Tuesday, January 18, 2022

SURDAS


 

ஸூர் தாஸ் - நங்கநல்லூர் J K SIVAN

13. வசிய ரஹஸ்யம்...

நமக்கும் ஸூர் தாசுக்கும் உள்ள வித்யாசம் நாம் கண்ணிருந்தும் கண்டதை எல்லாம் பார்ப்பவர்கள். அவர் கண்ணில்லாமல் கண்ணனைப் பார்ப்பவர். கிருஷ்ணனின் வேணுகானத்தை எண்ணிப் பார்க்கிறார். காதில் இன்பத் தேனாக வந்து பாய்கிறது.
''ஓஹோ, ஏதோ ஒரு குயில் தான் பாடுகிறதோ? இல்லை இல்லை. குயிலுக்கு குரல் வேண்டுமானால் அற்புதமாக இருக்கலாம். சங்கீத ஞானம், ரசனை கிடையாதே. அதற்கு குரல் ஒன்று தான் இனிமையாக இருக்கும். மனதைப் பிழியும் இந்த ரசானுபவம், சகல உயிர்களையும் கட்டிப்போடும் மாய சக்தி கிருஷ்ணன் வாயில் வைத்து ஊதும் மூங்கில் குழாயிலிருந்து அன்றோ வருகிறது. ஸூர் தாஸ் இன்னும் கொஞ்சம் கவனிக்கிறார். மேலே மேலே அவரை இன்ப சாகரத்தில் குழலிசை ஆழ்ந்து மூழ்க வைக்கிறது. கண்ணனின் உதடுகளிலிருந்து வெளிப்படுவது அவனது மூச்சுக் காற்று ஒன்று தான். அவன் மூச்சு தான் உலகின் மூச்சு. அதை முழுதுமாக வாங்கி இனிமையான காந்த சக்தி மிக்க இசையாக வெளியே சஞ்சரிக்கச் செய்வது அவனது சாதாரண மூங்கில் குழல். உலகிலேயே எளிமையான ஒரு சங்கீத கருவி.

''அடேடே, ஸூர் தாஸின் கவனம் இப்போது கிருஷ்ணனிடமிருந்து அவனது புல்லாங்குழல் மேல் பதிந்துவிட்டதா? ஆச்சர்யத்தோடு அதை கேட்கிறார் :

''ஹே, எளிய மூங்கில் புல்லாங்குழலே, நாணல் குழலே, எனக்கு உன் ரகசியத்தைச் சொல்கிறாயா? நீ என்ன தவம் செய்தாய்?
எங்கே, எப்படி, என்ன விரதம் இருந்தாய்?
எப்படி உனக்கு இந்த கிருஷ்ணன் வாயோடு தொடர்பு கொள்ள முடிந்தது?
எப்படி கிரிதாரியின் அதரங்களில் தங்கி அவனை முத்தமிட்டுக் கொண்டே இருக்க முடிந்தது? எப்படி அந்த சியாமள வண்ணனின், தாமரைக் கண்ணனின் பூரண அன்பும் ஆதரவும் உனக்கு கிடைத்தது?
அவன் உடலிலும் நீ, அவன் உள்ளத்திலும் நீ, அவன் அதரத்திலும் நீ. அவனை நீ இன்றி யோசித்து பார்க்கக்கூட முடியாதே.
ஹே, மூங்கில் குழாயே, என்ன மாயம் செய்து இப்படி கண்ணனோடு பிரிக்க முடியாத இந்த தொடர்பு பெற்றாய்?
ஜகத் காரணனை, ஜகத் ரக்ஷகனை நீ எப்படி உன் அடிமையாக்கினாய்?
இணை பிரியாது அவனோடு சேர்ந்து காலத்தால் அழியாத புகழ் பெற்றாய்?
ஏதோ வசியம் செய்திருக்கிறாய். சீக்கிரம் அந்த வசிய ரஹஸ்யம் என்ன என்று சொல் ?

சூர் தாஸின் அந்த பாடல் இது . ஹிந்தியில் தேடினேன் கிடைக்கவில்லை.

Ri bansi kaun tap tein kiyo
Rahat giridhar mukh hi lagi
Adharan ko ras piyo
Shyam sundar kamal lochan
Tohi tan man diyo
Sur shri gopal bas bhayen
Jagat mein yash liyo

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...