Friday, April 13, 2018

VILAMBI


விளம்பி  வருஷம் பற்றி விளம்பியது  -  J.K. SIVAN 

தமிழ் புத்தாண்டு விளம்பி வருஷம்  நாளைக்கு  துவங்குகிறது. விளம்பி என்றால்  புத்த  ஹிந்து மாதங்களில் வெவ்வேறு ஒரு அர்த்தம்.  வேத வானசாஸ்த்ரத்தில் முப்பத்தி ரெண்டாவது வருஷம். இந்த வருஷத்தில் பிறந்தவன்  கொஞ்சம் நிழல் ஆசாமியாம், சுறுசுறுப்பில்லையாம், பேராசை உண்டாம், நோஞ்சான், என்னபேசுகிறோம் என்று  தெரியாமல் புரியாமல் பேசுவானாம், மனைவிக்கு பிடிக்காதாம், அமுக்கு பேர்வழி, ஒண்ணும் விஷயம் வெளியே சொல்லமாட்டானாம், மனசு சஞ்சலப்படுபவனாம். இதற்கும் மேல் வேறு என்ன தான் சொல்லமுடியும். ரொம்ப பயமாக இருக்கிறது இந்த கணிப்பு,  இல்லையா?.

ஜாதக பாரிஜாதம் என்று ஒரு புஸ்தகம். இந்த வருஷம் (2018-19) பிறந்தவன் அமோகமாக இருப்பான். கொடிகட்டி பறப்பவன். பிராமணர்களால் நேசிக்கப்படுபவனாம்.  தான தர்மம்  போன்ற நல்லது செய்வானாம்.    ''சம்வஸ்திரங்களால் நேரும் பலன்''  இதைக் கூறுகிறது. 

ஜோதிஷம் என்பது வானசாஸ்த்ரத்தை பின்பற்றி கூறப்படும் கணிப்பு. நாலு வேதம் ஆறு சாஸ்திரம் என்கிறார்களே அந்த ஆறு சாஸ்திரத்தில் வானசாஸ்திரம் ஒன்று.  மேலே   கீழே பக்கத்தில் என்று சுழலும் கிரஹங்களின் பெயர்ச்சியை சுழற்சியை கணக்கெடுத்து பூமியில்  பன்னிரண்டு ராசிகளில் அந்த கிரஹங்கள் தங்குவதால் ஏற்படும் பலன் சொல்வது.  நல்ல நாள் கெட்ட நாள், என்ன நக்ஷத்ரம் என்று பார்க்க உதவுவது. 

புத்த ஸாஸன எனும் பாலி மொழி புஸ்தகம் விளம்பி அவ்வளவு சுவாரஸ்யமான வருஷம் என்று சொல்லவில்லை. 

நான்  இந்த வருஷ பலன் சிலவற்றை மேலோட்டமாக பார்த்தேன்;
அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும்.  

(''மேல் வரும்படி''  எனும் இதர வருமானமே சிறப்பு அம்சம் தானே! வேண்டாம் வாங்காதீர்கள் என்று நான் சொன்னால் யார் கேட்க போகிறார்கள்)

தொழிலாளர்களுக்கு வேலைப்பளு குறைந்து சம்பளஉயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கலாம். 

(எப்போதுமே இது தானே எதிர்பார்ப்பு.   இதற்கு எதற்கு ஜோசியம்)

தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள். 

(அதற்கு தானே சார் பதவியிலிருப்பதே. என்ன புதுசாக சொல்லி  விட்டீர்கள்)

இதுவரை குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதி யினர் ஒன்று சேர்வார்கள். கணவன் ஓரிடம், மனைவி வேறிடம் என்று வேறு வேறு இடங்களில் பணிபுரிந்தவர்களுக்கு ஒரே இடத்தில் பணிமாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்று சேரும். 

(இது கனவு ஜாதியை  சேர்ந்த சமாச்சாரம்.  ஜோசியத்தில் கனவு பலிக்குமா?)

நீண்டநாட்களாக திருமணமாகாமலோ அல்லது திருமணத்தை எடுத்துச் செய்ய குடும்பத்தில் சரியான நபர்கள் இல்லாமல் இருப்பவர்களுக்கும் குடும்பத்தில் மூத்தவர்களாக பிறந்தவர் களுக்கும் நவம்பர் மாதத்திற்கு பிறகு நல்லசெய்திகள் இருக்கும்.

