Wednesday, December 8, 2021

ORU ARPUDHA GNANI

 ஒரு அற்புத ஞானி -  நங்கநல்லூர்   J.K. SIVAN

சேஷாத்ரி ஸ்வாமிகள்

உண்ணாமுலை அம்பாள் தரிசனம்.

திருவண்ணாமலை என்று நினைத்தாலே  மனக் கண் முன்னால்  தோன்றுவது ஸ்ரீ ரமண மகரிஷியும் அவரை அறிமுகப்படுத்திய  ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளும் தான்.   சேஷாத்ரி ஸ்வாமிகள் மீது  எனக்கு ஈர்ப்பு கொஞ்சம் கூடவே உண்டு. ஒரு அற்புத ஞானி என்று அவரைப் பற்றி  ஒரு புத்தகமே  விலையின்றி விநியோகத்துக்கு  எழுத தோன்றியது. (வேண்டுவோர் என்னை அணுகலாம் வாட்ஸாப்ப் 9840279080)

திருவண்ணாமலை போல  ஒரு பிரம்மாண்டமான  புராதன  பிரதான கோவிலில் ப்ரம்மோத் சவத்தில் தேர் புறப்பாடு என்பது எளிதான காரியம் அல்ல.

அதுவும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலய பிரம்மோத்சவம் ரொம்ப சிறப்பானது. எண்ணற்ற பக்தர்கள் பங்கேற்பார்கள் .  அன்று  அம்பாளுடைய தேர் புறப்பட்டது. எண்ணற்ற பக்தர்கள் இழுத்துச் சென்றார்கள். அந்தக்  காலத்தில் தெருவெல்லாம் தார் போட்டதில்லை. மண் தரை. ஆயிரக்கணக்கான கைகள் சேர்ந்து இழுத்த போது அந்த தேர் எப்படியோ ஒரு பள்ளத்தில் ஒரு சக்கரம் சிக்கி நிலை குலைந்து நின்று விட்டது. மணிக்கணக்காக எத்தனையோ பேர் பிரயாசைப் பட்டும் தேர்க்கால் அசையவில்லை. வகையாக பள்ளத்தில் ஆழ்ந்துவிட்டது. என்ன செய்வது?
பகவானே இது என்ன சோதனை. அருணாச்சலேஸ்வரா இதுவும் உன்  திருவிளையாடலோ?
வியர்க்க விறுவிறுக்க  அனைவரும்  முடிந்த வரை பிரயாசைப் பட்டு தேரை நகற்ற படாத பாடு பட்டு இழுத்தனர்.  
இந்த சமயம்  சேஷத்திரி ஸ்வாமிகள் எங்கே இருந்தார் என்று யாருக்கு தெரியும்?

எங்கே இருந்தாரோ, எப்படித் தெரிந்ததோ தெரியவில்லை. அங்கே ஓடி வந்தார் சேஷாத்திரி ஸ்வாமிகள். கூட்டத்தை கையால் தள்ளி பிளந்து கொண்டு வந்து பள்ளத்தில் இறங்கிவிட்டார். தேர்ச்சக்கரத்தை அங்கும் இங்குமாக ஏதோ தடவிக் கொடுத்தார். வெளியே வந்தார். தேர் வடத்தை கையால் பிடித்தார் இழுத்தார். எண்ணற்ற கைகள் அவர் இழுப்பதை பார்த்து கயிற்றைப் பிடித்து இழுத்தன. தேர் பள்ளத்திலிருந்து எளிதில் விடுபட்டு ஒரு சேதமுமில்லாமல் சென்னை அண்ணா சாலையில் கார் போவதைப்போல ஜம்மென்று நகர்ந்தது. அம்பாள் தேரை அம்பாளே இழுத்தாள் என்றபோது நகர்ந்ததில் என்ன அதிசயம்?  ஸ்வாமிகள்  அம்பாள் அவதாரம் அல்லவா?  காமாக்ஷி ஸ்வரூபம் ஆயிற்றே. 

இனி உண்ணாமலை அம்மன்  தரிசனம் பற்றி ஒரு அற்புதமான விஷயம்  சொல்லட்டுமா?

வெங்கட்ராமன் என்பவன்   ஒரு பதினைந்து வயசு பையன். சந்தியா வந்தனம் விடாமல் பண்ணி காயத்ரி மந்தரம் சொல்லும்  ''நல்ல'' பையன். ஒரு நாள் சாயந்திரம் சந்தி பண்ணி முடித்து பட்டை பட்டையாக நெற்றியில், கைகளில், மார்பில் வெண்ணிற விபூதி அணிந்து அருணாசலேஸ்வரர் கோவில் அம்மன் தரிசனத்துக்கு சென்றவனை, வழியில்  சேஷாத்ரி  ஸ்வாமிகள் பார்த்துவிட்டார்.
இளையனார் கோவில் அருகே ஸ்வாமிகள்  அவனைப்  பிடித்துக் கொண்டார்.
''டே பயலே, எங்கே போறே?''
''அம்பாள் தரிசனம் பண்ண''
''இங்கேயே அம்பாளை பார்க்கறியா ?''
''ஓ!. எங்கே?''
''இதோ, உன் கண்ணை மூடிக்கொள்''
பையன் கண்களை மூடிக்கொண்டான். ஸ்வாமிகள்  தனது கரங்களால் அவன் கண்களை மூடினார்.
''இப்போ கண்ணைத்திறக்காமலேயே  பார் ''என்கிறார்.  அவனது மூடிக்கொண்டிருந்த கண்களில்  அம்பாள் தரிசனம் தந்தாள்.  ஆலயத்துக்குள் இருக்கும் அபீத குஜாம்பாள் (உண்ணா முலை அம்மன் ) அவனது மூடிய கண்களுக்குள் தெரிந்தாள் .
''பார்த்தியா, அம்பாள் தெரிஞ்சாளா? எப்படி இருந்தா சொல்லு ''
''மஞ்சள் புடவை. மல்லிகைப்பூ மாலை. தலையிலே கிரீடம், இடுப்பிலே தங்க ஒட்டியாணம். காலுலே தண்டை கொலுசு.''
''சரி, இப்போ உள்ளே போய்ப் பார்''
பையன் உள்ளே சந்நிதிக்கு சென்றவன் அம்பாளைப்   பார்த்தான். அதே உடை, நகை, அலங்காரம்.... ஆச்சர்யம் தாங்க முடியாமல் பையன் அன்று வீட்டில் அனைவருக்கும் இதை சொல்ல, அது ஊருக்கு எல்லாம் தெரிந்தது. ஒவ்வொரு நாளும்  யார்  யாரோ மூலமாக சேஷாத்ரி ஸ்வாமிகள் மஹாத்ம்யம் விடாமல்   விடாமல் தொடர்ந்து  இரவும் பகலும்  பரவிக்  கொண்டிருந்த காலம் அது.

சேஷாத்ரி ஸ்வாமிகள்  அம்பாள் சந்நிதிக்கு போகவில்லை. அம்பாளை தரிசிக்க வில்லை. பின் எப்படி அவர்  உள்ளே சென்று பார்க்காமலேயே  அப்போது தான்  அர்ச்சகர் அலங்கரித்த  ஆடை ஆபரணம் எல்லாம்  ஸ்வாமிகளுக்கு தெரிந்தது.? அம்பாளின் அலங்காரம் அவருக்கு எப்படி தெரிந்தது என்றா கேட்கிறீர்கள்?
அதற்கு பொருத்தமான விடை : 
அம்பாள் செய்து கொண்டிருக்கும் அலங்காரம் அம்பாளுக்கேயா தெரியாது?


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...