Thursday, April 1, 2021

PESUM DEIVAM


 

பேசும் தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN

''வெளியே நீ என்ன பண்ணினே?''

அதென்னவோ தெரியவில்லை. மஹா பெரியவா மஹாத்மியம் பற்றி பேசாதவர்கள், எழுதாத வர்கள் இல்லை. ஏன் ? ஏதேனும் தனி மனிதன் லாபத்திற்கா? நிச்சயம் இல்லை. அந்த மஹான் அவ்வளவு அற்புதமாக வாழ்ந்தவர். பிறர்க்கென வாழ்ந்து தனது பதவியான ''ஜகத் குரு'' ஆசனத்தை அலங்கரித்தவர். அவரது வாழ்வின் ஒவ்வொரு கணமும் எவர் வாழ்விலாவது நல்லது நடக்கவே விளம்பரமின்றி பேர் புகழ் பெற எண்ணமற்று அர்பணிக்கப்பட்டது . பிறகு என்ன? தெய்வத்தை நாடி பக்தர்கள் கடல் அலைபோல அவரை ஓயாமல் ஒழியாமல் தேடமாட்டார்களா?

இன்னொரு விஷயம். நாம் படிக்கும், எழுதும் சொல்லும் விஷயங்கள் அனைத்தும் நமக்கு சுய அனுபவத்தில் அறிந்ததல்ல எங்கோ படித்தது கேட்டது. அதை அனுபவித்து அதில் கண்டதைச் சொல்லும்போது அதன் ரஸத்தில் மகிழ வேண்டுமே தவிர இது தவறு, இது ஒரிஜினல் இல்லை, ஒரிஜினல் நான் எழுதினேன் என்று ஒருவர் சொல்வது பெரியவாவை முன்னிலைப் படுத்தி சொல்வதா, தன்னை முதன்மைப் படுத்திக் கொள்ளவா என்று புரியாதபடி இருக்கக் கூடாது. யார், எங்கு, எப்போது, என்றைக்கு, என்பதை விட என்ன சொல்லப் பட்டது என்பதே முக்கியம். வாசகர்கள் அதைத்தான் விரும்புகிறார்கள். நான் அதைத் தான் ரசிக்கிறேன்.

இப்போது நான் எழுதும் விஷயமும் அப்படித் தான் எங்கோ எவரோ அறியப்படுத்தியதை தான் நான் என் வழியில் சொல்கிறேன். கூட்டியோ குறைத்தோ சொல்ல விருப்ப மில்லை. அவசியமுமில்லை. ஒவ்வொருவர் சொல்வதும் வித்தியாசப்படும் அவ்வளவே.

ஒரு முறை, ஸ்ரீ மகாபெரியவா திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் முகாமிட்டிருந்தார். மகாபெரியவர் பாபநாசத்தில் முகாமிட்டி ருக்கும் செய்தி காட்டுத்தீ போல் எங்கும் பரவியபோது அந்த பக்கம் இருந்த பக்தர்கள் எவ்வளவு மகிழ் வார்கள். சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஸ்ரீ மகாபெரியவாளை தரிசித்து அனுக்ரஹம் பெற்றுச் சென்றனர்.

மகாபெரியவா முகாமிட்டிருந்த இடத்திற்கு வெளியே அந்தப் பக்கத்திலேயே ஒரு இடத்தில் கண் பார்வையற்ற தம்பதியர் கையில் பார்வை யில்லா கைக்குழந்தையுடன் வருவோர் போவோர் தயவில் பிக்ஷை எடுத்துக் கொண்டி ருந்தனர்.
சென்னையில் வசிக்கும் ஒரு மிகப்பெரிய பணக்காரர் பெரியவா பக்தர். ஸ்ரீ மகாபெரியவா எங்கெல்லாம் முகாமிட்டிருக் கிறாரோ அங்கெல் லாம் சென்று ஸ்ரீ மகா பெரியவாளின் அனுக்ரஹம் பெறுவதை வழக்கமாகக் கொண்டி ருந்தார்! பெரியவா பாபநாசத்தில் முகாமிட் டிருப்பதை அறிந்து அந்த செல்வந்தர் பாபநாசத்திற்கு கிளம்பிவிட்டார்.

வரும் வழியில் அந்த செல்வந்தரிடமும் மேலே சொன்ன கண்பார்வையற்ற தம்பதிகள் பிக்ஷை கேட்டிருக்கிறார்கள்.

