Friday, December 24, 2021

VAINAVA VINNOLI

 வைணவ விண்ணொளி  -  நங்கநல்லூர்  J K SIVAN 


 '' எனக்கு வேறே தெய்வம் தெரியாதே!''

சாது பிராமணர்கள்  என்ற  வார்த்தை  உபயோகிக்கிறோமே  அப்படி ஒருவரை  பார்க்கவில்லை என்றால்  அது இவர் தான்.  இவரைப் பார்க்க வேண்டுமானால்  ஆயிரம் வருஷங்கள் பின்னோக்கி போகவேண்டும்.   அதிர்ந்து பேச மாட்டார்.. எளிய வாழ்க்கை. பாண்டிய தேசத்தவர். . தமிழிலும் ஸம்ச்க்ரிதத்திலும் நல்ல ஞானம். வேத வேதாந்தங்களில் தேர்ந்தவர். அவருடைய விருப்பம் திவ்ய தேசங்களுக்கு தீர்த்த யாத்ரை செல்வது. இப்படிச் சென்றபோது தான் ஒரு முறை அயோத்தியில் ராம லக்ஷமண சீதா தரிசனம் செய்ய சென்றிருந்தார். அப்போது  பாபர் பிறக்கவில்லை,  மஸூதி என்றால் என்ன வென்றே தெரியாத காலம்.

அப்போது இரவு நேரம். அவர் இருந்ததோ வடக்கே அயோத்தியில். இருந்தாலும் அவரது வழக்கம் எங்கே இருந்தாலும் தனது ஊர் இருக்கும் திசையை நோக்கி வணங்குவது.

அன்று இரவும் அப்படியே தனது ஊர் திருக்கோளூர் தெற்கே இருப்பதால் தனது ஊர்  தெய்வமான  வைத்த மாநிதி பெருமாளை நினைத்து தெற்கு நோக்கி நின்றுகொண்டு இரு கரம் கூப்பி ஆகாயத்தை பார்த்து வணங்கினார். ஏதோ ஒன்று அவர் கவனத்தை அப்போது ஈர்த்ததா, இழுத்ததா? என்னவென்று சொல்லலாம்?

''அட என்ன அதிசயம் இது?

வட்ட வடிவமாக ஒரு பேரொளி தலைக்கு மேலே. மெதுவாக தெற்கு நோக்கி நகர்ந்தது. ஏதோ ஒரு சக்தி காந்தம்போல் அவரை ஈர்த்தது. அந்த ஒளி நகர்வதையே பார்த்துக்கொண்டு நடந்தார். நடந்தார், நடந்து கொண்டே சென்றார் நாட்கணக்கில்,..........அந்த காந்த ஒளி தான் அவரை இழுத்துச் சென்றதே. எவ்வளவோ நாட்கள்  மாதங்கள் நடந்தார். வானத்தில் இருந்த காந்த ஒளி அவரை வழி நடத்தி சென்றது.

வடக்கே அயோத்தியில் நடக்க ஆரம்பித்தவர் தெற்கே திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள திருக்குருகூர் வரை வந்து விட்டார். ஒரு இடத்தில் அங்கே வந்ததும் அந்த பேரொளி மறைந்தது. இதுவரை அவரை அங்கே கொண்டு வந்த பேரொளி இப்போது ஏன் காணோம்? 

''நாம் எங்கே இருக்கிறோம் இப்போது? இது என்ன ஊர்? ''எதிரே ஒரு வைணவர் கண்ணில் பட்டார். அவரை அணுகி வணங்கினார் பிராமணர். 
அந்த வைணவர் யார் இது இந்தப் பகுதியில் புதியவராக இருக்கிறாரே என்று அதிசயித்து 
''யார் நீங்கள் ? என்று கேட்டு பதிலுக்கு வணங்கினார்.

''சுவாமி நான் பாண்டிய தேசம். இங்கே இந்த ஊரில் என்ன விசேஷம்? என்றார் அந்த பிராமணர்.

