Saturday, January 8, 2022

ADVICES

 சில  ருசிகர  விஷயங்கள்  -   நங்கநல்லூர்  J K  SIVAN 



பத்திரிகைகள்  படுத்து விடும் அளவுக்கு  சாக்கடையிலிருந்து  சக்தி உபாசனை வரை பலவித எழுத்துக்கள், கருத்துக்கள்,  மலையென  குவிகிறது.  ஆம்   வாட்ஸாப்ப்  வந்தாலும் வந்தது, அதில் வராத விஷயமே இல்லை.  3G  4G  5G  என  புது புது  டிஜிட்டல் டெலிபோன்கள்  சகலத்தையும்  வாரி வளைத்து  கொட்டுகிறது.  காமிரா  வாங்க  ஆளில்லை.  ரேடியோ   டிவி   டேப்  சகலத்தையும்    டிஜிட்டல் போன். ஒரு  காலத்தில் 30-40  ரூபாய் கொடுத்து  ஆடியோ  டேப் வாங்கினேன்.  ஒரு பெட்டி  நிறைய வெளியே கொட்டினேன். அதேபோல் தான் 20 ரூபாய்  முதல் 200 ரூபாய் வரை வாங்கிய  ஹிந்தி, ஆங்கில, தமிழ் படங்கள் வீடியோ காஸெட்ட்கள் கேட்பாரின்றி, பார்ப்பாரின்றி  வீட்டில் இடத்தை  அடைத்துக்கொண்டு   வெளியேற காத்திருக்கிறது.

வாட்சப்பில் எழுதாத, ஆடியோ வீடியோ பேசாத, பாடாத, ஆணோ பெண்ணோ  இல்லை. நிறைய பேர்  எனக்கு  செய்திகள்  வாரி கொட்டுகிறார்கள்.  எனக்கு  , யாரோ கூட  நிறைய  அந்த போனை செயதிகளால், படங்களால்  நிரப்புகிறார்கள்.  நன்றி.  

இதையும்  எழுதுங்களேன்  என்ற சிலரின்  அன்புக்  கட்டளை வேறு.    எனக்கு  எழுத  ஆசை தான்.  எதை  வேண்டுமானாலும்   எழுதமுடியும்  என்பதால்  எழுதுவது  நியாயமா?.   ரொம்பவே   நன்றாக  மனதுக்குப் பிடித்த  விஷயங்களை  மட்டும் சுருக்கமாக  சொல்லத்தான் மனம்  விழைகிறது.    முகநூல், வாட்சப்பில்  ஸ்ரீ  பி.கே. மூர்த்தியிடமிருந்து  சூரியன் உதிக்க மறந்தாலும்  செய்தி வருவது தப்பாது. எங்கேயிருந்தெல்லாமோ  விஷயங்களை  தேனீ போன்று  சேகரித்து  நிரப்பிவிடுகிறார்.  அதில் இன்று  எனக்கு  பிடித்த  ஒரு விஷயம்  தமிழில் தருகிறேன். 

நமது வாழ்வில்  சில  நீதிகளை  அடிக்கடி  ஞாபகப்படுத்துவது உபயோகமாக இருக்கிறதே. . ''போறுமா  இன்னும்  கொஞ்சம் போடட்டுமா'' என்று   என்  வழியில் அவர்  கருத்துகளை  பரிமாறுகிறேன்.