பெரியவாளை தரிசிக்க அவசர அவசரமாக செல்லும்போது இடையூறாக, தடங்கலாக, தன்னை நிறுத்தி தொந்தரவு செய்யும் அந்த பார்வையற்ற தம்பதிகள் மேல் அந்த பணக் காரருக்கு அளவு கடந்த ஆத்திரம் வந்தது. வந்த கோபத்தில் அந்த தம்பதியை வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டு அவர்களை எட்டி உதைத் துத் தள்ளி விட்டு பெரியவா தங்கியிருந்த முகாமுக்குள் அவசரமாக நுழைந்தார் பணக்காரர்.

ஸர்வமும் அறிந்த ஜகத் குருவுக்கு வெளியே நடந்த சம்பவம் தெரியாமலா போகும்? முகாமுக்குள் ஸ்ரீ மகாபெரியவர் நிறைய பக்தர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்! பணக்காரர் எதிரே வந்து நிற்பதை கண்டு கொள்ளவே இல்லை. எல்லா பக்தர்களிடம் பேசிமுடிந்த பிறகு கடைசியில் சற்று ஓய்வாக பெரியவா இருப்பதை கவனித்த காத்துக் கொண்டிருந்த பணக்காரர் தனது கையில் வைத்திருந்த தட்டில் புஷ்பங்கள், பழ வகைகள், மஞ்சள் குங்குமம் முதலிய பொருட்களுடன் ஸ்ரீ மகாபெரியவா அருகில் சென்றார்.

மகா பெரியவாள் முன்பு தட்டுகளை வைத்து சமர்பித்துவிட்டு நமஸ்கரித்தார். பெரியவா அவரை கண்ணெடுத்துப் பார்த்தார்.

'' பெரியவா, நான் சென்னையில் இருந்து உங்கள் தரிசனத்துக்கு வந்திருக்கேன்! உங்க ஆசீர்வாதம் பெற ஓடி வந்தேன்''

''பெரியவா ஒன்றும் பேசவே இல்லை. தட்டை பார்க்கவே இல்லை. முகத்தில் வழக்கமான புன்னகை இல்லை. ஏன்? ஏதோ நடக்கப் போகிறது என்ற சம்சயம் எல்லார் முகத்திலும் காணப்பட்டது. அமைதி நிலவியது.

அடுத்து என்ன நடக்கப்போகிற தென்று முகாமில் இருக்கும் பக்தர்கள் அனைவரும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கையில் ஸ்ரீ மகாபெரியவாள் சற்றே குரலை உயர்த்தி

''இந்த காம்ப்க்கு வெளியிலே பிக்ஷை எடுத்துக் கொண்டிருந்த தம்பதியை நீ என்ன பண்ணே?'' என்று அந்த பணக்காரரை பளிச்சென்று கேட்டார்.

அவ்வளவுதான்! ஆடிப்போய்விட்டார் அந்த பணக்காரர். உடல் நடுங்க வார்த்தை இன்றி நின்றார். கூடியிருந்த மற்ற பக்தர்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். எல்லோர் முகத்திலும் ஒரு திகில் ரேகை.

பணக்காரர் சாஷ்டாங்கமாக ஸ்ரீ மகா பெரியவா திருவடிகளில் மறுபடி வீழ்ந்து நமஸ்கரித்து தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார்.

''ஏண்டா, உன்னால அந்த பிக்ஷை எடுக்குற தம்பதிக்கு எதுவும் கொடுக்க முடியல்லை ன்னா என்னால ஒன்னும் கொடுக்க முடியாது போங்கோ ன்னு தானே சொல்லிட்டு நீ அன்னண்டை போகணும். அது தானே முறை. அதை விட்டுட்டு எதுக்கு உனக்கு கோபம்? பாவம் கண் தெரியாதவாளை , கையிலே இருக்கிற சிசுவுக்கும் கண் தெரியலே ன்னு பரிதாபப்படாமல், அவாளை கண்டபடி திட் டினது மட்டுமில்லாம அவாள அடிச்சு உதச்சிருக்கே! நீ செஞ்ச பாவத்துக்கு உனக்கு ப்ராயஸ்சித்தம் இல்லை'' என்று சொன்னார் மஹா பெரியவா.

எங்கோ வெளியே நடந்ததை அப்படியே கண் முன்னாள் காட்சியாக கொண்டுவந்த பெரியவாளை பார்த்து நடுங்கிவிட்டார் பணக்காரர். தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு, பாபம் என்று உணர்ந்துவிட்டார்.

''நான் அபராதம் பண்ணிட்டேன். மஹா பாவி . பண்ணினது ரொம்ப பெரிய தப்பு பெரியவா. ஆத்திரத்திலே அறிவு மழுங்கி போச்சு. செஞ்ச பாவத்துக்கு பரிகாரமே இல்லையா பெரி யவா''. ஓவென்று அனைவர் முன்னிலை யிலும் அழுதார் பணக்காரர்.

