Saturday, January 22, 2022

GAYATHRI MANTHRAM

 ''ஓம்''   காயத்ரி   -   நங்கநல்லூர்  J.K. SIVAN


விஞ்ஞானிகள்  மட்டுமல்ல  நவீன காலத்தில்  எல்லோருடையதுமான  ஒரு தவறான நம்பிக்கை. எல்லாமே விஞ்ஞானத்தில் அடக்கம் என்பது.

''பால் வீதி,, MILKY WAY ஆகாச கங்கா என்றெல்லாம் லக்ஷோப லக்ஷம் நக்ஷத்ரங்கள் அறியப்ப டுகிறது. கண்ணுக்கு தெரியாத அந்த நக்ஷத்ரம்   பல  சூரியன்களையே விழுங்கும் அளவு பெரியது.   அதன்  ஒளி பூமிக்கு வந்து சேர்வதற்கே  பல வருஷங்கள் ஆகும் என்றால் அது எவ்வளவு தூரத்தில் இருக்கும் என்று யோசிக்கலாம். பார்ப்பதற்கு மூர்த்தி இங்கிருந்து சின்னது.

சந்திரன் பூமியை சுற்றுகிறான். பூமி சந்திரனோடு சேர்ந்து சூரியனை சுற்றுகிறது என்பது நமது சூரிய மண்டலம். எல்லா கோளங்களும் சூரியனைச் சுற்றுபவை.

ஒரு சின்ன விஷயம் சொல்கிறேன். பக்கத்தில் சுவற்றை, தூணை அல்லது யாரவது ஒரு தாத்தாவை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள். சூரியன் தனது எல்லா பரிவாரத்தோடும், எல்லா கிரஹங்களுடனும் நக்ஷத்ரங்களுடனும் ஒரு ரவுண்ட் அடிப்பதற்கு உண்டான காலம் 22.5. கோடி வருஷங்கள்!!

இத்தனைக்கும் அவை ஊர்ந்து போகும் வஸ்துக்களல்ல. கிரஹங்கள் எல்லாமே கிட்டத்தட்ட ஒரு நொடிக்கு 20000 மைல் வேகம் 'ஓ'  வென்ற பேரிரைச்சலோடு நகர்வன. கண்ணை மூடி யோசித்து பார்த்தால் பயத்தில் இதயம் நின்றுவிடும்.

நாமே வேகமாகத் தான் பூமியோடு நகர்கிறோம். வேகமான ரயிலில், ஆகாய விமானத்தில் இருந்து பார்க்கும்போது வெளியே எல்லாமே மெதுவாக நகர்வது போல் தோன்றுகிறதே அது போல் நாம் நமது வீட்டில் அசைவற்று இருப்ப தாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.   நாம்  வீடு கட்டிக்கொண்டு உள்ளே  படுக்கையில் படுத்துக்கொண்டிருக்கும்   பூமியையும் சேர்த்து, எல்லா கிரஹங்களும் சூரியனையே தான் சுற்றுகிறது.இது புரிந்தால் காயத்ரி மந்திரம் புரிந்து கொள்ள
லாம்.
காயத்ரி மந்திரம் ரொம்ப ரொம்ப  சின்னது:  

ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्।'
Oṃ bhūr bhuvaḥ svaḥ  tát savitúr váreṇyaṃ  bhárgo devásya dhīmahi  dhíyo yó naḥ pracodáyāt
ஓம் பூர் புவ: ஸ்வ: தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத்

அதன் அர்த்தத்தை பார்ப்போம்:
ஓம் பூர் புவ ஸ்வஹ:
பூர் என்றால் பூமி.
புவ என்றால் சூரிய மண்டல கிரஹங்கள்.
ஸ்வஹ என்பது இந்த பிரபஞ்சம்
நமது தலைக்கு மேலே லொட லொட என்ற சப்தத்தோடு சுற்றும் பழைய வோல்டாஸ் மின்விசிறி சுற்றும் வேகமே ஒரு நிமிஷத்துக்கு 900 சுற்று Rpm. அது போடும் சப்தமே அடுத்த வீட்டுக்காரன் சண்டைக்கு வரும் அளவுக்கு இருக்கிறதே.
நொடிக்கு 20000 மைல் .( கி.மீ. அல்ல அந்த கணக்கில் இன்னும் ரொம்ப ஜாஸ்தி). அப்படி ஓடும் கிரஹங்களின் சப்தத்தை தான்  ''ஓம்'' என்று இந்த காயத்ரி மந்திரம் சொல்கிறது. இதை முதலில் கேட்டறிந்தவர் விஸ்வாமித்ரர். ஏன் மற்றவர்கள் செவிடா? என்று கேட்பது காதில் விழுகிறது. ஒரு 200 அடி தூரத்தில் யாரோ கத்தினால் கூட நமக்கு தெரிவதில்லை,கேட்பதில்லை. எத்தனையோ சைபர்கள் கொண்ட நம்பர் மைல்களுக்கு அப்பால் அதே வேகத்தில் ஓடும் சப்தமா காதில் விழும்? எப்படி டெலஸ்கோப்பில் சாதாரண கண் பார்க்க முடியாததை பார்க்க முடிகிறதோ அப்படி விஸ்வாமித்ரர் தவ வலிமை. அதனால் அவர் அந்த ''ஓம்''  என்ற பெரும் சப்தத்தை தியானம் செய்து கேட்டு மற்ற ரிஷிகளுக்கு சொன்னவர். அது தான் கடவுளின் பெயர் என்று ரிஷிகள் ஒப்புக் கொண்டார்கள். விஸ்வாமித்ரர் கடவுளை ஒலி வடிவாக கண்டவர். கீதை கூட ''ஓம் இதி ஏகாக்ஷரம் ப்ரம்மம்'' என்கிறதே. சில ஜீவன் முக்தர்கள் சமாதியில் எப்போதும் ''ஓம்''சப்தம் கேட்கும். கோவிந்தபுரத்தில்  போதேந்திரர் சமாதியில் எப்போதும்   இன்றும்  ''ஓம்'' என்ற பிரணவ சப்தம் கேட்கிறது என்பார்கள்.  மந்த்ர சக்தியின் ஒலி.