''சுவாமி, இங்கே ஒரு பாலகன் கண் திறவாது, காது கேளாது, வாய் பேசாது அன்ன ஆகாரமின்றி பிறந்தது முதல் 16 வருஷங்களாக இங்கே அமர்ந்திருக்கிறார். அதோ பாருங்கள்'' கைகாட்டினார்.

பிராமணர் முதன்முதலாக அப்போது தான் எதிரே இருந்த ஒரு பெரிய புளிய மரத்தடியில் நம்மாழ்வாரைக் கண்டார்.

''யார் இந்த பாலகன்.? ஏதோ ஒரு பாலயோகியோ ? தவத்தில் ஆழ்ந்திருக்கிறாரோ? பிராமணர் நம்மாழ்வார் கவனத்தை கலைக்க எடுத்த முயற்சி வீண். அவரை எப்படியாவது விழிப்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று ஒரு கல்லை தூக்கி டபார் என்று அவர் அருகே போட்டார். இத்தனை வருஷம் திறவாத கண் சற்றே மலர்ந்தது. ஆஹா இந்த கண்ணில் என்ன ஒரு ஆச்சர்ய மான அபூர்வமான ஒளி!  ஓஹோ  இந்த  ஒளி தான் நம்மை  அயோத்தியிலிருந்து இங்கே அழைத்த வந்ததோ?  நம்மாழ்வார் இதழோரத்தில் புன்னகை மிளிர்ந்தது.

'' இந்த பாலகன் யார் என்று தெரிந்துகொள்வோமா? இவருக்கு காது கேட்காது, என்கிறார்கள், பேச்சு வராது பேசியதில்லை என்கிறார்களே, பேசுவாரா? அதையும் சோதனை செய்வோமே? அவருக்கு தான் நினைவு வந்து நம்மையும் பார்த்து சிரிக்கிறாரே!  எதுவானாலும் கண்டுபிடிப்போம்!'' ஒரு கேள்வியை நம்மாழ்வாரைப் பார்த்து பிராமணர் உதிர்த்தார்.

"செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால், எத்தை  தின்று எங்கே கிடக்கும்? ''

"அத்தை தின்று அங்கே கிடக்கும்'' . பிராமணர் கேள்விக்கு  கேட்ட அடுத்த கணமே நம்மாழ்வாரிடமிருந்து பதில் பிறந்தது.

-- பிராமணர் வேதாந்தி அல்லவா -- ஜீவாத்மா பரமாத்மாவில் இருந்து தோன்றி அங்கேயே வாசம் செய்து ஐக்யமாகி பரமானந்தத்தை துய்க்கும்'' என்ற அர்த்தத்தில் தான் கேட்ட பூடகமான கேள்விக்கு சரியான தெளிவான பதில் வந்ததை புரிந்து கொண்டார் பிராமணர்..

பாலகனாக இருந்தாலும்  இவர் ஒரு பெரிய ஞானி.ஐம்புலன்களை வென்றவர். மற்றவர்கள் சொல்வதுபோல் செவிடு, குருடு, ஊமை அல்ல என்று அறிந்தார். இவரிடம் ஆழ்ந்த ஞானம் உள்ளது. அறியவேண்டியது அநேகம் இருக்கிறது என்று பிராமணரின் உள்ளுணர்வு போதித்தது. அந்த நிமிஷத்திலேயே முடிவெடுத்தார் பிராமணர்.

நம்மாழ்வார் வயதில் சிறியவராக தோன்றினாலும் இனி இவரே என் குருநாதர் என்று அவரை ஏற்று, அவரிடம் சரணடைந்தார் பிராமணர்.

