Tuesday, December 28, 2021

UDIPI KRISHNA

 நாமக்கட்டி  கிருஷ்ணன்    ---     நங்கநல்லூர்  J K   SIVAN  


ஹிந்து சனாதன தர்மத்தை   தங்கி நிற்கும்  பலமான   மூன்று  தூண்கள்   அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம்.   அப்படி  என்றால் என்ன?    என்னைப்போன்ற அஞ்ஞானிகள் புரிந்து கொள்ள ஒரு உதாரணம் சொல்கிறேன

ராமையா  வெளியூருக்கு  புளியோதரை   மூட்டை கட்டி  சுமந்துகொண்டு  பிரயாணம்  நடக்கிறான்.   புளியோதரை வேறு.   ராமையா   வேறு. ரெண்டும்   வெவ்வேறு  வஸ்துக்கள் .   இது தான்  சார்  த்வைதம்.  ராமையாவையும்  புளியோதரை டப்பாவையும்   ஜீவாத்மா பரமாத்மா என்று வேறு வேறாக  புரிந்துகொள்ளுங்கள்.

ராமையா தலையில் புளியோதரை மூட்டை யோடு  நடந்து போகிறான்.   வெகுநேரம் நடந்தாகி விட்டது. ;இப்போது  சூர்யன் உச்சிக்கு போய்விட்டான்.   ராமையாவும்   பசி  கபகபவென்று  வயிற்றை கிள்ளுகிறது.  ராமையா   ஒரு மரத்தடியில் உட்கார்ந்து  புளியோதரை பொட்டலத்தை பிரித்து புளியோதரையை முழுதும் விழுங்கிவிட்டான். டப்பா காலி.   இப்போது  புளியோதரை  ராமையாவின் வயிற்றுக்குள்  இருக்கிறது.  புளியோதரையும்  ராமையாவும் ஒன்று.   வேறு வேறல்ல.   ரெண்டல்ல .   எல்லாம் ஒன்றே.  இது அத்வைதம்.  இப்படித்தான் நமக்குள் இருக்கும் ஜீவாத்மாவும் பரமாத்மாவும்  பிரிக்கமுடியாத  ஒன்று.   இரண்டும்  
 வேறு வேறாக காணப்பட்டாலும்   எல்லாம்   ஒன்றே.

இப்போது  ராமையாவின்   வயிற்றில்  உட்கார்ந்திருக்கும் புளியோதரை இன்னும் ஜீரணமாகவில்லை.  இன்னும் முழுதுமாக  ஜீரணம் ஆகி   கரைந்து அவன் ரத்தத்தோடு கலந்து மறையவில்லை.  சற்று நேரமாகியபின்னர்  அவனோடு கலந்து விடுகிறது.  இது விசிஷ்டாத்வைதம்.     ஜீவாத்மா பரமாத்மா ரெண்டும் ஒன்றாக காணப்பட்டாலும்   ஜீவாத்மா பரமாத்மாவை  சரணாகதி அடைந்த பின் சேர்கிறது.

இதற்கு மேல் விவரமாக உள்ளே சென்றால் என்னை புளியோதரை ஆக்கி விடுவீர்கள் என்பதால் இது புரிந்தால் போதும்.

மேலே சொன்ன மூன்றில்   த்வைத சித்தாந்தத்தை பரப்பியவர்  மத்வாச்சாரியார் (1238-1317).  அவர் உடுப்பியில் ஒரு அற்புதமான கிருஷ்ணன் கோவிலை உண்டாக்கியது  மேற்கே  அரபிக்கடல் ஓரத்தில்  இன்றைய கர்நாடகாவில் இன்றும்  நாம்   சென்று தரிசிக்கும்   உடுப்பி  ஸ்ரீ  க்ஷேத்ரம்,   ஸ்ரீ கிருஷ்ண மடம்  என்றும் அதற்கு பெயர் உண்டு.    கோடிக்கணக்கான  பக்தர்கள் சென்று உடுப்பியில் கிருஷ்ணனை தரிசனம் செய்கிறார்கள்    

