Tuesday, December 7, 2021

SRI LALITHA SAHASRANAMAM

ஸ்ரீ  லலிதா ஸஹஸ்ர நாமம் -  நங்கநல்லூர் J K  SIVAN  

ஸ்லோகங்கள்   114- 116    நாமங்கள்  559-577

 ताम्बूल -पूरित -मुखी  दाडिमी-कुसुम -प्रभा ।
मृगाक्षी मोहिनी मुख्या  मृडानी मित्ररूपिणी ॥ ११४॥

Tambulapuritamukh  dadimikusumaprabha
Mrugashi mohini mudhya mrudani mitrarupini – 114

தாம்பூல பூரித முகீ  தாடிமீ குஸுமப்ரபா  
ம்றுகாக்ஷீ  மோஹினி முத்யா ம்ருடானி மித்ர ரூபிணி

नित्यतृप्ता भक्तनिधिर्  नियन्त्री निखिलेश्वरी ।
 मैत्र्यादि -वासनालभ्या महाप्रलय-साक्षिणी ॥ ११५॥

Nityatrupta bhaktanidhi rniyantri nikhileshvari
Maityradi vasanalabhya mahapralayasakshini – 115  

நித்யத்ருப்தா, பக்தனிதி,  ர்னியம்த்ரீ, னிகிலேஶ்வரீ |
மைத்ர்யாதி வாஸனாலப்யா, மஹாப்ரளய ஸாக்ஷிணீ || 115 ||

परा शक्तिः परा निष्ठा  प्रज्ञानघन-रूपिणी ।
माध्वीपानालसा मत्ता मातृका-वर्ण-वर्णरूपिणी ॥ ११६॥

Parashaktih paranishta pragynana ghanarupini
Madhvipanalasa matta matrukavarna rupini – 116  

பராஶக்திஃ, பரானிஷ்டா, ப்ரஜ்ஞான கனரூபிணீ |
மாத்வீபானாலஸா, மத்தா,  மாத்றுகா வர்ண ரூபிணீ || 116 ||

லலிதா ஸஹஸ்ரநாமம் - (559- 577 ) அர்த்தம்  

* 559 * 
ताम्बूल -पूरित -मुखी  தாம்பூல பூரித முகீ -  
வாய் சிவக்க சிவக்க  கோவைப்பழம்போல வெற்றிலை பாக்கு  தாம்பூலம்  தரித்து சுகிப்பவள் அம்பாள்  என்கிறார் ஹயக்ரீவர். அவள் ஏற்கனவே சிவந்த மேனியள். கேட்கவேண்டுமா
தாம்பூலத்தால் சிவந்த இதழ்கள் அவளுக்கு  கூடுதலாக  அளிக்கும்  தனி அழகைப்  பற்றி.  நல்ல தாம்பூலம் தரிக்கும்போது கம்மென்று ஒரு மணம் சேர்ந்துவிடும்.

* 560 *
दाडिमी-कुसुम -प्रभा ।  தாடிமீ குஸுமப்ரபா-- 
அம்பாளின்  நிறத்தை எதற்கு ஒப்பிடலாம் என்று யோசித்தால் உடனே நினைவுக்கு வருவது  மாதுளை மணிகள். மாணிக்கங்கள். கருஞ் சிவப்புக்கு  எப்போதுமே  தனி அழகு. செம்பருத்திப் பூவையும் ஒப்பிடலாம் என்று தோன்றுகிறது. அம்பாள் சிறந்தவள், சிவந்தவள்.

* 561 * 
मृगाक्षी ம்ருகாக்ஷீ-   மானின் விழிகள் அம்பாள் விழிகளை போன்றவை என்று தான் சொல்ல வேண்டும். ஒரு இடத்தில் நிலைக்காமல்  எப்போதும்   அலைபாயும் கண்கள். ஏன்?  உலகத்தையே  ரக்ஷிப்பவள் பார்வை எங்கும் செல்ல  வேண்டாமா? அவள் பார்வை விழுந்து மோக் ஷகதி  அடைந்த வர்கள் அடைபவர்கள் எண்ணிக்கையில் அடங்குவார்களா 

* 562 * 
मोहिनी   மோஹினீ - 
காந்தம்  போல் மனதைக்  கவர்பவள். தன்னை மறக்கச் செய்பவள். அழகே உருவானவள். ஞானத்தால், தயையால், காருண்யத்தால், வீரத்தால், சக்தியால் ஒளி வீசும் அழகுடையவள் அம்பாள் .

