Monday, December 6, 2021

GURU BRAMMA


 குரு  ப்ரம்மா -    நங்கநல்லூர்  J K   SIVAN 


எத்தனை படித்தாலும்  புரியாதது  என்று  சில விஷயங்களை  ஓரம் கட்டிவிடுகிறோம்.  அதில் ஒன்றை  எடுத்து  உதறி, தூசி தட்டி என்ன  என்று  பார்த்தால்,  இன்னும்  புரியாமலே தான்  இருக்கிறது.   பெரியவாளைப்  படித்ததில்  சுருக்கி புரிய  வைக்கப்பார்க்கிறேன்:  

சாந்தோக்ய உபநிஷத்தில்தான் ''தத்-த்வமஸி'' என்ற மஹாவாக்கியம் வருகிறது. '' நீயேதானப்பா அந்த பிரம்மமாயிருக்கிறாய் என்று ச்வேதகேதுவுக்கு அவனுடைய பிதா  உத்தாலக ஆருணி திரும்ப திரும்ப ஒன்பது தடவை செய்த உபதேசம் அது.

தத்-த்வம்-அஸி= ''தத்'' என்பது பரமாத்மாவான பிரம்மம்; ''த்வம்'' என்பது ஜீவாத்மா;  ''அஸி'' என்றால் இருக்கிறாய். பிரம்மமாக இருக்கிறாய் - என்றைக்கோ ஒருநாள் அல்ல! எதிர்காலத்தில் இல்லை; இப்போதும் எப்போதும் எல்லோரும் எல்லாமும் பிரம்மம்தான். இனிமேலேதான் பிரம்மமாக வேண்டும் என்பதில்லை.

அப்படியானால் ஸாதனை எதற்கு? பிரம்மமாக இருந்தாலும் அதை நாம் தெரிந்து கொள்ள வில்லையே!  தெரிந்தால்  இத்தனை அழுகை, இத்தனை காமம், கோபம், இத்தனை பயம் நமக்கு இருக்கவே இருக்காதே! அலையே எழும்ப முடியாமல் ஆகாசம் வரை முட்டிக் கொண்டு நிற்கிற ஆனந்த சமுத்திரமாக அல்லவா இருப்போம்? எனவே ''நீ எப்போதும் பிரம்மம் தானப்பா'' என்றால் எப்படி? அதைப் புரிய   வைக்க  ஒரு கதை:  நமது  வாழ்க்கையே  எதாவது  ஒரு  கதையை  நம்பி தானே  நடக்கிறது.

 ப்ருஹதாரண்யக உபநிஷத் பாஷ்யத்தின் நடுவிலே (II-1-20) சங்கர பகவத்பாதாள்,  ஒரு  சிலந்தி தன்எச்சிலிலிருந்தே  பிசின் மாதிரி   நூலை இழுத்து வலை பின்னுகிற மாதிரியும், அக்னி தன்னிலிருந்தே பொறிகளை உதிர்க்கிற மாதிரியும், ஆத்மாவிலிருந்தே அத்தனை பிரபஞ்சமும் தோன்றியிருக்கிறது என்ற மந்திரத்துக்கு ரொம்ப விஸ்தாரமாக அர்த்தம் பண்ணிக்கொண்டு போகிறபோது, இந்தக் கதை வருகிறது.

ஒரு  ராஜகுமாரன் அவனது  அப்பா  அம்மா எதிரி ராஜாவின்  படையெடுப்பில் கொல்லப்பட்டதால்,   உயிர் தப்பி  மந்திரியால்  காட்டில்  வேடர்கள்  பகுதியில் குழந்தையாக விடப்பட்டு   இளம்  வயதில்  வேடர்களோடு  வளர்கிறான். பெரியவனாகி,வெதப்பையனாகவே வளர்ந்துவிட்டான். அவன் உயிரைக் காப்பற்ற இப்படி அவனை  ஒரு வேட குடும்பத்தோடு வளர வைத்த  அந்த நாட்டின் மந்திரி  அவனை சந்தித்து, நீ வேடனல்லப்பா,  இந்த நாட்டின்  ராஜ குமரன்  ராஜகுமாரன் என்று  அவன் விருத்தாந்தத்தை எடுத்துச் சொல்லி  அடையாளம் காட்டுகிறான். ராஜகுமாரனும் தான் யார் என்று   உணர்கிறான்.  இத்தனை காலமும் வேடப் பையனாகவே தன்னை நினைத்துக் கொண்டிருந்த காலத்திலும் அவன் ராஜா பிள்ளைதானே? இது முதலில் தெரியாததால்  வேடன் மாதிரி வாழ்க்கை நடத்தினான். உண்மை புரிந்தவுடன் , ராஜகுமாரனாகவே எப்போதும் இருந்தவன் ராஜகுமாரனாகவே அநுபவத்தில் வாழ்ந்து காட்டினான். 
வேடப்பையனும்  ராஜகுமாரனும் இரண்டுபேர் இல்லை. ஒருத்தன் இன்னொருத்தனாக மாறவில்லை. ஒரே பேர்வழிதான்.  முதலில் தன்னை யார்  என்று  தெரிந்து கொள்ளவில்லை. புரியவில்லை.  அப்புறம் புரிந்துகொண்டு விட்டான். புரியாத நிலையில் வேடனாக எங்கேயோ கீழ்நிலையில் வேடப்பையனாக இருந்தவன்  புரிந்து கொண்டவுடன் ராஜகுமாரனாகினான். அப்புறம் படை சேர்த்து, யுத்த பயிற்சி பெற்று,  சண்டை போட்டு ஸாம்ராஜ்யாதிபதியாகவே ஆகிவிட்டான்.