நம்மாழ்வார் அவரை ஆட்கொண்டார். . இவ்விதமாக நம்மாழ்வாரிடம் மதுர கவி ஆழ்வார் சீடனாகி அவர் அருளியது தான் 10-11 பாசுரங்கள் கொண்ட ''கண்ணினுட் சிறு தாம்பு''

மதுரகவி ஆழ்வாரைப் பொருத்தவரையில் வணங்க ஒரு தெய்வம் (சேஷி) நம்மாழ்வார். இந்த சேஷத்வ ஞானம் ஒன்றே அவர் த்யானமாக, கல்யாண குணமாகக் கொண்டார். இந்த விதமான சீரிய ஆசார்ய பிரபாவம் அவரது ஒரே சிறிய படைப்பான கண்ணினுட் தாம்பு என்ற பிரபந்த பாசுரங்களில் தெளிவாக வெளிப்படும்.

நம்மாழ்வாரை விட சிஷ்யரான மதுரகவி ஆழ்வார் வயதில் முதியவர். ஞானத்திற்கு வயதேது, குலமேது,ஆண் பெண் வித்யாசமேது?

நம்மாழ்வார் மூர்த்தியை பிரதிஷ்டை செய்து நித்ய பூஜைகள் செய்து ''நம்' 'ஆழ்வாரின் பெருமையும் புகழும் பாடி வழிபட்டார். நாலாயிர திவ்யப் பிரபந்தங்களில் பதினொன்றே பாசுரங்கள் பாடி நீங்காத இடம் பெற்றவர் மதுரகவி ஆழ்வார். தனது ஆசார்யனையே போற்றி பாடிய பாசுரங்கள் அவை.

"அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
அருளினான் அவ்வரு மறையின் பொருள்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே."

இந்த பாசுரத்தில் நம்மாழ்வார் அடியவர்க்காக க்ரிபை புரிந்து, ஆயிரம் தேன் தமிழ் பாசுரங்களை இயற்றியது நமக்கு வேதத்தை அர்த்தம் புரிய வேண்டுமே என்பதற்காக அருள் புரிந்தார் என்று தனது ஆசார்யன் பெருமை பாடுகிறார். இன்னொரு அர்த்தம் மிக அருமையாக இருக்கிறது.

எப்படி கண்ணன் கீதையில் வேதத்தின் அர்த்தத்தை நமக்கு விளக்கி அருளினானோ அதுபோல் நம்மாழ்வார் ஆயிரம் பாசுரங்களில் ''திருவாய் மொழி'' யாக அதை நமக்கு விளக்கியதே அது. கிருஷ்ணன் சொன்னது ஸம்ஸ்கிரிதத்தில் நம்மில் அநேகருக்கு புரியாதே. ஆனால் நம்மாழ்வார் அருளிய தீந்தமிழ் பாசுரங்கள் வேதார்த்தத்தை எளிமையாக புரிய வைக்கிறது.

''குறுகூர் நம்பிக்கு அனவரதம் அந்தரங்க அடிமை செய்து'' வாழ்ந்தவர் மதுர கவி ஆழ்வார்.அவரை நித்ய சூரி குமுதரின் அம்சம் என்று சொல்வார்கள்

''நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்,
மேவினேன் அவன் பொன்னடி மெய்\ம்மையே,
தேவு மற்றறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே''

''எனக்கு என்னய்யா வேண்டும்? வாய் மணக்க என் குருநாதன் பேரை சொல்லி சொல்லி மகிழ்கிறேன் அவரது தங்கத் திருவடிகளே சரணம் என்று தலை வைத்து வணங்குகிறேன் அதல்லவோ சத்தியமானது. எனக்கு வேறு தெய்வமே தெரியாதே ? எப்படி யாரை வணங்குவேன்? அதற்கு அவசியம் என்ன இருக்கிறது?. குருகூர் நம்பி நம்மாழ்வார் ஒருவரே என் கடவுள். அவர் இயற்றிய  திருவாய் மொழி பாசுரங்களை சொல்லிச் சொல்லியே அவரைச் சுற்றி திரிந்து கொண்டிருப்பதே என் கடமை. கண்ணினுட்  சிறு தாம்பு  பாசுரங்களை விளக்கி  ஏற்கனவே ஒரு பதிவு அளித்திருக்கிறேன். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...