* 563 * 
 मुख्या முக்யா-  
எங்கள் தலைவி அன்னவர்க்கே சரண் யாங்களே.  தைத்ரிய உபநிஷத்  (III.x.6) என்ன சொல்கிறது?   ''எது முதன் முதலில் தோன்றியதோ, கடவுள்களில் முதலானது எதுவோ அதுவே நான்''   என்பது அம்பாளை என்று தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

* 564 *
 मृडानी   ம்ருடானீ-  
எல்லோருக்கும்  எப்போதும் மகிழ்ச்சி , ஆனந்தத்தைத்  தருபவள் அம்பாள். ம்ருடா  என்று சிவனுக்கு ஒரு பெயர். சிவனே சிவை. இருவருமே ஒருவர் தான்,
 
* 565 * मित्ररूपिणी  மித்ரரூபிணீ -  
நேசத்தோடு பாசத்தோடு பரிவோடு, நட்போடு இருப்பதை மித்ர ரூபமாக இருப்பதாக சொல்கிறோம். சூரியன் பூமிக்கு நல்ல உற்ற  நண்பன். எல்லாமாக இருப்பவள் அம்பாள். சிவன் அக்னி ஸ்வரூபம்.  சக்தியும் அவ்வாறே.

* 566 *
नित्यतृप्ता   நித்யத்ருப்தா - 
எதிலும் எப்போதும் எதனிடமும் திருப்தியோடு இருப்பவள். எதுவும் தேவை இல்லாதவள் எப்போதும் திருப்தி யுடன் இருப்பதில் என்ன ஆச்சர்யம்.?
 
* 567 * 
भक्तनिधिर्  பக்தநிதி -   
ரொம்பவும் அருமையான நாமம்.  பக்தர்களுக்கு அவள் வழங்குவது அருள்செல்வம். அந்த செல்வம் அபரிமிதமாக என்றும் நிறைந்து இருக்கும்  களஞ்சியம் அம்பாள் ஸ்ரீ லலிதை. செல்வக்  களஞ்சியமே என்று பாரதியார் பாடுவாரே! அன்புச்  செல்வம் அருள்செல்வம் நிறைந்த  நிதி அம்பாள்.

 * 568 * 
नियन्त्री   நியந்த்ரி - 
இந்த பிரபஞ்சத்தை கட்டி ஆள்பவள். லோக நிர்வாகி. வழிகாட்டி அம்பாள்.
.
* 569 * 
निखिलेश्वरी ।  நிகிலேஶ்வரீ -   
நிகிலம்  என்றால்  முழுதுமாக  என்று அர்த்தம்.  அம்பாள்  சர்வேஸ்வரி. புவனேஸ்வரி.  அகிலமெல்லாம் கட்டி ஆளும் கருணாம்பிகை. ப்ரம்மஸ்வரூபிணி.

* 570 *
मैत्र्यादि -वासनालभ्या   மைத்ர்யாதி வாஸனா லப்யா,  
நேசத்தால், பாசத்தால்  அன்பால்  அடையக் கூடியவள் அம்பாள் ஒருவளே ..  

* 571 * 
महाप्रलय-साक्षिणी  மஹாப்ரளய ஸாக்ஷிணீ -  
ஒவ்வொரு  யுக சந்நிதியிலும்  நேரும்  மஹா ப்ரளயத்துக்கு சாட்சியாக இருப்பவள் அம்பாள். யுக முடிவில் அனைத்தும்  அழிந்து புனருத்தாரணம் ஆகும். அதற்கு ஒரே சாக்ஷி அம்பாள் ஸ்ரீ லலிதாம்பிகை.   முடிவில் எல்லாம் ஒரு நாள் சிவனில் கரைந்து ஆகாசத்தில் மீண்டும்  உருவாகும். இது தான் சிருஷ்டி தத்வம்.

* 572 *
परा शक्तिः பராஶக்தி  -   
இந்த பிரபஞ்சத்தில்  அசையும் ஒவ்வொன்றும் பெருகின்ற சக்தி அம்பாள் ஸ்ரீ லலிதையினால் தான்.எனவே தான் அவளை பரா சக்தி என்கிறோம். அவள்  ஞான சக்தி, இச்சா சக்தி, க்ரியா சக்தி,   பிராண சக்தி.

* 573 * 
परा निष्ठा  பரானிஷ்டா  -  
நிஷ்டை என்றால் தெரியுமல்லவா. மனதை ஒருநிலைப்படுத்தி அசைவற்று தியானித்தல்.  சமாதி நிலை. மனம் வாக்கு  காயம் எல்லாமே ஒன்றாகி தியானிப்பது. பிரம்மத்தை தேடி அதில் லயித்தல்.

* 574 *
प्रज्ञानघन-रूपिणी । ப்ரஜ்ஞான கனரூபிணீ -  
உயர் தத்துவங்கள் கொண்டவள்.  ஞானத்தின் மொத்த உருவம் ஸ்ரீ லலிதாம்பிகை.