உடுப்பி   என்ற  பெயர்  வர  ஆதாரம்    கன்னடத்தில்   உடு + பா  எனும்   வார்த்தைகள்.   ''உடு''  என்றால் நக்ஷத்ரம்  ''பா''  என்றால் அணிபவன்,  தலைவன்.    சிவன் தான் சந்திரசேகரன், சந்திரமௌளி.   மத் வாச்சாரியார் காலத்துக்கு முன்பே   இந்த பெயர் இருந்தது.  இன்று வரை   மாறுதல் இல்லை.    சிவன் பெயர் இருந்தாலும்  உடுப்பி என்றால்  கிருஷ்ணன்  இருக்கும்  க்ஷேத்ரம்  என்று   உலகம் முழுக்க  பிரபலமாகிவிட்டது. .   உடுப்பியை  வைகுண்டம்  என்பார்கள். கிருஷ்ணன் மத்வாச்சாரியார் வேண்டுகோளுக்கிணங்கி  தானே  அவரை அடைந்து  தங்கிய க்ஷேத்ரம்.
உடுப்பி  மங்களூரிலிருந்து 60 கி.மீ.    கர்நாடகாவில்  ஒரு முக்கிய  யாத்திரை ஸ்தலம்.   ரெண்டு மூன்று  முறை  தரிசித்த  பாக்யம் எனக்கு உண்டு.  உடுப்பி கிருஷ்ணனை பற்றி நிறைய  பதிவுகள் இட்டிருக்கிறேன். 

உடுப்பி  கிருஷ்ணன்  ஆலயத்தில்  மூல ஸ்தானத்தின்  வலது பக்கம்  ப்ரதக்ஷிணம் வரும் இடத்தில்  மத்வாச் சாரியார் சிலை உள்ளது.  வடக்குப்  பக்கம் பாண்டுரங்கன் விக்ரஹம்.  

அதெல்லாம்  இருக்கட்டும். உடுப்பியில்   ஸ்ரீ கிருஷ்ணன்  எப்படி  மத்வாச்சாரியாரை தானே  தேடி வந்து அடைந்து தங்கி கோவில் கொண்டான் என்பது தெரிய வேண்டாமா?

மத்வ  விஜயம் என்கிற  மத்வாச்சாரியார்  வாழ்க்கை வரலாறு  புத்தகம் ஒரு கதை சொல்கிறது.  அதன் சாராம்சம்:
 
உடுப்பியில்  நிற்கும்  பால கிருஷ்ணன் எப்படி அரபிக்கடலில் பிரயாணம் செய்து  இந்தியாவின் வடமேற்கில் உள்ள துவாரகாவிலிருந்து   தெற்கு மார்க்கமாக உடுப்பிக்கு  வந்தான்? ஒரு சுவாரஸ்யமான சம்பவம் இதன் பின்னால் இருக்கிறது.

ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்பு,  ஒரு முறை பால கிருஷ்ணன் நாம்  நெற்றியில் இட்டுக்கொள்ளும்   கோபி சந்தனம் செய்ய  உதவும்   களிமண் கட்டிக்குள்  விக்ரஹமாக  ஒளிந்து மறைந்து  இருந்தது  நம் யாருக்காவது தெரியுமா?

இந்த கோபிசந்தனம் செய்யும் களிமண் கட்டியை  துவாரகையில்  ஒரு  கப்பல் சொந்தக்காரன்  வாங்கி  தனது மரக் கப்பலில்  அதை பின்  பாரமாக  ஏற்றி  வைத்து  அந்த  வியாபாரக்  கப்பல் கடலில்  தெற்கு நோக்கி  ஒருநாள்  மிதந்தது.  

குதிரை, மாட்டு வண்டிகளில்   பிரயாணம் செய்தவர்களுக்கு   பின்  பாரம் என்று  சொன்னால்  தெரியும்.  வண்டியில்  ரெட்டை நாடி   குண்டு  ஆசாமியை  வண்டியில்  பின்னால்   உட்காரவைத்து,  
காலைத் தொங்கப்  போட்டுக் 
கொண்டு கம்பியை வயிற்றுக்கு குறுக்காக  பாதுகாப்பாக  செருகி விட்டு  பிடித்துக் கொண்டு பிரயாணம்  தொடரும். 
அவர், அவர்கள் தான் பின் பாரம்,   அவர்கள் எடையால் தான் வண்டியின் முன்பக்கம் சற்று  மேல் நோக்கி  மாடோ, குதிரையோ வண்டியை  இழுக்க சௌகர்யமாக இருக்கும்.  அதே போல்  கடலில் கப்பல் மிதக்கும்போது  கப்பலின் பின் பக்கம் ஒரு குறிப்பிட்ட அளவு நீரில் அமிழ  வேண்டும். முன்பக்கம்  சற்று உயர்ந்து  நீர்மேல்  மிதக்கும். அப்போது தான்   எதிர்நோக்கி செல்லும்போது  கப்பல் காற்றினால் தூக்கி எறியப்படாமல் அலைகளை எதிர்கொண்டு மிதக்கும். ரொம்ப அமிழ்ந்தால்  முழுகிவிடும்.  கப்பல் விஷயத்தில் இந்த பின்பாரத்தை  ஆங்கிலத்தில்  BALLAST என்று சொல்வோம். இப்போது களிமண் கட்டி எல்லாம் இல்லை.  கடல்  நீரை கப்பல்  அடிபாகத்தில் TANK  என்று தொட்டிகளில்  நிரப்பி எடையை   வேண்டிய அளவு சமன்  செய்வது  தான் STABILITY.

