Thursday, January 13, 2022

KOTHAIYIN GEETHAI

 கோதையின் கீதை -   நங்கநல்லூர்  J K  SIVAN 

                          
30  செல்வன்  திருமால்  -  செல்வி ஆண்டாள் கல்யாணம்.

அன்பர்களே,  ஒரு மாதகாலம்  நாம்  மார்கழியில்  வீட்டில் இருந்தபடியே எங்கும் போகமுடியாமல்  ஆண்டாள் அளித்த  விருந்து அனுபவித்தோம்.  மார்கழி முடிந்து  இனி உத்தராயண புண்ய காலம் ஆரம்பமாகிறது. இந்த முப்பது ஆண்டாள் பாசுரங்களை எத்தனையோ மகான்கள் வியாக்யானம் செய்திருக்கிறார்கள். அனுபவித்து உரையாற்றி யிருக்கிறார்கள், பிரசங்கித்து வருகிறார்கள். பாடிக்  கொண்டும் வந்திருக்கிறார்கள் இன்று வரை.

இங்கொன்றும் அங்கொன்றுமாக சில பெரிய விஷயங்களைத் தொடுகிறது என்பதைத் தவிர என்னுடைய இந்த  கோதையின்  கீதை கட்டுரைகள் பாராயண புத்தகமல்ல. குழந்தைகளுக்கும் சில பெரியவர்களுக்கும் திருப்பாவையை  கதையாக  எளிதில் அறிமுகம் செய்ய என்னாலான ஒரு சிறிய முயற்சி என்று தான் சொல்வேன் .அப்படித்தான் எடுத்துக் கொள்ளவேண்டும்.   கோதை  மார்கழிக் கான  பாசுரங்களை எப்படி முடிக்கிறாள் தெரியுமா. இதோ படியுங்கள்:

''வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை-சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.'  

மேலே கண்டது கோதை நாச்சியார் அருளிச்செய்த திருப்பாவையின் முடிவுக்கான கடைசி பாசுரம். இதை பல ஸ்ருதி என்று சொல்வது வழக்கம். ஒவ்வொரு முக்கிய ஸ்லோகத்தையும் , மந்திரத்தையும் தப்பில்லாமல் உச்சாடனம் செய்தால், விடாமல் சொன்னால்,  இன்ன பலன் கிடைக்கும் என்று அருள்வது தான் பலஸ்ருதி .

'' இந்த  ஸ்லோகம் சொல்லுங்கள் ஸார் , பாராயணம் பண்ணுங்கள் மாமா , அதன் பிரகாரம் நடக்கவும்'' என்று ஒன்றை பற்றி ஒருவர் மற்றொருவரிடம் சொன்னால்,   '' ஓஹோ அப்படியா, இதைச் செய்தால், இதன் படி நடந்தால், எனக்கு என்ன பயன், என்ன பலன்?'' என்று கேட்பவர்கள் நம்மில் அநேகர் இருப்பதை அந்த இளம் பெண் கோதை நாச்சியார் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தெரிந்து வைத்திருக்கிறாள். அவர்களை, (நம்மை) திருப்திப்படுத்த அவள் கொடுத்த வாய் மொழி இது .

கோதையின் திருப்பாவை முப்பது பாசுரங்களும் தினமும் விஷ்ணுசித்தரிடம் விளக்கம் கேட்ட ஆலய பட்டாச்சார்யர் என்னவோ கேட்கிறாரே, அது என்னவென்று  காதில் விழுகிறதா ?

''ஸ்வாமி, நீங்கள் இன்று விளக்குகின்ற பாசுரம் தான் மார்கழிக்கான கடைசி பாசுரம் என்று அறியும் போது இனி தொடராதே என்கிற வருத்தம் மிகவும் இருக்கிறது '

' அப்படிச் சொல்லவேண்டாம். இதற்கு முடிவே கிடையாது. ஒன்றில்லை எனில் மற்றொன்று. இந்த பாசுரத்தில் ஆண்டாள் கேசவா மாதவா என்று கிருஷ்ணனை அழைக்கிறாள். ''க '' என்பது பிரமனைக் குறிக்கும் சொல். ''ஈசா'' என்பது சிவனைக் குறிக்கும் சொல். (க+ஈசா = கேசவா). மும்மூர்த்திகளும் ஒன்றே என்ற அழகான வார்த்தை. மாதவா என்பது மஹாலக்ஷ்மி தாயாரை உடையவர் என்று பொருள். திருப்பாற்கடலைக் கடைந்ததில் கிடைத்தவள் மஹா லக்ஷ்மி. (இந்த கோதை, தன்னை அரங்கனை அடைய வந்த மஹாலக்ஷ்மி என்பதை விளக்குகிறாளோ?)

