Saturday, December 25, 2021

THIRUVEMBAVAI

 



திருவெம்பாவை  - நங்கநல்லூர்   J K  SIVAN
மார்கழி 11ம் நாள்

11   பராத்பரா  பரமேஸ்வரா

நங்கநல்லூரில்   ஸ்ரீ  வெங்கட்ராமன் என்று ஒரு அருமையான  எப்போதும் சிரித்த முகத்துடன் உள்ள ஒரு நண்பர் சங்கீத ஞானம் மட்டும் போதாது.  பரமேஸ்வரன் நல்ல சாரீரமும் அளித்திருந்தான் அவருக்கு.  அற்புதமாக படுவார்.  என்னோடு  மஹா ருத்ர  பாராயணத்துக்கு  வருபவர்.  அர்த்தநாரீஸ்வரர்  கோவிலில்  அவரது குரல்  அற்புதமாக  ஒலிக்கும்.  அவர் பாடி நான் கேட்டு மகிழ்ந்த  ஒரு பாடல்   ''பராத்பரா  பரமேஸ்வரா''  எனும்  வாசஸ்பதி ராக  பாடல்.  வெங்கட்ராமன் இப்போது கைலாசத்தில் இருக்கிறார்.

வாழ்க்கை  வேறு,  அரசியல்  வேறு,    ஆன்மிகம் வேறு.  ஆன்மிகர்கள் அரசியலில் இருந்தால் அது பொது வாழ்வில் பலருக்கு  நன்மை பயக்கும்.  மனசாட்சி நல்லது செய்ய வைக்கும்.   தேனோடு கலந்த தெள்ளமுதம். அதைத் தான்  பல கஷ்டங்களுக்குப்  பிறகு  இப்போதும்  கிடைக்குமா என்று தேடுகிறார்கள்.

திருவெம்பாவையில் முதல் 8 பாடல்கள் விடிகாலை எழுந்து நீராட செல்வது குறித்து. தூங்குபவர் களை தட்டி எழுப்பி ''வா நீராட'' என்று அழைப்பவை.

 மணமாகாத கன்னிப்பெண்கள் காத்யாயினி விரதம் இருந்து , அதிகாலையில் ஒருவரை ஒருவர் எழுப்பி, ஒன்றாகக் கூடிக்கொண்டு நீர்த்துறை சென்று நீராடித் தமக்கு இறையன்பு மிக்கவரே கணவராக வாய்க்க வேண்டும் என்று இறைவனை நோக்கிப் பாடியும் வணங்கும் நிகழ்வு.  
இன்று 11வது பாடல்..

11. ''மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
  எய்யாமற் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய். ''

''சிவன் சிவன் என்கிறோமே அவன் யார்? நிறைந்த நெருப்புப் போன்ற செந்நிறம் உடையவன். சிவன் என்ற  பெயரில் இருந்து தான் ''சிவ''ப்பு வந்ததோ. வெண்மையான திருநீற்றுப் பொடியில் மூழ்கியவனே! ஈசனே! சிற்றிடையையும், மைபொருந்திய பெரிய கண்களையும் உடைய உமையம்மையின் கணவனே! அழகனே! வண்டுகள் மொய்த்தலைப் பொருந்திய அகன்ற தடாகத்தில், ''முகேர்'' என்ற சப்தம் கிளம்புகிறமாதிரி புகுந்து, கையால் குடைந்து குடைந்து மூழ்கி, உன் திருவடியைப் புகழ்ந்து பாடி, பரம்பரை அடிமைகளாகிய நாங்கள், வாழ்ந்தோம்; தலைவனே! நீ எங்களை அடிமை கொண்டருளுகின்ற திருவிளையாட்டினால், துன்பத்தினின்றும் நீங்கி இன்பத்தைப் பெறுபவர்கள் அவற்றைப் பெறும் வகைகளை எல்லாம் யாங்களும் பல முறையில் பெற்று விட்டோம். இனி, நாங்கள் பிறவித் துன்பத்தில்  மீண்டும் மீண்டும்   இளைக்காதபடி ஈசனே எங்களைக் காத்தருள்வாயாக.  

