Wednesday, April 7, 2021

PESUM DEIVAM

 பேசும் தெய்வம் --   நங்கநல்லூர்  J K  SIVAN 




     சாமியார் இல்லை,  ''ஸ்வாமி '' யார்?


மஹா பெரியவா எப்போதும் யார்  இதைக் கேட்டாலும் பாரபக்ஷம் இல்லாமல்  அருளுபவர். இது  அவர் பக்தர்களுக்கு நன்றாக தெரியும்.  இன்றும்  அவரை வீட்டில்  படமாக  கண் எதிரே  வைத்தும்  பூஜையில் வைத்தும்  வணங்குகிறோமே  எதனால்?  அவரது   படம் இருந்தாலே  அந்த வீட்டில் தெய்வீகம் தானே  நிரம்பிவிடும். அப்படிப்பட்ட  தவ வலிமை அவரது உருவப்படத்திலும், சிலையிலும், ஏன் அவரது நாமத்தை சொல்லும்போதும்  எவராலும் உணரமுடியும்.  

மஹா பெரியவா உங்களை  மஹா  ஸ்வாமி  என்று தான் சொல்ல முடிகிறது.   நீங்களே  சொல்லுங்கள்  ஸ்வாமி  என்றால் என்ன. உங்களுக்கே  உரிய  எளிய  மொழியில்  அருமையாக புரியும்படி உபதேசம் செய்யுங்கோ:

''ஸ்வாமி  என்றால்  என்ன, அது யார்?''

''நான்  தான் ஏற்கனவே  சொல்லிஇருக்கேனே. சரி  அதையே  மறுபடி சொல்றேன் கேட்டுக்கோ:''

'' 'ஸ்வம்' என்கிற வார்த்தைக்கு 'உடைமை', 'சொத்து' என்று அர்த்தம். 'ஸ்வம்' என்பதே தெலுங்கில் 'ஸொம்மு' என்றாகியிருக்கிறது. 'ஸொம்மு' என்றால் 'சொத்து'. ஸ்வந்தம் - நமக்குச் சொந்தமானது - அதுவே நம் சொத்து. கோயிலைச் சேர்ந்த சொத்தைக் கேரளத்தில் 'தேவஸ்வம்' என்று  தான் சொல்கிறார்கள். உனக்குத் தான் தெரியுமே.  ஆகவே  உடைமைக்கு சொந்தக்காரர் யாரோ அந்த உடையவர்தான் 'ஸ்வாமி'. ஸ்வாமி என்பதற்கு நேர் தமிழ் வார்த்தை 'உடையார்' என்பது. முன் காலத்தில் கோயில் சுவர்களில் வெட்டப்பட்ட கல்வெட்டு களிலெல்லாம் 'திருச்சிற்றம்பல முடையார்', 'திருவேங்கட முடையார்', 'திருநாகேச்சுரமுடையார்', 'கபாலீஸ் வரமுடையார்', என்று  சொல்லி இருக்கிறதே.    அதிலிருந்து  என்ன தெரிகிறது?   ''உடையார்' என்ற பெயரில்தான் தெய்வங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

குருவும் ஸ்வாமியும் ஒன்று என்பதால்தான் வைஷ்ணவர்கள் ஸ்ரீ ராமாநுஜரை 'உடையவர்' என்றே சொல்கிறார்கள்.

'ஸ்வாமி' என்றால் சொத்துக்கு உரிமைக்காரர் என்றேன். எந்தச் சொத்து? 

சொத்து என்பது  சகலப் பிரபஞ்ஜமும்தான். அதிலுள்ள நாமும் அவனுடைய  சொத்து  தான். உள்ளதனைத்தும் அவன் ஒருவனுக்கே உடமையாகும். 'எல்லாம் என் உடமையே' எல்லாம் உன் அடிமையே,  எல்லாம் உன் உடைய பொருளே''  என்று தாயுமானவரும் பாடினார். நம் சொத்து, பிறர் சொத்து என்றெல்லாம் பாத்தியதை கொண்டாடுகிறோமே, உண்மையில் இந்தச் சொத்தெல்லாம்- அவற்றுக்குப் பாத்தியதை கோரும் நாம், பிறர் எல்லோருமே - அவனுடைய சொத்துதான். அவன் இல்லாவிட்டால் இந்தப் பிரபஞ்சமும் இல்லை, நாமும் இல்லை. நாம் பாத்தியதை கோருகிற சொத்துக்களும் இல்லை.

