Tuesday, January 11, 2022

SRI LALITHA SAHASRANAMAM

 ஸ்ரீ லலிதா  ஸஹஸ்ரநாமம் -  நங்கநல்லூர்  J K  SIVAN 

ஸ்லோகம்:  144-147 -   நாமங்கள்  746- 770

भाग्याब्धि-चन्द्रिका भक्त-चित्तकेकि -घनाघना ।
 रोगपर्वत -दम्भोलिर् मृत्युदारु -कुठारिका ॥ १४४॥

பாக்யாப்திசம்த்ரிகா, பக்தசித்தகேகி கனாகனா |
ரோகபர்வத தம்போளி, ர்ம்றுத்யுதாரு குடாரிகா || 144 ||  

महेश्वरी महाकाली महाग्रासा महाशना ।
अपर्णा चण्डिका चण्डमुण्डासुर -निषूदिनी ॥ १४५॥

Maheswaree Maha kali Maha grasa Mahasana
Aparna Chandika Chanda mundasura nishoodhini

மஹேஶ்வரீ, மஹாகாளீ, மஹாக்ராஸா, மஹா‌உஶனா |
அபர்ணா, சம்டிகா, சம்டமும்டா‌உஸுர னிஷூதினீ || 145 ||

क्षराक्षरात्मिका सर्व-सर्वलोकेशी विश्वधारिणी ।
त्रिवर्गदात्री सुभगा त्र्यम्बका त्रिगुणात्मिका ॥ १४६॥

Ksharaksharathmika Sarva lokesi Viswa Dharini
Thrivarga Dhathri Subhaga Thryambhaga Trigunathmika

க்ஷராக்ஷராத்மிகா, ஸர்வலோகேஶீ, விஶ்வதாரிணீ |
த்ரிவர்கதாத்ரீ, ஸுபகா, த்ர்யம்பகா, த்ரிகுணாத்மிகா || 146 ||


स्वर्गापवर्गदा शुद्धा जपापुष्प -निभाकृतिः ।
ओजोवती द्युतिधरा यज्ञरूपा प्रियव्रता ॥ १४७॥

Swargapavargadha Shuddha Japapushpa nibhakrithi
Ojovathi Dhyuthidhara Yagna roopa Priyavrudha

ஸ்வர்காபவர்கதா, ஶுத்தா, ஜபாபுஷ்ப னிபாக்றுதிஃ |
ஓஜோவதீ, த்யுதிதரா, யஜ்ஞரூபா, ப்ரியவ்ரதா || 147 |


லலிதா ஸஹஸ்ரநாமம் - (746-770) அர்த்தம்
                                            
* 746 * 
भाग्याब्धि-चन्द्रिका பாக்யாப்திசந்திரிகா  -  
அதிர்ஷ்டம் எனும் கடலுக்கு ஒளி வீசும் பிரகாசம் தான் அம்பாள் எனும் முழுநிலா.சில இடங்களில் அம்பாளை சூரியனுக்கு  ஓப்பிட்டோம். முழுநிலவும்  அவளே.

* 747 *
भक्त-चित्तकेकि -घनाघना ।
 रोगपर्वत -दम्भोलिर् मृत्युदारु -कुठारिका  பக்த சித்த கேகி கண கணா  -  
பக்தனின் மனது தான்  அழகிய தோகை விரித்தாடும் மயில். அம்பாள் அதை ஆடவைக்கும் கருமுகில்.
 
* 748 *
 रोगपर्वत -दम्भोलिर् ரோகபர்வத தம்போளி  -  
இந்திரனின் கையில் உள்ள  ஆயுதம்  வஜ்ராயுதம். அது மலைகளைக்கூட  பிளந்துவிடும். ஸ்ரீ லலிதாம்பிகை  அப்படிப்பட்ட  ஒரு  வலுமிக்க  ஆயுத மாக பக்தர்களின் உடல் மன  வியாதிகளை, நோய்களை, வலிகளை எல்லாம் போக்குபவள்.

