Thursday, December 16, 2021

KODHAIYIN GEETHAI

 கோதையின்  கீதை  -  நங்கநல்லூர்   J K   SIVAN 



 'பையத்துயின்ற பரமன்'

அடிக்கடி  நண்பர்  அரும்பாக்கம் ஸ்ரீனிவாசனோடு  பல கோவில்களுக்கு  அவரது காரில்  செல்வது வழக்கம்.  அப்படித்தான்  ஒரு  பயணம் இது. ஸ்ரீனிவாசன் காரோட்டும்போது எந்த பயமும் நடுக்கமும் இன்றி  செல்லலாம்.  அனுபவசாலி.  கார்  படுவேகமாக  சென்று கொண்டிருந்தது. கார்   ஜன்னல் கண்ணாடிகளை இறக்கி இருந்தோம்.  சில்லென்று குளிர்ந்த காற்று. 

காலை ஐந்து மணிக்கு ஸ்ரீ ரங்கம் ரங்கநாதன் ஆலயம் கோபுரம் தூரத்தில் ஒளி விளக்குகளோடு கோலாகலமாக தெரிந்தது. காற்று தந்த குளிர் உடலுக்கு. கோபுரம் தந்த குளிர்ச்சி உள்ளத்துக்கு. எத்தனை மஹான்கள் நடந்து வந்து தரிசித்திருக்கிறார்கள். அத்தனை பேர் மனதும் எவ்வளவு குளிர்ந் திருக்கும். அவர்களால் பாசுரங்கள் பாட முடிந்தது. என்னால் வெறுமே கை கூப்ப மட்டும் முடிகிறது. அதற்கே நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். தமிழ் நாட்டில் இருந்தும் எத்தனை பேருக்கு ஸ்ரீரங்க கோபுர தரிசனம் செய்யும் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை!! ஜன நடமாட்டம் அதிகம் இல்லை. பறவைகள் அற்புதமாக இன்னிசை பொழிந்து மகிழ்வித்தன சலசலவென்று காவேரி நர்த்தனமாடி ஓடினாள். நிறைய தண்ணீர் இருந்தது. பாலத்தில் சில வண்டிகள் மட்டும் ஓடின. நான் கவனித்த வரை எல்லாமே என்னைப்போல கோயிலை நோக்கி செல்லும் யாத்ரிகர்களோ? இல்லாவிட்டால் அந்த நேரத்தில் கோவில் பக்கம் என்ன வேலை?

ஸ்ரீ ரங்கம் ரயில் நிலையத்தில் காலை 6.45க்கு பல்லவன்   சென்னைக்கு  நிறைய பேரைத் தூக்கிச் செல்ல வருவான். எங்கும் பனி மூட்டம். விளக்குகள் நிறைய சரமாக ஸ்ரீரங்கம் ரங்கநாதன் ஆலய கோபுரத்தின் மேல் மாலையாக அலங்கரிக்க மனதில் ஒரு புது தெம்பு. ''ஆஹா இந்த மார்கழி ரங்கநாதன் ஆலய கோபுரம் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்ததே. கோபுரம் தரிசனம் கோடி புண்யம்'' என்றால் எனக்கு அது வாஸ்தவம், நிச்சயம் தானே.

விடியற்காலை குளிரோடு இன்னும் பனி வேறு...எங்கும் நிசப்தம். ஓஹோ திருச்சி -ஸ்ரீ ரங்கம் மார்கத்திலேயே இப்படி என்றால் ஆயர்பாடியில் யமுனை நதிக்கரையில் ??? வில்லிபுத்தூரில் விஷ்ணு சித்தர் ஆஸ்ரமத்தில். ??