முதல் பதினைந்து பாசுரங்களிலும் மற்ற பெண்களுடன் யமுனையில் நீராடி அன்றாடம் நோன்பு நோற்பதையும், 16வதில் நந்தகோபன் அரண்மனையை அடைவதையும் , அடுத்த 5 பாடல்களை நந்தகோபன், பலராமன், முதலானோரை துயிலெழுப்புவதையும், 23வது பாசுரத்தில் கண்ணனை துயில் எழுப்பி அவனை சிம்மாசனத்தில் அமரச் செய்வதையும், மற்ற இருபாடல்களில் பரிபூர்ண சரணாகதித்வம் பற்றியும் 26ல் விரதத்துக்கு தேவையான பொருள்களை வேண்டுவதையும், 27ல் அந்த ஆயர்பாடிச் சிறுமிகளுக்கு சன்மானம் கேட்பதையும், 28வதில் அவனது மேன்மையை எடுத்துச்  சொல்லி தாங்கள் செய்த நோன்பில் ஏதேனும் தவறுகள், குறைபாடுகள் இருப்பின் அவற்றை க்ஷமிக்க வேண்டுவதையும், 29ல் நோன்பின் நோக்கத்தை அருளிச்செய வேண்டுவதையும், 30ல் அதை அடைந்தனர் என்ற பலஸ்ருதியையும் எத்தனை அழகாக மணி மாலையாக அந்த பட்டர் பிரான் வளர்த்த கோதை தொடுத்து அளித்திருக்கிறாள் பாருங்கள்.
பலே சுட்டிப் பெண் அந்த ஆண்டாள்!.

திருப்பாவையை மனதில் பக்தியோடு, நம்பிக்கையோடு படித்து பாராயணம் செய்பவர்க்கு நினைத் தது நடக்கும், கேட்டது கிடைக்கும். இதற்கு கண்ணன் அருள் புரிவான். 'வாரண்டி, கேரண்டீ' இது தான்.

இந்த பாசுரம் திருப்பாவையைப்  பூர்த்தி செய்கிறது. ஒரு அழகிய மணிமாலையில் ஒரு மணி உதிர்ந் தாலும் மாலைக்கு மதிப்பில்லையே. அது போல் இந்த முப்பது பாசுரங்களையும் முழுமையாக பாடி வேண்டு வோர்க்கு  பொங்கும் மங்களம் எங்கும் தங்கும் என்பது சான்றோர் வாக்கு.

திருப்பாவை 30 பாடல்கள் முடிந்து விட்டது என்பதால் இத்துடன் எனது அக்கார வடிசல்  ''தடா'' க்கள் காலியாக வில்லை. இனிமேல் தான் அக்கார அடிசலே வருகிறது. சர்க்கரை  தைப்பொங்கல்  உருவத்தில்.  எல்லா கல்யாணங்களும்  எப்போது தை  மாதம் வரும்  கல்யாண முஹுர்த்தத்துக்கு என்று காத்திருந்து விமரிசையாக நடக்கிறது அல்லவா?  தை மாத முதல் முகூர்த்த கல்யாணம்  ஆண்டாள் ரங்கன் கல்யாணம் தான்.   ஆண்டாள் அரங்கனை அடையப் போகிறாள். பிரம்மாண் டமான கல்யாண  ஏற்பாடுகள் நடந்துகொண்டு வருகின்றன. திருமண அழைப்பு உங்களை அடையப் போகிறது. அதிகமாக பொங்கல் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்  கொண்டால் ஆண்டாள் கல்யாண சாப்பாடு நிறைய சாப்பிட முடியாதே. நாளை வயிற்றை காலியாக வைத்துக் கொண்டு காத்திருக்கவும். நாளை சந்திப்போம்: ஒரு முக்கிய விஷயம்  இந்த கல்யாணத்தில் அனைவரும் கலந்து கொள்ளலாம்.  கொரோனா பயமே கிடையாது. அவரவர் வீட்டிலேயே விருந்து வந்து சேருமே .
'ஆண்டாளுக்கு  திருமணம்.  அவசியம்   வீட்டிலிருந்து கொண்டே மனதால்  பங்கேற்று கௌரவிக்கவும்.  ஆண்டாள்  அரங்கன் ஆசி பெறவும் -  ஜே.கே.சிவன் ''

என்னுடன் இந்த மார்கழி மாதம் பூரா விடியற்காலை குளிரில் குளித்து நடுங்கி கொண்டு தலையில் குரங்கு குல்லாவோடு, ஆண்டாள் மற்றும் அவள் தோழியர் பின்னே கூடவே ஆயர்பாடிக்கு தொடர்ந்து வந்து, அங்கிருந்து அடிக்கடி தென்கோடியில் வில்லிப்புத்தூருக்கு தாவுவதுமாக இருந்த உங்களுக்கு என்ன விதத்தில் நான் நன்றி தெரிவிக்கமுடியும்?    ஆண்டாள் என்ன சொல்கிறாளோ அதையே திருப்பி சொல்வது தான் சாலச் சிறந்தது.