* 749 *
मृत्युदारु -कुठारिका  ம்ருத்யு தாரு குடாரிகா-  
மரணம் எனும் தொடர்ந்து வளரும்  மரத்தை வெட்டி வீழ்த்தி சாய்க்கும்  கோடாலி தான்  அம்பாள் ஸ்ரீ லலிதை என்று இந்த அழகிய நாமம் சொல்கிறது.  மரணம் தான் ஒருவனை அதிக அளவு பயமுறுத்துகிறது.  அந்த  பயத்தை  போக்கும்  கருவி அம்பாள்.  மரணத்தை எவர் விலக்கமுடியும்?  ஏன் பயம்? வரும்போது வந்துவிட்டு போகட்டுமே? பயத்திற்கு காரணம் எது தெரியுமா,  நமது மனதில்  மேலும்மேலும்  வளரும்  ஆசை, உலக வாழ்வை துய்க்க விருப்பம், பாசம், நேசம், பொறாமை, பேராசை எல்லாம்.  அறியாமையால் உண்டாவது தான் எல்லாமே

*750* महेश्वरी  மஹேஶ்வரீ 
மகேஸ்வரனின் மனைவி மஹேஸ்வரி.    அருளை  வாரி வழங்கும்  முருக வள்ளலின் மனைவி வள்ளி மாதிரி என்று வைத்துக் கொள்வோம். அவள் எவ்வளவு உன்னதமானவள், உயர்ந்த சக்தி கொண்ட வள் என்பது இந்த பெயரிலிருந்தே புரிபடும். சக்தி தெய்வம் அல்லவா?

*751*  महा-काली   மஹாகாளி   - 
அவளை மஹதி என்போம். எதெல்லாம் அளவிட  முடியாததோ, மிக ப்ரம்மாண்டமானதோ, அது மஹத். மஹா என்ற வார்த்தையில் இருந்து  உருவாவது. மிக பிரதானமான சக்தி மனிதனின்  புத்தி ஒன்றே. புருஷன், ப்ரக்ருதி,  என்கிற வரிசையில் மூன்றாவதாக இருப்பது  புத்தி. சாங்கிய யோகம் இப்படி சொல்கிறது. சிவன் மஹா காலன் அவனுடைய சக்தியாக உருவானவள் மஹா காளி. பரமேஸ்வரன் நெஞ்சில் இருந்த நஞ்சு தான் காளியாக உருவானது. உக்ரமான  தெய்வம் காளி. சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து ஒளிப்பிழம்பாக தோன்றியவள் என்று தேவி மஹாத்ம்யம் சொல்கிறது. லலிதாம்பா தான் மரணத்தை தனது கட்டுப்பாட்டில்,  அதிகாரத்தில் , வைத்திருக்கும் மஹா காளி.

*752* महा-ग्रासा   மஹாக்ராஸா, - 
எதையும் விழுங்குபவள். இந்த நாமம் என்ன சொல்கிறது என்றால் அம்பாள் எனும் பிரம்மத்தில் சர்வமும் அடக்கம். கதோபநிஷத் ( 1.ii.25)  ஸ்லோகத்தில்   மனிதரில் சிறந்தவர்கள் ஆத்மாவுக்கு இறை போன்றவர்கள் என்கிறது. மரணம் எல்லோரையும் முடிவுக்கு கொண்டுவருகிறது என்றாலும் அது தயிர் சாதத்துக்கு ஊறுகாய் போன்றது ஆத்மாவுக்கு.

*753*  |महा-शना   மஹாஶனா  -
 சிறந்த உட்கொள்பவள் அம்பாள். பிரபஞ்சத்தை அழிப்பவள் . ஆக்கலும் ஆழித்தலும் தொழிலாக கண்ட சக்தி அல்லவா?. மேற்சொன்ன நாமத்தின் பொருள் இதற்கும் பொருந்தும். எல்லாவற்றையும் தன்னுள் கொள்பவள் என்று மீண்டும் வலியுறுத்துகிறது.

