Monday, December 20, 2021

THIRUVEMBAVAI

 திருவெம்பாவை  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

மாணிக்க வாசகர் 

6. கழல் பாடி வந்தோர்க்கு வாய் திறவாய்.

மார்கழி சைவர் வைணவர் இரு பாலாருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி தரும் மாதம். மார்கழிச் செல்வி ஆண்டாள் திருப்பாவை தந்தாள். மணி வாசகர் திருவெம்பாவை தந்தார். ரெண்டுமே பாவை தான். பரமாத்மாவையும், பரமேஸ்வரனையும்  போற்றிப்  பாடுபவை.

திருப்  பாவை ஒன்று ,  திரு எம் பாவை மற்றொன்று. எமது பாவையே, நீ விரதம் இரு. பரமேஸ்வரன் திருவருள் பெறுவாய்'' என்று மணி வாசகர் தானே ஒரு பெண்ணாக மாறி பக்தி பூர்வ உணர்ச்சிகளை கொட்டும் பாடல்கள். அருணாசலேஸ்வரர் மீதும் சிதம்பர நடராஜர் மீதும் பாடப்பட்டவை.

திருவண்ணாமலை ஒரு திவ்ய அக்னி க்ஷேத்ரம். ஒரு முக்தி ஸ்தலம். எண்ணற்ற சித்தர்கள் வாழ்ந்த, இன்னும் வாழும் மகோன்னத பூமி. நான் நிறைய எழுதுகிறேன் அவர்களை பற்றி. அங்கே மார்கழி அதிகாலையில்  வழக்கம்போல் சில பெண்கள் சிவனைத் துதித்தவாறு மற்ற பெண்களை துயில் எழுப்புவதாக மிக அருமையாக  காட்சியை  மணி வாசகர் திருவெம்பாவையாக  அவரது  மணி வாசகத்தில்  தருகிறார்.  

சைவர்களுக்கு   திருவண்ணாமலை  சிதம்பரம் இரண்டுமே  மிகவும் முக்கிய  சிவ தரிசன ஸ்தலங்கள்.
இரண்டுமே  அற்புதமான ஆலயங்களைக்   கொண்டவை.  புராண பிரசித்தி பெற்றவை.

நினைத்தாலே மோக்ஷம் தரும் என்று புகழ்பெற்ற  ஸ்தலம்    ''ஸ்மரணாத் அருணாசலம்''   என்ற வாக்கு பக்தர்களுக்கு பரிச்சயம்.   ஓரு முறை இங்கு சென்றால், மீண்டும் செல்ல வாய்ப்புக் கிடைப்பதால், இதை ‘காந்தமலை’ என்கிறார்கள்.

இன்று மணிவாசகரின்  ஆறாவது  திருவெம்பாவையை அறிவோம்.

''மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்''

''பெண்ணே! நீ, தூங்குபவளாக இருந்து நாங்கள் உன்னை வந்து நேற்று எழுப்பியபோது என்ன சொன்னாய் என்று கவனம் இருக்கிறதா?

''அடடா,  நீங்கள் ஏன்  இப்படி என்னை எழுப்ப வந்து  சிரமப்படுகிறீர்கள்.  இனிமேல் நானே சீக்கிரமாக எழுந்து வந்து உங்களை உங்கள் வீட்டுக்கே வந்து எழுப்புவேன் என்று வீம்புக்காகவா சொன்னாய்? நீ சொன்ன சொல்லுக்கும்,   செய்கிற செயலுக்கும் சம்பந்தமே இல்லையே.  வெட்க மில்லாமல் , நீ போன போக்கில் ஏதோ சொல்லிவிட்டாயா?   இன்னும் உன்னைப் பொறுத்தவரை பொழுது விடியவில்லையோ?.

விண்ணும் மண்ணும் நிலவுலகும் பிறவுலகமும் அறிதற்கு அரிய எமது சிவன் தானாகவே வலிய வந்து எம்மைக் காத்து அடிமை கொண்டருளுகின்ற நடராஜன், நெடிய கழலணிந்த அவனது பொற்றாமரைத் திருவடியைப் பாடி வருகின்றோமே ஏனம்மா   நீ, ''உம்மென்று'' வாய் திறவாது இருக்கின்றாய்? பனிமலை அக்னியில் உருகவேண்டாமா. பரமசிவன் நினைவு உள்ளத்தை உருக்கவேண்டாமா? உடலும் உருகாமல் கல்லாக இருக்கின்றாய். கல் மனம் என்பது உனக்குத்தான் பொருந்தும். நமக்கும் பிறர்க்கும் தலைவனாய் இருப்பவனை ஈசனை எழுந்து வந்து பாடு. சீக்கிரம் வா!

++
ஒரு  மார்கழியின் போது   திருச்சி அருகே  வாளாடி  கிராமம் செல்ல நேர்ந்தது  என்று குறிப்பிட்டிருந்தேன். அங்கே அனுபவித்த இன்னொரு விஷயமும் சொல்கிறேன்;

அங்கே   பல்லவர் கால ஒரு பழைய சிவன் கோவில் பார்த்தேன். ஆனந்த வல்லி சமேத கைலாச நாதர் கோவில்  என்று பெயர்.   அந்த ஆலயத்தை   வெகு நன்றாக ஆறு ஏழு தலைமுறையாக ஒரு அர்ச்சகர் குடும்பம் பராமரித்து வருகிறது.  நான்  சென்றபோது  அங்கே   கைலாச குருக்கள் என்பவர்  பொறுப்பேற்றிருந்தார்.  நல்ல குரல், தேவாரம், ஸ்லோகங்கள் சொல்லும்போது பக்தி பாவத்தோடு கணீரென்று குரல் ஒலிக்கிறது.

இந்த  ஆலயத்தில்  ஒரு வாழும் பாம்பு ஒன்று பல காலமாக தினமும் சிவன் மேல் வந்து படுத்துக் கொள்ளுமாம்.  '' ''போடா அப்புறம் வா,  என்று சொல்வேன்.  ஊர்ந்து வந்து என் எதிரே  படமெடுத்து நிற்கும்,  நான் சொல்வதை கேட்டுவிட்டு சாதுவாக  போய்விடும்''   என்று அவர் சர்வ சாதாரணமாக சொல்கிற போது என் காலடியில் ஏதோ, முதுகின் மேல் ஏறுவது போல் உடல் சிலிர்த்தது. சின்ன கர்பகிரஹம் . மேலே பழைய கருங்கல் கூரையில் ராகு சந்திரனை சூரியனை விழுங்கும் முயற்சி.  பல்லவ காலத்தில் செதுக்கப்பட்டு பாம்பு இன்னமும் சூரியனை பிடித்து முழுசாக விழுங்கவில்லை.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...