மேலே சொன்னேனே  அந்த  களிமண் கட்டி வைத்த  மரக்  கப்பல்  அரபிக்கடலில்  துவாரகையிலிருந்து   தெற்கு நோக்கி  சென்றது.   உடுப்பி அருகே   கப்பல் புயலில் சிக்கியது.  மாலுமியால்  புயலைச் சமாளிக்க முடியவில்லை.   கப்பல் கரையை நோக்கி புயல் காற்றில்  வீசப்பட்டு  கடற்கரை மண்ணில்  தரை தட்டியது.  

தரை  தட்டிய கப்பலை   கப்பலில் இருந்த அனைவரும்  கரையில் இறங்கி மீண்டும்   இழுத்து கடலில் தள்ளி மிதக்க வைக்க பிரயாசை பட்டுக்  கொண்டிருந்ததை  அந்த பக்கமாக தனது  சிஷ்யர்களோடு   சமுத்திர ஸ்னானத்துக்கு வந்த மத்வாச்சாரியார் பார்த்துவிட்டார்.  அன்று தான் ''துவாதச ஸ்தோத்ரம்''   எனும் 12 ஸ்லோகங்களை  கிருஷ்ணன் மேல்  புகழ் மாலையாக  இயற்றிக்  கொண்டிருந்தார். முதல் ஐந்து ஸ்தோத்ரம்   பாடி முடித்திருந்தார்.  கிருஷ்ணனை  புகழ்ந்து பாடப்பட்ட  அந்த  அற்புதமான  12   துவாதச  ஸ்லோகங்கள்  கொண்ட   ஸ்தோத்ரத்தை   ஒருநாள்  விளக்குகிறேன்.

தரை தட்டிய  மரக்கப்பலை  மீண்டும் கடலுக்குள் தள்ளி மிதக்க வைக்க  மாலுமிகள் கூட்டமாக  வெகுநேரமாக   பிரயாசைப் பட்டு தள்ளிக்கொண்டிருந் தார்கள் அல்லவா ?   அதைப் பார்த்த  மத்வாச்சாரியார்  அவர்கள்  அருகே  வந்து  தனது  மேல் அங்கவஸ்திரத்தை   உயரே தூக்கி   அதை கடல் பக்கமாக   காற்றில் அசைத்தார் .

என்ன ஆச்சர்யம்  அவர் அசைத்த  அங்கவஸ்திரம் அங்கே வீசிக்கொண்டிருந்த  பலத்த  காற்றை  அவர்களுக்கு   சாதகமாக  மாற்றி  கப்பல் மெதுவாக தரையிலிருந்து கடலுக்குள்  நகர்ந்தது.  மீண்டும் நீரில் மிதந்தது.   கப்பல் சொந்தக்காரன்  மாலுமிக்கு  ஆச்சர்யம்.   பரம சந்தோஷமும் கூட.     தனது கப்பலை காப்பாற்றி மீண்டும்  கடலில் செலுத்தியதற்கு மத்வாச்சார்யரை  வணங்கி  நன்றி சொன்னான்.  

''சாமி,  உங்களுக்கு கோடி நன்றி . நீங்க செய்த  இந்த  உதவிக்கு   கப்பல்லே இருக்கிற   சரக்குலே  எதை வேண்டுமானாலும்   கேளுங்க.  தரேன்''

''கப்பல் பின்னாலே  அதோ வச்சிருக்கியே  கோபி சந்தன மண் கட்டி. அதைக்  கொடுப்பியா?. அது தான் வேணும். கோபி சந்தனம் செய்து பக்தர்கள்  எல்லோருக்கும் கொடுக்கலாம்''

''சாமி கப்பல்  ஜாக்கிரதையா மிதக்க  அது பின் பாரம் ஆச்சே  சாமி.  அதான் யோசிக்கிறேன்.''