*754* अपर्णा அபர்ணா,-
பக்தர்களுக்கு பாக்கி ஒன்றும் வைக்காமால்  அருள் புரிபவள்.  பூரணமாக தயை புரிபவள். ஆம் . பக்தர்களின் அன்பை, சரணாகதியை பெற்று, அவர்களுக்கு வரங்களை, அருளை வாரி வழங்கும் போது எந்த பாரபக்ஷமும் இல்லாதவள் ஸ்ரீ லலிதாம்பிகை. குறை ஒன்றும்  இல்லாதவள். பக்தர்களுக்கு குறை வைக்காதவள். 
ஒரு சிறு கதை சொல்கிறேன். 
பாஸ்கரராயர் வரிவஸ்யா ரஹஸ்யம் எனும் நூலை எழுதியவர்.  கையில் காசில்லாதவர். யார் யாரிடமோ கடன் வாங்கி அன்றாடம் ஸ்ரீ லலிதாம்பிகைக்கு பூஜைகள் நைவேத்தியம் செய்பவர். கடனை எப்படி திருப்பி கொடுப்பார்? அவருக்கு அம்பாள் பூஜை செய்வதைத் தவிர வேறு ஒன்றும் தெரியாதே. வருமானமே இல்லை. கடன் கொடுத்தவர்கள் சும்மா இருப்பார்களா? அவரைப்  பிடுங்க ஆரம்பித்தார்கள். அவர் எப்படியும் கடனை திரும்ப கொடுத்து விடுகிறேன் என்று சொல்லிக் கொண்டே மேலும் கடன் வாங்கினார். ஒரு நிலையில் அவருக்கு கடன் கொடுத்தவர்கள் பணம் திருப்பி கேட்கவே இல்லை.? ஏன்? அம்பாள் அத்தனை கடனையும் அவர் அறியாமலே, அவருக்காக அடைத்துவிட்டாளே ! கடன் கொடுத்தவர்களிடம் அவர் மனைவி போல் உருவெடுத்து பணத்தோடு சென்று கடன் தீர்த்துவிட்டாள் என்று  பிறகு ஒருநாள் அறிந்தார்.  ஆச்சர்யத்தோடு  அம்பாளுக்கு   நன்றிக்கண்ணீர் வடித்து வணங்கினார்.

துர்கா, பார்வதி, என்று பெயர்கொண்ட அம்பாள் அபர்ணா என்ற நாமத்தில் இலைகள் இல்லாத என்ற பொருள்படும் பெயரும் ஏன் கொண்டாள் என்றால், சிவனை அடைய தவம் இருந்த போது அன்ன ஆகாரம் இன்றி ஒரு சிறு இலையும் உட்கொள்ளாமல் ஏகாக்ர தவம் இருந்தவள் என்பதால்.

*755* 
चण्डिका - சண்டிகா . 
துர்கை. அவள் கோபாக்னியானவள் எனவே நெருங்கமுடியாதவள். துர்கா. சரஸ்வதி  லக்ஷ்மி  
மூவரும் ஒன்றானவள். கோபம் தீயவர்களிடம் மட்டும் தான். அவர்களிடம் கருணை இல்லாதவள். தேவி மஹாத்ம்யம் அவள் கோபத்தை விலாவாரியாக சொல்கிறது.தைத்ரிய உபநிஷத்: (III.viii.1) என்ன சொல்கிறது என்றால்  ''ப்ரம்மத்திடம் காற்றுக்கு பயம் என்பதால்   காலம் தவறாமல் வீசுகிறது. அப்படியே சூரியனும்  குறித்த நேரத்தில் தவறாமல் ஒளிவீசுகிறான். அக்னி, இந்திரன், யமன் ஆகியோரும் தத்தம் தொழில்களை விடாமல் தவறாமல் ப்ரம்மத்துக்கு கட்டுப்பட்டு  பணி  புரிகிரிறார்கள். ஏழு வயது பெண்கள்  சண்டிகை எனப்படுவார்கள் .

*756* चण्ड-मुण्डासुर-निषूदिनी  சண்ட முண்டாசுர நிஷூதினீ ī - 
அம்பாளுக்கு சாமுண்டி என்று ஒரு பெயர் உண்டு . மைசூரில் சாமுண்டேஸ்வரி ஆலயம் செல்கி றோம் அல்லவா?. சண்டன் முண்டன் என்ற இரு அசுரர்களை வதம் செய்து  ஸ்ரீ லலிதை இந்த பெயர் பெற்றாள். மார்கண்டேய  புராணத்தில் (தேவி பாகவதம்) (84.25) சண்டிகா தேவி,  காளியைப் பார்த்து ''நீ சண்ட முண்டர்களை வதம் செய்ததால் இனி உலகம் உன்னை சாமுண்டி என்று உணரும்'' என்று உரைத்ததாக வருகிறது.  சாமுண்டி சப்த மாதாக்களில் ஒருவள்.