நாம் வீடு, வண்டி போன்ற சில சொத்துக்களைப் புதிதாக உண்டாக்கினதாக நினைக்கிறோம். விஞ்ஞானிகள் புதிது புதிதாக இயந்திரங்கள் செய்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் அடிப்படையில் எந்த மூலப் பொருள்களை வைத்துக் கொண்டு செய்கிறோமோ, அவை  எல்லாமே  ஸ்வாமியுடையது. அவன்   செய்ததுதான். நாம் அவர் சொத்தை எடுத்து வேறு ஒரு ரூபத்தில் மாற்றுகிறோமே தவிர புதிதாக எதுவும் செய்யவில்லை.

 'மூலப்பொருளை (element) செய்'. 'அணுவை (atom) உண்டாக்கு' என்றால் எந்த விஞ்ஞான நிபுணராலும் அது முடியாத காரியம். இத்தனை மெஷின்கள், குண்டுகள் செய்கிற விஞ்ஞானியால் ஒரு சின்னஞ்சிறிய இலையைச் செய்ய முடியுமா? சின்ன புல்லைக்கூட   எவ்வளவு பெரிய  விஞ்ஞான  கூடத்திலும்  அந்த உயிரணுக்களோடு, உயிர் சக்தியோடு  உருவாக்க முடியாது.  ''புல்லைப்போல''  ஒன்று  வாசமில்லாமல், உயிரற்று செய்யலாம்.

எல்லாவற்றையும் செய்கிற ஒரே ஒருத்தருக்குத்தான் அவையெல்லாம் சொந்தம். அதனால்தான் அவர் உடையவர், ஸ்வாமி என்று அழைக்கப்படுகிறார். நாமும் அவரது உடமைகள்தான். நம் சொத்து என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதை நம் இஷ்டப்படி விநியோகிக்க உரிமை பெற்றிருக்கிறோம் அல்லவா? அப்படியே ஸ்வாமியின் சொத்தாகிய நாமும், நம்மை அவன் இஷ்டப்படி நடத்தட்டும் என்று விட்டுவிட்டால் நமக்கு எந்த பாரமும் இல்லை. ஒரே ஆனந்தம்தான்.

இப்போது, 'நான், நான்' என்று எதையோ சொல்லிக்கொண்டு அலைகிறோமே, உண்மையில் இது அவனுக்குதான் சொந்தம் என்று புரிந்து கொண்டுவிட்டால் அப்புறம் நாமாகக் கிடந்து அலையமாட்டோம். நமக்கென்று சொந்தமாக ஒரு ஆசையும் ஒரு துவேஷமும் பாராட்டுவதற்கு உரிமை இல்லை என்று தெரிந்து கொண்டு விட்டால், அப்புறம் ஒரு அலைச்சலும் இல்லை. ஒரே நிம்மதிதான்!

 'ஸ்வாமி' என்கிற வார்த்தையே, நமக்கு நம்மிடமே எந்த சொந்தமும் இல்லை. நாம் அவன் தன்னிஷ்டப்படி விநியோகிக்க உரிமை பெற்றிருக்கிற அவனுடைய சொத்துத்தான் என்பதை உணர்த்துவதாக அமைந்தி ருக்கிறது. இப்படி உணர்வதுதான் பக்தியின் பரம லக்ஷியமான சரணாகதி என்பது.   புரிஞ்சிண்டியா?''

''இப்போது புரிகிறது மஹா பெரியவா.  இன்னும்  உங்களை நிறைய கேட்பேன். நீங்க சொல்லிக் கொடுக்கணும். அந்த உரிமையை  ஸ்வாமியாகிய நீங்க எனக்கு  கொடுக்கணும்.  நானும் தெரிஞ்சுண்டு எல்லோருக்கும் சொல்வேன்''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...