''நீ  ஒண்ணும்  யோசிக்க வேண்டாம்,  அந்த கலிமண் கட்டிக்கு  சரிசமமான எடையா   இதோ  பார்  இங்கே  நிறைய  பாறாங்கல்கள்    கிடக்கு பாரு.   அதோ இருக்கிற  உருண்டை பாறை  சரியான  எடையா இருக்கும். களிமண் கட்டியை கொடுத்துட்டு அதை எடுத்துக் கொண்டு போ''.

மத்வாச்சார்யரும் அவருடைய  முப்பது   சீடர்களுமாக அந்த  பெரிய  கோபிசந்தன களிமண் கட்டியை தூக்கிக்  கொண்டு திரும்பினார்கள்.   கடற்கரையை  தாண்டி  உடுப்பிக்குள் நுழையும்  வழியில்  களிமண் கட்டி  ரெண்டாக உடைந்தது.  அதன்  உள்ளே இருந்த  அற்புத வடிவம் கொண்ட அழகான  ஒரு  பால கிருஷ்ணன் கீழே  மண்ணில் விழுந்தான். அவனுக்கு மண் பிடிக்குமே.   அதற்குள்  அவர்கள்  கடற்கரையிலி ருந்து  நாலு மைல்  தூரம்  வந்தாகி  விட்டது.  சிஷ்யர்களால்  அவனை  தரை  யிலிலிருந்து  தூக்க முடிய வில்லை.  

''ஹா,   என்  பரமானந்த  தெய்வமே என்று  ஆசையாக  மத்வாச்சாரியார்  பாலகிருஷ்ணனை பார்த்து  பெற்ற தாய்ப்பாசத்தோடு  அவனை அணைத்ததும்  எளிதில் அசைந்தான் கிருஷ்ணன். அவரால் குழந்தையை ப்போல் அவனைத்  தூக்க முடிந்தது.   அவனைத்  தூக்கியபடியே  மீதி ஏழு ஸ்லோகங்கள் கடகடவென்று  அவரால் இயற்ற முடிந்தது.   உரக்க  பாடிக்கொண்டே, ஆடிக் கொண்டே  நடந்தார்.  

பால  கிருஷ்ணனைத்  தூக்கிக்கொண்டு போய்    உடுப்பியில்  மாத்வ ஸரோவர்  எனும் குளத்தில்  ஸ்னானம் செய்வித்தார்.  அதன் கரையிலேயே  ஒரு  ஸ்ரீ கிருஷ்ணமடம்  நிர்மாணித்து  அவனை அதில் ஸ்தாபனம் செய்தார். பால கிருஷ்ணனுக்கு   எப்படி பூஜை வழிபாடுகள் செய்யவேண்டும் என்று  வழிமுறை  வகுத்தார்.  உடுப்பியில் இருக்கும்போதெல்லாம்  தானே  நித்ய பூஜைகள் செய்வார்.       மத்வாச்சார்யார் ஏற்படுத்திய ஆலய பராமரிப்பு தான்  பர்யாயம் என்ற வழிபாட்டு முறை.   இதற்கு  எட்டு மாத்வ   மடங்கள் பொறுப்பேற்பவை.   அவற்றின் பெயர்கள்:   

புட்டிகே, 
ஷிருர் , 
பெஜவார், 
பாலிமார் ,
சோதே , 
கணியூரு, 
அதமார், 
க்ரிஷ்ணபுரா,   
அஷ்டமடம் 

மேலே சொன்ன மடங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு  ஸ்வாமிஜி ரெண்டு   மாதத்திற் கொருமுறை  மாறி மாறி  பூஜை வழிபாடுகள் செய்து ஆலயத்தை பராமரிப்பவர்கள்.  பின்னர்  வந்தவர்கள்   ரெண்டு   மாதம் என்பது மிகவும் குறைவான காலம் என்பதால்  அதை ஒவ்வொரு  மடத்துக்கும் ரெண்டு வருஷ காலமாக்கினார்கள்.    

இதில் நீங்கள் ஒரு முக்கியமானகேள்வியை இன்னும்   கேட்கவில்லையே?

