Tuesday, December 21, 2021

DAILY PLAN

 தினப்படி  லிஸ்ட்      -   நங்கநல்லூர்  J K   SIVAN 



''ராமாஞ்சு   நீ  ஒரு  தோசி டா.  எதை தொட்டாலும்  விளங்கறதில்லே ''   
ருக்மணி மாமி மட்டும் இல்லை. நிறைய பேர்  ராமானுஜ தேசிகனை அப்படி தான் கரித்துக் கொட்டினார் கள்.  அவனுக்கும்  எதனால்  தான் மட்டும்  ஒரு அதிர்ஷ்டக்  கட்டை  என்று யோசித்தும்   ஒன்றுமே புரியவில்லை.  பெருமாள் இருக்கிறார்  அவர் பார்த்துக்  கொள்ளட்டும் என்று விட்டு விட்டு   எல்லோர்  கண்ணுக்கும்  தொட்டது எதுவும்  துலங்காத   தோசியாகவே இருந்தான்.  

வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் தரிசனம் செய்து விட்டு  வெளியே  தெருவில் நடந்தவன் எதிரே ஒரு சிறுபையன்  குறுக்கே ஓடினான்.  அவனை  க்ஷண நேரத்தில் ஒரு தண்ணீர்  லாரி துரத்தி கொல்வதற்குள்  ஒரே பாய்ச்சலாக பாய்ந்து சென்று  அந்த பையனை தரதர  வென்று சாலை ஓரம் இழுத்து போட்டான்.  சுப்ரமணிய நாடாரின்  ஒரே மகன் அந்த பையன்.  கொஞ்சம்  கிறுக்கு.  ஆகவே  அவனை கண்ட்ரோல் பண்ண முடியாது.  நல்லவேளை அவன் உயிரை காப்பாற்றி  விட்டான் ராமாஞ்சு.  

நாடார்  ராமாஞ்சுவுக்கு தன்னுடைய   எண்ணெய் செக்கு கம்பெனியில் வேலைக்கு சேர்த்துக் கொண்டு மாதம்  ஆயிரம் ரூபாய் கொடுத்தபோது அவனால் அவன் அதிர்ஷ்டத்தை நம்பமுடியவில்லை.  ரெண்டே மாதத்தில் நாடார் மாரடைப்பில் காலமானார்.  போகும்போது  எண்ணை   செக்குகள், மாடுகள்,கம்பெனி எல்லாம்  ராமாஞ்சு பேரில் எழுதி வைத்து விட்டார்.    அவர் பையன் இப்போதெல்லாம்  ராம்நாஞ்சு பொறுப்பில்  நல்லவனாக  வாழ்கிறான்.  ராமாஞ்சு இனி தோசியில்லை . அதிர்ஷ்ட சாலி என்று பெருமாள் எல்லோருக்கும் நிருபித்து காட்டி  விட்டார். 

ராமாஞ்சு இயற்கையாகவே  கெட்டிக்காரன். யோசிப்பவன். ஒருநாள் ஒரு பேப்பர் பென்சிலை எடுத்து மனதில் தோன்றியதை எழுதினான்:  அது இது தான்:

ஒவ்வொருநாளும்  படுக்கப்  போகுமுன்   ''பகவானே  நீ தான் படியளப்பவன்''. இன்று  என்னால் முடிந்தவரை பிறருக்கு என்னென்ன  உதவிகள் நல்லது எல்லாம் செய்தேன் , பேசினேன்,  என்று  குறித்து வைத்துக் கொள் .
என் சொல்லுக்கும்செயலுக்கும்  நீ தான் காரணம்  பெருமாளே'' என்று  மனதார பகவானை நினை.

தூக்கத்தில்  பகவான் உன்னுடைய  பிரச்னைகளுக்கு முடிவு  எப்படி காண்பது என்று சொல்லிக் கொடுப்பான்.

மறுநாள் காலை தூங்கி எழும்பு முன் முதல் நாள் ராத்திரி  எழுதியதை ஒரு தடவை படி.  அன்று என்னென்ன செய்ய வேண்டும் என்று எழுதி வை.  உன் திட்டப்படி எல்லாம் நடந்தால் நீ எவ்வளவு சந்தோஷமாக இருப்பாய் என்று நினைத்து அன்று செய்ய  வேண்டியதை  லிஸ்ட்  போட்டு எழுதி வை. 

நன்றாக  காலையில் வயிறு  முட்ட  டிபன் சாப்பிடு. செய்யவேண்டியதை எல்லாம் செய்ய ஆரம்பி.  சக்தி கொடுக்கும். 
ஸ்லோகங்களை கேட்டுக்கொண்டே  உன் வேலைகளைச்  செய்.
 
உன் மீது உனக்கே  நல்ல நம்பிக்கை பிறக்கும்.  உன்  எண்ணங்கள்  சீராக  வடிவம் பெறும் . செயலாக  மாறும்.
செய்ததை எல்லாம் நன்றாகவே  சுயநலம் இன்றி   செய்தேன்  என்ற திருப்தி ஏற்படுகிறதா?

இரவு  படுக்கும் முன்பு  என்னென்ன  காரியங்கள்  திட்டமிட்டப்படி செய்ய முடிந்தது என்று டிக் பண்ணிக்கொண்டு வா. கிட்டத்தட்ட  எல்லாமே டிக்  ஆகியிருக்கும் பார். அது தான் பெருமாள் செயல்.

சில  காரியங்கள்  ''அட  நாமா இதை செய்தோம்?  நம்மால் எப்படி செய்ய முடிந்தது?'' என்று  ஆச்சர்யப்பட வைக்கும். அது தான் பெருமாள் செயல்.

இனி அடுத்த  நாள்  செய்ய எண்ணுவதை லிஸ்டு போடு. எழுத ஆரம்பி. இப்படி ஒவ்வொரு  நாளும் ஏதாவது ஒரு நல்ல காரியம், கைங்கர்யம் செய்தால் வாழ்வின் லக்ஷியம் பூர்த்தியாகும்.  அது தான் நாம் பிறந்ததற்கு பலனே.

ஒரு விஷயம்:  
செய்ய வேண்டிய காரியத்தில்,  இன்று  7 மணிக்கு  ரோஜா சீரியல், அன்பேவா, சந்திரலேகா  பட்டி மன்றம் என்று  அடுக்கிக் கொண்டே போகாதே.  பெருமாள் அந்த பக்கமே வரமாட்டார். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...