Wednesday, March 30, 2022

AVVAIYAR

 பாட்டி சொல் தட்டாதே  -   நங்கநல்லூர்  J K  SIVAN 


''
செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இரு நிதியம்?-வையத்து
அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று
வெறும் பானை பொங்குமோ மேல்!

என்  பின்னால்  தெரிகிறதே  ஒரு பெரிய  மலை  அது தான்  நான் செய்த  பாபங்கள். அவற்றை நானே  புரிந்து விட்டு  பகவானே  நீ ஏன் என்னை துன்பத்தில் ஆழ்த்துகிறாய்?  என்று கடவுளை நொந்து என்ன பயன்?  வாழ்வில் நான் சுகப்படுவதற்கு இனியாமாவது பாபங்களை செய்யாமல்   புண்யகாரியங்களில் ஈடுபட வேண்டும். மலையின் உயரம் பருமன் கொஞ்சம் குறையும். வெறும் பானையை நீர் நிரப்பி கொதிக்க வைத்தால் சாதம் கிடைக்குமா? அதில் அரிசி வேண்டாமா சாதமாகி வயிற்றின் பசியை போக்க ?  அருமையான கேள்வி கேட்கிறாள் பாட்டி.

பெற்றார் பிறந்தார் பெரு நாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் என வேண்டார்-மற்றோர்
இரணங் கொடுத்தால் இடுவர்; இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம்.18

அப்பா  அம்மாவாகட்டும், கூடப் பிறந்தவர்களாகட்டும், சொந்த பந்தங்கள் யாராக வேண்டு மானாலும் இருக்கட்டும்,  வேண்டியவன், நண்பன் எவனாக இருந்தாலும் வினர்கள், வேண்டியவர் என்று யாராய் இருந்தாலும், இந்தப் பெருலகில் பெருமை மிக்க நாட்டில் வாழ்பவர் ஆயினும், நச்சரித்து வற்புறுத்தினால்தான் கொடுப்பார்கள். வணங்கி  ஐயா  சாமி  என்று கெஞ்சிக்  கேட்டால் தரமாட்டார்கள்.   எங்காவது  பலமாக அடிபட்டால், உதை பட்டால்  அந்த இடம் காயம் ஏற்பட்டு ரணமாகிறது.   வன்முறையாலும்  சில விஷயங்களை  பெறலாம் என்பது பாட்டியின் அறிவுரை.

சேவித்தும் சென்று இரந்தும் தெண் நீர்க்கடல் கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டு இசைத்தும் போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம்.19

என் இளவயதில் பஞ்சம்  என்றால் என்ன என்று  அனுபவித்திருக்கிறேன்.  ரெண்டாம் உலகமகா யுத்தத்தின் போது  அரிசிக்கு  தட்டுப்பாடு.  பிரேசில் அரிசி என்று ரப்பர்  மாதிரி வெள்ளையாக நீள  வேகாத ஜவ்வு மாதிரி அரிசி சாதம்   ரேஷன் அரிசி அளவு  எங்கள் அனைவர்க்கும் போதாமல் கஞ்சியாக  காய்ச்சி  அம்மா கொடுத்தது ஞாபகம் இருக்கிறது.

ஒரு படி  அரிசிக்கு எவ்வளவு  இடம் போகவேண்டும்,  எவ்வளவு பேரை புகழவேண்டும், பொய்  நிறைய சொல்லவேண்டும். ஊர் ஊராக அலையவேண்டும்.  இதில் போட்டா போட்டி வேறே சமாளிக்கவேண்டும்.   எல்லாம்  சாண்  வயிறே உனக்காக, உன் பசிக் கொடுமைக்கு நாள்தோறும் ஒரு  பிடி  அரிசி  போதாதே,  படி அரிசி வேண்டுமே. கெஞ்சி பிச்சை வாங்குகிறோம். 

அம்மி துணையாக ஆறு இழிந்தவாறு ஒக்கும்
கொம்மை முலை பகர்வார் கொண்டாட்டம்-இம்மை
மறுமைக்கும் நன்று அன்று மாநிதியம் போக்கி
வறுமைக்கு வித்தாய் விடும்.20

ஆழமான ஆற்றில் நடந்து அக்கரை  அடையமுடியாதே . அதற்கு ஒரு  ஓடம் வேண்டும்.  அம்மிக் கல்லை போட்டு அதன் மேல் ஏறி அக்கரை  பெறமுடியுமா?   தனது  உடலை  யார் அதிகம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு என்று 
 ஏலம் போட்டு விற்கும்  பரத்தையரைக் கொண்டாடித் துய்க்கும் இன்பம் இவ்வுலக வாழ்க்கைக்கும், மறுபிறவி வாழ்க்கைக் கும் நன்மை பயக்காது. வைத்திருக்கும் பெருஞ் செல்வத்தை அழித்துவிடும். அது ஒரு விதை. கையில் காசில்லாதவனாக்கும் விதையோ வித்தையோ  என்னவோ   என்கிறார் பாட்டி. என்ன கோவமோ, யார் மேலோ ?


நீரும் நிழலும் நிலம் பொதியும் நெல் கட்டும்
பேரும் புகழும் பெரு வாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ் நாளும் வஞ்சமில்லார்க்கு என்றும்
தரும் சிவந்த தாமரையாள் தான்.21

செந்தாமரை மலரில் வீற்றிருக்கும்  மஹா லக்ஷ்மி, திருமகள்,  என்ன  அருள் புரிவாள் நமக்கு தெரியுமா?   வெயிலில் வருந்துபவர்க்கு நீரோடு கூடிய நிழல்,  நிலமெல்லாம் கட்டுக்கட்டாக நெல், பாரில் எல்லோரும் போற்றும் நல்ல பெயர், புகழ், பெருமையுடன் வாழும் வாழ்வு, நல்ல மக்களை உடைய ஊர், வளரும் செல்வம், ஆகியவற்றை  எல்லாம் தருவாள்.  யாருக்கு என்று கேட்கவேண்டாமா?  நெஞ்சில் வஞ்சம் இல்லாதவருக்குத் தான் இதெல்லாம் வழங்குவாள். கொடியவருக்கு அல்ல.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...