கிருஷ்ணன் எப்படி த்வாரகையில் நாமக்கட்டி க்குள் அடைந்தான்?   இதை  ''ப்ரமேய நவமாலிகா டிகா''  எனும் 17ம் நூற்றாண்டு  ரகுவாரிய தீர்த்தரின் நூல் சொல்கிறது.

அன்னை தேவகி பிற்காலத்தில்  ''அடே  கிருஷ்ணா, பிருந்தாவனத்தில்  உன்  பால்ய  சுட்டித்தனத்தை எல்லோரும் கண்டு வியந்தார்கள்.   ஆனால்  உனைப் பெற்ற   தாய் நான் காணவில்லையே கண்ணா,  எனக்கும் காண  ஆசையாக இருக்காதா?  ' என்று வருந்துகிறாள்.  

'சரி  அம்மா, முதலில் உன்  கண்ணை துடைத்துக்கொள், உனக்கு  நான் என் பால்ய லீலைகள்  சிலவற்றை  ரீ வைண்ட் செய்து காட்டுகிறேன் '' என்கிறான் கிருஷ்ணன்.    அடுத்த கணம்  ஒரு சிறு  குழந்தை  தேவகியின் மடியில் புரண்டு விளையாடியது.  அவள் தயிர் கடைய சென்றபோது பின்னாலேயே புடவையை பிடித்துக்கொண்டு நடந்து அவள் மத்தை பிடுங்கியது.  தயிர் சட்டியில் கையை விட்டு அளாவி நிறைய வெண்ணையை எடுத்து மேலே பூசிக்கொண்டது. அவள் மேலும்  பூசியது. வாயெல்லாம் வெண்ணை.  மத்து கடையும் கயிற்றை எடுத்து ஒளித்து வைக்கிறான். பின்னர் கயிற்றை  கையில் வைத்துக்கொண்டது.

கணநேரத்தில் குழந்தை மறைந்து அங்கே  துவாரகை கிருஷ்ணனாக கம்பீரமாக நிற்கிறான்.  இதெல்லாம் பார்த்துக்  கொண்டிருந்த ருக்மணிக்கு  கிருஷ்ணன்  பால்ய வயது சிறு குழந்தையாகி மத்து, கயிறோடு நின்றது மனதில்  பதிந்துவிட்டது.  இதை என்றும்  காணவேண்டும் என்று  தோன்றியது.  உடனே அதைப் போல  ஒரு பொம்மை செய்தாள்.  தான் படைத்த அந்த  பதுமையை  ருக்மணி விடாது பூஜை செய்தாள்.

பின்னர்  அந்த விக்ரஹம்  அர்ஜுனனை அடைகிறது.  கிருஷ்ணன் பூலோகத்தை விட்டு மறைந்ததும்  துவாரகையை விட்டு எல்லோரும்  வெளியேறியபோது அருகே   ஒரு இடத்தில்  ருக்மிணிவனம்   எனும்   ஸ்தலத்தில் அர்ஜுனன்  பால கிருஷ்ணன்  விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்கிறான். 

பல நூறு ஆண்டுகளில்  அதை சுற்றி இருந்த களிமண் மேட்டில்  அந்த விக்ரஹம் புதையுண்டு மறைகிறது. ஒரு பெரிய மண் கட்டியாகிறது.   இந்த மண் கட்டி யாரோ ஒரு துவாரகை வியாபாரி கண்ணில் பட்டு அதை அவன் ஒரு கப்பல் காரனுக்கு விற்கிறான்.  

இனிமேல்  புறம் மேலே  12வது பாராவில்  ''ஐந்தாயிரம் வருஷம்..... என்று  துவங்குவதிலிருந்து  மீண்டும்  படித்தால் உடுப்பி  கிருஷ்ணன் நன்றாக புரிவான். தெரிவான்...

பாலகிருஷ்ணனை  மதவாச்சாரியார் கிழக்கு நோக்கி பார்த்தவாறு பிரதிஷ்டை செய்தாலும்  இன்று வரை மேற்கு நோக்கி தான் நமக்கு உடுப்பியில் தரிசனம் தருகிறானே  எப்படி என்பதை விளக்க  இன்னொரு அற்புதமான  பதிவு  ஏற்கனவே  பதிவிட்டிருந்தாலும் மீண்டும் நாளை சொல்கிறேன். 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...