ஒரு  காட்சி  கண் முன் நிற்கிறது.

''பராத்பரா, பரமேஸ்வரா'' என்று வாசஸ்பதி ராக இசை வெள்ளம் செவியில் மணக்க, கம கமக்க, பக்தியை குழைத்து ஒரு பக்தர் பரமசிவனை வணங்கி  கணீர் குரலில்  பாடுகிறார். குரலில் இனிமை, கண்களில் ஆனந்த பிரவாகம். எதிரே சிவலிங்கம் கர்பகிரஹத்தில். பெரிய உருவம். கரிய கம்பீரத்தில் வெண்மை கீற்றுகள். நாகாபரணம் சார்த்தி இருக்கிறார்கள். எனவே தங்க முலாம் பூசிய அந்த பளபளப்பின் இடையே பச்சை பேசேலென்று வில்வ தளங்கள் லிங்கம் மேல் நிரம்பியிருக்கிறது.

ஆவுடையாரை வளைத்து வெள்ளை வேஷ்டி, ஸம்ப்ரதாய பட்டை காவி கறையோடு அணிவித்திருப்பது எதிரே ஒரு பரப்பிரம்மம் பஞ்சகச்சத்தோடு காட்சி அளிப்பது போல் இருக்கிறது. மேலே உத்தரீயம் நாகாபரணத்தில் நுழைந்து இருபக்கம் விரிசடை போல் தொங்குகிறது. சோம சூர்யாக்னி நேத்ரன் அல்லவா. ஒரு பக்கம் வட்ட சூர்யனும் இன்னொரு பக்கம் சந்தனத்தில் குளிர்ந்த பிறைச் சந்திரனும் நடுவே விபூதி பட்டைக்கிடையே அக்னி நேத்ரம்.  சிவன்  தலைக்கு மேலே  பெரிய ருத்திராக்ஷ மண்டபம், சிவன் மேலேயும் ருத்ரக்ஷ மாலை சுற்றியிருக்கிறார்கள். தொங்கும் விளக்கில் தீபம் சன்னமாக ஒளியைக் கூட்டுகிறது. எங்கும் வெளியே இருட்டு. ஏன் உள்ளேயும் மனத்திலே அஞ்ஞான இருட்டு தானே. மெதுவாகத்தான் அதை போக்கவேண்டும் என்று தெளிவிக்க தான் தீபம் மெல்லிய சுடர் விட்டு எரிகிறது.

சொட்டு சொட்டாக தாரா பாத்திரத்திலிருந்து கங்கை நீர் சிவனை குளிர்வித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால்   அந்த அபிஷேக ப்பிரியனைப் பற்றி   பாடல் வராமல் இருக்குமா?

''........பார்வதி பதே ஹர பசுபதே ,''   '''ஆதி அந்தமில்லா பழமனாதி'' என்ற அடிகள்  இசைக்கும்போது குரல் இழைகிறது .  அதில் பக்தி சரணாகதி கலந்து  மழைநீர் என தொடர்ந்து  வரும்போது திருவெம்பாவை சொல்வது மனதில் பொடேரென்று  பளிச்சிட்டது.  கணீரென்று திரும்ப திரும்ப அந்த அடிகளை ரசித்து ருசித்து பாடுகிறார். கண்ணை மூடிக் கேட்டால் சிதம்பரத்தில் மணி வாசகர் நிற்பது தெரிகிறது. நடராஜன் முன்பு அந்த சிவபக்த நாயன்மார் பாடுவது தேனாக சுரந்து செவியில் நுழைகிறதே....