*757* क्षराक्षरात्मिका   க்ஷராக்ஷராத்மிகா,  - 
க்ஷரம் அக்ஷரம் என்றால் வார்த்தை, எழுத்துகள் என்று அர்த்தம்.  எழுத்துக்களின் கோர்வை தான் வார்த்தை. அம்பாள் தான் சப்த பிரம்மம். எல்லா சப்தத்துக்கும்    ஆதி காரணம். தேவி உபநிஷ தத்தில் (9.6) ஒரு ஸ்லோகம்:   ''மந்த்ராணாம்  மத்ருகாதேவி சப்தானாம் ஞான ரூபிணி'' (मन्त्राणां मतृकादेवी शब्दानां ज्ञान रूपिणी) என்று வரும்: மத்ருகா என்றால் முழு முதல், ஆதாரம்.

*758* सर्व-लोकेशी  ஸர்வலோகேஶீ.  
அகில உலகுக்கும் ஈஸ்வரி அம்பாள். ப்ரபஞ்சத்தை ஆள்பவள். காயத்ரி மந்திரம் ஏழு லோகங்கள் பற்றி சொல்கிறது. அவை  பூர் ,புவ ,சுவர், மஹ ,,ஜன, தப , சத்ய லோகங்கள்.  இவை  ஒரு வ்யாஹ்ருதியால் அறியப்படுபவை. அவளே அம்பாள்.

*759* 
 विश्व-धारिणी -விஶ்வதாரிணீ | 
பிரபஞ்சத்தை தன்னில் உடையவள். எளிதில் புரிகிறதல்லவா?. அவளின்றி ஒரு அணுவும் அசையாது.

*760* 
 त्रि-वर्ग-धात्री   த்ரிவர்கதாத்ரீ,
த்ரிவர்கா என்பது மூன்று தர்மங்களை தன்னுள் கொண்ட புருஷார்த்தத்தை கொடுப்பவள் என்று பொருள்படும். தர்மம், அர்த்தம் காமம் என்பவை மோக்த்தை  அடைய  உதவும் பலன்.

*761*  सुभगा  ஸுபகா, -
 ஒரு ஐந்து வயது பெண்ணுக்கு பொதுவாக சுபகா என்று பெயர். பகா என்பது சூர்யன். சாவித்ரி தேவி ,நல்லதிர்ஷ்டம், வளமை, பெருமை, நலம், எல்லாம் அருள்பவள்.

*762* त्र्यम्बका  த்ர்யம்பகா,  - 
அம்பாள் மூன்று கண்ணுடையாள் . சூரிய, சந்திர, அக்னி எனும் முக்கண்ணி. ப்ரம்மா, விஷ்ணு, சிவனின் அன்னை.

*763*  त्रिगुणात्मिका    த்ரிகுணாத்மிகா - 
சத்வ, ரஜோ , தமோ குணங்களின் மொத்த உருவம் அம்பாள்.

*764* स्वर्गापवर्गदा   ஸ்வர்காபவர்கதா,  - 
ஸ்வர்கத்தை முக்தியாக தருபவள். கர்மபலனாக இதை அனுபவிக்க உதவுபவள் . கிருஷ்ணன் இதை தான் கீதையில் (IX.21) “ அப்பா அர்ஜுனா, இப்படி நல்ல கர்மபலனாக ஸ்வர்கத்தில் சுகமாக அனுபவம் பெற்று, கர்மபலன் தீர்ந்தபின்னர், ஜீவன் மீண்டும் பூமியில் பிறக்க நேரிடும்'' என்கிறார்.

*765*शुद्धा   ஶுத்தா, -
 பரிசுத்தமானவள் . அதுவே ஞானம்.  அது இல்லாமல் முக்தி அடையமுடியாது. கறை  எதுவும் இல்லாத பரிசுத்தமானது. கறை என்பது அஞ்ஞானம். அறியாமை.

*766*  जपा-पुष्प-निभाकृतिः   ஜபாபுஷ்ப நிபாக்ருதி 
செவ்வரளி புஷ்பம். சிகப்பாகவும் மஞ்சளாகவும் நிறைய பார்க்கிறோமே. அதில்  அம்பாளை பூஜை செய்து மகிழ்கிறோம். அவளும் அதேயாகி மகிழ்கிறாள்.