மஹா பெரியவா கருணா மூர்த்தி இல்லையா. நீ அதிர்ஷ்டக்காரன். உனக்கு தெரியுமா இந்த ஊர் பெயரே. பாபாவினாசம் . இந்த பாபநாசத்துல இருக்குற பாப விநாஸேஸ்வர ஸ்வாமிய இப்போவே போய் நமஸ்கரி. அங்க உன் பாவத்து க்கு பரிகாரம் தேடிக்கோன்னு சொல்லிட்டார்!

அடுத்த நொடியே பாபவிநாசேஸ்வர ஸ்வாமி கோவிலுக்குப் பறந்தார் பணக்காரர். அங்கு வீற்றிருக்கும் ஸ்ரீ பாபவிநாசேஸ்வரன் சந்நிதியில் ஸ்வாமியிடம் தான் செய்த பாவம் தீருவதற்கான பரிகாரத்தை வேண்டி தேம்பித் தேம்பி அழத் தொடங்கினார்!

இப்போது ஐந்நூறு அதிசயம் நிகழ்ந்ததை சொல்கிறேன். அன்று இரவில் அந்த பணக்காரர் கனவில் ஸ்ரீ பாபவிநாசேஸ்வர ஸ்வாமியின் உருவத்தில் ஸ்ரீ மஹா பெரிய வாளே தரிசனம் தந்தார்!

''நீ உன் காலால் எட்டி உதைத்து அடித்த அந்த பார்வற்யற்ற பிக்ஷையெடுக்கும் தம்பதிக்கு எந்த விதத்திலாவது உபகாரம் செய்! அதுவே நீ செய்த பாவத்திற்கு பரிகாரம்'' -- பெரியவா அறிவுரை கூறி மறைந்தார்.

பொழுது எப்போது விடியும் என்று காத்திருந்த பணக்காரர் தெருவில் ஓடினார். அந்த பார்வை யற்ற தம்பதியர் பிக்ஷையெடுக்கும் இடத்திற்கு நிமிஷத்தில் வந்துவிட்டார். அவர்களைப் பார்த்து தேம்பித் தேம்பி அழுது கொண்டே அந்த பார்வையற்ற நபரின் கையைப் பிடித்துக் கொண்டே

''நான் ரொம்ப பெரிய பாவம் பண்ணிட் டேன்.. நான் செய்த பாவத்திற்கு பரிகாரமாக உங்க மூனுபேருக்கும் கண்பார்வை கிடைக்க நானே டாக்டர் கிட்டே அழைச்சுண்டு போய் சிகிச்சைக் கு ஏற்பாடு பண்ணி எல்லா மருத்துவ செலவையு ம் ஏற்றுக்கொண்டு எப்படியாவது பார்வை திரும்பபெற வேண்டிக்கிறேன்.

உங்களுக்கு நான் இப்படி உபகாரம் பண்ணுகிற பாக்கியத்தை சாக்ஷாத் பாப விநாசேஸ் வர ஸ்வாமியே மஹா பெரியவா மூலமா எனக்கு கொடுத்திருக்கிறார். வாங்கோ என்னோட இப்பவே என்று அவர்களை தன்னோடு அழைத்துச் சென்றார். சென்னை யில் பெரிய கண் மருத்துவரிடம் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.

ஒரு மாதம் தன்னுடைய சென்னை வீட்டில் தங்க வைத்து அந்த குடும்பத்தில் மூன்று பேருக்கும் பார்வை கிடைப்பதற்கு உண்டான இருபது லக்ஷ ரூபாய் முழு செலவையும் தானே பணக்காரர் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்!

அந்தத் தம்பதி பார்வை பெற்று ஸ்ரீ மஹா பெரிய வாளின் அருட்கடாக்ஷத்துடன் எந்தவிதமான குறையுமின்றி சகலவிதமான செல்வங்களுடன் எகிப்து நாட்டில் கண் பார்வை பெற்ற பிள்ளையோடு வசித்து கொண்டிருப் பதாக செய்தி. .

மஹா பெரியவா பேசும் தெய்வம் என்று போற்றி வணங்குகிறோமே , அவர் என்றும் நம்மோடு இருக்கிறார். நம்மை ரக்ஷித்து அருள்பாலிக் கிறார் என்றால் அது மூட நம்பிக்கை இல்லை. அறியாதவர்கள் , அஞ்ஞானிகள் வார்த்தை அது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...