Monday, December 6, 2021

PESUM DHEIVAM

 


பேசும் தெய்வம்   நங்கநல்லூர்  J K  SIVAN 

பிக்ஷாண்டி   -  

ஒரு  விஷயம் படித்தேன்.  மஹா பெரியவா பற்றி.  அது எப்போது, எங்கு நடந்த சம்பவம் என்று எந்த முகாந்திரமும் நான் படித்ததில் இல்லை.  ஆங்கிலத்தில் யாரோ எழுதி இருந்தது. 
  
மஹா பெரியவா விஷயத்தில்  எதையுமே  ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம்  எனக்கு ஏற்பட்டு விட்டது.  சிலது உண்மைக்கு புறம்பாக  யாரேனும் எழுதி இருந்தால், சொல்லி இருந்தால், அந்த  கர்ம பலன்  அவர்கள்  அனுபவித்துவிட்டுப் போகட்டும். 

மனத்தைத்  தொட்ட  இந்த நிகழ்ச்சியை  அப்படியே ஏற்றுக்கொண்டு  உங்களுக்கும் அளிக்கிறேன்.
 
எங்கும்  வறட்சியான  கடும் கோடைகாலம்.  ஆந்திராவிலோ, தண்ணியில்லா காட்டில் எங்கேயோ ஒரு இடம்.  மஹா பெரியவா  அந்த  வறட்சியான   இடத்தில் ஓரிருநாள் தங்க  கேம்ப்  போட்டிருந்தார். 

சுற்றுவட்டாரத்தில்  குடிக்க ஜலம் இல்லை. ஊர் காரர்கள்  சில  மைல்கள்  நடந்து சென்று ஏதோ ஒரு அடுத்த ஊரிலிருந்து  குடங்களில் நீர் நிரப்பி வைத்துக்  கொள்ளும்  பழக்கம் உடையவர்கள்.

 மஹா பெரியவாளுக்கு  ஸ்னானம்   அனுஷ்டானம் பூஜைக்கு  அப்படி தான்  சில  குடங்கள் நிரப்பி கொண்டு வந்தார்கள்.  மடத்தில் இருந்தவர்களுக்கு தலா  ஒரு பக்கெட்  ஜலம்  ரேஷன் ஸப்ளை.

ஒரு மரத்தடியில் அமர்ந்து மஹா பெரியவா  அனுஷ்டானம் பண்ணிக்  கொண்டிருந்தார்.  மடம்  சற்று கூப்பிடு தூரத்தில்.  அப்போது பார்த்து   ஒரு  பிச்சைக்காரன் குடும்பம் அங்கே வந்தது. மூன்று நான்கு குழந்தைகள் அழுத வண்ணம் இருந்தது.

அந்த பிச்சைக்காரனும்  மனைவியும்  வீடு வீடாக சென்று யாசகம் வேண்டினார்கள். பசியோடு தாகம் வேறு. குடிக்க ஜலம்  கேட்டார்கள்.  சின்ன ஊர்.    சில  தனித்தனி  பெரிய  வீடுகள் தான்.  எந்த வீட்டிலும் அவர்களுக்கு  குடிநீர்  தரப்படவில்லை. இதையெல்லாம் மடத்தில்  அனைவரும் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். 

அது என்ன  ஏழைகள் வாழும்  ஊரா?  ஒரு கைப்பிடி அரிசி, தானியங்கள் உணவு கொடுக்க வசதியில்லாதவர்கள் வாழும்  ஊரா?  இல்லை போல் இருக்கிறதே.  நல்ல வசதியுள்ளவர்கள் தான் அங்கே வாழ்ந்தார்கள். அவர்கள் தேவைகளை  எவ்வளவு தூரம் இருந்தாலும்  அங்கே சென்று பெற்றுக் கொண்டு   சௌகர்யமாக   வாழ்பவர்கள் தான். பரம்பரையாக வாழ்பவர்கள்.  தங்கம் வெள்ளி கூட  தானம் தர்மம் செய்ய வசதி உள்ளவர்கள். 

அந்த பிச்சைக்காரன் குடும்பம் கேட்டது  குடிநீர். அதைத் தர முடியாதவர்களா?  எந்த வீட்டிலும்  குடிநீர் தட்டுப்பாடு அந்த அளவுக்கா ? ஒரு செம்பு ஜலம்  கூடவா தர முடியவில்லை?

தண்ணீர்  வெளியே இருந்து வரவழைக்கப்பட்டதால், அதைத்  தர,  அதுவும்  இந்த பிச்சைக்கார குடும்பத்துக்கு எதற்கு தரவேண்டும்  என்ற  மனோபாவமா ?   யாருக்கும்  தர  மனம் இல்லை.  போகட்டுமே  வேறு எங்காவது போய் கேட்கட்டுமே என்று விட்டுவிட்டார்களா?   ஒரு சொம்பு  ஜலம்  தந்தால் குறைந்தா போய்விடுவார்கள்?
 
மரத்தடியில்  தியானத்தில் இருந்த மஹா பெரியவா கண்ணில் அந்த பிச்சைக் கார குடும்பத் தின்  கஷ்டம் பட்டுவிட்டது.  

''டேய்.  அவாளை  இங்கே வரச்சொல்லு?''

தூரத்தில் கைகட்டி பக்தியோடு நின்றது அந்த குடும்பம்.  அவர்களுக்கு வேண்டிய  தானியங்கள், பழங்கள் எல்லாம் அளித்துவிட்டு,  அவர்களுக்கு  வயிறார குடிநீர் வழங்கச் சொன்னார்.

எல்லோரும்  இரு கரங்களை குவித்து கை  நிறைய ஜலம்  வாங்கி வயிறு நிரம்ப  வேக வேகமாக அருந்தினார்கள். தாகம் தீர்ந்தது. களைப்பு நீங்கி முகத்தில் சந்தோஷம் தெரிந்தது. வணங்கி விட்டு சென்றார்கள்.  

மடத்து சிப்பந்திகள், மற்றவர்கள் எல்லோரும் மஹா பெரியவா தன்னுடைய  பக்கெட் , குடத்து நீரை தானமளித்தது பற்றி  ஆச்சர்யமாக பார்த்தார்கள்.  மஹா பெரியவா அப்போது அவர்களை பார்த்து என்ன சொன்னார்?

''அவர்கள் பிச்சைக்காரர்கள் என்று இகழ வேண்டாம்.  நானும்  ஒரு பிச்சாண்டி தான்.  பிக்ஷை வாங்கி தானே  ஜீவிக்கிறவன். அவாளை  விட  எந்த விதத்திலும் ஒஸ்தி இல்லை'' 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...