Monday, January 24, 2022

VAINAVA VINNOLI

 வைணவ விண்ணொளி -  நங்கநல்லூர்  J K  SIVAN 

ராமானுஜர்:

 ஒரு  சமயம்  யாதவப் பிரகாசர்   என்ற அத்வைத  குரு,   ராமானுஜனை  அலஹாபாத்  யாத்திரையின் போது  நீரில் மூழ்கடித்து  கொல்வதற்கு  திட்டமிட்டார்   என்ற  ஒரு வருத்தமான விஷயம்  எப்படியோ  சரித்திரத்தில்  இடம் பெற்று விட்டிருக்கிறது.  இது  பற்றி அதிகம் பேச விரும்பவில்லை.    ஆனால் இந்த  திட்டம்  காற்றுவாக்கில்   கோவிந்தனின்  செவியில்  விழுந்ததால்  ராமானுஜரை ஆபத்திலிருந்து  தப்ப  வைத்தார்  என்பது  அந்த  விஷயத்தின்  பிற்பாதி.   இப்படியாக அவரது  குரு சிஷ்ய  பாவம் தொடர்ந்தது.

ஸ்ரீரங்கத்திலிருந்த  யமுனாச்சார்யாருக்கு  ராமனுஜரின் குருகுல வாசம்   செய்திகள், அவருடைய அதீத  ஞானம்,   குரு  யாதவப் பிரகாசரின்  அத்வைத மார்க்க உபதேசங்களில்  முரண்பாடு  எல்லாம்  தெரியவந்து,  அவர் உடனே  நேரே  காஞ்சிபுரம்  வந்து சேர்ந்தார்.  தனக்குப் பின்   ராமானுஜரைத்   தக்க, பொருத்தமான  குரு பாரம்பரிய ஆச்சார்யனாக  தேர்ந்தெடுக்க  அவரை  பரிசீலனை  பண்ணுவதற் காகவே  யமுனாசார்யர்  காஞ்சி வந்தார்.  

யமுனாச்சார்யர்  ராமனுஜரின் அணுகுமுறை,  கல்வி, ஞானம் , பண்பு,  எல்லாவற்றையும்   தீர்க்கமாக கவனித்த பின்  திருப்தி அடைந்தார்.   கேட்க வேண்டுமா?.  அதற்குப் பின்  ராமானுஜர் தனது  குரு  யாதவப்ரகாசரிடமிருந்து  விடைபெற்று  பிரிந்து சென்றார்.  

யமுனாசார்யர்  அனுப்பிய  மகா பூர்ணர்  என்கிற பெரிய நம்பிகளுடன்  ராமானுஜர்   ஸ்ரீரங்கம் சென்றார்.   அனால்   விதி வேறு திட்டமிட்டிருந்ததே.  ராமானுஜர்  போய்ச் சேர்வதற்குள் யாமுனாச்சார்யர்   விஷ்ணுபதம் அடைந்திருந்தார்.

நல்லவேளை  யமுனச்சார்யரின்   பூத உடல்  எரிக்கப்படுவதற்கு முன்னரே  ராமானுஜர் அவரது உடலைத் தரிசித்தார்.  ஆச்சார்யரின் வலது கையில்   மூன்று விரல்கள் மடங்கி  மூடி இருந்ததை ராமனுஜரின் கண்கள் கவனிக்கத் தவறவில்லை.   என்ன விஷயம்?    எதற்காக மூன்று  விரல்கள்  மடங்கி உளளன ?  

அருகிலிருந்தோரை  விசாரித்தபோது  தான்  ஆச்சார்யன்  மூன்று   நிறைவேறாத ஆசைகள்  கொண்டிருந்தார் என்பது  தெரிந்தது.  அவர்  மனத்தில்  எண்ண  ஓட்டம் ஒரு  சங்கல்பத்தை உண்டாக்கியது.   தன்னை நேரில்  சந்திக்க  இயலாத நிலையில்   தன்னிடம்  ஆசார்யன்  என்ன எதிர்பார்த்திருப்பார் ?  அவரது   மூன்று நிறைவேறாத   விருப்பங்களை  எடுத்துச்  சொல்ல நினைத்து  தனது  மூன்று  விரல்களை மடக்கிக்  காட்டியிருக்கிறாரோ ?

 ''ராமானுஜா,   என்  விருப்பத்தை  நீ  நிறைவேற்றுவாயா?  என்று  கேட்பது   போல் அந்த  சைகை  இருப்பதை  உணர்ந்தார்.  

ராமானுஜர் ஆச்சார்யனின்  பூத  உடலின்  பாதத்தில்  வணங்கி ஒரு  தீர்மானம் செய்து  கொண்டார்.  அருகில் இருந்த  அனைவருக்கும் கேட்கும்படியாக  ஒரு சபதம் செய்தார்.

1.   வைஷ்ணவ  மத  கோட்பாடுகளை  முழுதும் நம்பிக்கையோடு  கடைப்பிடித்து  இரவு பகல்  என்னை  அர்ப்பணித்துக்  கொண்டு   மக்கள்  மத்தியில்  சரணாகதி  தத்வத்தை  பரப்புவேன். ப்ரபத்தியின் மேன்மையை  உணர்த்துவேன். ''  
இந்த சங்கல்பம் செய்து கொண்டபின் ஆச்சார்யனின் பூத உடலில்  மடங்கியிருந்த  ஒரு விரல் நீண்டது.

2. வேதங்களையும்  அவற்றின்  சாரங்கள்,  அறிவுரைகளை  உணர்த்திய   பல  ஆசார்யர்களின்  கருத்துக்களையும் உரைகளையும்  முழுதுமாக தேடிக்  கற்றறிந்து  வேதாந்த  சூத்ரமாக, பாஷ்யமாக  வெளியிட்டு  முக்தி அடையும் வழியை  அனைவருக்கும்  எளிதாக்குவேன்.'''  

சபதம் செய்த  அடுத்த கணமே  யமுனாச்சாராரின்  மடங்கியிருந்த  விரல்களில் இரண்டாவது விரல் நீண்டது.

3.விஷ்ணு  புராணத்தில்  பராசர முனி  எடுத்துக்காட்டிய ஸ்ரீமன்  நாராயணனின் மகாத்மியத்தை  அந்த  பரமாத்மா  சகல ஜீவாத்மாக்களுடன்  கொண்ட  தொடர்பு பற்றி விளக்கி   சரணாகதி அடைந்து  பரமாத்மாவின் அருளால் மோக்ஷம்  அடைய  உண்டான  வழியை அனைவருக்கும்  எடுத்துச் சொல்வேன்.''
இந்த  மூன்றாவது சபதத்தை ராமானுஜர்  வெளியிட்டதும்  இப்போது ஆச்சர்யனின் மூன்று மூடியிருந்த விரல்களும்  திறந்திருந்தன.  .
ராமானுஜருக்கு  பிர்காலத்தில்   பாஷ்யகாரர்   என்ற பட்டம்  இதனாலே ஏற்பட்டதாகும்.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...