1.  பலத்த  மழை  எதை  நினைவூட்டுகிறது? நமது  வாழ்வில் சந்திக்க  நேரும்  எதிர்ப்புகளை.
.வானம்  பொத்துக்கொண்டு  கொட்டும் மழையே  நீ  வேண்டாம். கடவுளே  இதைத் தவிர்  என்று கேட்காமல், ''கிருஷ்ணா,   ஒரு  ஸ்ட்ராங்கான குடையைக் கொடேன், இந்த மழையைச் சமாளிக்க'' என்று கேட்கும்போது தான்  உன்  நெஞ்சின்  உரம்  விளங்கும்.  குடை என்றதும் அந்தக்கால  மான் மார்க்  குடை  ஞாபகம் வருகிறது.  ரொம்ப பிரசித்தமானது.  விலையும்  கூட.   பர்மா பஜாரில் வாங்கிய கலர் கலர்  மடக்கும் குடைகள்,  லேடிஸ் அம்பரெல்லா என்று  பெயர்,  மழை வந்தபோது   பிரித்ததும்  கோபத்தோடு எதிர்பக்கமாக  வளைந்து வானத்தை  நோக்கி கப்பலாக வளைந்து விடும். அதை சாந்தப்படுத்தி  நிமிர்த்தும்போது ஒத்துழைக்காமல் சில கம்பிகள் குடையிலிருந்து பிரிந்து சன்யாசம் கொண்டுவிடும். 

2. காலம் எப்போதும்  மாறி மாறி  தான்  வரும்.    நீர்  நிறைந்திருந்தபோது மீன்  தண்ணீரில் தத்தளித்த  எறும்புகளையும்  பூச்சிகளையும்  உண்டதே.  நீர் வற்றி மீன்  இறந்து விட்டதே  இப்போது  அந்த  எறும்புகளும் பூச்சிகளும் தானே  மீனை உண்கின்றன. கடவுள்  எப்போதும்   சந்தர்ப்பங்களை  ஆள்  பார்த்துதான்  தருகிறான். இது தான்யா  வாழ்க்கை.!   ஓடம்  ஒருநாள்  நீரினில்  ஏறும்.  நீரும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்.

3. மனிதனால்  என்றும்  தனித்து வாழமுடியாது.  கூட்டாளிகளை,  நண்பர்களை தேடுகிறோம். இதில்  ஒரு சிக்கல் நமக்குப் புரியாதது  என்னவென்றால்.  நல்லவர்கள் என்று  நாம்  நினைப்பவர்கள்  உண்மையிலேயே  நல்லவர்களா? அல்லவா?  இது  எதில் தெரியும்  என்றால் நாம்  அவர்களிடம்  கொண்டுள்ள  நட்புறவின்  தன்மையைப்  பொருத்து. இந்த  நட்புறவு  எப்படி  ஆரம்பித்தோம்  என்பதில்  அல்ல எப்படி  தொடர்ந்து போற்றி வருகிறோம் கடைசிவரையில்,என்பதில்  தான்  இருக்கிறது.

 4. உனது  வாழ்வில்  நீ  அடிக்கடி  பார்த்திருப்பாயே.  எத்தனை  பேர்  இடர்களை  உண்டாக்கி இருக்கிறார்கள், இன்னும் தொடர்கிறார்கள்.  உன் பாதையில்  உன் கால்  குத்துவதற்காக அவர்கள் மெனக்கெட்டு தூவிய   கற்களை  என்ன பண்ணப்போகிறாய்?   ரெண்டு விதமாக  அதை  உபயோகிக்கலாமே.    ஒன்று   உனக்கு அவர்களுக்கும்  குறுக்கே  ஒரு  சுவர்  கட்டலாம். அல்லது  அவர்களோடு   இணைய பாலம் கட்டலாம்?   எது  சிறந்தது  என்பது உனக்கு இப்போது விளங்குமே!

5. அப்பப்பா.  பேருக்குதான்  நாம்  வாழ்கிறோம்.  வாழ்வா  இது? எத்தனை  கஷ்டங்களை, சுமைகளை, போட்டிகளை, பொறாமைகளை,  அக்னிப்பரிக்ஷைகளை பொழுதுவிடிந்தால்,  ஒவ்வொருநாளும் சந்திக்க வேண்டியிருக்கிறது. இவைகளுக்கு நாம்  ஒன்றுக்கு மேற்பட்ட  எத்தனையோ எண்ணிலடங்கா  விடைகளையும்  வைத்திருக்கிறோம். எந்த விடையாயிருந்தாலும்  ஒரு  விடை தான்  சரியானது. ''வாழ்க்கை  என்றால்  இப்படித்தான் இருக்கும். இது உனக்கு மட்டுமா.  எல்லோருக்கும்  தான்  என்பதை முதலில் புரிந்துகொள்''  என்கிற விடைதான்.     மனம்  அப்போது சமாதானம்  கொள்ளும்.  வாழ்க்கையும்  சீராக அதன் வழியே செல்லும்.