பக்தியும் பரவசமும்   பிரிக்க முடியாதவை அல்லவா?   அந்த ஆனந்த அனுபவம் நாமும் பெறுவோம். பெற முயற்சிப்போம்.
''பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறு அணிந்த பரமனே! சிவ பெருமானே! எல்லா செல்வங்களைம் உடையவனே!
உடுக்கை போன்ற சிறிய இடையினையும், மை தீட்டிய அகன்ற கண்களையும் உடைய உமையம்மையின் மணவாளனே!
ஐயனே!வழி வழி அடிமைகளாகிய நாங்கள் வண்டுகள் மொய்க்கின்ற அகன்ற பொய்கையில் "முகேர்"(முழுகீர்) என்று குளிர் நீரில் மூழ்கி, கைகளால் நீரைக் குடைந்து குடைந்து , வீரக் கழலணிந்த உன் பொற் திருவடிகளைப் புகழ்ந்து பாடி வருகின்றோம். ( சுனை நீராடுதல் இங்கே எம்பெருமானின் திருவடிப் பாதங்களில் சரணடைவதைக் குறிக்கின்றது)

எங்கள் தலைவனே! நீ ஆட்கொண்டு அருளும்  திரு விளையாடலில்  மகிழ்ந்து  வழிபட்ட அடியார்கள் செல்லும் நெறியில் எல்லாம்  நாங்களும்  செல்கின்றோம்.எங்களையும் நல்வழி படுத்திக் காப்பாற்ற வேண்டும் பெருமானே!

நம்மைப் பிணித்த பிறவித் துன்பம் ஒழியும்படி செய்பவன் சிவன். நாம் மகிழ்ந்து ஆடுகின்ற தீர்த்தமாய் உள்ளவன், எத்தனை சிவாலயங்கள் நமது தேசத்தில் உள்ளன   அவற்றை எல்லாம்  சென்று தரிசிக்க வேண்டாமா? ஆமாம்.  ஆனால்  எப்படி  எல்லா க்ஷேத்ரங்களுக்கும் சென்று தரிசிக்க இயலும்?  வாழ்நாளும் வசதியும்  போதாதே!  ஆகவே   மனதாலேயே சில க்ஷேத்ரங்களைத்  தரிசித்து வணங்குவோம்.   நான் அதைத்தான்    இப்போதெல்லாம் செயகிறேன். என்னால் முடிந்த வரை நேரிலும்   மற்றவற்றிற்கு  மனதாலேயும்  எப்போதும்  செல்கிறேன். அந்தந்த  ஆலயங்களைப்   பற்றி  எல்லாம்    உங்களிடமும் சொல்கிறேனே.  உங்களோடு   சேர்ந்து கூடியிருந்து  மனம் குளிர்ந்து அவற்றை  அனுபவிப்பதில்  கிடைக்கும்   சுகம் எனக்கு மட்டும் தான் தெரியும்.

அழகிய தில்லையின் கண்ணுள்ள ஞான சபையில் அனலேந்தி ஆடுகின்ற கூத்தபிரான். நடராஜன். காலைத்தூக்கி நின்றாடும் தெய்வம். விண்ணுலகத்தையும் நிலவுலகத்தையும் நம் எல்லோரையும், தோற்று வித்தும் நிலை பெறுத்தியும், நீக்கியும்,    ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம். , விளையாடுபவனாகிய எம்பெருமான் அவனது பொருள் சேர் புகழை உரைத்து, வளையல்கள் ஒலிக்கவும், நீண்ட மேகலை முதலிய அணிகள் அசைந்து ஓசை எழுப்பவும் அழகிய கூந்தலின் மேல், வண்டுகள் எழுந்து முழங்கவும் மலர்கள் விளங்குகின்ற பொய்கையில் ஆடி, நம்மை உடைய இறைவனது பொன் போன்ற திருவடிகளைத் துதித்துப் பெரிய மலைச் சுனை நீரில் மூழ்க எழுந்திருங்கள் பெண்களே. நேரமாகிறதே. காத்திடுக்கிறோமே '' என்கிறார்கள்  தூங்குகிற  பெண்ணை துயிலெழுப்பும்  மற்ற  பெண்கள்.

சிதம்பரம்  போக ஆசையாக இருக்கிறது  போக முடியாதபடி  சமய சந்தர்ப்ப சூழ்நிலை.  அனால்  சிதம்பரம் நடராஜனின் ஆலய  மணி ஓசை கேட்போமா   

https://youtu.be/q-0eSbex-HQ
   

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...