*767*  ओजोवती - ஓஜோவதீ,
உடலும் உள்ளமும் பெறும்  ஒளிமயம்.. உடம்பை  அஷ்டாங்கம் என்று எட்டாக பிரித்து சொல்வோம். இது எட்டாவது. முதுகு தண்டில் உள்ள உயிர்ச்சக்தி.  ஞானேந்திரியங்களின்  ஒட்டுமொத்தம். நமது உணவு ஜீரணமானவுடன் முதுகு தண்டில் ஓஜஸாக மாறுகிறதாம். ஆயுர் வேதம் சப்த தாதுக்கள் என்று  ஏழு மட்டும் சொல்லும். ஓஜஸ் எட்டாவது.

*768* द्युति-धरा த்யுதிதரா, - 
பளபளவென்று கண்ணைப்  பறிக்கும்  ஞான ஒளி அம்பாள். 

*769* यज्ञ-रूपा  யஜ்ஞரூபா, 
அம்பாள் யாக யஞங்களின் அதிகாரி. விஷ்ணுவின்  பெண்ணுருவம்.   யஜுர் வேதம் அதனால் தான் ''யக்னோ வை விஷ்ணு''    Yajño vai Viṣṇuḥ என்கிறது. யஞம் தான் விஷ்ணு. கீதையில் கிருஷ்ணன் (X.25) “யஞங்களில் நான் ஜெப யஞம் '' என்கிறான். யஞங்களில் சிறந்தது ஆத்ம ஞானம் எனும்  யஞம்.

*770* प्रिय-व्रता    ப்ரியவ்ரதா 
விரதங்களில் பிரியம் கொண்டவள் அம்பாள் என்கிறது இந்த நாமம். மன உறுதியோடு சங்கல்பம் செய்து கொண்டு நிறைவேற்றுவது தான் விரதம். இது பகவானை, அம்பாளை திருப்திப்படுத்த. அம்பாள் ப்ரம்மம்.    சகுணம் நிர்குணம் இரண்டுமானவள். இந்த அகில பிரபஞ்சமும் சிவனும் சக்தியும் கலந்தது. புருஷ சக்தி ஐக்கியம்  என்று புரிந்து கொள்ளவேண்டும்.

சக்தி பீடம்:   மஹூர் ஏகவீரிகா தேவி

ஆதி சங்கரரின் சக்தி பீட ஸ்லோகத்தில் எட்டாவதாக  சொல்லப்படுவது ஏகவீரிகா தேவி ஆலயம். மஹூர் எனும் ஊரில் மஹாராஷ்டிராவில் உள்ளது. நாகபூரிலிருந்து 210 கி.மீ.     கின்வத் திலிருந்து 50 கிமீ. நந்தேத் திலிருந்து 126 கி.மீ.

சிவன் சக்தியின் உடலை சுமந்து ருத்ரதாண்டவம் ஆடியபோது அவளது வலது தோள் விழுந்த இடம் இந்த க்ஷேத்ரம் என்பார்கள். இங்கே கிட்டத்தட்ட 800 வருஷ புராதன  ரேணுகா தேவி ஆலயமும் உண்டு என்பதால் அதையே சக்தி பீடம் என்கிறார்கள். அது வேறு இது வேறு. ரேணுகா தேவியின் மூத்தவள் தான் ஏகவீரிகா.   இந்த ஆலயம் மயூர க்ஷேத்ரம், மாத்ரு பட்டணம் என்றும்  பெயர்களைக்கொண்டது. பஞ்ச  கங்காவில் பென்கங்கா நதிக்கரையில் உள்ளது.  இந்த ஆலயத்தில் பக்தர்களுக்கு  வெற்றிலை பாக்கு அரைத்து லேகியமாக பிரசாதம் தரப்படுகிறது. என்ன ஐதீகம் என்று தெரியவில்லை.   அம்பாளின் சிரம் பெரிய உருவம். ஆனால் சிறிய கர்பகிரஹம், ஒரு சுமாரான ஹால். அவ்வளவு தான் கோவில்.
மஹூர் எனும் ஊரிலிருந்து அரைமணி நேரத்தில் இந்த ஆலயத்தை அடையலாம். ரொம்ப சின்னது. வயல்களுக்கு நடுவே உள்ளது. அம்பாளின் தலை மட்டும் தான் தரிசிக்க முடியும். தமிழ் நாட்டில் நிறைய மாரியம்மன் கோவில்களில் முகம் மட்டும் தான் வழிபாட்டுக்கு  காட்சி தருகிறது அல்லவா? அதேபோல் தான். பரசுராமனின் ஆயுதம் கோடாலி. அதில் சக்தியாக இருப்பவள் ஏகவீரிகா.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...