6. வாழ்க்கையை சிலர்  சூதாட்டம்  என்றும்   சொல்வார்கள்.  சீட்டாட்டத்தில் சில சமயம்  நல்ல  சீட்டு  நம் கையில்  வந்தால்  ஜெயிக்கிறோம்,  பலமுறை  மட்டமான சீட்டு கையை நிரப்பினால்  தோற்கிறோம். இது  தப்பு.  ரொம்பவே  தப்பு.  நல்ல  சீட்டுக்காக  காத்திருக்காதே.  கையில்  இருக்கிற சீட்டை எப்படி சாதகமாக இறக்கி,  உபயோகிக்கலாம்  என்று முதலில் கற்றுக்கொள்..

7.  சின்ன சின்ன  விஷயங்களால்  கூட  நாம்  கவிழ்கிறோம். உலகே  இடிந்து  தலை மேல்  விழுந்துவிட்டதாக  கன்னத்தில் ஏன்  கை ?. விரக்தி மனப்பான்மை  எதற்கு? அவ்வளவுதான்.  இதுவே  முடிவு  இனிமேல் அதோகதி  என்று ஏன் கலங்குகிறோம். தலைக்கு மேலேயோ  நெஞ்சுக்குள்ளேயோ   இருந்து கொண்டு கிருஷ்ணன் சொல்கிறானே  காதில் விழவில்லையா?  ''அடே, கலங்காதே. எதிரே தோன்றியது  முடிவான விளைவு அல்ல, தொடரும்  வளைவு. இன்னும்  எதிரே  பாதை  நன்றாகவே நீண்டு  இருப்பதைப்  பார்''  என்று  தைரியமூட்டுவதை அறிவோம்.  அவனை நம்புவோமே. .
 
 8.யாரோ  சொன்னாரே  என்று  உன்னை  உற்சாகப்படுத்துக்கொள்ள கண்ணாடி முன் நின்று  ''அடே  நான்  எவ்வளவு அழகன், சாமர்த்தியக்காரன், கெட்டிக்காரன்  என்று  மார் தட்டாதே. துக்கத்தி லிருந்து  மீள்வதற்கு, ஆதரவுக்குச் சொன்னது இது.  அது   எல்லாவற்றிற்கும்  பொருந்தாது.  பொய் சொன்ன வாய்க்கு  போஜனம் கிடைக்காது.  நரகத்தில்  இடம்  தயார் செய்யும்.

9.இறைவனுக்கும்  நமக்கும்  என்ன வித்தியாசம்?  அவன்  தருவான். மன்னிப்பான்.  நாம்  பெறுவோம்,  உடனே மறப்போம்.
 
 10. இன்னும்  ஒண்ணே ஒண்ணு  சொல்லி நிருத்திக் கொள்கிறேன். இனிமேல்  தாங்காது. பைத்தியம் பிடித்துவிடும்  எனவே  பைத்தியத்தைப்பற்றியே இதில்  சொல்கிறேன்.  உலகில் ரெண்டு பேர்  தான் ஆனந்தமாக  இருப்பவர்கள்.   விவரமில்லாதவனும்  விளையாட்டு குழந்தையும். தான்.  நாம் (முதல் வகை!!)  இல்லாததைத்  தேடி  தேவைகளைப் பூர்த்தி  செய்துகொள்வதில்  வெறி பிடித்து  விவர மின்றி   அலைகிறோம்.  குழந்தைகள்  கை  கால்  இல்லாத  பொம்மைகளைக்கூட கீழே வைக்காமல் அவற்றோடு   சந்தோஷமாக விளையாடுவதை பார்க்கிறோம்.  இருப்பதைக்கொண்டு  மகிழ்கி றார்கள்.  நாம்  குழந்தைகளாகவே  இருக்கலாமே?  நிம்மதியாக  இருப்போமே.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...