“கண்ணா, இந்த மார்கழி முழுதும் பக்தியோடு உன்னை பாடிய இந்த ஆயர்குடி இடைப் பெண்கள் நாங்கள் உன்னிடம் என்ன கேட்கிறோம்?
நீயார்?
 எங்களைப்போல் இடையர் குலத்தில் பிறந்தவனல்லவா?
அதனால் நாம் எல்லோரும் ஒரே குலம் அன்றோ? ஒரே வித்தியாசம் நமக்குள் என்னவென்றால் நீ ஆண்டான் நான் ஆண்டாள் ஆக இருந்த போதும் உன் அடிமை. எங்களுக்கு நீ அருள வேண்டிய வரம் என்ன தெரியுமா?. இனி எத்தனை எத்தனை பிறவி எங்களுக்கு உண்டோ  அவை அத்தனையிலும் நீ எங்களில் ஒருவன், நாங்கள் உன்னுடையவர்கள், புரிகிறதா?''

ஒரே வார்த்தையில் இறைவனோடு தன்னைப் பிணைத்து கொண்டு விட்டாள் ஆண்டாள். என்ன பொருத்தம் பாருங்கள்.
"கோதா" என்ற அவள் பெயரே "கோ(விந்)தா '' என்ற அந்த மாயாவியின் பெயருக்குள் அடங்கி விட்டதே! ஆகவே அவனை வணங்கும்போது நாம் அவளையும் சேர்த்தே தான் வணங்கு கிறோம். இந்த 30 பாடல்களையும் விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வார் மகளாக  கோதையாக இந்த திருப்பாவையை எழுதவில்லை.  தன்னை கிருஷ்ணன் காலத்திற்கே கொண்டு சென்று அன்று அங்கு வாழ்ந்த கோபர்கள் கோபியர்கள் எனப்படும் பசு கன்று மேய்க்கும் ஆயர் குலப் பெண்ணாக பாவித்து மற்ற சிறுமிகளுடன் சேர்ந்து பாவை நோன்பு நோற்றும் கிருஷ்ணனின் அருளைப் பெற்ற சிறுமியாகவே இந்த திருப்பாவை பாசுரங்கள் அமைந்தன. மார்கழி 30வது பாசுரத்தில் தான் ஸ்ரீ ஆண்டாள் இந்த பாசுரங்களை எவர் தப்பின்றி உண்மை யான பக்தியோடு இறைவன் மேல் பாசத் தோடு மார்கழி மாதம் பூரா இசைக்கிறார்களோ அவர்கள் அந்த மாதவன் கேசவன் என்றெல்லாம் ஆயிர நாமங்கள் கொண்ட கோவிந்தனின் அருளை, சதுர்புஜ நாராயணனின் ஆசியைப் பெறுவர். குறையொன்றும் இல்லாத கோவிந்தன் தாள் சேர்வர். இது நிச்சயம், உறுதி, நம்பலாம் என்று முடிக்கிறாள்.

''திரு'' ப்பாற்கடலில் விளைந்த ''திரு'' அல்லவா அவள் -- ஆண்டாளாக அவதரித்து ''திரு'' ப்பாவை தந்தவள்!!. நம் எண்ணம் முற்றும் அந்த வெண்ணை ''திரு'' டன் நீலவண்ணனுக்கே உரித்தாகட்டுமே!!.

இப்போது ஆண்டாள் எப்படி அந்த மதுசூதனனைக் கைப்பிடித்து கணவனாக்கிக் கொண்டதாக கனவு கண்டாள் என்பதை விழித்துக்கொண்டே அவள் கனவை நம் நினைவாக்கி அனுபவிக்கப் போகிறோம்! இது கனவல்ல. நிஜம். காலம் காலமாக ஆண்டாள் திருக்கல்யாணம் ஊரெங்கும் கோலாகலமாக நடைபெறுகிறதே. இது ஒன்றே நிதர்சனம். இனி நாம் ஆண்டாள் கல்யாணத்தில் சந்திக்கப்போகிறோம்.

 தை பிறந்ததும்   நிறைய பேருக்கு  வாழ்க்கையில்  புது வழி பிறக்கப்போகிறது. இனி நிறைய மார்கழி விருந்தை தொடர்ந்து தை  கல்யாண விருந்துகள் நிறைய சாப்பிடப்போகிறோம்.  ஆண்டாள் கல்யாணத்துக்கும் சாப்பாடு  ரெடி.  வந்து இலையின் முன்னால் உட்காருங்கள்.  வரிசையாக  பக்கெட்கள்  BUCKETS  நிரம்ப ஐட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வருகிறதே.  


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...