Wednesday, January 26, 2022

SURDAS

 ஸூர் தாஸ்  -  நங்கநல்லூர்  J K  SIVAN    


17   கேட்டதும்  கொடுப்பவனே

உலகத்தில் நமக்கு சக்தி எத்தனையோ ரூபங்களில் கிடைக்கிறது.  அக்னி,  வாயு, நீர், ஆகாசம் ஆகியவற்றிலிருந்து பெறுகிறோம்  அதைத்  தவிர  நம் போன்ற  இதர மக்களிடமிருந்தும், பிற உயிருள்ள, உயிரற்ற எண்ணற்ற பல வஸ்துக் களிடமிருந்தும்  ஏதோ ஒரு உதவி   பெறுகிறோம்.  ஸூர்தாஸ் ஒரு பேருண்மையை  இந்த பாடலில் நினைவூட்டுகிறார்.

திக்கற்றவனுக்கு தெய்வமே சக்தியும் துணையும்.

நிர்கதியானவனுக்கு  ராமா  என்ற ஒரு வார்த் தையே போதும். அதுவே அவனுக்கு  சக்தி அளிக்கும். இது கற்பனையல்ல. சாகும் வரை எனது  பார்வையிழந்த தாத்தா ப்ரம்ம ஸ்ரீ  வசிஷ்ட பாரதியார்  ஸ்ரீ ராம ராமா என்றே வாய்  ஓயாமல் எப்போதும் சொல்வார்.  அவரது முன்னோர்கள்  ராம கதை, உபன்யாசம், கவிகள், கீர்த்தனைகள்  பாடி சன்மானம் பெற்று வாழ்ந்தவர்கள். குடும்பத்தில் எல்லோருக்கும்   சீதாராமன், சுந்தரராமன், ஜானகிராமன் ஜெயராமன்,  சிவராமன்  என்று  ஒரு ராமன்  பெயர் நிச்சயம் உண்டு. மஹா பெரியவாளுக்கு  நெருக்கமாக  வாழ்ந்து புராணசாகரம் என்ற விருது பெற்றவர்.

புராணங்கள்  எத்தனையோ நிரூபணங்களை இப்படி பலருக்கு இக்கட்டான நேரத்தில் வலுவற்ற வலுவிழந்த நேரத்தில் சக்தியும் பலமும் கிடைத்த விவரங்களைச்   சொல்கிறது. மஹான்கள் சரித்திரத்தில் கூட இதை நிறைய பார்க்கிறோம்.

கஜேந்திரன் நீர் குடிக்கப்போய்  அதன் ஒரு காலை முதலை கவ்வி அவனை நீருக்குள் இழுத்த சமயம்  கஜேந்திரன் தனது சகல முயற்சிகளும் தோல்வி யடைந்தபோது இனி நம்மைக் காக்கும் ஒரே சக்தி அந்த ஆதி மூலமே என்று நாராயணனை வேண்டுகிறான். சக்தி கிடைத்தது சுதர்சனசக்ரம் மூலம். கஜேந்திரன் தப்பித்தான். நாராயணன் ராமன் தானே. கிருஷ்ணனும் அவன் தானே. எந்தப் பேர் சொல்லி எப்படி அழைத்தால் என்ன?

''கிருஷ்ணா, நீ  செய்ததை மறந்து விட்டாயா?' துருபதன் மகள் தன்னால் இயன்ற வரை, முயன்று இனி தன்னால் ஆவது ஒன்று மில்லை என்று அறிந்த நேரத்தில்  'ஹே கோவிந்தா, ஆபத் பாந்தவா'' என்று உன்னை அழைத்தாள். இடுப்பில் அவள் அணிந்திருந்த ஒரே ஒரு வஸ்திரமான புடவை நீண்டு கொண்டே கின்னஸ் ரிக்கார்டாக வளர்ந்தது.   அதை இழுத்த  துச்சாதனன் மயங்கி கீழே அவன் சேகரித்த புடவை மலை மேல்  மயக்கமுற்று  விழுந்தான்.

வசிய சக்தியோ, தவ சக்தியோ, ஆயுத பலமோ,  வேறு எந்த சக்தியோ, பெரிதல்ல, அதற்கெல்லாம் மேலே ஒரு பெரிய சக்திதான் கிருஷ்ணா உன் மேல்   பக்தி  மூலம்  பெறுவது.

ஆகவே  மானுடர்காள், தோல்விகளை சந்தித்து சோர்ந்து விழாதீர்கள். நமது முயற்சிகள் பலன் அளிக்காததை அந்த வெண்ணெய் திருடன் நிறைவேற்றித் தருவான்.  ஒரே ஒரு  சின்ன வார்த்தை, ரெண்டே  எழுத்து  ''ஹரி'' ''ஹரி''  என்ற சொல்லை மட்டும் மறவாதீர்கள்.   ''கேட்டதும் கொடுப்பவனே, கிருஷ்ணா, கிருஷ்ணா, கீதையின் நாயகனே'' என்றல்லவோ  பாடுகிறார்  ஸூர்தாஸ் இந்த பாடலில்.  நாமும் அவரோடு சேர்ந்து கொள்வோமே. ஒரு கோரஸ்  பாட்டு உருவாகட்டும்.

सुनेरी मैंने निरबल के बल राम,
पिछली साख भरूँ संतन की, अड़े सँवारे काम।

जब लग गज बल अपनो बरत्यो, नेक सरयो नहीं काम,
निर्बल ह्वै बल राम पुकार्‌यो, आये आधे नाम।

सुनेरी मैंने निरबल के बल राम।

द्रुपद सुता निर्बल भईं ता दिन, तजि आये निज धाम,
दुस्शासन की भुजा थकित भई, वसन रूप भये राम।

सुनेरी मैंने निरबल के बल राम।

अप बल, तप बल और बाहु बल, चौथा है बल राम,
सूर किशोर कृपा से सब, बल हारे को हरिनाम।

सुनेरी मैंने निरबल के बल राम।
सुनेरी मैंने निरबल के बल राम।

''suni ri maine nirbal ke balram
pichhali saakh dharun santan ki ade sawaren kaam
jab lag gaja bal aapno bartyo nek saryo tah kaam
nirbal hoi balram pukaro aayen aadhe naam
drupad suta nirbal bhai ta din taj aayen nij dhaam
duhshashan ki bhuja thakit bhai basan roop bhayen shyam
ap-bal tap-bal aur bahu-bal chautha bal hai bal-dam
sur kishor kripa se sab bal haare ko hari naam''

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...