நாமெல்லாருமே இந்த மாதிரி வேட வேஷத்தில் தான் உள்ளோம்.  ஜீவாத்மா என்ற வேஷத்தில் ஸம்ஸாரிகளாகவே நம்மை நினைத்துக் கொண்டிருந்தாலும் வாஸ்தவத்தில் நாமும் பரமாத்மாவே தான்.   நமது வெளி வேஷம்  எப்படியிருந்தாலும்  நம் உள்ளே இருக்கிற வஸ்து எப்போதும் பரமாத்மாதான். ஐம்புலன்களின்   வசியத்தில்    அது  இழுத்துச் செல்கிற  வழியில் ஒடி வேட்டையாடிக் கொண்டிருக்கிறோம். நாம் உண்மையில்   பிரம்மம் என்று தெரிந்து கொள்ள லாமா? தெரிந்தால் மட்டும் என்ன?  அநுபவத்தில் கொண்டு  வர முடியாதபடி இந்திரியங்கள் (ஐம்புலன்கள்) நம்மை  வேறு பக்கம்  இழுத்துக் கொண்டே  போகும். 
 ராஜகுமாரனாகவே இருந்தாலும் வாஸ்தவத்தில் அரசத்தன்மையை அடைவதற்காக அந்த வேடப்பையன்  அஸ்திர சஸ்திர அப்பியாஸம் பண்ணி எதிரிகளை ஜயித்து ஸாம்ராஜ்யாதிபதியான மாதிரி, நாமும் பிரம்மமாகவே எப்போதும் இருந்தாலும் அதை உணராமலிருப்பதால் கர்மத்தில் ஆரம்பித்து பக்தி வழியாக, ஞான சாதனைகளைச் செய்து, உட் பகைகளை  யெல்லாம் ஜயித்து, ஆத்ம ஸாம்ராஜ்யத்தில் ராஜாவாக ஆகவேண்டும். 'ஸாம்ராட்'- அதாவது ராஜா - என்றே உபநிஷத் தில் ஆத்ம ஞானியைச் சொல்லியிருக்கிறது.

பனிக்கட்டியும்   ஸ்படிகமும் ஒரே மாதிரித்தான் வெளிப்பார்வைக்கு இருக்கின்றன. ஆனால் ஐஸ்தான் உருகி ஜலமாகுமே தவிர, ஸ்படிகம் ஜலமாகாது. ஏனென்றால் எது ஜலமாகவே இருந்து அப்புறம் உறைந்து வேறே வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறதோ அதுதான் உருகி மறுபடியும் தன் ஸ்வயமான பூர்வ ரூபத்தை அடைய முடியும்.
 பிரம்மமே ஜீவனாக உறைந்து போயிருப்பதால்தான், இந்த ஜீவாத்மாவும் உருகிப் போனால் மறுபடியும் பிரம்மமாகவே அநுபவத்தில் ஆக முடிகிறது. ஐஸ் தானாக கரைகிறது. நாம் கரையமாட்டோம் என்கிறோம். அது தான் வித்யாசம்.

''கல்லேனும் ஐயா  ஒரு காலத்தில் உருகும் என் கல்  நெஞ்சம் உருகவில்லையே! ''-- என்று  தாயுமான ஸ்வாமிகள் நமக்காகத்தான் பாடியிருக்கிறார். நம்மை உருக வைக்க  ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. 
கதையில் ராஜகுமாரனை Practical- ஆக ராஜகுமாரனாக்குவதற்காக ஒரு மந்திரி வந்த மாதிரி, நம்மை உருக்கி நிஜ ''நாமாக''  ப் பண்ண ஒருத்தர் வேண்டும். அவன் வரமாட்டேன் என்று முரண்டு செய்தாலும் வலிய இழுத்த மந்திரி மாதிரி, பாரமார்த்திகத்தின் பக்கமே போகமாட்டேன் என்ற அடம்  பிடிக்கிற நம்மைக் கட்டி இழுக்க ஒருத்தர் வேண்டும். அப்படி ஒருத்தர் இருக்கிறாரா?நம்மை நம்முடைய நிஜ நாமாக ஆக்கக்கூடிய  ''ஒருத்தர்'' இருக்கிறாரா?   ஆம்.  இருக்கத்தான் செய்கிறார். வேடப்பையனுக்கு   'நீதானப்பா ராஜகுமாரன்''  என்று சொல்லிப்  புரியவைத்து, அவனுக்கு அஸ்திரப் பயிற்சி தொடுத்து, அவனை ராஜாவாக்குவதற்காகஅவனை விட ஜாஸ்தி உழைத்த மந்திரி  அந்த  ''ஒருத்தருக்கு''  த்தான் ரூபகம். (உருவகம்) . 
நமக்கு நம் பரமாத்மத்வத்தை எடுத்துச் சொல்லி, அதை நாம் அநுபவமாக்கி கொள்வதற்கான ஸாதனைகளைச் செய்ய வைத்து, நம் கர்மா பாக்கி தீருவதற்காக தாமே தபஸைச் செலவு செய்து உபகாரம் பண்ணும் அந்த ஒருத்தர் தான் ''குரு'' என்பவர்.  எதை யாரிடம் நான் கற்றுக்கொண்டாலும் அவர் குருவே. LKG  வாத்யாரிலிருந்து  ஆபிஸ் அதிகாரி வரை எல்லாரும் குரு. அப்பா அம்மா முதல் குரு.  தத்தாத்ரேயருக்கு  24 குருமார்கள். வண்டு  யானை, வளையல், கடல்,  காற்று, பறவை  புல் பூண்டு எல்லாமே  குரு தான். குரு ப்ரம்மா. சர்வம் ப்ரம்ம மயம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...