(எவ்வளவு ஜாக்கிரதையாக ஜோசியர் பலன் சொல்கிறார் பாருங்கள்.  உடனே எதிர்பார்த்து விடாமல் நவம்பருக்கு காத்திருந்தால் அப்புறம்   ''இருக்குமாம்''.அதற்குள் இதை மறந்து விடமாட்டோமோ.  ஜோசியர் கெட்டிக்காரர்.)

நவம்பருக்குப் பிறகு இளைய பருவத்தினருக்கு திருமண அமைப்புகள் கூடிவந்து ஜாம்ஜாம் என்று திருமணம் நடக்கும். காதலித்துக் கொண்டிருப்பவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமண பந்தத்தில் நுழைவீர்கள். முதல் திருமண வாழ்க்கை முறிந்து இரண்டாம் திருமணத்திலாவது நிம்மதி இருக்குமா என்று பயந்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போது திருமண அமைப்பு உண்டாகும். அந்த இரண்டாவது வாழ்க்கை நன்றாகவும் நிம்மதியாகவும் இருக்கும்.  

(நம்பிக்கை நக்ஷத்ரம் நீங்கள்.  நம்புங்கள் நாராயணன் கை விடமாட்டார் )

குழந்தை பிறக்காமல் தாமதமாகி வரும் தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நீங்கள் நினைத்தபடியே நடக்கும். உடல்நிலையும் மனநிலையும் மிகவும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும்.  

(ரொம்ப சுகமாக இருக்கிறது படிக்க.  தேவர்கள் கந்தர்வர்கள் நாரதர் எல்லோரும் ''ததாஸ்து'' சொல்லுங்கள்)

பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். இதுவரை வருமானம் இன்றி பணப்பற்றாக்குறையால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப்பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும். 

(நல்லது நினைத்தால் நல்லதே நடக்குமாம் . இது ஜோசியம் சொல்லாத ஆன்றோர் வாக்கு)

பிற இன மொழி மதக்காரர்கள் உங்களிடம் நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள் இந்த வருடம் நண்பர்களாகக் கிடைப்பார்கள்.  அவர்களால் நன்மைகள் உண்டாகும்

(சீனா, ஜப்பான் வெஸ்ட் இண்டீஸ்  நண்பர்களை தேடுங்கள்.)  .  (IPL போட்டிகளில் சிக்ஸர்கள் அடிப்பார்கள் ரசிப்பீர்கள்)

 தூரத்தில் பணியிடம் அமையும். பிரயாணங்களால் உற்சாகமாக இருப்பீர்கள். 

(வீட்டிலிருந்து சீக்கிரமாக கிளம்ப இது உதவும். சந்தோஷம் தானே.)

 வருடத்தின் பிற்பகுதியில் மிகவும் நல்ல பலன்கள் உங்களுக்கு நடக்கும். 

(பிற்பகுதி வரட்டும். அப்போது  என்னை பாருங்கள். உங்கள் கோ சார பலனால் ஏன் நடக்கவில்லை அவ்வாறு என்று வேறு ஜோசியம் சொல்கிறேன்)


இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் வருட முற்பகுதியில் மிகவும் யோகமான நிகழ்ச்சிகளை சந்திப்பீர்கள். எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் காலம் இது. எதிர்காலத்தில் நீங்கள் எந்தத் துறையில் இருக்கப் போகிறீர்கள் என்பதை இந்த வருடம் நிர்ணயிக்கும் என்பதால் மிகவும் பயனுள்ள வருடமாகும் இது. 

(ஆமாம் இளைஞர்களே, எதிர்காலம் ஜொலிக்கும் என்று நம்பிக்கையில் எதிர்காலத்துக்குள் சென்று கொண்டே இருங்கள்.ஆங்கிலத்தில் இதை தான் MAN  LIVES  ON  HOPES  என்போம்)

கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். 

(கருத்து வேறுபாடு மறந்து போனால் நல்லபடி தானே நடக்கும்.  மந்தமான நிலை மாறினால் வேலை ஜரூராகத்தானே நடக்க வேண்டும் )

நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். 

(யார் உதவி செய்கிறார்களோ  அவர்கள் நண்பர்களும் பங்குதாரர்
களும் தானே)

தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள்.  

(அப்பா, அப்பா வழி சொத்து என்றால்  தான தர்மம் விட்டு விளாச வேண்டியது தானே.)

