Thursday, April 5, 2018

BADRAGIRIYAR PULAMBAL




பத்ரகிரியார் புலம்பல் - J.K. SIVAN மேற்சொன்ன பெயரில் அற்புதமான வேதாந்த பாடல் ஒன்று இருக்கிறது. படிக்க சுகமாக இருக்கிறது. சிலவற்றை அவ்வப்போது கொஞ்சம் தருகிறேன். இந்த பத்ரகிரியாரை தான் வடக்கே இருந்த ஒரு உஜ்ஜயினி ராஜா விக்ரமாதித்தன் உறவினன் ராஜா பர்த்ரூஹரீ என்பார்கள். அவர் எழுதிய நீதி சதகம் - சுபாஷிதமும் -- தான் அடிக்கடி என் மூலம் படிக்கிறீர்கள். அதே ஆசாமி, சாமியாராகி, தெற்கே வந்து பட்டினத்தார் சீடனாகி திருவிடை மருதூரில் இருந்தார் என்கிறார்கள். அதுவும் என்னால் சரி யாக சொல்லமுடியாது. எத்தனையோ நூறு வருஷங்களுக்கு முன்பு நடந்த விஷயங்களை யாரும் சரியாக எழுதி வைக்கவில்லை. வைத்திருந்தாலும் பாதிக்கவில்லை. நாம் விநோதர்கள். தண்டிகையும், சாவடியும், சாளிகையும், மாளிகையும் கண்டு களிக்கும் கருத்தொழிவது எக்காலம்? (எனக்கு வேண்டாமே அப்பா இந்த பல்லக்கு, மேளதாளம், மாளிகை இதெல்லாமோ தொலைத்துவிட்டு, மரத்தடி சுகம் எனக்கு எப்போ? ) அத்தன் இருப்பிடத்தை ஆராய்ந்து பார்த்து நிதம் செத்த சவம்போல் திரிவதினி எக்காலம்? (எல்லாம் என்னை விட்டு எப்போது போகும்? என் அப்பன் எங்கே இருக்கிறான் அவனைத் தேடி பிடித்து ஆராய்ந்து ரசித்து இந்த மனித வாழ்க்கையை செத்த பிணம் போல் ஈடுபாடு இல்லாமல் நடத்துவது எப்போ?) அற்பசுகம் மறந்தே அறிவை அறிவால் அறிந்து கர்ப்பத்தில் வீழிந்து கொண்ட கோளறுப்பது எக்காலம்? ( இந்த உலக சுகம் என்ற துன்பத்தை விட்டு, நீ கொடுத்த அரிவாள் உன்னையே அறிந்து கொண்டு இந்த பிறவிப்பிணி பந்தத்திலிருந்து விடுபடுவது எப்போ?) தூண்டு விளக்கணைய தொடர்ந்து இருள் முன் சூழ்ந்தாற்போல் மாண்டு பிழைத்துவந்த வகை தெரிவது எக்காலம்? (தூண்டி தூண்டி விட்டும் இதோ இந்த தீபம் அணைகிறது . பழையபடி இருட்டு எங்கும். பிறந்து இறந்துமறுபடி பிறந்து... அடேடே இந்த தொந்தரவு என்னை விட்டு நீங்குவது எப்போ?) எண்ணூறு யுகமிருந்தும் எய்தாத விடுபெற வெண்ணீறு பூசி விளங்குவதும் எக்காலம்? (அப்பப்பா எவ்வளவோ வருஷங்கள் யுகங்கள், மீண்டும் மீண்டும் பிறவி இறப்பு.... பேசாமல் வெள்ளை வெளேரென்று விபூதி குழைத்து உடலெங்கும் பூசி உன்னையே நினைப்பது எப்போ?) அவவேடம் பூண்டு இங்கு அலைந்து திரியாமல் சிவவேடம் பூண்டு சிறந்திருப்பது எக்காலம்? (ஆச்சு ரொம்ப வருஷம் என்னென்னவோ வேஷம். குழந்தை, பையன், வாலிபன் , உத்யோகஸ்தன், கணவன், அப்பன், தாத்தா, கலெக்டர் உத்யோகம், பணக்காரன் , படிச்சவன். பேச்சாளி, பாடகன். இந்த வேஷம் எதுவும் நிரந்தரமாகவே இல்லையே, பேசாமல் கழுத்தில் ருத்ராட்சம், தலையில் மொட்டை , பூசுவது வெண்ணீறு என்று உன்னை நினைக்கும் சிவனடியாராக சுகமாக இருப்பது எப்போ?) அண்டருக்காய் நஞ்சருந்தி அம்பலத்தில் ஆடுசிவன் தொண்டருக்குத் தொண்டன் எனத் தொண்டு செய்வது எக்காலம்? (இந்த பிரபஞ்சத்தை படைத்து காத்து தேவைப்படும்போது அழித்து, இந்த உலக இயக்கத்தையே தனது நடனமாக கொண்டு ஆடும் அந்த சிதம்பரேசன் என் தலைவன் அவனுக்கு நான் தொண்டரடி தொண்டன் என்று பணி செய்யவேண்டுமே அது எப்போ?) பன்றி வடிவெடுத்துப் பார் இடந்து மால்காணாக் குன்றில் விளக்கொளியைக் கூறுவதும் எக்காலம்? (ஆமாம் ஆமாம், அந்த விஷ்ணுவே வராக உருவெடுத்து பூமி பாதாளம் வரை குடைந்து பார்த்தும் அடி தெரியவில்லையே. மேலே முடியும் தெரியவில்லை. திருவண்ணாமலை குன்றில் உன்னை ஒரு ஒளியாக கண்டு மகிழ்வது போதுமே. அது எனக்கு எப்போ?) தித்திக்கும் தெள்ளமிழ்தை சித்தாந்தத்து உட்பொருளை முத்திக்கு வித்தை முதல் நினைப்பது எக்காலம்? (என்னென்னவோ படித்துவிட்டேன். கேட்டு விட்டேன். பரமேஸ்வரா உன் ப்ரம்மத்வத்தை அத்வைத சித்தாந்தத்தை முக்திக்கு வித்தான அந்த ஞானத்தை பற்றி கொஞ்சமாக நான் நினைக்கவேண்டும் அது எப்போ?) வேதாந்தவேதம் எல்லாம் விட்டொழிந்தே நிட்டையிலே ஏகாந்தமாக இருப்பதினி எக்காலம்? (சரி வேதாந்தம் எல்லாம் வேண்டாம். எல்லாவற்றையும் விட்டுவிட்டு, இதிலிருந்தும் விடுபட்டு தனித்து உன்னையே நினைவில் நிறுத்தத்தில் தியானம் பண்ணினால் எவ்வளவு சுகமாக இருக்கும்? அது எப்போ?) இன்றுளோர் நாளை இருப்பதுவும் பொய்யெனவே மன்றுளோர் சொல்லும் வகையறிவது எக்காலம்? (இந்த வாழ்க்கை ஒரு மாயை. நீர் மேல் குமிழி, இருப்பது தோல் தோன்றி இல்லாமல் போவது. நேற்றிருந்தவனை இன்று காலை காணோம். இன்றுஇரவு நான் படுப்பேன் தூங்குவேன் என்று நிச்சயமாக சொல்ல முடியவில்லை. நாளை காலை எழுந்திருப்பேன் என்றும் சொல்ல இயலவில்லை. இந்த மாதிரி அநித்யத்தை எவ்வளவோ முறை அறிஞர் சொல்கிறார் கேட்டிருக்கிறேன். சாம்பார் சாதம் தேடுகிறேன். நான் உண்மையை அறிவது எப்போ?)

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...