Friday, December 17, 2021


 


வைணவ விண்ணொளி -  நங்கநல்லூர்  J K  SIVAN 
கண்ணினுட் சிறு தாம்பு .

'கட்டிப் போட்டால் தான் நீ வழிக்கு வருவாய் ''

எனக்கு கண்ணினுட் சிறு தாம்பு''  பாசுரங்களைப்   படித்து புரிந்து கொள்ள சற்று   அதிக காலம்  தேவைப்பட்டது. முதலில்  சரியாக புரியவில்லை.  மதுர கவி ஆழ்வார் வேறே  லெவல்.  நாலைந்து முறை  படித்தபின்  சற்று புரிந்தார்.. ஆழ்வாரை படித்து ரசித்ததில் பரம சந்தோஷம்.  கடினம்  தமிழில் இல்லை,  பாசுரத்தில் உட்பொருளில்.  அதைப்புரிந்துகொள்ள சற்று  கால அவகாசம்  தேவைப்பட்டது. 

பொதுவாகவே ஆழ்வார்களின் பாசுரங்கள்அழகு தமிழில் சமைக்கப் பட்டு மணம் வீசுபவை. எளிமையானவை. இனிய தமிழ்ச் சுவை கொண்டவை. அதிலும் நம்மாழ்வார் பாசுரங்கள் நெஞ்சை அள்ளுபவை. நம்மாழ்வாருக்கே தன்னை அர்பணித்துக் கொண்டவர் மதுர கவி ஆழ்வார். இந்த ஆழ்வாரின் கண்ணினுட் சிறு தாம்பு பத்தே பாசுரங்கள் ஆனாலும் கண்ணனை எப்படி சிறு தாம்புக் கயிறு கட்டுண்ணப் பண்ணியதோ, அதே போல் நம் நெஞ்சை கட்டிப் போடும் அழகிய தெய்வீக பாசுரங்கள்.

எல்லாம் குரு பக்தி ஒன்றிலேயே கட்டுப்பட்டவை. ஆசார்யன் தான் முழு முதல் தெய்வம் என்ற கோட்பாட்டை அழகிய தமிழில் காட்டுபவை. ஆச்சார்ய பக்தி பிரதானமானது என்பதை பிரபன்ன ஜன கூடஸ்தர் நம்மாழ்வாரின் மேல் பாடிய பாசுரங்கள்.

நாலாயிர திவ்ய பிரபந்தம் அனுஷ்டிக்கிறவர்களுக்கு சிஷ்ட ஆச்சாரம் எது என்பதை விளக்கும் பத்தே பாசுரங்கள் கண்ணினுட் சிறு தாம்பு. கண்ணனை மனதில் ஒரு கணம் நினைத்து கட்டுண்ணப் பண்ணிய கண்ணா என்று மனதால் பிரார்த்தித்து ஆசார்யனையே , நம்பியையே நம் ஆழ்வானாக, பரம்பொருளாக ஆராதித்து எழுதியவை. ம் தமிழில் என்னாலியன்றவரை அர்த்தம் புரிந்து கொண்டு நம்பியைப் பிரார்த்தித்து  விளக்கம் தந்துள்ளேன்.

கண்ணினுட் சிறு தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெரு மாயன், என்னப்பனில்
நண்னித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே

''நான் சொல்வதைக் கேளுங்கள். உங்களுக்கும் தான் தெரியுமே, அந்த கண்ணன் சிறு பயல் எவ்வளவு விஷமம் செய்பவன். வெண்ணைய் திருடி, வகையாக மாட்டிக்கொண்டு அம்மா யசோதை அவனை ஒரு சிறு மணிக்கயிற்றால் அவன் வயிற்றை சுற்றி கட்டி மறு முனையை ஒரு பெரிய கல் உரலில் கட்டி அவனை நகர விடாமல் பண்ணினாளே. சகடாசுரனையே சிறு காலால் உதைத்து கொன்றவன், மூவுலகையும் ஈரடியால் அளந்தவன்; அவனால் அந்த மணிக்கயிற்றை அறுத்தெறிய முடியாதா?. தாய்ப் பாசத்தால் தன்னை கட்ட வைத்துக் கொண்டவன்.

அவன் ஒரு புறம் உரலோடு இருக்கட்டும். கண்ணா கண்ணா என்று அவன் பெயரை விட அங்கிருந்து தெற்கே குருகூரில் நம்மாழ்வார் என்று என் தெய்வம் இருக்கிறதே அதன் பெயரை குருகூர் நம்பி என்று ஒரு முறை சொல்லிப் பார்த்தால் சொன்ன நாக்கு பூரா அமிர்தத்தில் இனிக்கிறதே. இது என்ன ஆச்சர்யம். எங்கே சொல்லிப் பாருங்கள் நீங்களும் !

''நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே,
தேவு மற்றறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே''

''என் வாழ்க்கை ரகசியம் சொல்லட்டுமா? மேலே சொன்னேனே குருகூர் நம்பியின் பேரைச்  சொன்னதும் நாக்கு அமிர்தத்தில் இனித்தது என்று,  நினைத்தாலே  இனிக்கும் அதை சொல்லாமல்  விடுவேனா? அவர் பெயர் சொல்லிச் சொல்லி அமிர்தத்தில் இனிய ருசியில் திளைக்கிறேன், வாய்க்கு மட்டும் அமிர்தம் இருந்தால் போதுமா? அவரை அருகே சென்று கண்ணாரக் களித்தேன், தக தக என்று மின்னும் தங்கத் திருவடிகளில் சிரம் வைத்து தலை முதல் கால் வரை அமிர்த ருசியை அடைந்தேன், எனக்கு இனி வேறு தெய்வம் எதற்கு? போதும் இவர் ஒருவரே! அவரிடமிருந்து அமிர்தம் இப்படி அபரிமிதமாக பெற்றேனே/   அது  எப்படி? அறிந்து கொண்டேன் .. ஆம் அவர் பாசுரங்கள் தான் அந்த ரகசியம். அவர் பாசுரங்களை பாடியே என் சொச்ச வாழ்வை இனிதாக அமிர்தமாக அனுபவித்து திரிவேன்.

''திரி தந்தாகிலும் தேவ பிரானுடை
கரிய கோலத் திருவுருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நம்பிக்கு ஆள்
உரியனாய் அடியேன்பெற்ற நன்மையே

தெய்வமாகிய குருகூர் நம்பியை விட்டகன்று போவது என்பது  என்னால்   முடியாத காரியம்.  அந்த கார்மேனி கண்ணனைப் போல் நானும் கட்டுண்டேனே . கண்ணன் என்றால் எனக்கு என் குருநாதன் குருகூர் நம்பியே. எனக்கு நம்பியே எம்பிரான், தெய்வம் என நம்பிக்கையோடு அவருக்கே ஆளானேன் என அறிந்து, அடடா, நான் துய்க்கும் இன்பத்திற்கும் நன்மைக்கும் ஈடுண்டோ, சொல்ல வார்த்தையுண்டோ?

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மையாக கருதுவர் ஆதலின்
அம்மையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே

இந்த நான்கு வேதங்களையும் தலை கீழாய் கேட்டாலும் சொல்லும் கற்றறிந்த வேத விற்பன்னர்கள் என்னை பார்த்தாலே ஏதோ ஒரு புல்லை, புழுவைப்  பார்ப்பது போல் பார்த்து வெறுப்பார்கள். இருக்கட்டுமே ! அதுவும் ஒருவிதத்தில் நன்மையே தான். யாருமில்லை என்பதால் என் தெய்வம் குருகூர் சடகோபனையே ''அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே என்று அடைக்கலம் புகுவேனே..என் அதிர்ஷ்டத்துக்கு அதுவல்லவோ ஒரு காரணம் ....

நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்
நம்பினேன் மட வாரையும் முன்னெலாம்
செம்பொன் மாடத் திருக்குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே

நான் எப்படி இருந்தேன் முன்பெல்லாம் என்று நினைத் துப் பார்க்கிறேன். யாரிடம் என்ன பொருள் இருந்தாலும் ஆஹா,  அது எனக்கும் வேண்டுமே என்று அலைந்தேன்.  அது அவசியம் என்று நம்பினேன். பெண்களைப் போல் உலகில் மற்றவர் எவரும் அல்லர் என்று நம்பி அவர்கள் பின்னால் எவ்வளவு அலைந்திருப்பேன். என் நம்பி அல்லவோ எனை நட்டாற்றில் விழுந்தவனை கை தூக்கிக் காத்தவன். நம்பியாகிய பொன் மாடக் கோவிலில் நான் ஆனந்தமாக இருக்கிறேன் இப்போது.

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
குன்ற மாட திருக் குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்விலன் காண்மினே

வைணவ சிகாமணிகளே, வாருங்கள் இந்த அதிசயத்தை காண்பீர் !
என்றும் குறைவிலாத நிறைந்த பக்தியோடு, நம்பிக்கையோடு அவன் புகழ் பாட
குன்றங்களும் அழகிய உயர் மாடங்களும் சூழ்ந்த எழில் மிக்க திருக் குருகூரில்  உள்ள  நம்பி என்னை
குறையொன்றும் இல்லாதவனான அவன் தாள் சேர்ந்து அடி பணிந்து அவனைப் பாட அவனோடு என்னை மனமாற அன்போடு இணைத்துக் கொண்டான்.