''தத் ஸவிதுர் வரேண்யம்''
தத்: அது (பகவான்)
ஸவிதுர் : சூரியன் .
வரேண்யம்: என்றால் பூஜிக்க தக்கது.
ஒருவர் உருவம் தெரிந்தால், பெயரும் தெரிந்தால் அவரை எங்கும் கண்டுபிடித்துவிடலாம் அல்ல
வா?. குட்டை ஆள்,  ரெட்டை நாடி, ஒருகால் ஊனம் குப்புஸ்வாமி , சுண்டக்காமுத்தூர் என்றால் ஒரு வழியாக சுண்டக்கா முத்தூரில் தேடி கண்டுபிடிக்கலாம்.

விஸ்வாமித்ரர் பிரணவ சப்தத்தை கண்டு பிடித்து, அந்த மந்திரத்தை , காயத்ரி மந்திரத்தை உச்சரித்து பகவானை அடையும் வழியைக்  காட்டி விட்டார். சூத்ரம் தெரிந்துவிட்டால் கணக்கை போட்டு முடிக்கலாம் அல்லவா. சூரியன், பிரபஞ்சத்தை ஒளியாக காட்டிவிட்டார்.

''பர்கோ தேவஸ்ய தீமஹி''
பர்கோ: ஒளி. தீபம்,
தேவஸ்ய: தெய்வங்கள்,
தீமஹி: த்யானம் செய் .

கண்ணுக்கு தெரியும் சூரியனை பிடித்துக் கொள் . அதன் மூலம் உருவமற்றவனைப் பிடி. அவனைக் கட்டும் கயிறாக ஓம் என்ற மந்திரத்தை விடாமல் சொல். இது மட்டும் போதாது என்பது தான் ரஹஸ்யம்.

மனது என்று நமக்குள் இருக்கிறதே அதை முதலில் கட்டி அசையாமல்  இருக்கப் பண்ண வேண்டும். அதை நிலையாக  நிறுத்தி  'ஓம்'  என்ற த்யானத்தில் ஈடுபட்டு மனதில் சூரியன் மற்றும் பிரபஞ்ச ஒளியை தேடினால் பகவானைப் பிடித்தாகி விட்டது.

''தியோ யோ ந ப்ரசோதயாத்''
தியோ: புத்தி,
யோ : யார் , எவர்?,
நா: நாம் எல்லாரும்,
ப்ரசோதயாத்: சரியான வழியில் அழைத்துச் செல்லப்படுவோம்.

பகவானே என் புத்தியை நிலை நிறுத்தி சரியான வழியில் என்னை நடத்திச்செல்.
இந்த பூமி, சூரிய மண்டல கிரஹங்கள் அண்ட பேரண்டம் எல்லாமே தலை தெறிக்கும் வேகத்தில் ஓடுகிறது. அவற்றின் சப்தம் 'ஓம்'  என்று கடவுள் பெயரை சொல்கிறது. அந்த கடவுள்தான் எத்தனையோ சூரியன்களின் ஒளி, அவனே வணங்கத்தக்கவன். ஆகவே நாமெல்லோரும் மனதை, புத்தியை நிலைநிறுத்தி அவனையே தியானித்து ஒளியாக கண்டு ஓம் என்ற அவன் நாமத்தை விடாமல் உச்சரிக்க அவனே வழிகாட்ட வேண்டும்.

சுருக்கமாக சொன்னால் இது தான் காயத்ரி மந்த்ர உள்ளர்த்தம். மஹான்கள் பெரியவர்கள், யோகிகள், ரிஷிகள், பண்டிதர்கள் வித விதமாக அர்த்தம் சொல்வார்கள். அடியேனுக்கு தோன்றியதை நான் எப்படி புரிந்து கொண்டேனோ அப்படி சொல்லிவிட்டேன். மேற்கொண்டு காயத்ரி மந்த்ர சக்தியை பற்றி சொல்கிறேன்.  காயத்ரி மந்த்ர கதை ஒன்று சொல்கிறேன் என்று சொன்னேனே. அதுவும் பாக்கி இருக்கிறது.  நிச்சயம் சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...