* 575 * 
माध्वीपानालसा மாத்வீபானாலஸா -   
பக்தர்களின் அன்பும்   ஞானமும்  தரும்  ஆனந்த அனுபவத்தில் திளைப்பவளுக்கு வேறு என்ன மது தேவை?   சிவனை நினைந்து பேரானந்தமயமாக திளைப்பவள் அம்பாள்.

*576  
मत्ता    மத்தா-  
மேலே சொன்ன ஆனந்த பரவச நிலையில் ஆழ்ந்து இருக்கும் பரமானந்த ஸ்வரூபம்  அம்பாள்.

*577* 
मातृका-वर्ण-वर्णरूपिणी   மத்ருகா வர்ண ரூபிணீ-    
சமஸ்க்ரித அக்ஷரங்கள் 51ம்  மத்ருகா  எனப்படும் வரிசையில் உள்ளன. அவை ஆறு பகுதிகளாக பிரிபடும்.  ஆறு சக்ரங்களாக வழிபடப்படும்.  மூலாதாரத்திலிருந்து ஆக்ஞா சக்ரம் வரை. வித வித வண்ணங்கள் கொண்டவை. பிரபஞ்ச சாஸ்த்ர சம்பந்தமுள்ளவை.  சிவ  சக்தி ஜீவன் உள்ளவை.  அவற்றின் சப்தம்  சப்த ப்ரம்மம்.  அக்ஷரங்கள் தாய்  என்பது தான் மாத்ருகா. ஸ்ரீ சக்ரத்தின் ஆதாரம்  இந்த அக்ஷரங்கள்.  ஸ்ரீ சக்ர வழிபாட்டில்  கைலாச ப்ரஸ்தாரத்தை தவிர   மேரு ப்ரஸ்தாரம்  பூ ப்ரஸ்தாரம் என்றும் இரு பிரிவுகள் உண்டு.  ப்ரஸ்தாரம் என்பது மேலே அழைத்து செல்லும்  மாடிப் படிக்கட்டுகள் என்று எடுத்துக் கொள்வோம்.

சக்தி பீடம். 
   மங்கள கௌரி 

பீகாரில் உள்ள மங்கள கௌரி ஆலயம்  பற்றி பத்ம புராணம், வாயு புராணம், அக்னி புராணம், தேவி பாகவத புராணம்,  மார்க்கண்டேய புராணம் எல்லாம்   அறிந்திருக்கும்போது நமக்கு தெரியாதது  தப்பல்லவா?  ஆகவே உடனே தெரிந்து கொள்ள வேண்டும்  என்பதற்காக இந்த குறிப்புகள்.

இது 15ம் நூற்றாண்டு கோவில்.  கயா ஒரு முக்கியமான புனித க்ஷேத்ரம். மங்கள கௌரி  கேட்டது கேட்காதது எல்லாமே  வாரி வழங்கும் அன்னை. இதை  உபசக்தி பீடம்  என்பார்கள். 

 சதி தனது தந்தை தக்ஷன் வளர்த்த யாகத்தில் தன்னுயிரை மாய்த்துக்கொண்டபோது  சினம் கொண்ட  பரமேஸ்வரன்தக்ஷனை வதம் செய்துவிட்டு  சதியின்  கருகிய உடலைச்  சுமந்தவாறு கோர தாண்டவம் ஆடுகிறார். சதியின் உடல் பல கூறுகளாக சிதைந்து பூமியில் விழுந்த  இடங்கள் தான் 51ள் சக்தி பீட  க்ஷேத்ரங்கள்  என்று வழிபடப்பட்டு வருகிறது. சதியின்  மார்பகம் விழுந்த இடம் தான் பீகாரில் மங்களகௌரி ஆலயம். மார்பகம் தான்  சிசுக்களாக இருந்த போது நமக்கு உணவளித்து காப்பாற்றிய தாயின் உடலில் ஒருபாகம். 

கிழக்கு பார்த்த இந்த ஆலயம் மங்களகௌரி எனும் குன்றின் மேல் உள்ளது. மலை மேல் வாகனங்கள் செல்கிறது. ஆலய வாசலில் ஒரு சிறு மண்டபம்.  சிவனுக்கு இரண்டு குட்டி கோயில்கள்  உள்ளன. மகிஷாசுர மர்த்தினி,  துர்க்கா,  தக்ஷிண காளி , ஹனுமான், ஆகியோருக்கு சந்நிதி உண்டு.   மலைப்படி  ஏறும் போது  முதலில் பீமனுக்கு ஒரு கோவில் இருக்கிறது.  இங்கு அவன் ஸ்ராத்த கர்மா செயதானாம் பீமவேதி கயா  என்பார்கள் இதை.

200 படி மேலே ஏறினால் தான்  மங்கள கௌரியை தரிசிக்க முடியும். தீப ஒளியில் சதிதேவியின் மார்பகத்தை விக்ரஹமாக தரிசிக்கலாம்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...