Thursday, December 23, 2021

KUDHAMBAI CHITHTHAR

 குதம்பை சித்தர்  -  நங்கநல்லூர்  J K  SIVAN


குதம்பாய்,  இதெல்லாம் தெரியுமா?  நாம்  தமிழர்கள், என்றவுடன் ஏதோ நாம் தமிழர் என்ற ஓரு  இனம், கட்சி,  பற்றி பேசுவதாக எழுதுவதாக நினைத்தால் எனக்கு இன்னும் பல ஜென்மங்கள் இருப்பதாக அர்த்தம். தப்பு. நாம்  எல்லோரும்  தமிழ் பேசும், தாய்மொழியாக தமிழை அறிந்தவர்கள் என்றாலும்  இன்றளவும்  தமிழ் பாடல்களை அறிந்துகொள்ள அர்த்தம் தேட வேண்டிய நிலையில் உள்ளோம்.  தமிழ் கடல் போன்றது. அதில் சில வார்த்தைக ளையே மட்டும் வாழ்நாள் முழுதும் அறிந்து கடற்கரையில் சில கிளிஞ்சல்களை மட்டும் மடிநிறைய சேர்த்தது போதும் என்று திருப்திப் படுபவர்கள். அதோடு  மடிபவர்கள் என்றாகி விட்டோம்.

இதை அறிந்து தான் போல இருக்கிறது  தீர்க்க தரிசிகளாக சில மஹான்கள் தமிழை நாம் புரிந்து கொள்ளும்படியாக எழுதி வைத்து விட்டு போயிருக்கிறார்கள். சித்தர்களில்  சிவவாக்கியர், திருமூலர், பட்டினத்தார், மற்றும் பல சித்தர்கள் எழுதிய  தமிழ் கொஞ்சம் புரிகிறது. குதம்பை சித்தர் பாடல்களில்  உயர்ந்த தத்துவங்கள்  எளிமையான  ஒரு வரி  ரெண்டு வரியில் புரிகிறது.  அவற்றில்  சிலவற்றை ரசிப்போம் ருசிப்போம்.

குதம்பை சித்தர்  ஒரு அற்புத சித்தர்.   அது அவர் பெயர் அல்ல.  அவர் தத்துவ பாடல்கள் குதம்பாய், குதம்பாய் என்று  ஒரு பெண்ணுக்கு புத்தி புகட்டுவது போல் இருக்கும். ஆதலால் அவரையே  குதம்பாய் சித்தர்  என்று  அழைக்க அது  காலப்போக்கில் குறைந்து போய் குதம்பை சித்தராகிவிட்டது.   நிறைய சித்தர்களின், மஹான்களின்  உண்மையான பெயரே காணாமல் போனாலும் அவர்கள்  பிரபலமான பெயர்கள் மூலம்  அமரர்களாகி விட்டார்கள்.

''எல்லா உயிர்களுக்கும்,  அவற்றிற்கு எது தேவையோ அந்த உணவை, கல்லினுள் இருக்கும் தேரைக்கும், கருப்பையில் வளரும் சிசுவுக்கும் எது  எவ்வளவு, எப்படி தேவையோ அப்படி இலவசமாக அளிக்கும்  சர்வேஸ்வரன் பரமேஸ்வரனை விடாமல் வாழ்நாள் பூரா நன்றியோடு நினைக்கவேண்டாமா பெண்ணே  குதம்பாய்,  நீ''  என்கிறார் குதம்பை சித்தர் இந்த ரெண்டு வரி பாடலில்

'எந்த உயிர்க்கும் இரைதரும் ஈசனைச் 
சந்ததம் வாழ்த்தடியோ குதம்பாய் 
சந்ததம் வாழ்த்தடியோ'' 

நமக்கு கிடைத்த பரமேஸ்வரன், கல்ப கல்பகாலமாக தேடினாலும் கிடைக்காதவன் கிடைத்திருக் கிறானே. அவனை மனதார சந்தோஷமாக போற்றி பாடடி குதம்பாய்,  பெண்ணே  என்கிறார்  இந்த ரெண்டு அடியில்.

''காணக்கிடையாத கற்பாந்த கல்பத்தை 
நாணாமல் ஏத்தடியே குதம்பாய் 
நாணாமற் ஏத்தடியே. 

அந்த  பரமேஸ்வரனை அறிவாயா பெண்ணே?  அவன்  சின்னதில்  எல்லாம்  ரொம்ப ரொம்ப சின்னவன். அணுவுக்குள் அணு. 
அதே நேரம் அவன் எது ரொம்ப ரொம்ப  பிரம்மாண்டமான  பெரியதோ, அதிலும் அதிகமான பெரிய  உருவம் கொண்டவன். கண்ணால் அவனை அளக்க  முடியாது. அடிமுடி காணாமல் பிரம்மாவும் விஷ்ணுவும் அதிசயித்த  ஜோதிஸ்வரூபம்.

''அணுவாய் பல்அண்டமாய் ஆனசிற்சோதியைத் 
துணிவாய்நீ போற்றடியோ குதம்பாய்
துணிவாய்நீ போற்றடியோ.