காற்று நிற்காது வீசியதால் மரங்கள் அசைந்து கிளைகள் ஒன்றோடொன்று உராய்ந்து, இலைகள் ஓசையுடன் ஒன்றோடொன்று உரச, சில பறவைகள் தூக்கம் கலைந்து அவற்றின் சுயமான சப்தங்களை ஒலித்தன. மேலே சந்திரன் மேகங்களிடையே ஒளிந்தும் வெளியே வந்து ஒளி வீசியும் விளையாடிக் கொண்டிருந்தான். யாருக்குமே அவன் மேலே இருப்பது ஒரு லட்சியமாக தோன்றாத அளவு வெளிச்சம் இல்லை.  எத்தனையோ மனிதர்களுக்கு இன்னும் உறக்கம் கலையவில்லை.

வில்லிபுத்தூரில் நந்தவன ஆஸ்ரமத்தில் அந்த காரிருள் சூழ்ந்த அதிகாலை நேரத்தில் ஒரு தீபம் சுடர் விட்டு எரிகிறது. வெளியே எங்கும் ஒரே அந்தகாரம். வழக்கமாக உலவும் நாய்களோ, மற்ற விலங்கு களோ கூட எங்கோ குளிருக்கு ஒண்டி க்கொண்டிருக்கிறதோ என்னவோ கண்ணில் படவே இல் 
லையே ?.

அந்த பெரிய வெண்கல விளக்கில் நிறைய செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் வழிய வழிய வார்த்து தடிமனான திரி அதில் ஊறி எரிந்து தன்னால் முடிந்தவரை பிரகாசத்தை தந்து கொண்டிருந்தது.

இழுத்துப் போர்த்திக் கொண்டு தலையை மட்டும் வெளியே நீட்டியவாறு, இருமல்களுக்கிடையே விஷ்ணு சித்தரின் குரல் கேட்டது. மழைக்காலத்துக்கும் ஓயாத இருமலுக்கும் எப்போதும் நெருங்கிய சம்பந்தம்.

''எப்போ பொழுது விடியும்னு காத்திண்டிருக்கேன் கொழந்தே. இன்னிக்கு என்ன பாசுரம் எழுதியிருக்கே. படி. நான் கேக்கறேன். ''

''இதோ முடிச்சுட்டேன் பா''

வீணையை பழிக்கும் குரலில் கோதை ஆதுரமாக பதில் சொன்னாள் . அவள் குரலில் அப்பா மேல் இருந்த பாசம் வெளிச்சம் போட்டு காட்டியது.

சுடர் விளக்கைத் தூண்டி விட்டு கடைசி வார்த்தையை ஓலையில் திருத்தி எழுதிவிட்டு தனக்குள் மனதில் ஒரு தடவை பாடிப் பார்த்துக்கொண்டே கோதை தான் எழுதிய மார்கழி ரெண்டாம் நாள் பாசுரத்தைப் படிக்கிறாள். அவளது அழகிய கையில் பொன்னிற பனை ஓலைச்சுவடியில் எழுத்துக்களை முத்து முத்தாக ஆணியால் பொறித்திருக்கிறாள்.

அவள் குனிந்து விளக்கிற்கு அருகே அமர்ந்து எழுத்துக்களை வடித்துக் கொண்டிருக்கும் போது, தனது அழகிய தெய்வ மகளின் நிழல், தீபத்தின் ஒளியில், சுவற்றில் விழுகிறதை பார்த்து ரசித்துக் கொண்டி ருந்தார் அப்பா விஷ்ணுசித்தர். .

கோதையின் வீணையை நிகர்த்த கர்ணாம்ருதமான குரல் அந்த ஆஸ்ரமத்தின் அமைதியை கிழித்துக் கொண்டு புறப்பட்டது. கோதை தான் இயற்றிய பாசுரத்தை கணீரென்று அப்பாவுக்கு பாடிக் காட்டு
கிறாளா, அல்லது  ''அரங்கா  இது உனக்கு தான், உன்னைப்பற்றி என்ன எழுதினேன் என்பதை  நீயும் கேள் ''என்று அவனுக்கு ஸ்ரீரங்கத்தில் கேட்கவேண்டும் என்று உரக்க சொல்கிறாளா?

''வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்''

கோதை பாடி முடித்தாள். ஒரு அமிர்த மழை -- அமிர்த வர்ஷிணி - அங்கே இத்தனை நேரம் ஆனந்தத்தை அளித்துக் கொண்டி ருந்ததே. அதற்குள் ஒரு யுகமா ஆகிவிட்டது?
''ஹா ஹா'' தலையை அசைத்து விஷ்ணு சித்தர் புளகாங்கிதம் அடைந்தார்.

'இன்னொருதரம் பாடும்மா. மற்றுமொரு முறை பாட வேண்டுமாம். ஆசையோடு கேட்கிறார். தலையசைத்து புளகாங்கிதத்தோடு 'ரங்கநாதா'' என்று சாஷ்டாங்கமாக பெருமாளுக்கு நமஸ்காரம் பண்ணுகிறார் விஷ்ணு சித்தர்.
கோதை மீண்டும் தான் இயற்றிய பாசுரத்தை, திருப்பாவையை ரெண்டாம் முறை பாடுகிறாள். தந்தையைப் பார்க்கும் பார்வையில் ''அப்பா எப்படி ??"" என்று கேள்வி தெரிகிறது.

''அம்மா தாயே, எவ்வளவு சுலபமாக ஒன்றுமறியாத குக்கிராமத்து இடைப்பெண்கள் புரிந்து கொள்ளும் படியாக எளிய வார்த்தையில் எப்படி காத்யாயனி விரதம் அனுஷ்டிக்க வேண்டும் என்று சொல்லியிருக் கிறாயே. எவ்வளவு நேர்த்தி! எவ்வளவு அழகு! . எப்படி உனக்கு ''ஆண்டாள்'' என்ற ஒரு ஆயர்குல சிறுமியை உண்டாக்கி அவள் மூலம் இதை சொல்லவேண்டும் என்று தோன்றியது?'' ''
பூரித்துப் போனார் விஷ்ணுசித்தர்.

இரண்டாவது பாசுரத்தில், பாவை நோன்பு விதிகளைபற்றி சொல்லுகிறாள் கோதை நாச்சியார்,
(இதையே பின்னால் 27வது பாசுரத்தில், இந்த பெண்களின் நோன்பை சிறந்த விதமாக முடித்தால் அதன் பயனாக‌, நல்ல ஆடை, அணிமணிகள் அணிந்து கொள்வோம், நெய் மற்றும் அதோடு கலந்து நிறைய பால் சாதம் உண்ணுவோம். அதாவது எவற்றை எல்லாம் நோன்புக்காகத் விட்டுக் கொடுத்தோமோ அதையெல்லாம் மீண்டும் கைக்கொள்வோம் என்கிறாள் ஸ்ரீ கோதை நாச்சியார்).

நோன்பு நோற்கும்போது பக்தி ,நம்பிக்கை மட்டுமே கலந்து, அழகு சாதனங்கள், நல்ல அலங்காரங்கள், ருசியான உணவு வகைகளைத் தொடாமல் மனதில் உறுதியோடு 'செய்யாதன செய்யோம், தீக்குறளைச் சென்றோதோம்' அதாவது, விரத காலத்தில், செய்யக் கூடாதவற்றை எதுவும்  செய்ய மாட்டோம் ,தீமையானவற்றை, அதாவது, பொய் சொல்லுதல், புறங்கூறுதல் முதலியவற்றைச் செய்யாது, நல்லன வற்றையே பேசுவோம் என்ற திட மனது தேவை'' என்று கோதை கூறுகிறாள்.
+++
இது எவ்வாறு ஆயர்பாடியில் ஒரு காட்சியாக நடந்தது என்று பார்க்கவேண்டாமா?

"'இதென்னடி ஆண்டாள், புதுசா இத்தனை நாள் இல்லாமல் இப்போ "பாவை நோன்பு? நாமெல்லாம் இதைச்  செய்ததே கிடையாதே. எங்களுக்குத் தெரியாதே'' என்கிறாள் ஒரு ஆயர்குலப் பெண்.

