நினைக்கும் போதெல்லாம்  களைப்பு மேலிட்டு  தூக்கம் தான்  மிஞ்சும்.  ஆழ்ந்து உள்ளே போய் தேட முயன்றபோதெல்லாம் தோல்வி தான் எதிரே நிற்கும்.  சரி  ஒரு  சில கேள்விகள்.

முற்பிறவியில் செய்த பாவம் இந்த பிறவியில் தொடருமா? 
பெற்றவர் செய்த பாவம் தான்  அவர்கள்  பிள்ளையாய் பிறக்குமா?
திருத்ராஷ்ட்ரனுக்கு ஏன் கண் குருடானது?
ஏன் அவனுக்கு நூறு குழந்தைகள்?

சமீபத்தில் மஹா  பாரதத்திலோ  ஸ்ரீ மத் பாகவதத்திலோ  நான் படித்த ஒரு  சுவாரஸ்யமான  விஷயம்  நினைவுக்கு வருகிறது.  அதை சுருக்கமாக சொல்கிறேன்.
 
பதினெட்டு நாள் தொடர்ந்து நடந்த  குருக்ஷேத்ர மஹாபாரத யுத்தம் 
முடிந்து, யுதிஷ்டிரனுக்கு  பட்டாபிஷேகம்  விழா நடந்துகொண்டிருந்தது.    அப்போது திருதராஷ்டிரன்  கிருஷ்ணனிடம் வந்து 

''கிருஷ்ணா,  நான் குருடனாய் இருந்தபோதிலும், நீதிமான்  என் தம்பி  விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன்.  அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது நூறு மைந்தர்களும் இறந்ததற்குக் காரணம் என்ன?  உனக்குத் தான் தெரியுமே சொல்?'' என்றான்.
 
''த்ரிதராஷ்ட்ர மஹாராஜா,  உங்கள் கேள்விக்கு பதில்  ஒரு கதை தான் சொல்ல முடியும். கேளுங்கள்: அப்புறம் நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொன்னால்  உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்வேன்'' என்றான் கிருஷ்ணன்.
இது தான் அந்த குட்டி கதை: 

''நீதி தவறாது ஆட்சி செய்த ஓர் ராஜாவிடம்  ஏழை சமையற்காரனாக  வேலை செய்தான்.  மிகச் சுவையாக சமைப்பது,  ராஜாவை  பிரத்யேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக் கொண்ட முயற்சிகளினால் வெகு சீக்கிரமே  அரண்மனை தலைமை சமையல்காரனாகிவிட்டான். 

புதிது புதிதாக  ராஜாவுக்கு  வெவ்வேறு  வித்தியாசமான சுவையை அறிமுகப்படுத்தி பரிசு பெறும் எண்ணத்தில் அந்த சமையல்காரனுக்கு ஒரு  விபரீதமான யோசனை தோன்றியது.
அரண்மனைக் குளத்தில் இருந்த அன்னத்தின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாய் சமைத்து, அரசருக்குப் பரிமாறினான்.

தான் சாப்பிடுவது இன்னதென்று தெரியாமல் அப்பதார்த்தத்தின் சுவையில் மயங்கிய ராஜா, அதை மிகவும் விரும்பிச் சாப்பிட்டதோடு அடிக்கடி அதை சமைக்கவும்  கட்டளை இட்டு, சமையற்காரனுக்கு பெரும் பரிசும் அளித்தான்.

''திருதராஷ்டிரரே , இப்போது சொல்லுங்கள் .?.. ராஜா, சமையல்காரன் இந்த ரெண்டு பேரில் அதிகம் தவறிழைத்தவர் யார்?---  கிருஷ்ணன் கேட்டார்.

மகரிஷி வசிஷ்டரின்  சமையற்காரன் தான் அறியாமலே  ஒருநாள்  புலால் கலந்த உணவை அவருக்கு வைத்து விட்டான்.  ஆயினும் வசிஷ்டர் அதைக் கண்டுபிடித்து, அவனுக்கு சாபமிட்டார்.
அந்த விவேகமும் எச்சரிக்கையும் இந்த ராஜாவிடம் 
 இல்லையே! சமையற்காரன் பணம், பரிசுகளுக்கு ஆசைப் பட்டிருப்பான். அதனால் அவன் செய்த தவறு சிறியது.  ஆனால் பல நாட்கள் அசைவம் உண்டும் அதைக் கண்டுபிடிக்காத ராஜா தான் அதிக தவறிழைத் தவன் ஆகிறான்! என்றான் , திருதராஷ்டிரன்.

கிருஷ்ணன்   ''ஹா  ஹா''  என்று சிரித்தான்.  '' திருதராஷ்டிரரே ! நீங்களும்  தான் வெகுகாலமாக ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின்  அரசனாக இருந்தும், நியாயம் தவறாது,  கதையில் வரும் ராஜா பண்ணியது தான்  தவறு! என கூறினீர்கள் . அத்தகைய நீதி  பரிபாலனம்தான் பீஷ்மர், துரோணர்,   போன்ற சான்றோர்களை   உங்கள்  அரசவையில் அமர்த்தியது. நல்ல மனைவி,   நூறு குழந்தைகள் என  நல் வாழ்க்கையை  உங்களுக்குத்  தந்தது.

ஆனால், நான் சொன்ன கதை உங்கள்  முற்பிறப்பு பற்றியது.  சென்ற பிறவியில் நீங்கள்  தான் அந்த ராஜ.  உங்கள்  தவறால் நூறு அன்னக் குஞ்சுகளை  உணவாகச் சாப்பிட்டிருக்கிறீர்கள்..
அந்த அன்னக்  குஞ்சுகளும் , அதன்  அம்மாவும் ஒரு தப்பும் பண்ணாமலேயே  எத்தகைய துயரும், வேதனையும் அடைந்திருக்கும் என்பதை உங்கள் நூறு  பிள்ளைகளை இழந்து நீங்கள் இப்போது  அறிந்து கொண்டீர்கள் .
ஆனால் தினம் தினம் பார்த்தும்  சாப்பிட்டும்   ஏனோ  உங்களுக்கு  சைவ, அசைவ உணவுகளுக் கிடையே வேறுபாடு தெரியவில்லை. அப்புறம் உங்களுக்கு  கண் எதற்கு? அதனாலேயே நீங்கள்  குருடனானீர்கள் '.

தெய்வத்தின்  முன் ஒரு போதும் நீதி தவறாது.  அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்! என்றான் கிருஷ்ணன்.   தன்வினையே தன்னைச் சுடும்  என்று பட்டினத்தார் தெரியாமலா சொன்னார்!  
திருதராஷ்டிரன் வாயடைத்து நின்றான்.
 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...