கண்டு கொண்டென்னை காரி மாறப் பிரான்
பண்டை வல்வினை பாற்றி அருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ் சடகோபன் அருளையே

எட்டு திசையிலும் உள்ளவர்களே, உங்கள் காது கேட்க உரக்கச் சொல்லுகிறேன் கேளுங்கள். திருக்குருகூர் என்கிற ஊரில் காரி என்பவர் மகனாகப் பிறந்த மாறன் என்கிற வள்ளல் பெருமகனார் ஒரு அற்புதத்தை நிகழ்த்தினார். என்னைப் பிடித்து என் பல ஜன்ம பாபங்களை ஒரு கணத்தில் நீக்கி விட்டாரே. நான் பதிலுக்கு என்ன செய்கிறேன்? சடகோபனாகிய என் நம்பியின் அருளையும், அவரது அழகிய தேன் சொட்டும் பாசுரங்களை இரவும் பகலும் அனவரதமாக என் வாய் மணக்க பாடியும் ,கேட்பவர் செவியினிக்க செய்தும் ஊரெங்கும் சென்று இசைக்கி றேன்.இதைத் தவிர வேறேதாவது ஒரு சிறந்த பாக்கியம் உண்டா?


அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
அருளினான் அவ்வருமறையின் பொருள்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே

உலகில் என் குருகூர் நம்பியைப் போல் அதி அற்புத சேவை ஒன்று செய்தவர் உண்டா? திருமாலடியார் கேட்டு மனமும் செவியும் மகிழ நான்கு வேத சாரமாம் பாசுரங்களை அழகிய தமிழில் ஆயிரமாக இயற்றி பாடி அனைவ ரையும் அந்த வேதனின் உலகில் கிடைக்கும் இன்பத்தை அடையச் செய்தானே இந்த கருணை, அருள் கொண்ட என் என் நம்பியை கொண்டாடாமல் நான் இருப்பேனா இல்லை, நாம் இருப்போமா?

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர் சடகோபன் என் நம்பிக்கு ஆள்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே

ஆஹா என் நம்பி என்ன சாதாரணமானவரா? வேதங்களை வடிகட்டி, அதன் சாரத்தை பிழிந்து அதை தெள்ளத் தெளிவாக அள்ளி தீந்தமிழ் பாசுரங்களில் அருளிச்செய்து, அதை வைணவ பக்தர்கள் செவியினிக்க அமிர்தமாக பாட வழி செய்த விற்பன்னன் அல்லவா? அப்பாசுரங்களை பாடக் கேட்டவுடனே பரம்பொருள் அரும் பொருளாக என் நெஞ்சில் உறைந்து நின்று விட்டதே, இப்படிப் பட்ட என் தெய்வ நம்பி மீது அளவற்ற பக்தியும் அன்பும் கொண்டது என் வாழ்வில் நான் அடைந்த பெரும்பயன் இல்லையா?

பயன் அன்று ஆகிலும் பாங்கல்லர் ஆகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன்றன் மொய் கழற்கு அன்பையே

''இவர்களா? ச்சே, இவர்களால் என்ன பயன்? எதற்கும் உதவாதவர்கள். அதோ அவர்களா அவர்கள் நெஞ்சில் பாறை யல்லவோ கொண்டவர்கள், அன்பா? கிலோ என்ன விலை? என்பவர்கள். இப்படிப் பட்டவர்களிடமும் பரி பூர்ண வித்தியாசமற்ற அன்பையும் கொண்டு அவர்களை நல்வழிக்கு திருத்தி அவர்களை நற்கதிக்கு ஆளாக்குபவரல்லவோ எம் குருகூர் நம்பி. ஆஹா அவரைப் போலவே அவர் ஊர் எவ்வளவு ரம்மியமானது. எங்கும் குளுமையான நல்மணம் வீசும் மலர்கள் சூழ்ந்த பூங்காக்களையும் அதில் அவர் பாசுரத்தைப் போலவே செவிக்கினிமையாக பாடும் கோகிலங்களை நிறைய கொண்டதுமான குருகூர் . இந்த திவ்ய தேச நம்பியே, உமது திருப் பாதங்களில் அடி பணிந்து என் மனம் நிறைந்த அன்பை பக்தியாக செலுத்து கிறேன்.இல்லை பக்தியை அன்பாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

அன்பன் தன்னை அடைந்தவர்கட் கெல்லாம்
அன்பன்தென் திருக்குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுர கவி சொன்ன சொல்
நம்புவார் அதி வைகுந்தம் காண்மினே.

பத்தே பத்து பாசுரங்கள் தான் பாடினார் மதுர கவி ஆழ்வார். வைகுண்டம் போகவேண்டுமா? ஆசையாக இருக்கிறதா? இதோ சுலப வழி. இந்த மதுர கவியின் பாசுரங்களை அவர் எப்படி நம்பியை நம்பினாரோ அதுபோல் அவரை நம்பி பாடுங்கள். அப்புறம் பாருங்கள் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று.? அவரை நம்பினால் நம்பியின் அன்பனாக ஆகிவிட்டீர்களே. வைகுந்தம் அதோ தெரிகிறதே.
                        

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...