ஆமாம்  இப்படியெல்லாம் பெருமை வாய்ந்த பரமேஸ்வரன் நம்மை லக்ஷியம் செயது நம்மையும் காக்கிறானே , அருள் பாலிக்கிறானே,  அந்த  நல்  மாணிக்கத்துக்கு  என்ன கைம்மாறு  செய்யப் போகிறாய்?   அவனிடம் இல்லாததா நம்மிடம் இருக்கிறது? இருந்தும் நம்மில் அவன் கொடுத்த  அதி அற்புதமான நல்ல மனசை, மனதை, அவனுக்கு ''பரமேஸ்வரா, என்னிடம் இருப்பதில் இது  ஒன்று தான் உனக்கு ஏற்றது  என்று நமது மனதை பரிபூர்ணமாக அவனுக்கு அளித்துவிடு பெண்ணே!குதம்பாய் என்கிறது இந்த பாடல்: 

''மாணிக்கக் குன்றிற்கு மாசற்ற சோதிக்குக் 
காணிக்கை நன்மனமே குதம்பாய்
காணிக்கை நன்மனமே.

''நீரும் நெருப்பும் நெடுங்காற்று வானமும்
பாருமாய் நின்றதைக் காண் குதம்பாய்
பாருமாய் நின்றதைக் காண்.24

பெண்ணே,  உன் கண்முன் தோன்றும்  பஞ்ச பூதங்களை பார்க்கிறாயே,  நீர், நெருப்பு,  காற்று,  வானம்,  பூமி  எல்லாமே வேறு வேறாக காணப்பட்டாலும் ஒன்று தானடி. எல்லாம் அவன் ஒருவன் தானடி.

தோற்றமான எல்லாவற்றுக்கும் ஜகத் என்று பெயர். அதை ஊக்குவிக்கும் தோற்றம் மறைவு இல்லாத சக்தி மஹத். இது தான் எல்லா வேதங்களும் கூறுவது  என்பதை புரிந்து கொள்ளடி பெண்ணே.

''ஐந்து தொழிற்கும் உரியோன் அநாதியை
மந்திரம் போற்றுமடி குதம்பாய்
மந்திரம் போற்றுமடி.30

படைத்தல், காதல், அழித்தல், மறைத்தல், அருளுதல் இந்த ஐந்தையும் புரிபவனை தான் வேதங்கள் போற்றுகிறது.  பெண்ணே  குதம்பாய்,  பரமேஸ்வரனைப்  பற்றி  வேதங்கள்  இதைத்  தானடி சொல்கிறது.

யானை தலையாய் எறும்பு கடையாய்ப்பல்
சேனையைத் தந்தானடி குதம்பாய்
சேனையைத் தந்தானடி.31

அடேயப்பா,  இதை பார்த்தாயடி பெண்ணே குதம்பாய்,  இந்த ப்ரபஞ்சத்தில் தான் எத்தனை உயிர்கள். யானை போன்ற பெரிய   ஜீவன்கள்  முதலாக,   எறும்பு வரை, எவ்வளவு விதமான வெவ் வேறு  ஜீவராசிகளை  பரமேஸ்வரன்  படைக்கிறான்.

அடியே  நான்  சொல்வதைக் கேளடி.  நமக்கு உயிர், உள்ளம், எண்ணம், புத்தி, இதெல்லாம் நாம் கேட்காமலேயே எதையும் எதிர்பாராமல்   தந்தவன் அந்த பரமேஸ்வரன். அவனை நன்றியோடு  வணங்குவோமடி.
எந்த உயிர்க்கும் இரைதரும் ஈசனைச்
சந்ததம் வாழ்த்தடியோ குதம்பாய்
சந்ததம் வாழ்த்தடியோ.

எல்லா உயிர்களுக்கும் அன்றாடம் மூன்று வேளை உணவு அளிக்கிற சிவனை கையெடுத்து கும்பிடு.

காணக்கிடையாத கற்பாந்த கல்பத்தை
நாணாமல் ஏத்தடியே குதம்பாய்
நாணமற் ஏத்தடியே.

எண்ணற்ற காலமாக தோன்றி அருளும் மாமணி சிவனை சந்தோஷமாக ஓடிவந்து போற்று

அணுவாய் பல்அண்டமாய் ஆனசிற்சோதியைத்
துணிவாய்நீ போற்றடியோ குதம்பாய்
துணிவாய்நீ போற்றடியோ.

அவன் யாரென்றா கேட்கிறாய்? அணுவுக்குள் அணுவானவன். கண்ணால் காண முடியாத சிறு இரவும் கண்ணால் அழிக்கமுடியாத பேருருவாக அகண்ட ஜோதியானவனும் அவனே.

மாணிக்கக் குன்றிற்கு மாசற்ற சோதிக்குக்
காணிக்கை நன்மனமே குதம்பாய்
காணிக்கை நன்மனமே.

இப்படிப்பட்ட மஹா தெய்வமான சிவனுக்கு மாணிக்க மலைக்கு அன்பெனும் மலைக்கு பரிசுத்த ஜோதிஸ்வரூபத்துக்கு என்ன காணிக்கை கொடுப்பது என்று யோசித்து முடிவில் என் மனமே உனக்கு தக்க காணிக்கை என்று அளிப்பாய்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...