''நோன்பு என்கிறாயே, அதை எப்படி பண்ணுவது, எதற்காக என்று சொன்னால் புரிந்து கொண்டு  சாஸ்திரம் என்ன சொல்கிறதோ அப்படியே ஆசாரமாக செய்யலாம். என்றாள் ஒருவள்.

''ஆண்டாள், நீ தான் விவரமானவள் . எல்லாம் தெரிந்தவள்.எங்களுக்கு விளக்கமாக சொல்லு?'' என்றனர் மற்ற சில ஆயர் பாடி சிறுமிகள். எல்லோருமே விடிகாலையில் ஆண்டாளோடு சேர்ந்து கொண்டவர்கள். யமுனையில் நீராடி விரதமிருக்கும் சிறுமிகள்.

"கேளுங்கடி சொல்றேன், என்று அந்த துடுக்குப் பெண் ஆண்டாள் சொல்கிறாள்;

''பாற்கடலில் அந்த பெரிய நாராயணன் பாம்பு மேலே படுத்துக்கொண்டு உலகத்தில் நம் எல்லோரையும் ரக்ஷிக்கிறான் என்று உங்களுக்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறேனே. நாம் செய்யும் பாவை நோன்பு அவனைப் பாடி போற்றி விரதமிருந்து நோன்பு நோற்பது எப்படி யென்றால், நாம் குளித்த பின், தலையை ஈரம் போக துவட்டிவிட்டு, தலையை வாரிக்கொள்ளாமல் அள்ளி முடிந்து கொண்டு, மை, பவுடர் எல்லாம் போட்டுக்காமல், விரதம் இருக்கணும் .அப்போ பால், பழம்,தயிர், வெண்ணை இதெல்லாம் வயிற்றில் நிரப்பிக் கொள்ளக் கூடாது. உள்ளே மட்டும் இல்லை,வெளியேயும், பொய், பித்தலாட்டம், கோபம், ஆத்திரம் எல்லாம் யார் கிட்டயும் கூடாது.புரிகிறதா. எண்ணம் பூரா நாராயணன் மேலேயே இருக்கணும். ''

"ஏண்டீ, நாம எதுக்கு இவ்வளவு கஷ்டப்படணும் ? என்றாள் ஒரு சிறுமி.
"எனக்கு தெரியலை, ஆண்டாளையே கேட்போம்'' என்றாள் இன்னொருவள் .
''சரி ஆண்டாள், அப்படியென்ன அந்த நாராயணன் பெரிய கடவுள், நீயே சொல்லேன்? என்றாள் மற்றொருவள். அதற்குள் அவர்கள் யமுனைக்கு நடந்து சென்று குளித்து விட்டு நாராயணன் மேல் பாடி வீடு திரும்பினர்.
“என்னடி நான் கேட்டேன் நீ ஒன்றும் சொல்லவே இல்லை?
“நாளைக்கு காலம்பர உங்களுக்கு விவரமா சொல்றேன் நேரமாச்சு இப்போ. கன்னுக்குட்டி காத்திண் டிருக்கும் பசியாக. அதுக்கு பால் ஊட்டணும் முதல்லே. தாய்ப்பசு பசு மடி நிறைய பால் சேர்த்து வைத்துக் கொண்டு கறக்க காத்திருக்கும். இன்னும் சற்று நேரத்தில் குரல் கொடுக்க ஆரம்பித்து விடுமே. ' என்றாள் ஆண்டாள்.

பெண்கள் வீடு திரும்பினார்கள். எத்தனை தரம் கேட்டாலும் எனக்கு அலுக்காத அமர பாடகி MLV பாடிய இந்த திருப்பாவை ரெண்டாம் பாசுரம் நீங்களும் என்னோடு கேளுங்களேன்   கிளிக்  செய்யுங்கள்  

https://youtu.be/UEHbLJn50Rc

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...