புனித யாத்திரைகள் இப்போது செல்ல முடியும். வயதானவர்கள் காசி கயா போன்ற புனிதப்பயணம் செல்வீர்கள்.  

(என்ன இது.  இருப்பது வயசு பையனா காசி கயா  போவான்?)

இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார்.

(நாம்  ஹரித்துவார் செல்வதற்கே யோசிக்கிறோம். ஹஜ் எங்கே எப்போது?  இஸ்லாமியர் தான் செல்வார்கள். சரியான ஜோசிய கணிப்பு )

பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.

(இது ஒரு நல்ல விஷயம்.  ஜோசியம் பார்க்காமலேயே செய்யவேண்டிய ஒன்று )

வெளிநாட்டு விஷயங்கள் நல்லபலன் அளிக்கும் என்பதால் இப்போது வெளிநாட்டு வேலைக்கோ அல்லது வெளி தேசத்தில் மேற்படிப்பு படிக்கவோ செல்ல முடியும். அதனால் நன்மைகளும் இருக்கும்.

(ஏதோ நன்மை என்று ஆசைப்பட்டு தானே எப்படியோ அடித்து பிடித்து வெளிநாட்டு செல்கிறோம்.)

குறிப்பிட்ட சிலருக்கு இப்போது இருக்கும் வாகனத்தை விட நல்ல வாகனம் அமையும். வாகன மாற்றம் செய்வீர்கள். பங்குச்சந்தை யூகவணிகம் போட்டி பந்தயங்களில் சிறிதளவு லாபம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. 

(பழைய வண்டி ஓடவில்லையானால் மாற்றுவதும், பங்கு சந்தையில் ஏதாவது ஒரு ரூபாயாவது நஷ்டமில்லாமல் இருக்க  பிரயாசைப்
படுவதும் ஜோசியத்துக்கு அப்பாற்பட்டது).

இதுவரை இழுபறியில் இருந்து வந்த பேச்சு வார்த்தைகள், நடவடிக்
கைகள் உங்களுக்கு சாதகமாக முடிவுக்கு வரும். 

(அப்படியே ஆகுக)

இனிமேல் வராது என்று கை விடப்பட்ட பணம் கிடைக்கும்.

 (நம்பிக்கையை கைவிடாமல்  அழையுங்கள். அலைச்சலுக்கு ஆகும் செலவு கைவிடப்பட்ட பணத்தை விட அதிகம் ஆகும். அதனால் என்ன?)

வயதான பெற்றோரைக் கொண்டவர்கள் அவர்களுடைய உடல் நலத்தில் சிறு பிரச்னை இருந்தாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது நல்லது. பெற்றோரால் விரயங்கள் இருக்கக் கூடும். 

(அப்பா அம்மா, தாத்தா பாட்டி மறுத்த்துவ செலவே விரயம்...என்று நினைக்காதே என்கிறது ஜோசியம். நல்ல ஜோசியம். அப்பல்லோ பக்கம் போகாதே. ஜோசியம் காப்பாற்றாது. காசு கொடுக்காது)

பூர்வீகச் சொத்தில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் தீர்ந்து உங்கள் பங்கு உடனே கிடைக்கும். பங்காளித் தகராறுகள் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்படும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இதுவரை வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பதவி உயர்வு உண்டு. இடமாற்றம், கேட்டபடியே கேட்கும் இடத்தில் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக்குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம்.
(விளம்பி வருஷ பலன் அற்புதம். மனம் இனிக்கிறது)

பெண்களுக்கு கழுத்துநகை வாங்கும் யோகம் வந்திருக்கிறது. 
(காலுக்கு நகை வாங்க ஜோசியம் பார்க்க வேண்டாம்)


இளம்பெண்களுக்கு தாலிபாக்கியமும் திருமணமானவர்களுக்கு நகைகள் சேருதலும் நடக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மிகவும் அருமையான வாய்ப்புகள் வரக்கூடிய காலகட்டம் இது.
(தாலி தேடுபவர்கள் இளம்பெண்களாக இருக்கட்டும்.  வேலைக்கு செல்பவர்களுக்கு  நல்ல வாய்ப்பு  என்கிறது ஜோசியம். அது என்ன என்று யோசியுங்கள். டைம் அடுத்த வருஷம் வரை தருகிறேன்)


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...